Showing posts with label பெண் உரிமை. Show all posts
Showing posts with label பெண் உரிமை. Show all posts

Apr 26, 2020

பெண்கள் தங்கள் முற்போக்கு அறிவை யாரிடம் மெய்ப்பிக்க வேண்டும்?

பெண்கள் மயிர் வெட்டி தான் தங்கள் முற்போக்கு அறிவின் தெளிவை மெய்ப்பிக்க வேண்டுமெனில்.. ஆணுக்கு எதை வைத்து அவர் முற்போக்குவாதி, அனைத்திலிருந்தும் விடுபட்டவர் என்று அளப்பது?
ஆம்பிளை அடையாளம் தானே மீசை, தாடி? பெரியார், மார்க்ஸ், ஏங்கல்ஸ்,லெனின் என எல்லாரும் வைத்திருந்தார்கள்... முகப்பு படம் கூட வைக்க துணிவில்லாதவர்கள் ஆண்களை பார்த்து இக்கேள்வியை கேட்பார்களா?
முற்போக்கு ஆண்களே மீசையை மழியுங்கள்.. தாடி மயிர் வைக்காதீர்கள்.. நீங்கள் முற்போக்குவாதி... அதிலும் புரட்சிகர ஒரிஜினல் கம்யூனிஸ்ட் முதலில் மயிரை நீக்குங்கள் உலகுக்கு உங்களின் ஆணாதிக்க அடையாள துறப்பை மெய்ப்பியுங்கள் என்று கூறுவார்களா? 
கண்காணிப்பு அரசியல், தூய்மைவாதம், வரட்டு வாதம் இதெல்லாம் உங்களிடமிருந்து ஒழியாதா?
******** 
பெரியாரை படிக்கத் தொடங்கிய நாள் முதல் “பெண்கள் அழகுணர்ச்சியிலிருந்து விடுபட வேண்டும்” என்றும் “பெண்கள் என்ன நகை மாட்டும் ஸ்டாண்டா” என்று பெரியார் கேட்கிறார் என்பதையெல்லாம் குறிப்பிட்டு எழுதியும் வந்துள்ளேன். பின்னர் மார்க்சியம் கற்ற பின்னர் நுகர்வு கலாச்சாரத்திலிருந்து விடுபடுவதன் அவசியத்தை பெண் உடல், உடை, உறவு ஆகியவற்றை உள்ளடக்கி எழுதியும், பேசியும் வந்துள்ளேன். அதில் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் நிச்சயமாக தத்துவப் பிழை இருக்காது என்றே நம்புகிறேன்.
இது எதுவும் தெரியாமல் புதிதாக என் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட வருபவர்கள் அவ்வப்போது பல பட்டங்களை வழங்கிச் செல்வார்கள்.
பெண்கள் அழகுணர்ச்சியிலிருந்து விடுபடுதல் என்பது ஆணைப் போல செய்தலோ அல்லது ஆண் வரையறுத்திருக்கும் முற்போக்கு அளவையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மெய்ப்பித்தலோ அல்ல. அது அவசியமும் இல்லை. ஒருவர் தம் உடலை தன் அடையாளமாக கருதுவதைவிட தன் அறிவை அடையாளமாக கருத வேண்டும் என்பதே அழகுணர்ச்சியிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்கான பொருள்.
தன்னை அடுத்தவருக்காக அழகுபடுத்திக்கொள்ளுதல் என்பதிலிருந்து விடுபடுதல்; அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது, அழகுநிலையங்களுக்கு சென்று அழகுபடுத்திக்கொள்வதை தவிர்ப்பது என்று சில கொள்கைகளை பின்பற்றலாம். ஆனால் ஆணாதிக்க முதலாளித்துவ நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு (ஆண்களுக்கும்) இதை முற்றிலும் தவிர்க்க முடியுமா? Grooming என்றொரு அளவை கொண்டே இங்கு வேலை கொடுக்கப்படும். வேலைக்கு வரும் பெண்கள் ஒப்பனை அணிவது இங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுய தொழில் செய்பவராக இருந்தாலும் பொதுவெளிக்கென்று ஒரு தோற்றத்தை கொண்டிருக்கவில்லையெனில் அது சார்ந்த மதிப்பீடுகளும் இந்த ஆணாதிக்க உலகின் கேடு!
நிலைமை இப்படி இருக்க துறவு மனப்பான்மைக்கு நிகராக இங்கு சிலர் முற்போக்கு அரசியலின் பெயரால் பெண்களை எல்லா நேரமும் கண்காணித்துக் கொண்டே இருப்பது இணையவெளி அராஜகம். நீங்கள் ஏன் புகைப்படம் போடுகிறீர்கள் என்று சிலர் பலமுறை என்னிடம் கேட்டுள்ளார்கள்.
பிரதான முரண்பாடு, இரண்டாம் முரண்பாடு என்றெல்லாம் பிரித்துக்கொண்டு வேலை செய்வதே தற்போது முக்கியம் என்பவர்கள் ஏன் இப்படி இணையவெளி கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்? (முற்போக்கு பேசுபவர்களை மட்டும்) தூய்மைவாதம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்?
இவர்களுக்கு உண்மையில் எதிரி யார்?
தனிப்பட்ட நபர்களை கண்காணித்து தூய்மைவாத கேள்விகளை எழுப்புவதுதான் முற்போக்கு அரசியலா? எந்த தத்துவத்தில் அது உள்ளது? தொடர்ந்து முற்போக்கு அறிவூட்டிக்கொண்டே இருப்பதும், அமைப்பில் அணிதிரட்டி பிற்போக்கான உற்பத்தி முறையை முற்போக்காக மாற்றி அமைப்பதற்கான போராட்டத்தில் மக்களை இணைப்பதும் தானே புரட்சிக்கான தேவை? அதைவிடுத்து ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு அசைவிலும் ஒருவரைப் பற்றிய முன்முடிவுகளை வைப்பதும், முத்திரை குத்துவதும், ஆதாரங்களே இன்றி எதிரி போல் சித்தரிப்பதுமே சிலரின் வேலையாக இருக்கிறது.
மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய ‘சில’ அடிப்படை கொள்கைகள் (ஒரு கம்யூனிஸ்ட் என்பவர் அமைப்பில் இருந்தால் மட்டுமே கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி உடையவர் என்பதையும் அறிவோம்):
1. உழைப்புச் சுரண்டலில் ஈடுபடக் கூடாது.
(ஆனால் தனியுடமையின் ஏற்றத்தாழ்வு மிக்க பொருளாதார சூழலில் - சிறு,குறு தொழில் செய்பவர்கள் தற்போதைய முறையின் கீழ் இதனை பின்பற்றுவது சவாலுக்குறியது).
2. வாடகை, வட்டி வாங்கி பிழைக்கக் கூடாது. உழைத்து வாழ வேண்டும்.
3. எந்த வகையிலும், வடிவத்திலும் ஏற்றத்தாழ்வு பார்க்கக் கூடாது.
