Showing posts with label நிர்மலா கொற்றவை. Show all posts
Showing posts with label நிர்மலா கொற்றவை. Show all posts

Feb 13, 2017

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும் - நூலிலிருந்து.....



அறிவியல் என்பது உறுதியான உண்மையையும், இலக்கையும் கொண்டது. உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம் பற்றிய நுண்ணிய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்பொழுது, இந்தியா என்பது ஒரு பின்தங்கிய முதலாளித்துவ நாடு என்பதும் இங்கு, ஏகாதிபத்தியம்-நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்துக்கு முந்தைய எச்சசொச்சங்கள் என அனைத்தையும் ஒழித்துடுவதற்கான சோஷலிசப் புரட்சிக்குத் தயார் செய்யும் தொடக்க காலத்திலிருந்தே சாதியமைப்பு ஒழிப்பிற்கான செயல்திட்டத்தையும் முன்வைக்க வேண்டும், உடனடி நடவடிக்கைகள், நீண்டகால நடவடிக்கைகள் என வகுக்கவேண்டும் என்பதும் எங்களது தெளிவான நம்பிக்கை. சாதி என்பது நிலக்கிழாரிய எச்சம் மட்டும் கிடையாது. முதலாளித்துவமானது, தன்னுடைய நலனை மேலும் வளர்த்தெடுப்பதற்காக தன் அமைப்போடு அது சாதியை வெளிப்படுத்துகிறது. இது ஒரு முதலாளித்துவ சாதியமைப்பாகும். அது பொருளாதார அடித்தளத்தோடு (உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம்)உயிர்ப்புடன் (ஆர்கானிக்கலி) பின்னிப் பிணைந்துள்ளது மேலும் கருத்தியல்-அரசியல்-சமூக மேற்கட்டுமாமனத்தில் அதன் திறன்வாய்ந்த இருப்பானது கட்டுக்கோப்பாக உள்ளது.
கட்டுரையின் நீளம் கருதி எங்களது நிலைப்பாடு குறித்து தற்போது நாங்கள் சுருக்கமாக மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இருப்பினும், ஒரு நீடித்த, பொருளார்ந்த விவாதத்தைப் புதிதாகத் தொடங்குவதற்கு இது போதுமானதாக இருக்கும். -

சாதியின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த ஒரு வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வை:

சாதியமைப்பு பற்றி முழுமையான வரலாற்றை இங்கு கொடுப்பதல்ல எங்களது நோக்கம். சாதிக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான தொடர்பு, சாதி மற்றும் வர்க்கத்திற்கு இடையிலான தொடர்பு மற்றும், சாதியமைப்பு என்பது எவ்வாறு அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் எனும் மார்க்சிய உருவகத்திற்குள் பொருந்துகிறது என்று புரிந்துகொள்ளத்தக்க வகையில் வரலாறு விவாதிக்கப்படும்.
முதலில், சாதியமைப்பின் தோற்றம் மற்றும் இந்தியாவில் மட்டும் அது குறிப்பிட்ட வடிவில் பரிணமித்துக்கொண்டே இருப்பதற்கான காரணங்கள் யாவை என்பது குறித்து உறுதியாக ஏதும் கூற முடியாது, ஏனென்றால், ஆய்வாளர்களும் அதற்கான தெளிவான காரணங்களை இதுவரை கூற முடியவில்லை. ஆதிகால அல்லது புராதனச் சமூக உழைப்புப் பிரினையானது, அதே புற ரீதியான சமூக அடித்தளத்திலிருந்து உருவான மதச் சடங்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவான சமூகச் சடங்குகள் வழியாக இந்தியாவில் சாதியமைப்பாக படிமப்பட்டுப் போனது. அதேபோல், இந்திய சாதியமைப்புக்கு ஒத்ததாக, எகிப்தில் அகமணமுறை மற்றும் அரசமரபு சார்ந்த தொழில்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு கில்ட்-அமைப்பாக இறுகியது. ஆனால், அதற்குப் பின்னால் இருந்த மதத்தின் அடிப்படையிலான சமூக அற விதிமுறைகளின் அடித்தளமானது அந்தளவுக்கு திட்டவட்ட ஒழுங்குமுறை கொண்டதாக இல்லாத காரணத்தாலும், சமூக-பொருளாதார மட்டத்தில் நிகழ்ந்த மாற்றங்களுக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் நெகிழ்வுத் தன்மை இல்லாது போனதாலும் அந்த அமைப்பு நீடித்திருக்க முடியவில்லை.
இந்தியாவில் மட்டும் சாதியமைப்பு எவ்வாறு தோன்றியது, வளர்ந்தது என்பதற்கான காரணங்களைத் தேடும் முயற்சியில் நாம் பின் வரும் சில காரணிகளைக் குறிப்பிடலாம்: வானிலை, காலநிலை, வாழ்வதற்கும், விவசாய உற்பத்திக்கும் உகந்த சூழல், வரலாறு மற்றும் அதிலிருந்து உருவாகும் உழைப்பு நடைமுறை வளர்ச்சியின் மந்தப் போக்கு, ஒப்பீட்டளவில், தொடக்கம் முதலே உழைப்புப் பிரிவினையின் வரம்புகுள் உடல் உழைப்பு மற்றும் மூளை உழைப்புக்கு இடையில் திறன்மிக்க வகையிலான உழைப்புப் பிரிவினை (மேலும் உடல் உழைப்பின் வரம்பிற்குள் மேலும் மேலும் உட்பிரிவினை) மற்றும் சமூக விதிமுறைகளை கட்டியெழுப்புவதில் அதிக ஓய்வு நேரம் கொண்டிருந்த ஒட்டுண்ணி அறிவுஜீவிகளின் (பிராமண மதகுருக்கள்) திறமை மற்றும் தொலைநோக்குப் பார்வை. ஆனால், இவைகூட ஊகங்களும், அனுமானங்களுமே ஒழிய வரலாறு கிடையாது. வரலாற்று ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு நாம் கண்டிப்பாக விவாதிக்கக்கூடியது என்னவெனில்: சாதியமைப்பு எவ்வாறு தோன்றியது, வரலாற்று மாற்றங்களுக்கு ஏற்றவகையில் அது தன்னை எவ்வாறு தகவமைத்துக்கொண்டு இன்னமும் உறுதியாக இருக்கிறது? நாமும் அதையே சுருக்கமாக விவாதிப்போம். ஏனென்றால் தற்போதைய சூழ்நிலை பற்றிய விவாதத்திற்கும், சாதியொழிப்புக்கான திட்ட வடிவமைப்பிற்கும் இது அவசியம்.
இரண்டாவது, போகிற போக்கில் மார்க்சியர்கள் மீது சுமத்தப்படும் குற்றம் என்னவெனில், மார்க்சும் எங்கெல்சும் விளக்கிய வரலாற்று சமூக வளர்ச்சியின் மூன்று கட்டங்களையும் (அடிமையுடைமை-நிலவுடைமை-முதலாளித்துவம்), ‘ஆசிய பொருள் உற்பத்தி முறை’ மற்றும் ‘தன்னிறைவு பெற்ற கிராமச் சமூகங்களின் தேக்கநிலை’ பற்றிய அவர்களது கூற்றுகளையும் அப்படியே இயந்திரத்தனமாகப் பிரயோகிக்கின்றனர் என்பதாகும். இது அப்பட்டமான அறியாமை. ஆசிய பொருளுற்பத்தி முறை பற்றிய கருத்து மற்றும் கிரேக்கம், ரோம் போன்றே இந்தியாவிலும் அடிமையுடைமை முறை நிலவியது போன்ற கருத்துகள் அரை நூற்றாண்டுக்கு முன்னரே மறுத்தலிக்கப்பட்டுவிட்டது (முதலில் கோசாம்பியால்). தற்போது நாம் அதில் காணப்படும் சிற்சில வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டால், ஏறக்குறைய மார்க்சிய வரலாற்றியலாளர்கள் அனைவரும் இதில் ஒத்த கருத்து கொண்டவர்களாகவே உள்ளனர். கிராமச் சமூகங்களின் தேக்கநிலை குறித்த கருத்திலும் இதேதான் நடந்தது. எனினும், ஏற்கனவே நிலவி வந்த இந்திய நிலவுடைமை அமைப்பில் 13ஆம் நூற்றாண்டு வாக்கில் சில மாற்றங்கள் நேர்ந்தது என்பதும், அது மார்க்ஸ் விளக்கிய ‘கீழைத்தேய கொடுங்கோன்மை’க்கு ஒத்த முறையில் இருக்கிறது என்பதும் நிறுவப்பட்ட உண்மையாகும். அதேபோல், 1850களில் இருந்த சிந்தனையோடு ஒப்பிடுகையில், 1870களில், கிராமச் சமூகங்களின் தேக்கம் மற்றும் ஓரியல்பான தன்மை குறித்து மார்க்சின் சிந்தனையோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது என்பதும் கவனத்திற்குரியது. இந்த விஷயம் குறித்து இர்ஃபான் ஹபிப் மற்றும் சுனிதி குமார் கோஷ் உள்ளிட்ட அறிஞர்களின் கட்டுரைகள் 1980களின் தசாப்தத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. இங்கு நாம் விவாதிக்க வேண்டிய தொடர்புடைய மற்றொரு கூற்றும் உள்ளது. மார்க்சிய ஆய்வுமுறை என்பது ஐரோப்பாவை மாதிரியாகக் கொண்டது, இந்திய சமூகத்தை, குறிப்பாக சாதியமைப்பை ஆய்வு செய்வதற்கு அது உதவாது என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. இது ஒரு மேலோட்டமான கண்ணோட்டமாகும். ஐரோப்பிய சமூகத்தின் இயக்கவியல் பற்றிய ஆய்விலிருந்து மார்க்சியம் தோன்றியது (முதலாளித்துவ வளர்ச்சியின் செவ்வியல் மாதிரி) மேலும், ஜெர்மன் தத்துவம், பிரிட்டிஷ் அரசியல் பொருளாதாரம் மற்றும் ஃப்ரெஞ்சு சோஷலிசம் ஆகியவை அதன் முக்கிய ஆதாரமாக இருந்தது.
ஆனால், #மார்க்ஸ் மற்றும் #எங்கெல்சின் பொது நோக்குநிலையானது ஒட்டுமொத்த உலகிற்குமானதாகவே இருந்தது. வரலாற்று வளர்ச்சியினை பொதுமைப்படுத்துவதிலிருந்து பெறப்பட்ட இயங்கியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆகியவை வாழ்வை, இயற்கையை ஆய்வு செய்வதற்கும், செயலூக்கத்துடன் அதில் தலையிடவும் தேவையான ஒரு உலகக் கண்ணோட்டத்தையும், வழிமுறையையும் வழங்குகிறது. இந்தக் காரணத்தினாலேயே மார்க்சியமானது, ருஷியா மற்றும் சீனா மட்டுமல்லாது லத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஆப்ரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் சமூக-பொருளாதார அமைப்புகளின் மாறுபட்ட அம்சங்களை ஆய்வு செய்யவும், வர்க்கப் போராட்ட உத்திகளை வகுத்திடவும் பயன்படுத்தப்பட்டது. இச்சூழமைவில் (கான்டெக்ஸ்ட்), மார்க்சும் எங்கெல்சும் சாதியமைப்பு பற்றி சில விளக்கங்களையும் 6,7 கருத்துரைகளையும் ஜெர்மன் சித்தாந்தம் (1845-46) படைப்பிலிருந்து மூலதனம் தொகுதி 1இல் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதும், அது #சாதியமைப்பு பற்றி புரிந்துகொள்வதற்கான முக்கியப் பார்வையை வழங்குகிறது என்பதும் கவனத்திற்குரியது. (மேலும் விளக்கங்களுக்கு, சாதியமைப்பு பற்றிய மார்க்ஸின்க ருத்துரு, பி.ஆர். பாபுஜியின் ஆய்வுக் கட்டுரையையும், ரங்கநாயகம்மாவின் சாதி குறித்து மார்க்ஸ் கட்டுரையையும் பார்க்கவும்).
(அடைப்புக் குறிக்குள் உள்ள இந்த குறிப்பு கட்டுரையாளர்களுடையது. #ரங்கநாயகமா மற்றும் #பாபுஜி கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப்பட்டிருக்கிறது )
- அர்விந்த் நினைவு அறக்கட்டளை ஆய்வுக் குழு

Dec 24, 2016

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம்


என்னுரை

இந்தியா என்றதும் அதன் அடையாளமாகச் சொல்லப்படுவது அதன் பழமை வாய்ந்த பண்பாடு. அரசியல் சாசனத்தின்படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அதாவது இந்தியா ஓர் இந்து நாடாக இருப்பினும், மற்ற மதங்களை ‘அனுமதிக்கக்கூடிய’ ‘சுதந்திர’ நாடு எனப்படுகிறது. ஆனால், இந்து மதம் என்று ஒன்று தோன்றுவதற்கு முன்னர் பல தத்துவங்களையும், நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும், பண்பாடுகளையும் கொண்ட மக்கள் குழுக்கள் வாழும் பிரதேசங்களை, திணை வாரியாகப் பிரிக்கப்பட்ட நிலங்களைக் கொண்ட நாகரீகமாக (கண்டமாக) இருந்திருக்கிறது என்றே வரலாறு நமக்குச் சொல்கிறது.