4. வீட்டில் வேலைப் பிரிவினையை சமமாக வைத்திருக்க வேண்டும்.
5. அதிகாரத்திற்கு விலை போகக் கூடாது. மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது.
6. உழைப்புச் சுரண்டல் மூலம் சொத்து சேர்க்கக் கூடாது.
- இதில் சில தெளிவுகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. தம் உழைப்பில் அல்லது குடும்பத்தினர் சேர்ந்து உழைத்து சுறிதளவு நிலமோ, சொந்த வீடோ, கடையோ வைத்திருந்தால், அப்படி உழைத்து பாட்டன் முப்பாட்டன் சேர்த்த சொத்து பரம்பரையாக வந்திருந்தால் அது உழைப்புச் சுரண்டலில் – அதாவது உபரி மதிப்பில் – தனியுடைமை அபகரிப்பு செய்து ஈட்டிய சொத்து அல்ல – என்பதால் அதை பறிமுதல் செய்யச் சொல்லி வழிகாட்டுதல் இல்லை! (நீ கம்யூனிஸ்டு ஆனா சொந்த வீட்ல இருக்க, கார் வச்சிருக்க என்றெல்லாம் அறியாதவர்கள் கேள்விகள் கேட்பார்கள்! என்கிட்ட சொந்த வீடுமில்ல, காரும் இல்லீங்கோ!)
உழைப்புச் சுரண்டலில் – உபரி மதிப்பு அபகரிப்பில் ஈடுபட்டு சொத்துக் குவிப்பு, செல்வக் குவிப்பில் ஈடுபடுபவர்களின் சொத்து, அவர்களிடம் இருக்கும் உற்பத்திச் சாதனங்கள் (ஏனென்றால் அவை அவர்களின் உழைப்பால் சேர்ந்த சொத்து கிடையாது) போன்றவற்றை – அதாவது முதலாளிகள், பெருமுதலாளிகளின் சொத்துகளை, நிலவுடைமையாளர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான அவசியத்தைப் பற்றி தான் மார்க்சியம் பேசுகிறது.
புரட்சிகர உற்பத்தி முறை / உற்பத்தி உறவுகளுக்கு மாறுகையில் அதாவது பொதுவுடைமை சமூகத்திற்கு மாறுகையில் படிப்படியாக மாற்றங்கள் நடைபெறும்.
(இந்த பட்டியலில் விரிவாக இன்னும் நிறைய சேர்க்கலாம். நான் இங்கு சுட்டிக்காட்டுவது தனி நபராக ஒருவர் குறைந்தபட்சம் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள். இதுவும் மார்க்சியத்தை கற்று அதிலிருந்து சாரமாக முன்வைப்பது…)
7. அதேபோல் #கம்யூனிஸ்டுகள் இந்த வேலைதான் செய்யவேண்டும். இது நல்ல வேலை, அது கெட்ட வேலை என்றெல்லாம் எந்த ‘அறவாதமும்’ தத்துவத்தில் இல்லை. ஓர் அரசு ஊழியர் அரசிடம் வேலை செய்துகொண்டே எப்படி சங்கம் அமைத்து தம் உரிமைக்காகவும், மாற்று அமைப்பிற்காகவும் இந்த அமைப்பிற்குள் இருந்துகொண்டே போராடுகிறாரோ, அதேபோல் தான் தனியார் நிறுவனங்களில் தம் உழைப்புச் சக்தியை விற்று வாழும் நிலையில் உள்ள உழைப்பாளிகளின் நிலையும். கம்யூனிஸ்டா இருந்துக்கிட்டு சீரியல்ல வேலை பார்க்குற, சினிமால வேலை பார்க்குற, நடிக்குற என்றெல்லாம் கேட்பவர்கள் தத்துவத்தை தவறாக முன்வைக்கிறார்கள் அல்லது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் என்றே பொருள். (அறிவார்ந்த வகையில் உரையாட இயலாதவர்கள் வசுவிடம் வைத்த கேள்விகள் இவை).
நிலவும் அமைப்பில் இருந்துகொண்டே தான் மாற்று அமைப்பிற்கான போராட்டங்கள், அறிவூட்டலில் ஈடுபட முடியும். துறவு மனப்பான்மையில் செயல்பட்டால் அது கருத்துமுதல்வாதம் அல்லது பொறாமை.
அமைப்பில் முழுநேரம் ஈடுபட்டு மக்களுக்காக உழைக்கும் தோழர்கள் நிச்சயமாக தியாகிகளே. அதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை. அதற்காக அமைப்பில் இல்லாதவர்களை எல்லா நேரமும் மட்டம் தட்டும் மனநிலையில் இருப்பதென்பது ஓர் அதிகார மனோபாவம். இது முற்போக்கு பண்பாகாது! முற்போக்குவாதி என்பவர் எப்போதும் உரையாடலில் ஈடுபடுவார், குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்குபவர் அல்ல!
புரட்சிக்கான வேலைகள் நடந்துகொண்டிருப்பதும், சமூக இயக்கம் ஒரு பொருளாதார அமைப்பின் கீழ் நடப்பதும் சமகாலத்தில் நடைபெறுவதுதான். கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு அவரவர் சமூகத்திற்கு பங்களிப்பு செய்வது என்பதும் நடப்பதுதான்.
அதேபோல் பெண்கள் விசயத்திற்கு வருவோம். ஜென்னி, க்ளாரா ஜெட்கின், சிமோன் தே பொவ்வா உட்பட அனைத்து முற்போக்கு பெண்களும் கூந்தல் மயிர் வைத்திருந்தவர்கள், பொதுவெளிக்கேற்ற வகையில் தங்களை ‘அலங்கரித்து’க் கொண்டவர்கள் தானே! அவர்களை முன்வைத்து இந்த முற்போக்கு காவல்கர்கள் கேள்வி கேட்பார்களா?
மதவாதிகளுக்கும் சில #முற்போக்கு ஆர்வக் கோளாறுகளுக்கும் வித்தியாசமில்லை. அதுவும் பெண்களையே தான் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலேயே இவர்கள் முற்போக்கு முகமூடி கிழிந்து தொங்கிவிட்டது.
மக்களிடம் #மார்க்சியம், முற்போக்கு #அரசியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்தரப்பட்ட பிரிவினர் நமக்கு தேவைப்படுகிறார்கள். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர்களை குத்திக்கொண்டே இருந்தால், ஓடத்தான் வேண்டும். நாற்காலியை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு போட்டி போட இங்கு யாரும் வரவில்லை.
அமைப்பில் இல்லாதவர்கள் தம்மால் இயன்றதை செய்ய முற்படுகிறார்கள். யாருக்காக? தம் சொந்த நலனுக்காகவா? (விளம்பரப் பிரியை என்றால் வலது பக்கம் போனா இன்னும் சிறப்பான வாய்ப்பும், பணமும், புகழும் கிடைக்கும்).
நட்பு சக்திகளை குடைந்து இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்?