காலப்போக்கில், பன்மைத்துவச் சமூகமாக இருந்த இந்த நாகரீகம், ஓரியல்பான சமூகமாக உருமாற்றம் செய்யப்படுகிறது. பல இனக்குழுக்களின், பிரிவுகளின் தத்துவங்களும், வழிபாட்டு நம்பிக்கைகளும் இணைக்கப்பட்டு ஒற்றை மத வடிவம் பெற்று இந்து மதம் என்றானது. மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியோடு இது தொடர்புடையது. அதாவது, மனிதர்கள் தம் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஈடுபடும் முக்கியமான நடவடிக்கையான பொருள் உற்பத்தி நடவடிக்கையோடு இந்த சமூக வரலாற்று வளர்ச்சி என்பது தொடர்புடையது. உற்பத்தி நடவடிக்கையின் விளைவாக மனிதர்களுக்குள் ஏற்படும் உறவை நாம் பொருளாதார உறவுகள், உற்பத்தி உறவுகள், உழைப்புசார் உறவுகள், சொத்துறவுகள், சமூக உறவுகள் என்கிறோம். இந்த உற்பத்தி நடைமுறையின் வரலாற்று வளர்ச்சியின் விளைவாக சமூகத்தில் பல்வேறு ஏற்பாடுகள் தோன்றுகின்றன.  து சமூகக் கட்டமைப்பு எனப்படுகிறது. இக்கண்ணோட்டத்தை நமக்கு வழங்குவது மார்க்சியம். 

இந்த சமூகக் கட்டமைப்பின் அடித்தளமாக (அடிக்கட்டுமானமாக) பொருளாதாரமும் (பொருளாயத), அந்த பொருளாதார முறை அல்லது உற்பத்தி நடைமுறைக்கேற்ற ஒழுங்கமைப்புகள் மேற்கட்டுமானமாகவும் இருக்கிறது என்று மார்க்சியம் விளக்குகிறது. உற்பத்தி நடைமுறையின் வரலாற்று வளர்ச்சியில், மனிதர்களிடையே முன்னர் சமத்துவமாக இருந்த உறவுகள் சிதைந்து ஏற்றத்தாழ்வு மிக்க மனித உறவுகள் தோன்றுகின்றன. இதுவே வர்க்க சமுதயாத்தின் தோற்றம். அனைவரும் உழைத்து, பொருட்களை அல்லது உழைப்பின் பலனை சமமாகப் பிரித்து வாழ்ந்த முறை சிதைந்து குறிப்பிட்ட மக்கள் உழைக்க, குறிப்பிட்ட பிரிவு உழைக்காமல் மற்றவரின் உழைப்பைச் சுரண்டி வாழும் முறை உருவானது.

இதுவே தனியுடைமை செல்வத் திரட்டை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறை மற்றும் உழைப்புப் பிரிவினையைக் கொண்ட அமைப்பாகும். உழைக்கும் வர்க்கம், உழைக்காமல் வாழும் எஜமானர் வர்க்கம் ஆகியவை அதன் முரண்பட்ட பிரிவுகள். ஏற்றத்தாழ்வு மிக்க இந்த சுரண்டல் முறையினால் இந்த இரண்டு வர்க்கங்களுக்கிடையில் (அதிலும் உட்பிரிவுகள் உண்டு)  ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாக ஒழுங்கமைப்புகளுக்கான தேவை எழுகிறது. அரசு, மதம், இராணுவம், நீதித்துறை ஆகிய நிர்வாக இயந்திரங்கள் இதன் விளைவாகவே தோன்றின என்பதையும் நமக்கு மார்க்சியம் விளக்குகிறது.

நிர்வாகத்தின் தேவை இயல்பானதுதானே என்பதே பொதுபொத்தியின் புரிதலாக இருக்கிறது. ஆனால் வர்க்க முரண்பாடுடைய சமூகத்தில், பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தி ஆதிக்கம் பெற்ற சமூகமானது தனது வர்க்க நலனுக்காகவே இத்தகைய ஒழுங்கமைப்புகளைத் தோற்றுவிக்கிறது. அதனால் இந்த ஒழுங்கமைப்புகளுக்கென்று ஒரு வர்க்கப் பண்பு உள்ளது. சுரண்டும் வர்க்கத்தின் பிரிதிநிதியாகி, உழைக்கும் வர்க்கத்தைப் பல்வேறு சித்தாந்தங்களுடன், பல்வேறு சட்டதிட்டங்களுடன் ஒடுக்கி ஆண்டு, உழைப்பு மற்றும் உற்பத்தியின் பலனை எஜமானர் வர்க்கத்திற்கு எந்தத் தொந்தரவுமின்றி கிடைக்குமாறு செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.

இந்த சமூக-அரசியல் பொருளாதாரத்தின் வர்க்கப் பண்பை புரிந்துகொள்ளாமல் இருப்பதன் காரணமாகவே நாம் நிலவுகின்ற அனைத்து அமைப்புகளையும், நிர்வாக இயந்திரங்களையும், எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் இந்த சுரண்டல்வாத உற்பத்தி முறையையும் இயல்பானது என்று கருதுகிறோம். அதில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை, அநீதிகளை தனித்தனிப் பிரச்சினைகளாக, நிர்வாக சீர்திருத்தக் கோளாறுகளாக, குறிப்பிட்டதொரு பிரிவின் கருத்தியல்களாக, சில தனிமனிதப் பேராசைகளாகப் புரிந்துகொள்கிறோம்.

ஆனால், அடிப்படையில் நடப்பது என்னவெனில், சுரண்டல்வாத உற்பத்தி நடைமுறையில், அதாவது உற்பத்திச் சாதன உடைமை, உற்பத்திக் கருவிகளின் உடைமை, உழைப்புப் பிரிவினை மற்றும் விநியோக முறை ஆகியவற்றை உள்ளடக்கிய உற்பத்தி நடைமுறையில், உழைக்காமல் வாழும் வர்க்கத்திற்கு இருக்கும் ஒரே குறிக்கோள் செல்வம் சேர்ப்பதாகும். உழைக்கும் வர்க்கத்திற்கும் அதுதான் வாழ்வின் இலக்கு என்று சொல்லப்பட்டிருந்தாலும், அவர்கள் செல்வம் சேர்ப்பதென்பது இயலாத காரியமாகவே இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பாட்டாளி வர்க்கத்திற்கு தம் உழைப்புச் சக்தியை விட வேறு உற்பத்திச் சாதனங்கள் இருப்பதில்லை. உற்பத்திச் சாதனங்களில், கருவிகளில் ஏதோ ஒன்றை தம் உடைமையாகப் பெற்ற வர்க்கமும் குறிப்பிட்ட அளவு செல்வம் சேர்க்க முடியும் (தம் உழைப்பினால்). ஆனால், உழைக்காமல் வாழும் எஜமானர் (முதலாளி) வர்க்கம் மட்டுமே பெரும் செல்வங்களைச் சேர்க்க முடியும்.

இந்தச் செல்வக் குவிப்பு பல்வேறு சுரண்டல் வருவாய்கள் மூலம் திரட்டப்படும். உழைப்புச் சுரண்டல் மூலம், அதாவது உழைப்பாளர்களை இயற்கைக்கு மாறாக கடுமையாக உழைக்கச் செய்து அதிக உற்பத்தியை ஈட்டுவது. அது உபரி மதிப்பு (மிகை மதிப்பு) எனப்படுகிறது. உழைப்பவர்களுக்கு அதைப் பங்கிட்டு கொடுப்பதற்குப் பதிலாக, இந்த உழைக்காத வர்க்கமானது அதனை இலாபம், முதலீடு, வட்டி, வாடகை, முதலீட்டாளர்களுக்கான இலாபப் பங்கு, நிர்வகிப்பதற்கான எஜமானர் சம்பளம், அசையாச் சொத்துக்களின் தேய்மானம் இப்படி ஏதேதோ கணக்குகளைக் காட்டி, உழைப்புக்குக் கூலி, முதலீட்டிற்கு இலாபம் (மற்றும் இதர வருவாய்) என்னும் ஒரு அநியாய பொருளாதார முறையை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

மேற்சொன்ன அந்த செல்வக் குவிப்பிற்காக, உழைக்காத வர்க்கத்திற்கு என்றென்றைக்கும் தேவைப்படும் முக்கியச் சக்தி அது உழைப்புச் சக்தியாகும். அந்த உழைப்புச் சக்தியை மிகவும் மலிவாகக் கைப்பற்றுவதற்கும், மற்றும் நிரந்தரமாக அந்த உழைக்கும் வர்க்கம் தமது அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்களாகவும், உழைக்கும் அடிமைகளாகவும் இருப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை இந்த தனியுடைமை அமைப்பு தோற்றுவித்தது, தோற்றுவிக்கிறது, பழையதைப் புதுப்பித்து நீட்டித்துப் பயன்படுத்திக்கொள்கிறது. மனித சமூகமும், மனித உறவுகளும் அதற்கேற்ற வகையில் கட்டமைக்கப்படுகிறது. அதைத்தான் நாம் சமூக மதிப்பீடுகள், பண்பாடு, மத நம்பிக்கை, ’நல்லதொரு’ சமூக அமைப்பு என்றெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

மனித வாழ்வில் பிரதானப் பங்கு வகிக்கும் இந்தப் பொருளாதாரச் செயல்பாட்டை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வது மிக மிக அவசியம். ஏனென்றால் நிலவுகின்ற சமூக அமைப்பை இயல்பானதென்றோ, இதுவே சாஸ்வதமென்றோ கருதுவதன் மூலம் நாம் அறியாமையில் மூழ்கி இருக்கிறோம் என்பதோடு, நம்மைப் போன்ற உழைக்கும் வர்க்கத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கி, சுரண்டி வாழும் ஒரு பிரிவின் செல்வக் குவிப்பிற்கு உழைத்துக் கொட்டும் பொருளாதார அடிமைகளாகவே வாழ்ந்து மடிவோம், நம் பிள்ளைகளை, அடுத்து வரும் தலைமுறைகளை உழைக்கும் அடிமைகளாகவே பிழைத்திருக்க விட்டுச் செல்வோம் என்றாகும்.

மனித சமூகத்தை, மனித உறவுகளை இந்தப் பொருளாதார அமைப்போடு (உற்பத்தி நடைமுறை) புரிந்துகொள்ளும்போது, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள், அநீதிகளுக்கான காரணங்கள் நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். எந்த ஒரு பிரச்சினையும் தனித்ததல்ல, ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். ஆகவே நிலவும் இந்த தனியுடைமை செல்வக் குவிப்பை அடிப்படையாகக் கொண்ட சுரண்டல்வாத சமூக அமைப்பை ஒழிப்பதன் மூலமே நாம் உண்மையான சுதந்திரம் பெற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதையும்  புரிந்துகொள்ள முடியும். அப்போதுதான் பொது எதிரியை அடையாளம் கண்டு, சரியான செயல்திட்டத்தை வகுத்து முன்னேற முடியும்.

அந்தவகையில், உழைக்கும் வர்க்கத்தைக் கட்டுப்படுத்த பலவித ஏற்பாடுகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கமைப்புகள் தோன்றியது என்று பார்த்தோம். அரசு, மதம், இராணுவம், நீதித்துறை ஆகியவை அந்த ஏற்பாடுகள் என்பதையும் பார்த்தோம்.

இந்த நான்கில், அரசு, இராணுவம், நீதித்துறை என்பது வெளிப்படையாகத் தெரியக்கூடிய நிர்வாக இயந்திரமாக இருக்கிறது. மதம் என்னும் அந்த நிறுவனம் மட்டும் ஏதோ இயல்பிலேயே தோன்றிய ஒன்றாகவும், மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் ஆசீர்வாதம் பெற்ற புனிதர்கள் வகுத்துக்கொடுத்த நன்னெறி என்றும் நாம் நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். உலகெங்கிலும் இதுவே நிலைமை.