Dec 30, 2018

கொற்றவை பெயர் காரணம்


கொற்றவை பெண்ணியத்தின் முக்கியமான பேசு பொருள். தமிழகத்தின் ஆளுமைமிக்க குரல். தான் சார்ந்த உரையாடல்களில் தனித்துவ அரசியலினை பேசுபவர். இன்று பெரும் விவாதப் பொருளினையும் அடையாள அரசியலினையும் பேசுகின்ற பெண்ணிய கருத்தியல் வாதி.  இன்று பெண்களின் உரிமைகள், அவர்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள் அதிகார வங்குரோத்தின் பக்கம் கவனிக்கப்படாமலிருக்கிறது. இதனால் பெண்ணியம் சார்ந்த உரையாடல்களை உலகெங்கும் பரப்பி விஸ்தரிக்க வேண்டிய நிலையிருக்கிறது. அதிகார அரங்கானது பெண்களுக்கான உரிமைகளை தக்க நேரங்களில் வழங்காமல் அவர்களின் தனித்துவ பண்பிற்கு முட்டுக்கட்டையாக அமைந்திருக்கிறது. வீடுகள் தொட்டு தொழில் புரியும் காரியாலயங்கள் வரை இவையே நடந்தேறுகின்றன. இதிலிருந்து மீண்டெழுவதற்கு பல பெண்கள் தங்களது அறச்சீற்றத்தினை எறியத் தொடங்குகின்றனர். மார்க்ஸியம், பெண்ணியம், சினிமா என பல்வேறு குரலாய் இயங்கிக்கிக் கொண்டிருக்கிறார் கொற்றவை. உரையாடல் தொடர்கிறது பகுதிக்கா அவரிடம் மூன்று கேள்விகளைக் கேட்டேன். 

சாஜித், தினகரன் நாளிதழ், இலங்கை

1) பெண் அடையாளம் சார்ந்து அதிகமாய் எழுதியும் பேசியும் வருகிறீர்கள். அதற்கான கலை வடிவமாக எதனை கருதுகிறீர்கள்

பெண் அடையாளம் என்பதைக் காட்டிலும் பெண் விடுதலை என்று சொல்லலாம். ஒலி-ஒளி ஊடக வடிவத்தின் தாக்கம் அளப்பறியது. தனிப் பாடல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி ஆகியவற்றை நான் முதன்மையானதாகக் கருதுகிறேன். அதனைத் தொடர்ந்து எழுத்து, ஓவியம். 

2) கொற்றவை எனும் பெயருக்கு பின்னால் ஒழிந்தித்திருக்கும் காத்திரமான அரசியல் எத்தகையது

சுயமரியாதையையும், சமத்துவத்தையும் நிலைநாட்டியே தீர்வது என்னும் வெறி கொண்ட அரசியல் அது. கொற்றவை என்று பெயர் வைத்துக்கொள்ள இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று தூய தமிழ் பெயர். இரண்டாவது நான் யார் என்பதை உணர்த்த. பார்ப்பனிய ஆதிக்கம் மற்றும் தந்தை வழிச் சமூக ஆதிக்கம் குறித்து படித்த போது போர் தெய்வமாக இருந்து மன்னாதி மன்னர்களும் வணங்கிச் செல்லும் பெண் (கடவுள்கள்) எல்லாம் பின்னர் பெண்டாட்டிகளாக ஆக்கப்பட்டு இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை அறிந்து கோபம் கொண்டேன். நான் ஆள்பவளும் இல்லை. ஆளப்படுபவதற்கு இணங்குபவளும் இல்லை.  

3) எல்லாவற்றையும் சினிமா பேசத்துவங்குகிறது. எதனை இன்னும் அழுத்தமாக பேச வேண்டுமென நினைக்கிறீர்கள்?

சினிமா எல்லாவற்றையும் பேசுவதில்லை, உண்மையில் அது பொய்களைச் சார்ந்திருக்கிறது, பொய்களைக் கட்டமைக்கிறது. சினிமாக்கள் உண்மையை பேசவேண்டும். சமூகத்தால் மறைக்கப்படும் உண்மைகளைப் பேச வேண்டும். அதிகாரத்தின் கோர முகங்களை அம்பலப்படுத்தி மக்களை ஒன்று திரட்டி அதனை கிழித்தெரிய தொண்டாற்ற வேண்டும். அதனோடு பெண் உடலை பண்டமாக்கி கொண்டாட்டம் என்று வழங்குவதை விடுத்து மக்களின் யதார்த்த வாழ்வியல் கலைகளை, கொண்டாட்டங்களை பிரதிபலிப்பதும், மேம்பட்ட ரசனைகளை வளர்ப்பதும் அவசியம்.




Dec 16, 2014

இதுவரை ஏன் இதனை எவரும் முயற்சித்திருக்கவில்லை?:



‘பாலியல் தொழிலை ஒழிக்க முடியாது, அது என்றென்றும் நிலைத்திருக்கும்’ என்பன போன்ற நூற்றாண்டுகால வழமையான பேச்சுக்களுக்கு மத்தியில், அத்தொழிலை ஒழிப்பதில் ஒரு நாடு அடைந்திருக்கும் வெற்றியானது தீர்வை நோக்கி ஒளியூட்டும் ஒரு தனித்த கலங்கரை விளக்கம் போல் உள்ளது. ஐந்தே வருடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை சுவீடனில் குறைந்துள்ளது. தலைநகர் ஸ்டால்க்ஹோமில் தெருவோர பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையானது இரண்டு மடங்காகக் குறைந்துள்ளன. ஜான்களின் (பாலியல் வாடிக்கையாளர்) எண்ணிக்கையும் 80% குறைந்துள்ளன. பல சுவீடிஷ் தெருக்களில் பாலியல் தொழில் முற்றிலுமாக மறைந்துவிட்டது. சுவீடனில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக இருந்தபோது, இருபதாம் நூற்றாண்டின் கடந்த மூன்று பத்தாண்டுகளாக அதிகரித்து வந்த பிரபல சுவீடிஷ் விபச்சார விடுதிகளும், மசாஜ் பார்லர்களும்கூட மறைந்துவிட்டன.

பாலியல் தொழிலுக்கு சுவீடன் நாட்டின் தீர்வுஏன் இதை எவரும் முன்னரேமுயற்சி செய்திருக்கவில்லை?

கூடுதலாக, பாலியல் தொழிலுக்காக சுவீடனுக்குக் கடத்தப்படும் வெளிநாட்டுப் பெண்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்றளவிற்கு வந்துவிட்டது. கடந்த சில வருடங்களில் வருடத்திற்கு 200 முதல் 400 பெண்கள் மற்றும் சிறுமிகள் மட்டுமே பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டனர் என்று சுவீடிஷ் அரசாங்கம் கூறுகிறது. அண்டை நாடான ஃபின்லாந்தில் வருடத்திற்கு 15,000 முதல் 17,000 பெண்கள் கடத்தப்படுகின்றனர் எனும் நிலையை ஒப்பிடுகையில் மேற்சொன்ன எண்ணிக்கை வெகு சொற்பமே.
மற்ற எந்த நாடுககளோ அல்லது மற்ற எந்த சமூகப் பலப்பரீட்சை முயற்சிகளோ சுவீடனின் நம்பிக்கைக்குறிய முடிவை ஈன்றதில்லை.
மகத்தான இந்த சாதனையை அடைய அப்படி என்னதான் சிக்கலான சூத்திரத்தை சுவீடன் கையாண்டது?
வியப்புகுரிய வகையில், சுவீடனின் சூத்திரம் ஒன்றும் அப்படி சிக்கலானதல்ல. உண்மையில், அதன் கொள்கை மிகவும் எளிதானதாகவும், சமயோசித அறிவைக் கொண்டு எவரும் எளிதில் கண்டுவிடக் கூடியத் தீர்வாகவே தெரிகின்றது. அதனால்தான் உடனேயே இக்கேள்வி நமக்கு எழுகிறது, “ஏன் இதை இதுவரை எவரும் முயற்சிக்கவில்லை?”
சுவீடனின் 1999ஆம் ஆண்டின் புரட்சிகரமான சட்டம்
பல வருட ஆய்வுகளுக்குப் பிறகு 1999இல் சுவீடன் ஒரு சட்டத்தை அறிமுகம் செய்தது: அ) பாலின்பத்தை (Sex) வாங்குவதை குற்றமெனக் கருதுதல் ஆ) பாலின்பத்தை விற்பதை குற்றமற்றதாகக் கருதுதல். இந்தச் சட்டத்தின் பின் இருக்கும் புதுமையான கொள்கையை அரசு தனது சட்ட ஆவணத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறது:
“சுவீடன் நாட்டைப் பொறுத்தவரை, பாலியல் தொழில் என்பது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான ஆணாதிக்க வன்முறையின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் ஒரு சுரண்டல் எனவும் அது ஒரு பிரதான சமூகப் பிரச்சினை எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது… பெண்களை, குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக ஆண்கள் வாங்குவதும் விற்பதும் நடக்கும்வரை பாலியல் சமத்துவத்தை நாம் அடைய முடியாது.”
பாலியல் தொழில் பற்றிய சுவீடனின் இரண்டுபக்க சட்ட செயல்திட்டத்தோடு கூடுதலாக ஒரு பக்கமானது பாலியல் தொழிலிலிருந்து வெளியேற நினைக்கும் பாலியல் தொழிலாளிகளுக்கு உதவும் வகையில் ஏராளமான சமூக நல நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், மக்களுக்கான விழிப்புணர்வுக் கல்விக்காகவும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. உள்ளபடியே, சுவீடனின் தனித்துவமான இந்த செயல்திட்டம் பாலியல் தொழிலை பெண்களுக்கெதிரான வன்முறையாகக் கருதுகின்றது. அதனால் பாலின்பத்தை வாங்குவதன் மூலமாக பெண்களை சுரண்டும் ஆண்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர், பெண் பாலியல் தொழிலாளிகள் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். மேலும், இதுநாள்வரை இருந்த பாலியல் தொழில்குறித்த மடத்தனமான ஆண் சார்பை எதிர்கொள்ளும் வகையில் மக்களுக்கு கல்வி வழங்கப்படுகின்றது. அவர்களது கண்ணோட்டத்தை சட்டத்தின் பிடி கொண்டு இருக்கிப் பிடிக்கும் வகையில், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சட்டத் தொகுப்பின் ஓர் அங்கமாக பாலில் தொழில் சட்டம் சுவீடனில்1999ஆம் வருடம் இயற்றப்பட்டது.