இதில், பண்பாடு, வழிபாட்டு நம்பிக்கைகள், சடங்கு, சம்பிரதாயம், போன்ற பழக்க வழக்கங்கள் அனைத்து நாடுகளிலும் பொதுவாக இருப்பினும், இந்தியாவில் மட்டும் மதத்தின் ஒரு கோட்பாடாக சாதி என்னும் பிறப்பின் அடிப்படையிலான தகுதியை வரையறுக்கும் படிநிலை ஏற்பாடு ஒன்று நிலவுகிறது. பல்வேறு தத்துவங்களோடு, இந்த சாதி என்னும் கோட்பாட்டையும் உள்ளடக்கியதே இந்தியாவின் மதம் என்று சொல்லப்படும் இந்து மதமாகும்.

வர்க்க சமுதாய தோற்றத்தில் ஒடுக்கும் வர்க்கமானது ஒடுக்கப்படும் வர்க்கத்தைக் கட்டுப்படுத்த மதத்தை மிக முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தியது, அது இன்றைக்கும் தொடர்கிறது.

உற்பத்தி நடைமுறையின் வளர்ச்சியில் உற்பத்திச் சாதனங்களை (கருவிகளையும்) தனி உடைமையாகக் கொண்ட எஜமானர் வர்க்கம், அதற்கு உழைத்துக் கொடுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு இடைப்பட்ட வர்க்கமாக ‘மேய்க்கும்’ (மூளை உழைப்பு மூலம் நிர்வாகம் செய்யும்) கூட்டம், வணிகத் தொழில் செய்யும் கூட்டம், தரகுத் தொழில் செய்யும் கூட்டம், பகுதியளவு உற்பத்தி சாதனம் கொண்டு சிறு, குறு உற்பத்தியாளர்களாக இருக்கும் கூட்டம் என்று பலவேறு பிரிவுகள் உருவானது. இப்படி பல்வேறு தொழில்கள், வர்க்கக் குழுக்கள் உருவானதோடு, கலப்புகளும் நிகழ்ந்தன. பண்பாட்டு கலப்புகள், நம்பிக்கைக் கலப்புகளும் இதில் நிகழ்வது யதார்த்தமே.

இப்போக்கில், அரசும், மதமும் உருவாகும்போது, ஆளும் வர்க்கத்திற்கு ஏற்ற ஒழுங்கமைப்பிற்காகவும், உற்பத்திப் பெருக்கத்திற்காகவும் சில நம்பிக்கைகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் மதத்தின் பெயரால் உருவாக்கப்படும்/இணைக்கப்படும் போது குறிப்பிட்ட பிரிவொன்று அதற்கு மூளையாக இருந்து அரசு-சமூக-மதக் கொள்கைகளை வகுக்கவும், அதற்குத் தலைமை தாங்கவும், வழிகாட்டவும், சில சட்டதிட்டங்களைப் படைக்கும் பொறுப்பைப் பெறுகிறது. அரசு நிர்வாகம் மற்றும் சமூக ஒழுங்கிற்காக இந்தியாவில் அத்தகைய கொள்கைகளை வகுப்போராக/தொகுப்போராக புரோகிதர் கூட்டம் என்று அறியப்படும் பிராமணக் கூட்டம் இருந்ததாக வரலாறு நமக்குச் சொல்கிறது.

நிலவிய சமூக-அரசியல்-பொருளாதார அமைப்புக்கு ஏற்ற வகையில் அரசுடன் இணைந்து இந்தப் பிராமணியக் கூட்டம் தொகுத்தும், படைத்தும் கொடுத்த மதச் சித்தாந்தங்களே இன்றைக்கு இந்து மதமாக அறியப்படுகிறது. அந்த சித்தாந்தமானது சமூக-அரசியல்-பொருளாதார மட்டத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது என்பதே இன்றைக்கும் தொடரும் வரலாறு.

பிராமணிய இந்து மத சித்தாந்தத்தின்படி ‘இந்திய மனிதர்கள்’ (மட்டும்) ஆன் பெண் உறவின் காரணமாகப் பிறக்காமல் ஒரு ஆண் கடவுளின் நெற்றியிலிருந்தும் (பிராமணர்கள்), தோளிலிருந்தும் (சத்திரியர்கள்), தொடையிலிருந்தும் (வைசியர்கள்), பாதத்திலிருந்தும் (சூத்திரர்கள்) பிறந்தார்கள். (பின் எப்போது அவர்கள் பெண்ணின் வயிற்றில் பிறக்கும் மனிதர்கள் ஆனார்கள் என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்). ஆகவே, அப்பிறப்பின் அடிப்படையில் அவரவருக்கென்று ஒரு தகுதி இருக்கிறது. ஒரு மரபு இருக்கிறது - அது நால் வர்ணக் கோட்பாடு என்று தோன்றி இன்று அது சாதியாக இறுகி நிற்கிறது.

பிராமணிய இந்து மதச் சாதியமைப்பின்படி பிராமணர்கள் உயர்ந்தவர்கள், அவர்களுக்குக் கீழ் சத்திரியர்கள், பின் வைசியர்கள், பின் சூத்திரர்கள். ஆனால் இந்த நால் வர்ணத்தார்க்கும் கீழாக ஒரு சாதி அல்லது பிரிவாக இருப்பவர்கள் பஞ்சமர்கள் எனப்படுகிறார்கள். இவர்கள் பிறப்பிலேயே மிகவும் ‘கீழானவர்கள்’ என்றும், ‘தீண்டப்படாதவர்கள்’ என்றும் வரையறுக்கப்பட்டு, கடுமையான கொடுமைகளுக்கு உள்ளானார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த வரலாறு. 

இந்துமத சாதியமைப்பின்படி, இந்த படிநிலை அமைப்பின் கீழ் பிறப்பின் அடிப்படையில் இன்னார்க்கு இன்ன தொழில் எனும் உழைப்புப் பிரிவினை வகுக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்கில் உள்ளவர்களுக்கு ‘சுத்தமான’ உழைப்பும் (உடல் மற்றும் மூளை உழைப்பு), கீழ் அடுக்கில் உள்ளவர்களுக்கு ’அசுத்த’ உழைப்பும் (கடுமையான மற்றும் அசுத்த உழைப்பு) பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. வர்க்கப் பிளவின் முக்கியக் கூறாக இருக்கும் இந்த உழைப்புப் பிரிவினையை திட்டவட்டமாக நடைமுறைப்படுத்த உதவுவது சாதியமைப்பாகும். ஆனால் இந்து மதம் என்னும் அச்சாரத்தோடு இயங்குவதால், இதில் நிலவும் உழைப்புப் பிரிவினை எனும் ஏற்பாடு புரிந்துகொள்ளப்படாமல், ஒடுக்குமுறை வடிவங்களான தீண்டாமை, சமூக விலக்கு, இன்ன பிற சமூகக் கொடுமைகள் மட்டுமே சாதி என்றும், அது தனித்ததொரு பிரச்சினை என்றும் புரிந்துகொள்ளப்படுகிறது. சாதிய ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை, மதம் மற்றும் இன்னபிற அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் தனியுடைமை பொருளாதாரத்திற்கு ஏற்ற சமூக-அரசியல் கட்டமைப்புகளே காரணமாக இருக்கின்றன.

அதாவது உழைப்புச் சுரண்டல் மூலம் பெருத்த இலாபம் ஈட்டி செல்வச் செழிப்போடு வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்பு என்று பொருள். ஆகவே, சாதிய ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை, மதச் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிரானப் போராட்டங்கள் என அனைத்துப் போராட்டங்களும், நீண்டகாலப் போக்கில் வர்க்கப் போராட்டப் பாதையில் இணைந்து - நிரந்தரமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த – தனியுடைமையை ஒழித்து பொதுவுடைமையை நிறுவுவதாக இருக்க வேண்டும் என்பதே மார்க்சிய வழிகாட்டுதல்.

இவ்வாறாக, கம்யூனிஸ்டுகள் சாதியமைப்பின் கட்டமைப்பை அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் என்னும் மார்க்சிய உருவகத்தைச் சொல்லி விளக்கினால் ஏற்றுக்கொள்ளாமல், மார்க்சியத்தை எதிர்மறையாகச் சித்தரிப்பதும் அல்லது மார்க்சியத்தில் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை (இன்ன பிற அடையாளம் சார்ந்த பிரச்சினைகளுக்கும்) என்று சொல்லி அடையாள அரசியலை முன்னெடுப்பதென்பதும் உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு எதிரானப் போக்காகும். இது ஆளும் வர்க்கத்திற்கே சாதகமாக அமையும். இந்தப் புரிதல் இன்றியே முற்போக்குத் தலைவர்களில் பலரும் தங்களின் அடையாளம் சார்ந்த பிரிவினரின் விடுதலையைப் பற்றி மட்டுமே கவலை கொண்டு அதற்கான போராட்டங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் பிரிவினைவாத மனநிலைக்குள்ளாகி பாதை மாறிப் போய்விடுகிறார்கள். தலித்தியம் என்பது அத்தகையதொரு அடையாள அரசியல் போக்காகும். அம்பேத்கரை முன்வைத்து இந்த பிரிவினைவாத பூர்ஷுவா அரசியல் முன்னெடுக்கப்படுகிறது.   ஆகவே, அம்பேத்கரின் சிந்தனைகளை பகுத்தாய்வது அவசியமாகிறது. அம்பேத்கரின் சீர்திருத்தவாதம், பௌத்த மதமாற்றம் மற்றும் அரசியல்-பொருளாதார பரிந்துரைகள் ஆகியவை உண்மையிலேயே தலித் மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரக்கூடியதா என்பதை கேள்விக்குள்ளாக்குவதென்பது, தலித்தியத்தின் பெயரால் நடக்கும் பிழைப்புவாத பூர்ஷுவா அரசியலை அம்பலப்படுத்துவதென்பதாகும். 

சுதந்திர போராட்ட காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகளின் மீது அதிருப்தி கொண்டதன் காரணமாகவும், ஜான் டூயி போன்ற ஃபேபியன் சோஷலிசப் பொருளாதார வல்லுனர்களின் தாக்கத்திற்கு உள்ளானதாலும் அம்பேத்கர் மார்க்சியம் பற்றிய தவறான புரிதல்களை வளர்த்துக் கொண்டார் எனலாம். அதன் விளைவாக, மார்க்சியம் தலித் மக்களுக்கு எதிரானது என்று எதிர்மறையாக சித்தரிக்கும் அளவுக்கு சென்றார். இந்த மரபின் தொடர்ச்சியாக தலித் அரசியல் என்னும் அடையாள அரசியல் உருவாகி, இன்றைக்கு தலித் பூர்ஷுவா அரசியலாக உருமாறி நிற்கிறது. தலித் மக்களுக்கு சில சலுகைகளை, நிவாரணங்களைப் பெற்றுத் தருவது, பூர்ஷுவா பாராளுமன்ற அரசியலில் பங்குபெறுவது, சாதிய ஒடுக்குமுறை மற்றும் தீண்டாமைக்கு எதிராக ஆங்காங்கே சிலப் போராட்டங்களை நடத்துவது என்பதைத் தாண்டி இந்த அரசியல் தலைமைகளிடம் சாதி ஒழிப்பிற்காக எந்த செயல்திட்டமும் இல்லை.