அதன் பாதையில் தொடக்ககாலத் தடைகள்
ஆர்வமூட்டும் வகையில், அச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னரான விரிவான திட்டமிடல் காலத்தின்போது முதல் ஓரிரு வருடங்களில் இந்தப் புதுமையானத் திட்டத்தில் பெரிதாக ஏதும் நடைபெறவே இல்லை. பாலியல் தொழில் சுவீடனில் சட்டபூர்வமாக இருந்த காரணத்தால் முந்தைய மனநிலையிலேயே இருந்த காவல்துறையானது மிகவும் குறைவான ‘ஜான்களையே’ கைது செய்தது. தோல்வியை உலகெங்கிலும் உள்ள எதிர்ப்புவாதிகள் மிதமிஞ்சைய வகையில் விளம்பரப்படுத்தியதோடு “பாருங்கள்! பாலியல் தொழில் எப்போதும் இருந்திருக்கிறது, இனியும் இருக்கும்” என எக்காளமிட்டனர்.
அவர்களது திட்டத்தை சரியாகப் புரிந்துகொண்ட சுவீடர்கள் அவர்களின் கூச்சலுக்கு செவி சாய்க்கவில்லை. விரைவில் பிரச்சினையை அடையாளம் கண்டு அதற்கு தீர்வும் கண்டனர். அவர்களின் சிறப்பான முயற்சி எங்கு கோளாரில் சிக்கியது என்பதைக் கண்டுபிடித்தனர். சட்ட அமலாக்கப் பிரிவானது தன் கடமையை சரிவரச் செய்யவில்லை. சுவீடிஷ் மக்களும், சட்டமும் புரிந்துகொண்ட பிரச்சினையின் ஆழத்தை சரியாகப் புரிந்துகொள்ளாத காவல்துறைக்கே தீவிர பயிற்சித் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தது. பாலியல் தொழில் என்பது பெண்களுக்கெதிரான ஆணாதிக்க வன்முறை. சுரண்டுபவர்கள் மற்றும் வாங்குபவர்களே தண்டனைக்குரியவர்கள். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாலியல் தொழிலாளிகள் உதவிக்குரியவர்கள் என்பதில் சுவீடன் அரசு உறுதியாய் இருந்தது. சுவீடிஷ் அரசாங்கம் பெரும் நிதியை ஒதுக்கி அந்நாட்டின் காவல்துறையினர், அரசு வழக்குறைஞர்கள், மேலிருந்து கீழ்நிலை வரையிலான அதிகாரிகள் ஆகியோருக்கு தீவிர பயிற்சி அளித்து, இலக்கையும் கண்டிப்போடு தெளிவுபடுத்தியது. அதன் பிறகே எவரும் ஒப்பிட முடியாத விளைவுகளை அந்நாடு கண்டது.
சட்டத்தின் தோல்வி அல்லது ஒழுங்கமைப்பு உத்தி
பாலியல் தொழில் பெருமளவில் நடைபெறும் ஒரு நாட்டில், நம்பிக்கையளிக்கக் கூடிய வகையில் செயல்புரிந்த இந்த சுவீடிஷ் முறையானது ஓர் தனித்த உதாரணமாகும். 2003இல், பாலியல் தொழில் குறித்த தன்னுடைய அனுகுமுறையை மறுஆய்வு செய்யும் வகையில், சுவீடிஷ் அரசாங்கமானது மற்ற நாடுகளில் உள்ள பாலியல் தொழில் கொள்கைகளின் விளைவுகளை ஆய்வு செய்யுமாறு லண்டன் பல்கலைக்கழகத்தைப் பணித்தது. சுவீடனின் செயல்திட்டத்தை ஆய்வு செய்ததோடு, ஆய்வாளர்கள் ஆஸ்திரேலியா, ஐயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் உத்திகளான பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குதல், ஒழுங்கமைத்தல் உள்ளிட்ட பல்வேறு உத்திகளை ஆய்வு செய்தது. பாலியல் தொழிலை குற்றமென அறிவிக்கும் அமெரிக்கச் சட்டம் போன்ற சட்டங்கள் இருக்கும் சூழல்களை ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், அதன் விளைவுகள் என்னவென்பது வெட்டவெளிச்சம். பாலியல் தொழிலாளிகளை மீண்டும் மீண்டும் கைது செய்வதன் தோல்வியும், பயனின்மையும் உலகறிந்ததே.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நாடுகளில் கிடைத்த தரவுகளின்படி, பாலியல் தொழிலை ஒழுங்குபடுத்துதல் அல்லது சட்டபூர்வமாக்குதல் என்ற நிலையும், மரபார்ந்த நிலையிற்கு ஒத்ததாகவும், சொல்லப் போனால் அதனைவிட ஏமாற்றமளிப்பதுமாகவே இருந்தது. ஒவ்வொரு நாட்டிலும் விளவு எதிர்மறையாகவே இருந்தது.
அவ்வாய்விபடி, பாலியல் தொழிலை ஒழுங்குபடுத்துதல் அல்லது சட்டபூர்வமாக்குதல் என்ற அனுகுமுறையானது:
  • பாலியல் தொழிலின் அனைத்து பண்புக்கூறுகளிலும் ஓர் அதிகரிப்பு,
  • பாலியல் தொழிலை மையப்படுத்திய திட்டமிடப்பட்ட குற்றங்களின் அதிகரிப்பு,
  • குழந்தைப் பாலியல் தொழில் அதிகரிப்பு
  • வெளிநாட்டுப் பெண்கள் கடத்தப்படுதல் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறையில் நம்பமுடியாத வகையிலான அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில், விபச்சாரம் என்பது ஒழுங்கிற்குட்பட்ட ஒரு தொழிலாக நிறுவப்பட்ட விக்டோரிய மாகாணத்தில், விபச்சார விடுதிகளின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்தன. அதை ஒழுங்குபடுத்துவது மிகவும் கடினமானதாகி, திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஊழல் மற்றும் பாலியல் தொடர்புடைய குற்றங்களின் ஊற்றானது விக்டோரியா. கூடுதலாக, பாலியல் தொழிலாளிகளிடம் நடத்திய ஆய்வில், அவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்ட அல்லது சட்டபூர்வமாக்கப்பட்ட சூழலிலும் பாலியல் தொழிலாளிகள் அத்தொழிலில் தள்ளப்பட்டதாகவும், பலவந்தப்படுத்தப்படுவதாகவும், பாதுகாப்பற்றவர்களாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
நெதர்லாந்தில் சட்டபூர்வமாக பாலியல் தொழில் செய்பவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 79% பேர் அத்தொழிலிருந்து விடுபட நினைப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்நாடுகளில் ஒவ்வொரு சட்ட அல்லது ஒழுங்கமைப்பு திட்டங்கள் பாலியல் தொழிலிலிருந்து விடுபட நினைக்கும் நபர்களுக்கு உதவிகள் அளிப்பதாக வாக்குறுதி அளித்தாலும், எதுவும் பயனளிப்பதில்லை. அதற்கு நேர்மாறாக, சுவீடனில், பாலியல் தொழிலிலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு அரசாங்கம் எராளமான சமூக சேவை நிதி கொண்டு உதவி செய்தது.
சுவீடனின் 60% பாலியல் தொழிலாளிகள் அரசின் அந்த நிதித் திட்டங்களை செவ்வனே பயன்படுத்தி, பாலியல் தொழிலிலிருந்து வெளியேறினர்*.
* பாலியல் தொழில் கொள்கை பற்றிய ஸ்காட்டிய அரசாங்கத்தின் முழு அறிக்கையையும் படிக்க
ஏன் இதுவரை இதை எவரும் முயற்சிக்கவில்லை?
சுவீடனின் வெற்றி நாம் பின்பற்ற வேண்டிய பாதைக்கு இவ்வளவு தெளிவாக ஒளியூட்டிய பின்னரும், ஏன் இதுவரை எவரும் அப்பாதையைப் பின்பற்றவில்லை? அப்படி சொல்லிவிட முடியாது. ஃபின்லாந்து மற்றும் நார்வே அப்பாதையில் செல்வதற்கான அடிகளை எடுத்து வைக்கவிருக்கிறது. மேலும், தன்னுடைய ஆய்வின் பரிந்துரைகளை ஸ்காட்லாந்து எடுத்துக்கொள்ளும் எனில், அதுவும் அதே பாதையில் செல்லும். ஆனால், சுவீடனின் திட்டத்தை ஏன் மற்ற நாடுகள் எடுத்துக்கொள்ளவில்லை எனும் கேள்விக்கு ஏன் மற்ற அரசாங்கங்கள் சுவீடனின் தீர்வை நடைமுறைப்படுத்திப் பார்க்கவில்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.
பாலியல் தொழிலாளிகளை ஆண் பலாத்காரத்திற்கும், ஆணின் வன்முறைக்கும் உள்ளாகும் பலியாள்களாகக் காண ஒரு அரசாங்கம் முதலில் பாலியல் தொழிலை ஆணின் கண்ணோட்டத்திலிருந்து காண்பதை விட ஒரு பெண்ணின் கண்ணோட்டத்திலிருந்து காண்பது அவசியம். உண்மையில், பெரும்பாலான, சொல்லப்போனால் உலகின் அனைத்து நாடுகளும் பாலியல் தொழிலை மட்டுமின்றி மற்ற அனைத்துப் பிரச்சினைகளையும் முதன்மையில் ஆணின் கண்ணோட்டத்திலிருந்தே காண்கின்றன.
அதற்கு நேரெதிராக, சுவீடன் நாடானது பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தி நீண்ட காலமாகவே செயல்பட்டு வருகிறது. உதாரணமாக, 1965இல் திருமணத்தில் வல்லுறவை குற்றமென அறிவித்தது சுவீடன். 1980களில் கூட பெண்களுக்கு தன் உடல் மீதான கட்டுப்பாடு உண்டு என்னும் அடிப்படை உரிமையைக் கூட அமெரிக்கா போன்ற நாடுகள் உறுதி செய்யவில்லை. அதேபோல் அரசாங்கப் பணிகளில், அனைத்து மட்டங்களிலும் அதிகமான பெண்கள் வேலை செய்யும் நாடாக சுவீடன் நாடே திகழ்கிறது. 1999இல், அப்புரட்சிகரமான சட்டத்தை சுவீடன் நிறைவேற்றியபோது 50% பெண்கள் சுவீடிஷ் அரசாங்கத்தில் அங்கமாய் இருந்தனர்.
சுவீடனின் பாலியல் தொழில் கொள்கையானது முதலில் தயாரித்து ஆதரவு தேடும் பணியில் இறங்கியது பெண்களின் பாதுகாப்பிற்கான சுவீடன் நிறுவனம் (Sweden’s organization of women’s shelters) ஆகும். பிறகு சுவீடனின் இருகட்சிகளைச் சார்ந்த தனித்துவமான சக்திவாய்ந்த எண்ணற்ற பெண் பாராளுமன்றவாதிகள் அக்கொள்கையைப் பேணி வளர்த்து, போராடினர். அத்தோடு சுவீடன் நின்றுவிடவில்லை. 2002இல், முந்தைய பாலியல் தொழில் சட்டத்தை பலப்படுத்தும் வகையில் கூடுதல் சட்டங்களை இயற்றியது. பாலியல் சுரண்டலுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதை தடுக்கும் 2002ஆம் ஆண்டின் சட்டமானது முந்தைய சட்டத்திலிருந்த ஓட்டைகளை அடைத்து, பாலியல் தொழிலை ஆதரிக்கும் தரகர்கள், ஆட்சேர்ப்பாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் விருந்தாளிகளின் வலைப்பின்னல்களைக் கண்டுபிடிக்கும் அரசாங்கத்தின் பணிக்கு வலு சேர்த்தது.
சுவீடனின் வெற்றிப் பாதையை நாம் ஏன் பின்பற்றக்கூடாது?
நம் நாடும் சரி மற்ற நாடுகளும் சரி, தந்தை ஆதிக்க சமூக அமைப்பின் இருளில் ஆழ மூழ்கி இருப்பது உண்மைதான் எனினும், சுவீடன் நடைமுறைப்படுத்திய கொள்கை மாற்றங்களை வலியுறுத்தக் கூடாது என்பதற்கு எவ்விதக் காரணங்களும் இல்லை. அடித்தளம் தகர்க்கப்பட்டு, வெற்றிக்கான சான்று நிறுவப்பட்டுவிட்டால், பின்னர் அப்பாதையில் செல்லும்படி மற்றவர்களை ஏற்கச் செய்வது எளிதான காரியமே.
நன்றி: http://www.eanil.com/?p=605#&page=2