அம்பேத்கரியம் என்னும் கோட்பாட்டின்படி சாதி ஒழிப்பு மற்றும் தலித் விடுதலை என்று சொல்லும் இத்தலைவர்கள் மற்றும் தலித் பூர்ஷுவா அறிவுஜீவிகள் அதன்படி சாதி ஒழிப்பு எப்படி சாத்தியம் என்று விளக்குவதில்லை. ஆனால், சாதியப் பிரச்சினைக்கான தீர்வு அம்பேத்கரிடம் உள்ளது, சாதி ஒழிப்பு உள்ளிட்ட நூலில் உள்ளது என்று இவர்கள் கூறிவந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக அம்பேத்கரின் மார்க்சிய எதிர்ப்பு கருத்துகளை பரப்பி, உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்தும் வேலையில் தீவிரமாக செயல்பட்டுவந்தனர். ஒருகட்டம்வரை கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் நேரடியாக வெறுப்பு பாராட்டி வந்த இந்த தலித் அடையாள அரசியலானது பின்னர் சூழ்நிலைக்கேற்ப கம்யூனிஸ்டுகளோடு இணைந்தும், தனித்தும் செயல்பட்டு வருகின்றது. ஆனால், அடிப்படையில் இந்தியாவுக்கு மார்க்சியம் பொருந்தாது, சாதி ஒழிப்பிற்கு மார்க்சியத்தில் தீர்வில்லை, அம்பேத்கரிடம் மட்டுமே தீர்வு இருக்கிறது என்பதே தலித் அரசியல் கோட்பாடாகும்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், மார்க்சிய அறிவுஜீவிகள் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கடுமையான எதிர்வினைகளை ஆற்றியுள்ளனர். மார்க்சியத்தை முன்வைத்து அம்பேத்கரின் சிந்தனைகளை, அவரது போராட்ட வழிமுறைகளை விமர்சித்து பல நூறு விமர்சனங்கள் வந்துள்ளன. அந்தப் பின்னணியில் வெளிவந்ததே ரங்கநாயகம்மா எழுதிய சாதியப் பிரச்சினைக்கான தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை என்னும் நூல்.

ஆனால், மற்ற எந்த நூல்களும், விமர்சனங்களும் எதிர்கொள்ளாத தாக்குதல்களை இந்த நூல் எதிர்கொண்டுள்ளது. ரங்கநாயகம்மா நூலுக்கு தொடர்ச்சியாக சில விவாதங்களை பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரவே இந்நூல் தொகுப்பு. வாசிப்பு வசதி கருதி பெரிய பாராக்களை உடைத்திருக்கிறேன்.

கடந்த தசாப்தங்களில் சாதியப் பிரச்சினை குறித்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. மானுட விடுதலையில் ஆர்வம் உள்ளவர்கள் அவற்றை கற்றறிய வேண்டும். அந்த வரிசையில், நம் சமகாலத்தில், அதாவது 2014இல் நடந்து ஒரு முக்கியமான கருத்தரங்கில் சமர்க்கிப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக அரவிந்த் நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் என்னும் நூலை வாசிக்க நேர்ந்தது. அனைத்து கட்டுரைகளுமே நாம் பதில் தேட நினைக்கும் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இருப்பினும், அர்விந்த் மார்க்சியக் கல்வியகம் குழுவாக மேற்கொண்ட ஆய்வுக் கட்டுரையை மட்டும் நான் மொழிபெயர்த்துள்ளேன். நேரம் கிடைப்பதைப் பொறுத்து மற்றக் கட்டுரைகளை மொழிபெயர்க்கலாம், அல்லது வேறு யாரேனும் மொழிபெயர்த்துக் கொடுத்தால், அடுத்தப் பதிப்பில் அதை சேர்த்து வெளியிடவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

                                                                                                      - கொற்றவை

Aug 6, 2016

ஆதவன் தீட்சண்யாவின் பதிவுக்கு எதிர்வினை

வணக்கம் ஆதவன் தீட்சண்யா,
ரங்கநாயகம்மா எழுதியுள்ள சாதியப் பிரச்சினைக்கான தீர்வு - புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை எனும் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும்போதே பதட்டத்திலும் அவசரத்திலும் நீங்கள் ஒரு வலைப்பதிவை (விமர்சனமல்ல – ஏனென்றால் விமர்சனம் என்பது அறிவுபூர்வமாக இருக்க வேண்டும்) எழுதியுள்ளீர்கள். மகிழ்ச்சி! ஏன் இவ்வளவு பதட்டம் ஆதவன்? எந்த உண்மை உங்களைச் சுடுகிறது?
சாதியப் பிரச்சினை குறித்த ஆய்வை ஒருவர் எந்தத் தலைவரை முன் வைத்து, எவரின் ஆய்வை முன்வைத்து எழுத வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது சம்பந்தப்பட்டவரா இல்லை நீங்களா? ஒருவர் எதை எழுத வேண்டும், எதைப் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்வது அவரவர் உரிமையல்லவா? //அம்பேதகரை மட்டும் இவ்வளவு குதர்க்கமாகவும் இளக்காரத்தோடும் அணுகும் புத்தகம் ஒன்றை எழுதியாக வேண்டிய தேவை அவருக்கு என்ன வந்தது?.// எனும் உங்கள் கேள்வி நகைப்புக்குரியதாக இல்லையா? முன்னுரையில் ரங்கநாயகம்மாவே தெளிவாகச் சொல்லியுள்ளார்களே. ஆக, நீங்கள் மூன்னுரையைக் கூட படிக்கவில்லை? அம்பேத்கர் / அம்பேத்கரியம் / தலித் அரசியல் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் எழுதும் தேவை இந்த சமூக நிலைமையிலிருந்தே வருகிறது ஐயா! ஆனால் எந்த நேரத்தில் எதை எழுத வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையும், எதை மொழிபெயர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையும் ஒருவரது தனிப்பட்ட உரிமை. கருத்துச் சுதந்திரம். அதுகுறித்த விமர்சனத்தை எழுதுவது அதேபோல் மற்றவரது தனிப்பட்ட உரிமை.
விமர்சனபூர்வமான ஆய்வுப் புத்தகத்தை இப்படியா எதிர்கொள்வது? அம்பேத்கரின் சிந்தனைகளை, எழுத்துகளை, சாதி ஒழிப்பிற்காக அவர் முன் வைக்கும் தீர்வுகளை மார்க்சியக் கண்ணோட்டத்தோடு ரங்கநாயகம்மா விமர்சித்து எழுதியுள்ளாரே தவிர இதில் குதர்க்கம், இளக்காரம் எல்லாம் எங்கிருக்கிறது? //குழந்தைத்தனமானது, மிகையுணர்ச்சி கொண்டது, நகைப்புக்குரியது என்றெல்லாம் பரிகாசம்// ஐயா, விமர்சனம் என்று வரும்பொழுது இதுபோன்ற சொல்லாடல்களை எல்லாரும்தானே பயன்படுத்துகிறோம். அம்பேத்கரை விமர்சித்ததாலேயே அது குதர்க்கமும், இளக்காரமும் ஆகிவிடுகிறதா? நீங்கள் எல்லாரையும் எப்போதும் மிகுந்த மரியாதையுடன்தான் விமர்சிக்கிறீர்களா?
உங்கள் ‘வலைப்பதிவில்’ ஏன் எல்லாமே அனுமானமாகவும், முத்திரைக் குத்தலாகவுமே இருக்கிறது. அறிவுபூர்வமான ஓர் எதிர்வினையாக ஒரு சிறு பத்தியைக் கூட காணமுடியவில்லையே! எந்த இடத்தில் ரங்கநாயகம்மா குறிப்பிட்ட சாதியினர் புத்தி சொன்னால் தாம் கேட்கவேண்டுமா என்பதுபோன்ற கேள்விகளை வைத்துள்ளார்? புத்தகத்திலிருந்து ஆதாரபூர்வமாக முன்வைத்துப் பேசுவதே அறிவுநாணயமாக இருக்க முடியும். அதைவிடுத்து பிறப்பின் அடிப்படையில் இந்த சமூகம் அடையாளப்படுத்தும் சாதியை ‘ஆய்ந்து அறிந்து’ அனுமானங்களின் அடிப்படையில் அவதூறு செய்வது முறையாகாது.
ரங்கநாயகம்மா எனும் பெயர் அவருக்கிருக்க ரங்கநாயகியம்மா என்றெல்லாம் எழுதியுள்ளீர்களே? இந்த பாடத்தை ஜெயமோகனிடமிருந்து கற்றீர்களா அதவன்? ஓ உங்கள் பெயர் ஆதவன் இல்லையா?
உங்கள் ‘வலைப்பதிவில்’ தெரியும் பதட்டத்தையும், அச்சத்தையும் காணும்போது அம்பேத்கரை விமர்சித்திருப்பதால் வந்த அறச்சீற்றம் போல் எனக்குத் தோன்றவில்லை. உங்களுக்கு மட்டுமில்லை, இங்கு பொதுவாக ‘தலித் அரசியலின்’ பெயரால் அடையாள அரசியலில் ஈடுபடுபவர்கள் (அதிலும் குறிப்பாக சாதியப் படிநிலையில் ஒடுக்கப்பட்ட சாதியினரில் மேலடுக்கில் இருக்கும் ‘குறிப்பிட்ட சாதி’ ஆதிக்க அரசியல் – ஒருவகையில் இதுவும் சாதிய அரசியலே), என்.ஜி.ஓ நடத்துபவர்கள், ஒருசில அனுகூலங்களுக்காக தலித் ஆதரவு வேடம் போடும் குழுக்கள், நபர்கள் ஆகியோருக்கு ஏற்பட்டிருக்கும் பீதி இது.
மார்க்சியர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா என்கிறீர்களே, உண்மையில் சலிப்பாக உள்ளது ஆதவன். இந்தப் புத்தகத்திலேயே இதுபோன்ற முத்திரை குத்தல்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக ‘தீண்டாமை எனும் மொண்ணையான ஆயுதம்’ எனும் கட்டுரையையும் ரங்கநாயகம்மா எழுதியுள்ளார். அறிவுபூர்வமாக எதிர்கொள்ளாமல் சாதியரீதியாக தாக்குதல் தொடுக்கும் நபர்களைப் பார்த்து உங்களுக்குத்தான் சாதியபுத்தி இருக்கிறது என்கிறார். இதை Reverse Casteism என்பார்கள். நீங்கள் செய்வதும் இதுதான்! ஆனால் அது காலாவதியாகிப் போன எதிர்வினை, கீறல் விழுந்த ரெக்கார்ட்!
சாதியம் குறித்து ரங்கநாயகம்மா எதுவுமே கூறவில்லையா? அப்படியென்றால் உங்களுக்குத்தான் சாதியம் குறித்து எதுவும் தெரியவில்லை எனப் பொருளாகிறது. சாதி என்பது உழைப்புப் பிரிவினையின் வெளிப்பாடு, ஒவ்வொரு சமூகத்தில் அது ஒவ்வொரு வடிவை எடுக்கிறது, இந்தியாவில் அது இப்படிப்பட்ட ஒரு படிநிலை அமைப்பாக இருக்கிறது என்று மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்கியுள்ளாரா இல்லையா? மேலும், மார்க்சியக் கோட்பாட்டை முன் வைத்து ஒரு சமூகக் கட்டமைப்பை எப்படிப் புரிந்துகொள்வது என்பதையும் அதில் விளக்கியுள்ளார். அதுமட்டுமின்றி சாதியின் தோற்றம் குறித்து இதுவரை ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை அம்பேத்கராலும் அதனை உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்கிறார். அதைத்தான் அவர் அம்பேத்கரின் எழுத்துக்களை ஆதாரமாக வைத்துப் பேசியிருக்கிறார். இதில் வெட்டி ஒட்டும் வேலையை செய்திருப்பது நீங்கள்தான்! இல்லை அம்பேத்கரின் ஆய்வுகள் அப்படி ஒட்டி வெட்டப்பட்ட ஆய்வுகள் என்று சொல்ல வருகிறீர்களா? ஏனென்றால் சாதியின் தோற்றம் குறித்து அம்பேத்கரின் ஆய்வுகளும், எழுத்துகளும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதைத்தானே அவர் விளக்குகிறார்.
அம்பேத்கர் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்கிறீர்கள்! அப்படியென்றால் அந்த விமர்சனத்தில் என்ன குறை உள்ளது என்பதை ஆசிரியரின் எழுத்துக்களை மேற்கோள்களாக வைத்தல்லவா நீங்கள் பேச வேண்டும். ரங்கநாயகம்மா அதைச் செய்திருக்கிறார், நீங்கள் செய்வது அவதூறு, கடிந்து சொல்வதானால் பிதற்றல். //இந்நூல் இந்நேரத்தில் தமிழுக்கு கொண்டுவரப்பட்டிருப்பது ஏன் // - மோடிகளும், சோனியாக்களும் தோற்றார்கள் போங்கள் – பாராளுமன்ற அரசியல்வாதிகள் எதற்கெடுத்தாலும் எதிர்கட்சிகள் சதி என்று ஆவேசம் பொங்கப் பேசுவார்களே, அதுபோல் இருக்கிறது. எப்பொழுது வந்திருந்தால் நீங்கள் இது சமூகத்திற்கு அவசியம் என்று ஏற்றுக்கொண்டிருப்பீர்கள்? சாதியம் இருக்கும் வரை, சாதிய அரசியல் தொடரும்வரை ஒருவர் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து எப்போது வேண்டுமானாலும் பேசலாம். அந்தப் போக்கில், மார்க்சியத் தத்துவத்தை வழிகாட்டியாகக் கொள்ளும் ஒருவர் அக்கண்ணோட்டத்திலிருந்து எவரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதிலும் குறிப்பாக சாதியப் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைத்திருப்பதாகக் கோரும்போது, அவரே குறிப்பிட்ட மக்களுக்கான தலைவர் என்று அரசியல் நடக்கும்போது, அத்தலைவர் சாதியப் பரச்சினைக்கான தீர்வைப் பேசும்போது மார்க்சியம் குறித்த தவறான கருத்துகளை முன்வைத்து பேசியிருக்கும்போது ஒரு மார்க்சியராக ஏன் மற்றவர் எதிர்வினையாற்றக்கூடாது?
அம்பேத்கருக்கோ, உங்களுக்கோ, தலித் செயல்பாட்டாளர்களுக்கோ இருந்தால் அது சமூக அக்கறை மற்றவர்களுக்கு இருந்தால் அது சாதிய வெறியாட்டமா? //வெறிகொண்டு ஆடுகிறார்// இதுமட்டும் மிகுந்த மரியாதைக்குரிய சொல்லாடலா ஆதவன்? பிறப்பால் நீங்கள் ஒரு தலித் என்பதாலேயே யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பரிகாசம் செய்யலாமா? இன்னும் சொல்லப்போனால் பெண் என்பதால் ஆடுகிறார் என்று எழுதியுள்ளீர்கள். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம் வெளிப்பட்டுவிட்டது என்று நான் முத்திரை குத்தினால் அபத்தமாக இருக்காதா? விமர்சனம் என்பது இருசாராரையும் ஒருவர் படித்து அவரவரின் சொந்த அறிவைக் கொண்டு பகுப்பாய்ந்து ஒரு முடிவுக்கு வரும்படி இருக்க வேண்டும், இல்லையா? ரங்கநாயகம்மாவின் புத்தகம் அதற்கு உதவும். உங்களது பதிவு அதற்கு உதவுமா?
ஒவ்வொரு முறை தலித்தியம் குறித்த அல்லது அம்பேத்கர் குறித்த விமர்சனங்களை வைக்கும்போதும் கம்யூனிஸ்டுகள் மட்டுமென்ன ஒழுங்கா? இந்தியக் கம்யூனிஸ்டுகள் சாதியப் புத்தியோடு இருக்கிறார்கள் என்பது தொடங்கி இங்குள்ள கட்சிகளின் தவறுகளை முன்வைத்து பேசப்படுகிறது. கட்சிகள், அமைப்புகள் குறித்த விமர்சனம் என்பது வேறு, தத்துவம் குறித்த விமர்சனம் என்பது வேறு. அது போன்ற விமர்சனம் அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும். அம்பேத்கர் மார்க்சியத் தத்துவம் குறித்த விமர்சனத்தை வைத்துள்ளார். அதற்கு ரங்கநாயகம்மா எதிர்வினையாற்றியுள்ளார். மார்க்சியம் ஓர் உலகக் கண்ணோட்டத்தை வழங்குகிறது, இந்த உலகக் கண்ணோட்டம் அனைத்து நாடுகளுக்கும், சமூகத்திற்கும் பொருந்துவதாக இருப்பதாலேயே அதை விஞ்ஞானபூர்வ தத்துவம் என்கிறோம். ஏற்றத்தாழ்வை ஒழிக்க, சமத்துவத்தை எய்திட ஒரு கோட்பாட்டை, செயல்திட்டத்தை மார்க்சியம் வழங்குகிறது. இன்னும் சொல்லப்போனால் அம்பேத்கர் விரும்புவதும் சமத்துவத்தைத்தானே. ஆனால் அவர் அதற்கான பாதையைக் காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு அதில் தவறிவிட்டார், அவரது உலகக் கண்ணோட்டத்தில் போதாமை உள்ளது இதைத்தானே அந்தப் புத்தகம் விளக்குகிறது. இதில் என்ன சாதியவெறி?
இதில் தம்மைத்தாமே பாராட்டிக்கொள்ள என்ன இருக்கிறது? ஒருவேளை நீங்கள் புத்தகம் எழுதினால் உங்களை அப்படித்தான் ஒவ்வொரு முறையும் பாராட்டிக்கொள்வீர்களோ? அவ்வளவு சுயமோகம் கொண்டவரா நீங்கள்! புதிய தகவலாக இருக்கிறது.
//அம்பேத்கரது கண்ணோட்டத்தை அறிவுப்புலத்திலிருந்து அகற்றுவதன் மூலம் சாதியத்திற்கெதிரான போராட்டத்தை மட்டுப்படுத்தவும் மழுங்கடிக்கவும் முடியும் என்று நம்புகிறவர்களின் குரலாக ரங்கநாயகம்மா பேசுகிறார்// ஐயா பெரிய மனது பண்ணி அம்பேத்கரின் கண்ணோட்டம், அம்பேத்கரின் தத்துவம், அம்பேத்கரியம் என்றால் என்னவென்று விளக்க முடியுமா? சாதியத்திற்கெதிரான போராட்டத்திற்காக அம்பேத்கர் முன்வைத்துள்ள செயல்திட்டங்கள் என்னென்னவென்று விவரிக்க முடியுமா? சாதியப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய ஆய்வில் - அகமணமுறை, சமபந்தி விருந்து, இட ஒதுக்கீடு, அஷ்டாங்க மார்க்கம், பஞ்சசீலம், அரச சோஷலிசம் இறுதியில் ஆன்மீகம் அதாவது பவுத்தத்தை தழுவுதல் இதைத்தான் அம்பேத்கர் பேசியிருக்கிறார். இதைத்தான் நீங்கள் தத்துவம் என்கிறீர்களா ஆதவன்? இவற்றில் இடஒதுக்கீடு தவிர மற்றவையெல்லாம் எவ்வாறு பயனற்றது (அதுவும் தற்காலிகமானது, அதன் சிக்கல்கள் என்ன என்பதையும் விளக்குகிறார்), குறிப்பாக அரச சோஷலிசம் என்பது மாற்று கிடையாது, தனியுடைமைக்கு சாதகமாக இருக்கும் அதே நிலையை வேறொரு விதமாக அது ஊக்கப்படுத்துகிறது என்றுதானே ரங்கநாயகம்மா விளக்குகிறார். இதில் என்ன திரிபுவாதத்தை, சாதிய வெறியை நீங்கள் கண்டீர்கள்?
தலித்தாய் பிறந்ததாலேயே எப்போது பார்த்தாலும் எதிர் தரப்பினரை சாதிவெறி பிடித்தவர்கள், தலித் விரோதி என்று இங்குள்ள ‘தலித் போராளிகள்’ விமர்சிக்கிறார்களே. அம்பேத்கரின் எழுத்துகளில் வருணத்திற்கு ஆதரவாக உள்ள கருத்துகளை, மநு பற்றிய புகழ்ச்சிகளை, இன்னும் இதர விவரணைகளை, எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாளர்கள் குறித்த அவரது முடிவுகளை, மார்க்சியம் ஒரு பன்றித் தத்துவம், அது வன்முறை நிறைந்தது என்ற அம்பேத்கரின் அவதூறை என்னவென்று சொல்வீர்கள்? ஏன் இந்த பாரபட்சம்? ஏன் இந்த மழுப்பல்வாதம்? ஏன் இந்த ஒற்றைக் கண் பார்வை?
நீங்களும் ஒரு மார்க்சிய கட்சியின் ஒரு வெகுஜனப் பிரிவில்தானே பொறுப்பில் உள்ளீர்கள்! அப்படியென்றால் நீங்கள் இன்னமும் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளவில்லையா? மார்க்சியத்தை ஒருவர் தவறாக சித்தரிக்கும்போது உங்களுக்கு கோபம் வராதா? உங்கள் சாதிய மனோபாவம் அதை மட்டுப்படுத்துகிறதா? // சாதியத்திற்கு எதிரான போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் இணைத்து நடத்துவதன் தேவையை உள்வாங்கி மார்க்சீய அமைப்புகளை அது நோக்கி உந்தித்தள்ள பணியாற்றி வருபவர்களை பின்வாங்கச் செய்கிற தந்திரம் இப்புத்தகத்தில் துருத்திக்கொண்டு இளிக்கிறது.// - உண்மையில், இங்குதான் உங்கள் திரிபுவாதம் அதன் உச்சத்தைத் தொடுகிறது. புத்தகத்தைப் படிக்கும் எவரும் (தன்னலவாத அரசியல் உள்நோக்கம் இன்றி படிக்கும் எவரும்) பல்வேறு பிரச்சினைகளுக்கான போராட்டங்கள் குறித்து ரங்கநாயகம்மா என்ன சொல்லியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியும். சமூகத்தில் எந்தப் பிரச்சினையும் தனித்ததொரு பிரச்சினை கிடையாது, ஆகவே எது முதன்மைப் பிரச்சினை எனும் வாதம் பொருளற்றது, அவரவர் அல்லது அந்தந்த அமைப்புகள் தாம் எடுத்துக்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஏற்ப செயல்திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும். தேவைப்படும் நேரங்களில் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து செயல்பட வேண்டும். ஆனால், நிரந்தரமாக மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் எல்லா ஏற்றத்தாழ்விற்கும் காரணமாக இருக்கும் அடிக்கட்டுமானத்தைத் தகர்த்தெறிய வேண்டும். அதுதான் தனியுடைமையை ஒழிப்பது. அந்த இலக்கினை அடைய, அதற்கு வழிகாட்டும் கோட்பாடான மார்க்சியக் கோட்பாட்டை ஏன் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் ரங்கநாயகம்மா கோட்பாட்டுபூர்வமாக, அறிவுபூர்வமாக விளக்கியுள்ளார். இதில் எங்கு அவர் மார்க்சிய வேடமணிந்திருக்கிறார். அவர் வேடமணிவதை நீங்கள் எப்போது, எங்கு பார்த்தீர்கள்?
ரங்கநாயகம்மா யார் என்றும், இதுவரை அவரது பங்களிப்புகள் என்னவென்பதும் தெரியுமா உங்களுக்கு? (பார்க்க http://ranganayakamma.org/) ஏன் ஆதவன் இப்படி ஒரு நிலைக்கு உங்களை நீங்களே தாழ்த்திக்கொண்டீர்கள்? உண்மையில், உங்களை எண்ணி எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.
உங்களது அந்த வலைப்பதிவில் வெளிப்படுவது அம்பேத்கர் மீதான விமர்சனத்திற்கெதிரான கோபமோ, அறச்சீற்றமோ அல்ல! மாறாக, அவரை முன் வைத்து நீங்களும், உங்களைப் போன்றோர் மேற்கொண்டு வந்த அடையாள அரசியலும், திரிபுவாத அரசியலும் அம்பலத்திற்கு வருகிறதே எனும் பதட்டம்!
ஆம்! திரிபுவாதமே. உழைக்கும் வர்க்க மக்களை ‘தலித்’ என்று அடையாளப்படுத்தி அரசியல் செய்வதன் மூலம் இந்தியாவில் இன்று ‘குறிப்பிட்ட சாதியினர்’ தலைமையிலான கட்சிகள், அமைப்புகள், அச்சாதியில் பிறந்த தனி நபர்கள், என்.ஜி.ஓக்கள் பல ஆதாயங்களைப் பெற்று வருகின்றன. அவர்களே இந்நூல் குறித்தும், ரங்கநாயகம்மா குறித்தும் அவதூறுகளை மேற்கொண்டு வருகின்றனர். நீங்கள் அதுபோன்ற அனுகூலங்களைக் கணக்கில் கொண்டு இயங்குபவர் அல்ல என்றே கருதுகிறேன். இது ஒருவகையான ரசிக மனோபாவத்தின் வெளிப்பாடு. கபாலி ரசிகர்களுக்கும், உங்களுக்கும் வேறுபாடு உள்ளது என்றே எண்ணுகிறேன். ஏனென்றால் அறிவுப்புலத்தில், தலித் மக்களுக்கான போராட்டங்களில் உங்களின் செயல்பாடுகள் முக்கியமானது. அத்தகைய சமூக அக்கறை கொண்டவர் அறிவு நாணயத்தோடு எதிர்வினையாற்ற வேண்டும். உண்மையில் ஒருவருக்கு தலித் மக்கள் விடுதலையில் அக்கறை இருப்பின் அப்படித்தான் இயங்க முடியும். எங்களுக்கு உழைக்கும் வர்க்க மக்கள் மீது அக்கறை இருப்பதால்தான் நாங்கள் அவர்களின் விடுதலைக்கான பாதையைக் காட்டும் தத்துவம் எது என்பதை அவர்களிடத்தே கொண்டு சேர்க்க விரும்புகிறோம். அந்த தத்துவமே அறிவுபூர்வமாக விமர்சனம் செய்யவும், பண்புடன் எதிர்வினையாற்றவும் எங்களை வழிநடத்துகிறது.
அம்பேத்கர் உங்களுக்கு அப்படி வழிகாட்ட முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. ஏனென்றால், எதையும் ஒழுங்காகப் படிக்காமல், அவசரகதியில் முன்முடிவுக்கு வந்து கண்மூடித்தனமாக நிராகரிக்கும் போக்கை அவர் கொண்டிருந்தார். அதனால்தான் மார்க்சியம் குறித்து எதையும் படிக்காமலேயே அதுபற்றிய முடிவுக்கு வந்தார். அதேபோல் நீங்களும் புத்தகத்தை முழுமையாகப் படிக்காமல் பதிவு எழுதியிருக்கிறீர்கள். உண்மையில், நீங்கள் அவரிடமிருந்து அதை மட்டுமே கற்றுக்கொண்டுள்ளீர்கள் போலும்! இதற்கு ‘Rejectionism’ உள்நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் நிராகரிப்புவாதம் எனப் பொருள்.
அம்பேத்கரின் சொற்களில் இறுதியாக, சாதி ஒழிப்பிற்காக தலைமை தாங்கி செயல்படுவதாகச் சொல்லும் நபர்களின் வண்டி தவறான பாதையில் செல்கிறது, அப்பாதையில் செல்ல அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் வழிகாட்டிகள் எனும் பெயரில் மக்களிடம் அறியாமையை விதைத்து, திரிபுவாதங்கள் செய்து, பிளவுபடுத்தி, சாதி ஒழிப்பின் பெயரால் மீண்டும் சாதிய அரசியல் பாதையில் எம் உழைக்கும் வர்க்க மக்களையும் உங்களோடு சேர்த்து இழுத்துச் செல்ல எவருக்கும் உரிமை இல்லை. அப்படி அவர்கள் செய்வார்களே ஆயின் சரியான பாதையை அடையாளம் காட்டும் உரிமை அம்பேத்கருக்கு மட்டுமன்று, இந்த சமூகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. மேலும் அடையாள அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு வேண்டுமானால் இழப்பதற்கு பலதும் இருக்கலாம். அதனால் அவர்கள் அம்பேத்கரை திருவுருவாக முன்வைத்து போலியாகவோ அல்லது அறியாமையின் விளைவாகவோ தூக்கிப் பிடிக்கலாம். ஆனால் உழைக்கும் வர்க்கமான எங்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை, அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அந்த அடிமைச் சங்கிலிகளை அறுத்தெறிய உதவும் ஒரு தத்துவதைக் கற்கும் உரிமையும், அதை போதிக்கும் உரிமையும் எங்களுக்கு உண்டு. அத்தத்துவத்தை தவறாக சித்தரிப்போர் குறித்து விமர்சிக்கவும் எங்களுக்கு உரிமை உண்டு. அவ்விமர்சனத்தில் தலித் விரோத கருத்துகள், சாதி வெறி இருப்பின் ஆதாரபூர்வமாக எடுத்து விவாதிக்க வாருங்கள், பேசத் தயாராக இருக்கிறோம்.
ஒரு ஆய்வுக் கட்டுரையையே (முழுதாகப் படிக்காமல்-) குப்பை என்று சொல்லும் கர்வம் உங்களுக்கு இருப்பினும், உங்களது வாதங்கள் குப்பையே ஆனாலும், உள்நோக்கம் கொண்டதாக இருப்பினும் அதைப் பொருட்படுத்தி விவாதிப்போம்.
பி.கு: புத்தகத்தைப் படிப்பதென்பது முன்முடிவுகளுடன் ஆங்காங்கே புரட்டுவது கிடையாது. திறந்த மனதுடன் உண்மையாக முழுமையாக ‘ஆழ்ந்து படிப்பது’ என்பதாகும். அவசரகதியில் ஒரு பதிவு எழுதிவிட்டு, அதற்குள் ஆத்திரமா என்று எங்கோ சென்று பதிலளிக்கிறீர்கள். முழுவதுமாகப் படிக்கமலேயே இவ்வளவு முன்முடிவுகளோடு வசை பாடும் நீங்கள் முழுவதும் படித்துவிட்டு என்ன எழுதப் போகிறீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

Jun 3, 2015

பெண்ணுக்கழகு



அழகு என்ற சொல்லுக்கு பால் அடையாளம் இல்லை. எனினும், சமூகத்தில் அது பெண் பாலினச் சொல்லாக மாற்றப்பட்டுவிட்டது. ஒரு பெண்ணைப் பற்றி அறிமுகம் செய்ய வேண்டுமெனில் அவள் நல்ல அறிவானவள் என்று சொல்லக் கேட்பது அரிதுலும் அரிது. அவள் அழகானவள், சுமாராக இருப்பாள், குண்டாக இருப்பாள் என்பன போன்ற அங்க வரையறைகளே பெண்ணுக்கு அடையாளம்.  ஆனால் ஆணைப் பற்றி சொல்ல – தொழில், கல்வி, அறிவு, வம்சாவளி போன்றவை முன்னிறுத்தப்படும்.

அழகொன்றே பெண்ணின் அடையாளம் என்ற கருத்து பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைபெற்றுவிட்டது. அதன் விளைவாக அக்கருத்துப் பள்ளத்திலிருந்து மீளமுடியாதவர்களாகிப் போனார்கள் பெண்கள். இதுவரை ஆணுக்கான நுகர்வுப் பொருளாய் பெண்ணை தாரைவார்த்து வந்த அக்கருத்தியலானது இன்றைக்கு அழகு சாதன நுகர்வுப் பொருள்களுக்கான சந்தை இலக்காய் பெண்ணை மாற்றி வைத்திருக்கிறது.  ஊடகங்களில் எங்கெங்கு காணினும் அழகிப் போட்டிகள், அழகு சாதனக் குறிப்புகள், தோல், நிறம், முடி, நகம், உடல் எடை… இத்யாதி பற்றிய மருத்துவக் குறிப்புகள். எந்நேரமும் பெண்கள் தங்கள் அழகு பற்றிய கவலையிலே மூழ்கியிருக்க வேண்டும். பெண்களின் கைப்பையில் என்ன இருக்கும் மேக்கப் சாதனங்கள்தானே என்று ஆண்கள் ஏளனம் பேசுவதை நாம் கேட்பதுண்டு. ஆனால் அத்தகைய ஆண்கள்தான் ‘அழகற்ற’ எந்தப் பெண்ணையும் ‘சப்பை ஃபிகரு’, ‘கேவலமான ஃபிகரு’ என்று பெருந்தன்மையோடு அவமானப்படுத்துகின்றனர்.

பெண்களுக்கு அதீத அழகுணர்வு இருக்கிறது. இதை யாரும் மறுக்கவில்லை. அதே அளவு ஆண்களுக்கும் இருக்கிறது. ஆனால் ‘அழகற்ற’ பெண்ணுக்கு எதிர்காலமும், வாய்ப்புகளும், பெரும் சவாலுக்குறியது. ஆண்களுக்கு பெரும்பாலும் அப்படியில்லை. பெண்ணை வெறும் போகப் பொருளாக பாவிக்கும் இந்த ஆணாதிக்க சமூகத்தின் எதிர்பார்ப்புகளே பெண்களின் அழகுப் பைத்தியத்திற்குக் காரணம். நிறுவனங்களின் வாயில்களில், அழகான பெண்கள் வேலைக்குத் தேவை எனும் பெயர் பலகையைக் கண்டிருப்போம், அழகான ஆண்கள் தேவை என்று கண்டிருக்கிறோமா?

பெண்ணுக்குத்தான் அழகு பற்றிய எத்தனைக் கவலைகளை இந்த அழகு சாதன நிறுவனங்கள் திணிக்கின்றன. பரு, நிறம், சுருக்கம், கரு வளையம், பளபளப்பு, கை கால், அக்குளில் முடிப் பிரச்சினை, தூசு, மாசினால் சருமப் பிரச்சினை, குதிகால் வெடிப்பு, அங்க அளவு, முடி, கண்ணின் கருவிழி நிறம், கண்ணாடி அணிதல் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இதனால் தாக்கம் பெற்று பெண்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். ஒருபுறம் தங்கள் அழகை மேம்படுத்திக்கொள்ள பெண்கள் தீவிரமாகப் போராட விளம்பரங்கள் நிர்பந்திக்கையில், அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அல்லது தன் அழகை முன்னிறுத்தும் பெண்கள் பற்றிய தவறான - திமிர் பிடித்தவள், ஒழுக்கம் கெட்டவள், நம்பிக்கைக்குறியவள் அல்ல என்பன போன்ற - கருத்துகளை பரப்பும் வேலையை திரைப்படங்களும், வேறு சில சமூக மட்டங்களும் செய்கின்றன. பெண்கள் இருதலைக் கொள்ளி எறும்புகளாய் சிக்கித் தவிக்கின்றனர்.


அழகு மட்டுமிருந்தால் போதும் பெண்கள் வானையே எட்டிவிடலாம், முக்கியமாக பெரும் பணக்காரியாகலாம், சாலையில் நடந்துபோகும்போது ஒரு திரைப்பட இயக்குனர் அல்லது விளம்பர இயக்குனர் கண்ணில் பட்டு ஒரேநாளில் நட்சத்திரமாகி விடலாம், இன்னும் உச்சபட்சமாக ஓட்டப்பந்தயத்தில் வெல்லக்கூட அழுகிருந்தால் போதும் என்கிற அளவுக்கு வியாபார நிறுவனங்கள் நம்மை முட்டாள்களாக்குகின்றன. இக்கருத்தை ஆழமாகப் பரப்பப் பயன்படும் உத்திகளில் ஒன்று அழகிப் போட்டியாகும்.

அழகிப் போட்டிகள் மூலம் பெண் உடல் மேலும் மேலும் பாலியல் பண்டமாக்கப்படுகிறதே தவிர எந்த விதத்திலும் அது பெண்களின் விடுதலைக்கு வழிவகுப்பதில்லை. உலக அழகிப் போட்டிகள் போன்றவை உண்மையில் பெரும் அரசியல் உள்நோக்கமுடையது. அழகுசாதனப் பொருட்கள், ஆடை அலங்கார நிறுவனங்கள், அழகான உடல் பராமரிப்புக்கான உணவு தயாரிக்கும் நிறுவனங்களின் ஆதாயத்திற்காக நடத்தப்படுபவை. முதலாளித்துவ நுகர்வு கலாச்சார வேட்டையின் வலைவீச்சுகளில் ஒரு பகுதி அது. எந்த நாட்டின் பெண் அப்பட்டத்தை வெல்ல வேண்டும் என்பது உட்பட அனைத்திலும் சந்தை அரசியல் நிறைந்துள்ளது. வெல்லும் அழகிகளைக் கொண்டு தமது அழகு சாதனப் பொருட்களை அந்நாட்டில் சந்தைப்படுத்து எளிமையானது.  கிரிக்கெட் விளையாட்டைப் போல் அந்தந்த நாட்டின் தேசிய உணர்வை அல்லது இன உணர்வை பகடைக்காயாய் கொண்டு செல்வாக்குச் செலுத்தி  மக்களின் ஆதரவைப் பெற அவர்களையும் ஓட்டெடுப்பில் பங்கெடுக்கச் செய்து தம் சரக்குகளுக்கான ஆதரவை வெகு தந்திரமாக அவை நிலைநாட்டிக்கொள்கின்றன. இதில் சமீபத்திய பகடைக்காய் தமிழ் இன உணர்வு, முதன் முதலில் ஒரு தமிழ் பெண் உலக அழகி ஆகும் வாய்ப்பு, தமிழ் பெண்ணுக்கு வாக்களியுங்கள் எனும் அறைகூவல்கள். ஒரு இனத்தின் உயர்வுக்கும், விடுதலை போராட்டத்திற்கும் அடையாளமாக அழகு எதற்காகத் தேவைப்படப் போகிறது? அல்லது உலக அழகிகள் இதுவரை சாதித்ததுதான் என்ன? மானுட விடுதலைக்கான போராட்டத்தில் அவர்கள் ஆற்றிய பங்குதான் என்ன?

அழகு பற்றிய வியாபாரிகளின் அக்கறையில் சருமத்திற்கு அடுத்ததாக இடம்பிடிப்பது மயிர் பிரச்சினை. அதற்குத் தீர்வாக சந்தையில் இன்றைக்கு எத்தனை எண்ணை நிறுவனங்கள் தோன்றிவிட்டன. ஏதோ ஒரு எண்ணை 200 மில்லி 400 ரூபாய் என்று சொல்லக் கேள்வி. ஆனால் நம் வீட்டு தாய்மார்கள் தோட்டத்தில் அல்லது சாலையோரத்தில் கிடைக்கும் எளிய மூலைகை இலைகளைப் போட்டு காய்ச்சிக் கொடுக்கும் எண்ணைக்கு 50 ரூபாய் கூட செலவாகாது. இப்படி ஒவ்வொரு அழகு சாதனப் பொருளகளிலும் அடிக்கப்படும் கொள்ளை இலாபம் அநியாயமானது. ஆனால் உண்மை என்னவெனில், உடலின் எந்தவொரு பிரச்சினையும் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது, அதாவது உடலின் வளர்சிதை மாற்றத்தோடு தொடர்புடையது. உடல் உறுப்புகளை, குறிப்பாக வயிற்றை சுத்திகரிப்பது அல்லது வாழ்க்கை முறையை இயற்கையோடு இயைந்த வகையில் பராமரிப்பதோடு தொடர்புடையது. மேல்பூச்சுகள், எண்ணைகள் எந்த வகையிலும் அதற்கு தீர்வாக அமையாது. மேலும், பொருள் இழப்பைக் காட்டிலும், அவை ஏற்படுத்தும் மன சஞ்சலங்கள், ஆபத்தான கருத்தியல்களே நமக்கு கவலை அளிக்கின்றன.

அழகு சாதன நிறுவனங்களின் பிரச்சாரத்தில் மற்றொரு ஆபத்தான பிரச்சினை என்னவெனில் அதன் பாலினவாதமாகும். ஆண் உடலின் இயற்கையான தோற்றத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஆணாதிக்கச் சமூகமானது பெண் உடலை தம் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைப்பதிலேயே குறியாய் இருக்கிறது. உதாரணமாக, உடலில் முடி முளைப்பதென்பது இயற்கையான ஒன்று ஆனால் அதை மழிக்கச் சொல்லி பெண்கள் ஏன் நிர்பந்திக்கப்படுகிறார்கள். கால்களில் முடி தெரிய ஆண்கள் ஷார்ட்ஸ் அணிகையில், அத்தகைய உடை அணிய வேண்டுமானால் பெண்கள் தங்கள் கால்கலை மழுமழுப்பாக வைத்திருக்க வேண்டும், அக்குளில் முடியை சிரைக்க வேண்டு்ம், (வில் போல்) புருவம் மழிக்க வேண்டும், உதட்டுச் சாயம் பூச வேண்டும், மேல் உதட்டில் முளைக்கும் மீசை மயிர்களை மழிக்க வேண்டும், இமைமயிர்களை விரைப்பாக்க வேண்டும், முடிக்கு இஸ்திரி போட வேணடும்…. நகச் சாயம் பூச வேண்டும்…  பெண்களே ஏன் நமக்கு இத்தனை கட்டளைகள். முதலாளித்துவ ‘கண்டுபிடிப்புகளின்’ விளைவாக ஆண்களுக்கும் அத்தகைய நிர்பந்தங்கள் இப்போது வரத் தொடங்கிவிட்டன எனினும், இன்னும் அது எழுதா விதியாக்கப்படவில்லை. ஆண் எப்படி இருந்தாலும் திருமண சந்தையில் அவன் விலை போவான்.

அழகு என்றால் என்ன? எவர் அதை வரையறுப்பது எனும் கேள்வியை எழுப்புங்கள். நம் இயல்பான தோற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்காத ஒருவருக்காக நாம் ஏன் வருந்த வேண்டும்? நம்மை ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்? ஏன் அடிமைகளாக வேண்டும்?

அழகென்பது தனித்தன்மையில் இருக்கிறது, ஒப்பனை என்பது அத்தனித்தன்மையைக் கொன்று சாயம் பூசப்பட்ட பொதுச் சுவர் போல் நம் முகங்களை மாற்றுகிறது. தனித்தன்மை என்பது அறிவில் இருக்கிறதே ஒழிய முகத்தில், உடலில் இல்லை. இந்த சமூகத்தில் பெண் பாலினத்தின் இடம் என்ன? எவர் நம்மைக் கட்டுப்படுத்துகின்றனர்? அதற்குக் காரணமான சமூக அமைப்பு யாது என்பது பற்றிய அறிவே இன்றைக்குப் பெண்களுக்குத் தேவை.

வெளித்தோற்ற ரீதியான அழகு விதியானது உண்மையில் நம்மை அவமானப்படுத்தும் ஒரு விதியாகும். அது நம் தன்னம்பிக்கையைக் குலைக்கிறது. தன்நம்பிக்கையே சுயமரியாதையின் ஊற்று. சுயமரியாதை என்பது சுயத்தின் வெளிப்பாடு. அழகுணர்ச்சி சுயத்தைக் கொல்கிறது, பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாகக் கருதச் செய்கிறது. ஆண்களுக்கான பாலியல் பண்டமாக நம்மை நிர்ணயிக்கிறது என்பதை பெண்கள் உணர வேண்டும்.

அழகு என்பது இன்றைக்கு ஒரு வியாபாரச் சரக்கு. ஒன்று நாமெல்லாம் அதற்கான பரிசோதனை எலிகள் அல்லது சந்தை இலக்கு. நம் சருமங்கள் மீதும், நம் உடல் மீதுமல்ல அவர்களுக்கு அக்கறை, நம்மிடம் இருக்கும் பணத்தின் மீதே அவர்களுக்கு அக்கறை. நாம் எவ்வளவுக்கெவ்வளவு சிந்திக்க மறுக்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களுக்கு இலாபம். சரி அப்படியென்றால் எதுதான் பெண்ணுக்கழகு? அழகென்பது ஒரு கருத்து. அது வெறும் சொல். அதைப் பெண்களுக்கான கட்டளையாக்கியது ஆணாதிக்கச் சமூகமும், அதன் பாதுகாவலரான பொருளாதார அமைப்பும். உண்மையில், பெண் உடலைக் கட்டுப்படுத்தும் ஆணாதிக்க விதிகளை ஒழித்தலே பெண்ணுக்கழகு.

நன்றி: உயிரோசை

image source: http://economydecoded.com/2015/02/beauty-consumerism-ugly-truth.html 

Dec 16, 2014

இதுவரை ஏன் இதனை எவரும் முயற்சித்திருக்கவில்லை?:



‘பாலியல் தொழிலை ஒழிக்க முடியாது, அது என்றென்றும் நிலைத்திருக்கும்’ என்பன போன்ற நூற்றாண்டுகால வழமையான பேச்சுக்களுக்கு மத்தியில், அத்தொழிலை ஒழிப்பதில் ஒரு நாடு அடைந்திருக்கும் வெற்றியானது தீர்வை நோக்கி ஒளியூட்டும் ஒரு தனித்த கலங்கரை விளக்கம் போல் உள்ளது. ஐந்தே வருடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை சுவீடனில் குறைந்துள்ளது. தலைநகர் ஸ்டால்க்ஹோமில் தெருவோர பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையானது இரண்டு மடங்காகக் குறைந்துள்ளன. ஜான்களின் (பாலியல் வாடிக்கையாளர்) எண்ணிக்கையும் 80% குறைந்துள்ளன. பல சுவீடிஷ் தெருக்களில் பாலியல் தொழில் முற்றிலுமாக மறைந்துவிட்டது. சுவீடனில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக இருந்தபோது, இருபதாம் நூற்றாண்டின் கடந்த மூன்று பத்தாண்டுகளாக அதிகரித்து வந்த பிரபல சுவீடிஷ் விபச்சார விடுதிகளும், மசாஜ் பார்லர்களும்கூட மறைந்துவிட்டன.

பாலியல் தொழிலுக்கு சுவீடன் நாட்டின் தீர்வுஏன் இதை எவரும் முன்னரேமுயற்சி செய்திருக்கவில்லை?

கூடுதலாக, பாலியல் தொழிலுக்காக சுவீடனுக்குக் கடத்தப்படும் வெளிநாட்டுப் பெண்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்றளவிற்கு வந்துவிட்டது. கடந்த சில வருடங்களில் வருடத்திற்கு 200 முதல் 400 பெண்கள் மற்றும் சிறுமிகள் மட்டுமே பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டனர் என்று சுவீடிஷ் அரசாங்கம் கூறுகிறது. அண்டை நாடான ஃபின்லாந்தில் வருடத்திற்கு 15,000 முதல் 17,000 பெண்கள் கடத்தப்படுகின்றனர் எனும் நிலையை ஒப்பிடுகையில் மேற்சொன்ன எண்ணிக்கை வெகு சொற்பமே.
மற்ற எந்த நாடுககளோ அல்லது மற்ற எந்த சமூகப் பலப்பரீட்சை முயற்சிகளோ சுவீடனின் நம்பிக்கைக்குறிய முடிவை ஈன்றதில்லை.
மகத்தான இந்த சாதனையை அடைய அப்படி என்னதான் சிக்கலான சூத்திரத்தை சுவீடன் கையாண்டது?
வியப்புகுரிய வகையில், சுவீடனின் சூத்திரம் ஒன்றும் அப்படி சிக்கலானதல்ல. உண்மையில், அதன் கொள்கை மிகவும் எளிதானதாகவும், சமயோசித அறிவைக் கொண்டு எவரும் எளிதில் கண்டுவிடக் கூடியத் தீர்வாகவே தெரிகின்றது. அதனால்தான் உடனேயே இக்கேள்வி நமக்கு எழுகிறது, “ஏன் இதை இதுவரை எவரும் முயற்சிக்கவில்லை?”
சுவீடனின் 1999ஆம் ஆண்டின் புரட்சிகரமான சட்டம்
பல வருட ஆய்வுகளுக்குப் பிறகு 1999இல் சுவீடன் ஒரு சட்டத்தை அறிமுகம் செய்தது: அ) பாலின்பத்தை (Sex) வாங்குவதை குற்றமெனக் கருதுதல் ஆ) பாலின்பத்தை விற்பதை குற்றமற்றதாகக் கருதுதல். இந்தச் சட்டத்தின் பின் இருக்கும் புதுமையான கொள்கையை அரசு தனது சட்ட ஆவணத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறது:
“சுவீடன் நாட்டைப் பொறுத்தவரை, பாலியல் தொழில் என்பது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான ஆணாதிக்க வன்முறையின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் ஒரு சுரண்டல் எனவும் அது ஒரு பிரதான சமூகப் பிரச்சினை எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது… பெண்களை, குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக ஆண்கள் வாங்குவதும் விற்பதும் நடக்கும்வரை பாலியல் சமத்துவத்தை நாம் அடைய முடியாது.”
பாலியல் தொழில் பற்றிய சுவீடனின் இரண்டுபக்க சட்ட செயல்திட்டத்தோடு கூடுதலாக ஒரு பக்கமானது பாலியல் தொழிலிலிருந்து வெளியேற நினைக்கும் பாலியல் தொழிலாளிகளுக்கு உதவும் வகையில் ஏராளமான சமூக நல நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், மக்களுக்கான விழிப்புணர்வுக் கல்விக்காகவும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. உள்ளபடியே, சுவீடனின் தனித்துவமான இந்த செயல்திட்டம் பாலியல் தொழிலை பெண்களுக்கெதிரான வன்முறையாகக் கருதுகின்றது. அதனால் பாலின்பத்தை வாங்குவதன் மூலமாக பெண்களை சுரண்டும் ஆண்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர், பெண் பாலியல் தொழிலாளிகள் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். மேலும், இதுநாள்வரை இருந்த பாலியல் தொழில்குறித்த மடத்தனமான ஆண் சார்பை எதிர்கொள்ளும் வகையில் மக்களுக்கு கல்வி வழங்கப்படுகின்றது. அவர்களது கண்ணோட்டத்தை சட்டத்தின் பிடி கொண்டு இருக்கிப் பிடிக்கும் வகையில், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சட்டத் தொகுப்பின் ஓர் அங்கமாக பாலில் தொழில் சட்டம் சுவீடனில்1999ஆம் வருடம் இயற்றப்பட்டது.

அதன் பாதையில் தொடக்ககாலத் தடைகள்
ஆர்வமூட்டும் வகையில், அச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னரான விரிவான திட்டமிடல் காலத்தின்போது முதல் ஓரிரு வருடங்களில் இந்தப் புதுமையானத் திட்டத்தில் பெரிதாக ஏதும் நடைபெறவே இல்லை. பாலியல் தொழில் சுவீடனில் சட்டபூர்வமாக இருந்த காரணத்தால் முந்தைய மனநிலையிலேயே இருந்த காவல்துறையானது மிகவும் குறைவான ‘ஜான்களையே’ கைது செய்தது. தோல்வியை உலகெங்கிலும் உள்ள எதிர்ப்புவாதிகள் மிதமிஞ்சைய வகையில் விளம்பரப்படுத்தியதோடு “பாருங்கள்! பாலியல் தொழில் எப்போதும் இருந்திருக்கிறது, இனியும் இருக்கும்” என எக்காளமிட்டனர்.
அவர்களது திட்டத்தை சரியாகப் புரிந்துகொண்ட சுவீடர்கள் அவர்களின் கூச்சலுக்கு செவி சாய்க்கவில்லை. விரைவில் பிரச்சினையை அடையாளம் கண்டு அதற்கு தீர்வும் கண்டனர். அவர்களின் சிறப்பான முயற்சி எங்கு கோளாரில் சிக்கியது என்பதைக் கண்டுபிடித்தனர். சட்ட அமலாக்கப் பிரிவானது தன் கடமையை சரிவரச் செய்யவில்லை. சுவீடிஷ் மக்களும், சட்டமும் புரிந்துகொண்ட பிரச்சினையின் ஆழத்தை சரியாகப் புரிந்துகொள்ளாத காவல்துறைக்கே தீவிர பயிற்சித் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தது. பாலியல் தொழில் என்பது பெண்களுக்கெதிரான ஆணாதிக்க வன்முறை. சுரண்டுபவர்கள் மற்றும் வாங்குபவர்களே தண்டனைக்குரியவர்கள். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாலியல் தொழிலாளிகள் உதவிக்குரியவர்கள் என்பதில் சுவீடன் அரசு உறுதியாய் இருந்தது. சுவீடிஷ் அரசாங்கம் பெரும் நிதியை ஒதுக்கி அந்நாட்டின் காவல்துறையினர், அரசு வழக்குறைஞர்கள், மேலிருந்து கீழ்நிலை வரையிலான அதிகாரிகள் ஆகியோருக்கு தீவிர பயிற்சி அளித்து, இலக்கையும் கண்டிப்போடு தெளிவுபடுத்தியது. அதன் பிறகே எவரும் ஒப்பிட முடியாத விளைவுகளை அந்நாடு கண்டது.
சட்டத்தின் தோல்வி அல்லது ஒழுங்கமைப்பு உத்தி
பாலியல் தொழில் பெருமளவில் நடைபெறும் ஒரு நாட்டில், நம்பிக்கையளிக்கக் கூடிய வகையில் செயல்புரிந்த இந்த சுவீடிஷ் முறையானது ஓர் தனித்த உதாரணமாகும். 2003இல், பாலியல் தொழில் குறித்த தன்னுடைய அனுகுமுறையை மறுஆய்வு செய்யும் வகையில், சுவீடிஷ் அரசாங்கமானது மற்ற நாடுகளில் உள்ள பாலியல் தொழில் கொள்கைகளின் விளைவுகளை ஆய்வு செய்யுமாறு லண்டன் பல்கலைக்கழகத்தைப் பணித்தது. சுவீடனின் செயல்திட்டத்தை ஆய்வு செய்ததோடு, ஆய்வாளர்கள் ஆஸ்திரேலியா, ஐயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் உத்திகளான பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குதல், ஒழுங்கமைத்தல் உள்ளிட்ட பல்வேறு உத்திகளை ஆய்வு செய்தது. பாலியல் தொழிலை குற்றமென அறிவிக்கும் அமெரிக்கச் சட்டம் போன்ற சட்டங்கள் இருக்கும் சூழல்களை ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், அதன் விளைவுகள் என்னவென்பது வெட்டவெளிச்சம். பாலியல் தொழிலாளிகளை மீண்டும் மீண்டும் கைது செய்வதன் தோல்வியும், பயனின்மையும் உலகறிந்ததே.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நாடுகளில் கிடைத்த தரவுகளின்படி, பாலியல் தொழிலை ஒழுங்குபடுத்துதல் அல்லது சட்டபூர்வமாக்குதல் என்ற நிலையும், மரபார்ந்த நிலையிற்கு ஒத்ததாகவும், சொல்லப் போனால் அதனைவிட ஏமாற்றமளிப்பதுமாகவே இருந்தது. ஒவ்வொரு நாட்டிலும் விளவு எதிர்மறையாகவே இருந்தது.
அவ்வாய்விபடி, பாலியல் தொழிலை ஒழுங்குபடுத்துதல் அல்லது சட்டபூர்வமாக்குதல் என்ற அனுகுமுறையானது:
  • பாலியல் தொழிலின் அனைத்து பண்புக்கூறுகளிலும் ஓர் அதிகரிப்பு,
  • பாலியல் தொழிலை மையப்படுத்திய திட்டமிடப்பட்ட குற்றங்களின் அதிகரிப்பு,
  • குழந்தைப் பாலியல் தொழில் அதிகரிப்பு
  • வெளிநாட்டுப் பெண்கள் கடத்தப்படுதல் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறையில் நம்பமுடியாத வகையிலான அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில், விபச்சாரம் என்பது ஒழுங்கிற்குட்பட்ட ஒரு தொழிலாக நிறுவப்பட்ட விக்டோரிய மாகாணத்தில், விபச்சார விடுதிகளின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்தன. அதை ஒழுங்குபடுத்துவது மிகவும் கடினமானதாகி, திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஊழல் மற்றும் பாலியல் தொடர்புடைய குற்றங்களின் ஊற்றானது விக்டோரியா. கூடுதலாக, பாலியல் தொழிலாளிகளிடம் நடத்திய ஆய்வில், அவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்ட அல்லது சட்டபூர்வமாக்கப்பட்ட சூழலிலும் பாலியல் தொழிலாளிகள் அத்தொழிலில் தள்ளப்பட்டதாகவும், பலவந்தப்படுத்தப்படுவதாகவும், பாதுகாப்பற்றவர்களாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
நெதர்லாந்தில் சட்டபூர்வமாக பாலியல் தொழில் செய்பவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 79% பேர் அத்தொழிலிருந்து விடுபட நினைப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்நாடுகளில் ஒவ்வொரு சட்ட அல்லது ஒழுங்கமைப்பு திட்டங்கள் பாலியல் தொழிலிலிருந்து விடுபட நினைக்கும் நபர்களுக்கு உதவிகள் அளிப்பதாக வாக்குறுதி அளித்தாலும், எதுவும் பயனளிப்பதில்லை. அதற்கு நேர்மாறாக, சுவீடனில், பாலியல் தொழிலிலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு அரசாங்கம் எராளமான சமூக சேவை நிதி கொண்டு உதவி செய்தது.
சுவீடனின் 60% பாலியல் தொழிலாளிகள் அரசின் அந்த நிதித் திட்டங்களை செவ்வனே பயன்படுத்தி, பாலியல் தொழிலிலிருந்து வெளியேறினர்*.
* பாலியல் தொழில் கொள்கை பற்றிய ஸ்காட்டிய அரசாங்கத்தின் முழு அறிக்கையையும் படிக்க
ஏன் இதுவரை இதை எவரும் முயற்சிக்கவில்லை?
சுவீடனின் வெற்றி நாம் பின்பற்ற வேண்டிய பாதைக்கு இவ்வளவு தெளிவாக ஒளியூட்டிய பின்னரும், ஏன் இதுவரை எவரும் அப்பாதையைப் பின்பற்றவில்லை? அப்படி சொல்லிவிட முடியாது. ஃபின்லாந்து மற்றும் நார்வே அப்பாதையில் செல்வதற்கான அடிகளை எடுத்து வைக்கவிருக்கிறது. மேலும், தன்னுடைய ஆய்வின் பரிந்துரைகளை ஸ்காட்லாந்து எடுத்துக்கொள்ளும் எனில், அதுவும் அதே பாதையில் செல்லும். ஆனால், சுவீடனின் திட்டத்தை ஏன் மற்ற நாடுகள் எடுத்துக்கொள்ளவில்லை எனும் கேள்விக்கு ஏன் மற்ற அரசாங்கங்கள் சுவீடனின் தீர்வை நடைமுறைப்படுத்திப் பார்க்கவில்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.
பாலியல் தொழிலாளிகளை ஆண் பலாத்காரத்திற்கும், ஆணின் வன்முறைக்கும் உள்ளாகும் பலியாள்களாகக் காண ஒரு அரசாங்கம் முதலில் பாலியல் தொழிலை ஆணின் கண்ணோட்டத்திலிருந்து காண்பதை விட ஒரு பெண்ணின் கண்ணோட்டத்திலிருந்து காண்பது அவசியம். உண்மையில், பெரும்பாலான, சொல்லப்போனால் உலகின் அனைத்து நாடுகளும் பாலியல் தொழிலை மட்டுமின்றி மற்ற அனைத்துப் பிரச்சினைகளையும் முதன்மையில் ஆணின் கண்ணோட்டத்திலிருந்தே காண்கின்றன.
அதற்கு நேரெதிராக, சுவீடன் நாடானது பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தி நீண்ட காலமாகவே செயல்பட்டு வருகிறது. உதாரணமாக, 1965இல் திருமணத்தில் வல்லுறவை குற்றமென அறிவித்தது சுவீடன். 1980களில் கூட பெண்களுக்கு தன் உடல் மீதான கட்டுப்பாடு உண்டு என்னும் அடிப்படை உரிமையைக் கூட அமெரிக்கா போன்ற நாடுகள் உறுதி செய்யவில்லை. அதேபோல் அரசாங்கப் பணிகளில், அனைத்து மட்டங்களிலும் அதிகமான பெண்கள் வேலை செய்யும் நாடாக சுவீடன் நாடே திகழ்கிறது. 1999இல், அப்புரட்சிகரமான சட்டத்தை சுவீடன் நிறைவேற்றியபோது 50% பெண்கள் சுவீடிஷ் அரசாங்கத்தில் அங்கமாய் இருந்தனர்.
சுவீடனின் பாலியல் தொழில் கொள்கையானது முதலில் தயாரித்து ஆதரவு தேடும் பணியில் இறங்கியது பெண்களின் பாதுகாப்பிற்கான சுவீடன் நிறுவனம் (Sweden’s organization of women’s shelters) ஆகும். பிறகு சுவீடனின் இருகட்சிகளைச் சார்ந்த தனித்துவமான சக்திவாய்ந்த எண்ணற்ற பெண் பாராளுமன்றவாதிகள் அக்கொள்கையைப் பேணி வளர்த்து, போராடினர். அத்தோடு சுவீடன் நின்றுவிடவில்லை. 2002இல், முந்தைய பாலியல் தொழில் சட்டத்தை பலப்படுத்தும் வகையில் கூடுதல் சட்டங்களை இயற்றியது. பாலியல் சுரண்டலுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதை தடுக்கும் 2002ஆம் ஆண்டின் சட்டமானது முந்தைய சட்டத்திலிருந்த ஓட்டைகளை அடைத்து, பாலியல் தொழிலை ஆதரிக்கும் தரகர்கள், ஆட்சேர்ப்பாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் விருந்தாளிகளின் வலைப்பின்னல்களைக் கண்டுபிடிக்கும் அரசாங்கத்தின் பணிக்கு வலு சேர்த்தது.
சுவீடனின் வெற்றிப் பாதையை நாம் ஏன் பின்பற்றக்கூடாது?
நம் நாடும் சரி மற்ற நாடுகளும் சரி, தந்தை ஆதிக்க சமூக அமைப்பின் இருளில் ஆழ மூழ்கி இருப்பது உண்மைதான் எனினும், சுவீடன் நடைமுறைப்படுத்திய கொள்கை மாற்றங்களை வலியுறுத்தக் கூடாது என்பதற்கு எவ்விதக் காரணங்களும் இல்லை. அடித்தளம் தகர்க்கப்பட்டு, வெற்றிக்கான சான்று நிறுவப்பட்டுவிட்டால், பின்னர் அப்பாதையில் செல்லும்படி மற்றவர்களை ஏற்கச் செய்வது எளிதான காரியமே.
நன்றி: http://www.eanil.com/?p=605#&page=2