Sep 9, 2012

வீட்டுப் பராமரிப்பு செய்யும் பெண்களுக்கு சம்பளம்


பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வீட்டுப் பராமரிப்பு செய்யும் பெண்களுக்கான வரைவு சட்டம் ஒன்றை தயாரித்து வருகிறது. வீட்டுப் பராமரிப்பைச் செய்யும் கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து 10 முதல் 20 சதவிகிதத்தை மனைவியின் பெயரில் வங்கியில் சம்பளமாகப் போடவேண்டும் என்பதே அப்பரிந்துரை.  இந்த வரைவு பாராளுமன்றத்தில் இன்னும் 6 மாத காலத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கன மத்திய அமைச்சர் கிருஷ்னா தீரத் தெரிவித்துள்ளார்.
மேற்சொன்ன இந்த வரைவை மேலோட்டமாகப் பார்த்தால் பெண்களுக்கு நலம் செய்யும் பரிந்துரை என்று கருதத்தோன்றும். இந்த வரைவு சொல்லும் பரிந்துரையை சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும், இல்லத்தரசிகளுக்கான அந்த சம்பளத்தை தரப்போவது கண்வன்மார்கள். இதன் மூலம் வீட்டுப் பராமரிப்பு என்பது பெண்களுக்கானது எனும் தந்தைவழிச் சமூகத்தின் கருத்தாக்கம் வழி மொழியப்படுவதோடு, ‘கணவனாகிய குடும்பத் தலைவன்’ முதலாளி, மனைவி அடிமை, வீட்டு வேலைக்கானவள் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இது பெண்களின் சுயமரியாதையை குலைத்து, நிலப்பிரபுத்துவ தந்தைவழிச் சமூக வரையரையின் கீழ் பெண் / பெண்மை என்பதற்கான கடமைகளுக்கு அடி பணிந்து செல்வதை மட்டுமே நிறுவுகிறது.
வீட்டுப் பராமரிப்பை செய்யும் பெண்களுக்கு கணவன்மார்கள் சம்பளத்திலிருந்து ஒரு பகுதி எனும் இந்த பரிந்துரையை நாம் கீழ்வரும் காரணங்களுக்காக எதிர்க்க வேண்டும்:
1.  இந்த பரிந்துரையின் படி கணவன்மார்கள் சம்பளம் தரவேண்டும், அரசு அல்ல. வெனிசுவலா,  உக்ரைன் போன்ற நாடுகள் மேற்கோள் காட்டப்படுகின்றன, கோவாவில் கூட இல்லத்தரசிகளுக்கு சம்பளம் வழங்கப் படுகிறது, ஆனால் அங்கெல்லாம் அரசாங்கம் அதைத் தருகிறது, கணவன்மார்கள் அல்ல.
கோவாவில் ஜூலை மாதம் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கபப்ட்ட சட்டமானது: 3 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய் 1000 தரப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு வருமானம் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதை அரசு தருகிறது.  வெனிசுவலா, உக்ரைனிலும் அப்படியே. உக்ரைனில், ஆண்களும்  வீடுப்பராமரிப்பில் பங்கு பெற விரும்பினால், அதற்குரிய தொழிற்சங்கத்தில் இணையலாம் என்றிருக்கிறது.
3.  கணவன்மார்களிடமிருந்து, அவனுடைய சம்பளத்தில் ஒரு சதவிகிதத்தைப் பெறுவதென்பது குடும்ப உறவை முதலாளி, தொழிலாளி என்று மாற்றி, உறவுகளுக்குள் விரிசலை ஏர்படுத்தும். பெண்களுக்கு எவ்வித நலனையும் செய்யப் போவதில்லை.
4. இந்தியாவில் சராசரி வருமானம் 4,500 என்றிருக்கையில், இது ஆண் பெண் என்று எவருக்கும் அதிகாரத்தைக் கொடுக்கப்போவதில்லை. இதில் ஏழ்மை நிலை கணக்கில் கொள்ளப்படாமலிருப்பது, பாட்டாளி வர்க்க குடும்பங்களுக்கு பெரும் சிரமங்களைக் கொடுக்கும்.
5. பெண்களின் வீட்டு உழைப்பை போற்றுவதாகினும், இது பெண்மை எனும் படிமவார்ப்பை கணக்கில் கொண்டு மேம்போக்காக ஒரு பரிந்துரை அளிக்கிறது.  இது வேலைக்குப் போகும் சில பெண்களின் மனதையும் மாற்றி, வீட்டிலிருந்தாலே பணம் வரப்போகிறதே என்று எண்ணச் செய்யும்.  மேலும் அன்பின் அடிப்படையில், உரிமையின் அடிப்படையில் கணவன்மார்கள் வீட்டு வேலைகளைப் பகிர வேண்டும் எனும் கோரிக்கையை பெண்கள் வைக்க இயலாமல் போகும். எல்லாம் பணத்தால் சரி செய்யப்படுவதாக சொல்லப்படும்.
6.  ஆண்கள் குடித்துவிட்டு சம்பளத்தை வீட்டில் தருவதில்லை என்று சொல்லபப்டுகிறது.  பணக்கார வர்க்கத்தின் குடி பழக்கம் பற்றி இங்கு பேசப்படுவதில்லை. பாட்டாளி வர்க்கத்தையே பொது புத்தி குறை சொல்கிறது, அதிலிருந்து இப்பேச்சுக்கள் எழுகின்றன.  உண்மையில் இது அக்கறையாக இருக்குமேயானால், புகார் எழுதி கொடுத்து குடிக்கும் கணவன்மார்களின் சம்பளத்தை மனைவிகள் தாங்களே பெற்றுக் கொள்ளலாம் என்று கோரலாம். (இல்லையென்றாலும் மனைவிகளே முழு சம்பளத்தையும் பெறுவதற்கும் வழி வகை செய்யலாம்). சில அரசு துறைகளில் இதற்கு வழி இருப்பதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.
7.  அதேபோல் மது வியாபாரத்தால் பெரும் இலாபமடையும் அரசு ‘குடிகாரர்களின் குடும்பங்களை’ காப்பதைல் பொறுப்பேற்க வேண்டும். அரசு தன்னுடைய எல்லா பொறுப்புகளையும் தனி நபர் மேல் சுமத்தி நழுவிவிட முடியாது.
8.  பெண்கள் மூலம் அது குடும்பத்திற்கு சேமிப்பு எனப்படுகிறது.  100 ரூபாய் தினக்கூலி பெறும் குடும்பங்களின் நிலை என்ன? சொற்ப வருமானத்திலிருந்து குடும்பத்தையே நடத்தவியலாத போது இது எந்த வர்க்கத்தை கணக்கில் கொண்டு பரிந்துரைக்கப்படுகிறது.
9.  பெரும்பாலும், பாட்டாளி வர்க்கங்களில் பெண்களும் வெளி வேளைக்குச் செல்வதால் ‘இரட்டை உழைப்பு’ உழைக்கிறார்கள். அரசோ, தந்தைவழிச் சமூக அமைப்போ இரட்டை உழைப்பிலிருந்து பெண்ணை விடுவிக்கும் வழிகளை யோசிக்காமல், மீண்டும் மீண்டும் அவளை பெண்ணாகவே வைத்திருக்கவும், அதற்கு ஒரு கூலியை நிர்ணையிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
10.  வீட்டுக் வெளியே சென்று வேலை செய்வது பெண்களுக்கு தன்னிறைவை, சுயமரியாதையை உறுதி செய்கிறது, இப்பரிந்துரையினால் பெண்கள் வீட்டில் முடக்கப்படுவர், வருமானம் குறைவாக இருக்கும் குடும்பங்களில் இது ஆணுக்கு பெரிய சுமையாகி, பெண் மனதையும் திரித்து குடும்ப உறவை சிதைக்கும்.
சமூகத்தின் பெண்மை கருத்தாக்கமானது, பெரும்பாலான பெண்களை இல்லத்தரசிகளாக இருக்கும் பணியை விரும்பி ஏற்கச் செய்துள்ளது. குழந்தைப் பேறு, வளர்ப்பு, வீட்டு பராமரிப்பு என்பவை பெண்ணுக்கான கடமைகள் என்றிருக்கிறது.  பெண்ணுக்கான கடமைகள் என்பதை மறு-சீராக்கம் செய்யாமல் அவ்வுழைப்பிற்கு கூலி மூலம் பேரம் பேசுவது பெண் விடுதலையாக கருதவியலாது, இது பெண் அடிமைத்தனம். இப்பரிந்துரை பிற்போக்குத்தனமானது.
பரிந்துரைகள்:
1.  தன்னுடைய கடமைகளிலிருந்து விலகிச் செல்ல அரசு இத்தகைய பரிந்துரைகளை கந்துடைப்பாக கொண்டுவர முயல்கிறது. ஆணைச் சார்ந்து வாழ்வதிலிருந்து பெண்ணுக்கு விடுதலை அளிக்க பெண்களுக்கான வேலை வாய்ப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
2.  இரட்டை உழைப்பிலிருந்து பெண்ணை விடுவிக்கவும், குழந்தை பராமரிப்பிலிருந்து விடுபட்டு பெண்ணும் வேலைக்கு சென்று பொருள் ஈட்டவும் ஏற்ற வகையில் சமூகக் கூடங்கள், குழந்தைப் பராமரிப்பு மையங்களை அரசு உருவாக்க வேண்டும்.  இதன் மூலம் பெண்கள் தங்கள் சுய சம்பாத்தியத்தில் தாங்களாகவே அதிகாரம் பெறுவர், கணவன்மார்களின் சம்பளத்தினால் அல்ல.
3.  வீட்டுப் பராமரிப்பை மட்டுமே செய்ய விரும்பும் பெண்களுக்கு அரசு ஆண்டு வருமானத்தை கணக்கில் கொண்டு மாத ஊதியம் வழங்கலாம்.
4.   பெண்கள் விடுதலைக்கு முதலைக் கண்ணீர் வடிப்பதை விடுத்து 33% இட ஒதுக்கீட்டை அமல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. ஆண், பெண் இருவருக்கும் சம ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும்.
6.   எல்லாத் துறைகளிலும் குறைந்தபட்ச ஊதிய அளவை உறுதி செய்து, அது கடைபிடிக்கப்படுகிறதா என்று கண்கானிக்க வேண்டும்.
.
நிலப்பிரபுத்துவ-தந்தைவழிச் சமூக வரையரியின் படி பெண் எனும் வரையரைக்குள் வைத்து போலியாக பெண் உழைப்பை போற்றும், பெண் சுயமாக பொருள் ஈட்டவும், இரட்டை உழைப்பிலிருந்து விடுவிக்க முயலாததுமான இந்த பயனற்ற பரிந்துரையை, மாசெஸ் அமைப்பு கடுமையாக எதிர்க்கிறது.
Salary to be paid to House Wives by Husband

Related Links: