Showing posts with label #women's rigths. Show all posts
Showing posts with label #women's rigths. Show all posts

Mar 8, 2024

விஜய் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்

 வணக்கம் விஜய்,

நலமா? உங்கள் அரசியல் வருகை செய்திகளையும், உங்கள் கட்சிக் கொள்கைகளையும் படித்தேன். வாழ்த்துகள்.

சமூக நீதி, சமத்துவம், கல்வி வழங்குதல், தொழிற்சங்கம் என்று இயக்கப் பணிகள் நடைபெறுவதைக் காண முடிகிறது. குறிப்பாக பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் களைவதில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள் என நம்புகிறேன். புதுச்சேரியில் சிறுமிக்கு எதிராக நடந்த கொடுமையைக் கண்டு கொந்தளித்துப் போய் இருப்பீர்கள். உங்கள் பதிவுகளைக் காண முடிகிறது!

நான் சமத்துவத்தை வலியுறுத்தியும், குறிப்பாக பெண் விடுதலை, பெண்களை ஒடுக்குவதற்குக் காரணமாக இருக்கும் ஆணாதிக்க சமூக அமைப்பு குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன். பொதுவாகவே ஆணாதிக்கம் என்கிற சொல்லைக் கண்டால் இங்கே ‘ஆண்’ என்னும் எண்ணம் (கர்வம்) கொண்ட ஆண்களால் அதை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை! ஆணாதிக்கம் என்று பேசுகையில் அது ஆண் வெறுப்போ அல்லது ஒட்டுமொத்த ஆண்களை குறை சொல்வதோ ஆகாது என்று பல நூற்றாண்டுகளாக இங்கே விளக்கிய போதும் இது குறித்த கல்வி நம் சமூகத்தில் இல்லை! மேலும் இங்கு எல்லாமே தனி மனிதர் நடத்தை சார்ந்த பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்படுவதால் சமூகமயமாக்கல் விளைவாக நமக்கு உண்டாகும் அறிவு, எண்ணம், புரிதல் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகளுக்கான ஆணி வேர் என்ன என்பது குறித்த பிரக்ஞையும் இல்லை! எனவே ஆம்பிளைங்களை ஏன் குத்தம் சொல்ற, செஞ்சவன் சைக்கோ என்கிற ரீதியில் முழுக்க முழுக்க அறியாமையில் மூழ்கிப் போய் மீசையை முறுக்கிக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

இன்றைக்கு பெண்கள் தினம். ஆர்த்தி மட்டுமின்றி தினம் தினம் எங்கள் உடல்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை, வன்முறை, நிலவும் கருத்தியல், ஆண்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் குறித்து நான் பதிவு எழுதினேன்.

அதை படித்தே ஆக வேண்டும் என்று உங்கள் ஆதரவாளர்களை நான் கையைப் பிடித்து இழுக்கவில்லை. ஆம்பிளை என்கிற சொற்களைக் கண்டதும் சிலரது ஆண்மை முறுக்கு ஏறிவிடுகிறது, மரியாதை குறைவாகப் பேசுவது, ஆபாசமாக பேசுவதுஏளனம் செய்வது என்று வந்துவிட்டார்கள்.. நான் முதலில் அதை புறம் தள்ளவே எண்ணினேன். ஆனால் தொடர்ந்து கமெண்டுகள் வரவே உள்ளே சென்று பார்த்தபோதுதான் அவர்கள் TVK ஆதரவாளர்களாக இருப்பது தெரிந்தது.

இணையத்தில் உங்கள் இயக்க ஐடியையும், உங்கள் ஐடியையும் டேக் செய்யத் தொடங்கினேன்.. இன்னும் கூடுதலாகியது. இதற்குப் பெயர் Cyber Bullying, Mob attacking. இன்றய இணையவெளியில் இது மிகவும் ஆபத்தான போக்கு, இதிலும் ஓர் ஆணாதிக்கம் நிலவுகிறது என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

சமத்துவம் என்னும் போது, பெண்களைப் போற்றுவது (அதுவும் ஆண்களின் விருப்பத்திற்கு உட்பட்டு பெண்மை வளையத்திற்குள் இருக்கும் பெண்களைப் போற்றும் நிலையே) தேவை இல்லை நண்பா, இங்கு தேவைப்படுவது மரியாதை,யும், சமத்துவமும், சுதந்திரமும்.  பெண்கள் நிலை என்ன, அவர்கள் ஏன் ஒடுக்கப்படுவதாக ”பெண்ணியவாதிகள்” எழுதுகிறார்கள், ஆணாதிக்கம் என்றால் என்ன, அதை எப்படி மாற்றுவது என்றெல்லாம் படிப்பது அதற்கு முன் நிபந்தனை. நான் படித்ததால் எழுதுகிறேன். பெண்களுக்காக மட்டுமில்லை நண்பா, கடுமையாக உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் பொருளாதார அடிமைகளாக மாறிப் போன ஆண்களுக்காகவும் சேர்த்தே இயங்குகிறேன்.

என் பதிவுகளைப் படித்தால் தெரியும்.

உங்கள் அரசியல் பிரச்சாரத்திலும், அமைப்பு ஒழுங்கு விதிகளிலும் உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் பெண்களிடம் எப்படிப் பேசலாம், பேசக் கூடாது என்றும், இணைய வம்பிழுத்தலில் யாரோடும் ஈடுபடக் கூடாது என்றும், சமூக மாற்றத்திற்கான பணியை மட்டும் மேற்கொள்ளதே கடமை என்றும் எடுத்துரைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பாதிக்கப்பட்ட பெண்ணாக, சமூகத்தில் எழுத்தின் மூலம் மாற்றத்தை எழுத விளைபவளாக, உங்களோடு லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்த தோழி என்கிற உரிமையிலும் இந்த கடிதத்தை எழுதுகிறேன்!

நன்றி

அன்புடன்

கொற்றவை

பி.கு: இதை விளம்பரம் என்று மலினப்படுத்தவும் ஒரு கூட்டம் உள்ளது! ஆம் விளம்பரம் தேடுகிறேன் நண்பா! பெண் நிலை மேம்பாட்டிற்கான தேவை குறித்தும், பெண்களுக்கெதிரான சகலவிதமான வன்முறையை ஒழிப்பது குறித்தும் விளம்பரம் தேடுகிறேன்.

 அதேபோல் உங்களை மட்டும் குறிப்பிட்டு டேக் செய்யவில்லை. நீங்கள் அரசியல் களத்திற்கு வந்துவிட்டீர்கள், ஓர் அமைப்பாக உங்கள் ஆதரவாளர்கள் சிலர் இப்படி செய்வதால் முறையிடுகிறேன். எந்த அமைப்பாக இருந்தாலும் அவர்களை டேக் செய்து முறையிடுவேன். 










Oct 28, 2022

தொடரும் ஆபாச தாக்குதல்கள்

 


ஆணாதிக்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கும் அறிவிலிகளுக்கு!

இந்த சமூகத்தில் பெண்களின் நிலை என்ன என்று சிந்தியுங்கள். ஆணாதிக்கம் என்றால் என்ன என்று பேசிய காணொளி உள்ளது. அதையும் பாருங்கள்.

ஆணாதிக்கம் என்றால் என்ன

சிசுகொலை, வரதட்சனை, குடும்ப வன்முறை தொடங்கி பாலியல் வன்கொடுமை வரை அனைத்திற்கும் அதிகாரம் வழங்கியிருப்பது ஆணாதிக்க சமூக அமைப்பே ஆகும்!

ஆண் மேலானவன்.. பெண் கீழானவள் என்று பாலின அடிப்படையில் எழுதா விதி நிலவுகிறது. இது ஆண் பெண் மாற்றுப்பாலினம் என அனைவரையும் கட்டுப்படுத்துகிறது.

தற்போதைய உதாரணம் ஒன்றை சொல்கிறேன்!

சின்மயா வித்யாலயா வன்கொடுமைக்கு எதிராக நான் பேசிய காணொளி இணையத்தில் வலம் வந்த பிறகு என் மீதான பாலியல்ரீதியான  verbal abuse, slut shaming எல்லாம் அதிகரித்துவிட்டது. Nobraday பிரச்சாரத்திற்குப் பின், குறிப்பாக behindwoodsக்கு பேட்டி அளித்த அன்று மாலை இது அடுத்த கட்ட தாக்குதலுக்கு சென்றுள்ளது!

எனது அலைபேசி எண்ணை டிவிட்டரில் பகிர தொடங்கியுள்ளனர். ஒருவரா.. ஒரு கூட்டமா தெரியவில்லை! திடீரென எனக்கு தெரியாத எண்களில் இருந்து hi என்று மெசேஜ் வரத் தொடங்கியது.. அழைப்புகளும்! பொதுவாக தெரியாத எண்களை நான் எடுப்பதே இல்லை!

Msg வந்த எண்ணிற்கு யார் நீங்கள் என்று கேட்டால்.. பெயரை சொல்லி நீங்க யாரு என்றார்கள். அதிர்ச்சியானது.. யாருன்னே தெரியாம எப்படி மெசேஜ் பண்றீங்க.. எனது எண் எப்படி கிடைத்தது என்று திட்டிவிட்டு ப்ளாக் செய்தேன். அலுவலகத்தில் இருக்கையில் அடுத்தடுத்து மெசேஜ்.. அழைப்புகள்.. கட் செய்தாலும் தொடர்ந்து கால் வந்தது. பின் ஒரு அழைப்பை எடுத்து “யார் நீ.. என் எண் எப்படி கிடைச்சுது என்றேன்.. எங்கு பார்த்தேன் என்று அவன் சொல்ல “ஏண்டா ஒரு பொண்ணோட நம்பர எவனாச்சும் லீக் பண்ணா உடனே அலைஞ்சுக்கிட்டு ஃபோன் பண்ணுவீங்களா.. உங்க வீட்ல பொண்ணுங்க இல்லையா… “ என்று திட்டி வைத்து விட்டு.. இது எப்படி நடந்திருக்கும் என்று யோசித்தேன்.. ஓரிரு நண்பர்களிடம் பேசினேன்.. எப்படி எண்  பகிரப்படுகிறது என்று guess செய்தேன்… பார்ன் அல்லது பாலியல் அழைப்பிற்கான தளங்களில் எனது எண்ணை பகிர்ந்திருக்கிறார்கள்… வக்கிரம் பிடித்தவர்கள்..

 நேருக்கு நேர் மோதி அறிவால் எதிர்கொள்ள முடியாத கோழைகள்! ஆம்பிளை என்னும் திமிர்.. பெண்ணாகவும் இருக்கலாம்.. தெரியவில்லை! ஐடியை ரிப்போர்ட் செய்தாலும் தினம் பல ஃபேக் அகௌண்ட் தொடங்கி இதே வேலையை செய்கிறார்கள்.  ஆனால் இவர்களால் நாட்டை சீர்கெடுக்கும் அதிகார வர்க்கத்தையோ.. ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்களையோ எதிர்த்து ஏதேனும் செய்ய இயலுமா?  நஞ்சு நஞ்சைத்தானே ஆராதிக்கும்! 

தொடர்ந்து எனது புகைப்படங்களின் கீழ் ஆபாச பதிவு. One night stand, night stayவா.. அடுத்து எவன் சிக்குனானோ தெரியல.. பல சைச பார்த்தவ.. இப்படியாக தினம் வெவ்வேறு ஐடிக்களில் இருந்து .. எனக்கு மன உளைச்சல் தருவதாக அவர்களுக்கு நினைப்பு! ஆனால் இது எதுவும் என்னை மசுருக்கு கூட தொந்தரவு செய்யாது!

ரிப்போர்ட் செய்துவிட்டு, ப்ளாக் செய்துவிட்டு என் வேலையை பார்க்கிறேன்!

இதன் மூலம் இவர்கள் அடையும் இன்பம் என்ன என்று தான் என் மனதில் ஓடுகிறது.. இத்தகைய மனநிலைக்கு ஒருவர் ஆளாகிறார் என்றால் இவர்கள் சமூகத்திற்கு எவ்வளவு ஆபத்தானவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு உண்மையில் நல்ல உறவுகள் அமையுமா? வாழ்வில் எதை சாதிப்பார்கள்?

இந்த வக்கிரம் பிடித்தவர்களைப் பொறுத்தவரை.. இரவு தான் நான் காமலீலையில் ஈடுபடுவேன்.. அதுவும் ஹோட்டலில் தான்! ஏனென்றால் என் புகைப்படத்திற்குப் பின் ஒரு திரைச்சீலை தெரிகிறது!  பிறகு வீக்கெண்ட் அவுட்டிங்.. ரிசார்ட் ஸ்டே.. ஆண்டி சர்வீஸ்.. இவ்வளவுதான் இவர்களின் வக்கிர அறிவு! 

பாலியல் தொழிலை சட்டமே தவறில்லை என்றபின்.. ஹோட்டலில் தான் அந்த சேவையை வழங்க வேண்டுமா என்ன?

சரக்கு, பண்டம், பெண் உடல் மீதான பாலியல் சுரண்டல்.. பெண் உடலை பணத்திற்கு விற்பனை செய்வதை சட்டபூர்வமாக்கக் கூடாது என்று எதிர்க்கும் ஒரு பெண்ணாக, சுயமரியாதை அதிகம் கொண்டவளாக என்னால் பணத்திற்காக எனது உடலை விற்பனை செய்ய இயலாது!

ஒருவேளை காதல்வயப்படலாம்… ஆனால் ஆண்வெறுப்பு மனநிலைக்கு தள்ளும் ஆண்களை கடந்து வந்த பின் காதல் மாயையில் விழுமளவுக்கு தற்போது நானில்லை!

உடல் தேவை.. நடுவிரல் உள்ளது!  என்னை விட எனக்கு இன்பம் வழங்கிட யாரால் முடியும்? அறிவுத் தேடலில், சுயத்தைக் காப்பதில் உச்சம் அடையும் என் தேவை என்ன என்பதை புரிந்துகொள்ளுவது அத்தனை எளிதல்ல.. புரிந்துகொண்ட நபரோடு வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது!  

அதையும் மீறி ஒருவேளை என் மனதை யாரேனும் கவர்ந்தால்.. அது எனது உடல்.. எனது உரிமை! என்று செயல்படும் அறிவுத் தெளிவு எனக்கு உண்டு! யாரையும் துன்புறுத்தாமல் எனது செயல்பாடுகளை வைத்துக்கொள்ளும் அறமும் உண்டு! I am not only an intellectually independent woman but definitely a sexually independent woman!

சமூக அமைப்புருவாக்கம் மற்றும் அதன் கருத்தியல்கள் பற்றி அறிந்தவர்களை எந்த விதத்திலும் யாரும் முட்டாளாக்க இயலாது!

ஒரு பெண்ணை எல்லா நேரமும் பாலியல் ரீதியாக அவதூறு செய்வதும்.. அவளது புகைப்படத்தை  ஆபாச பக்கங்களில் போடுவதும்.. ஃபேக் ப்ரொஃபைல் மூலம் ஆண்களுக்கு அழைப்பு விடுப்பதும் எதனால் நடக்கிறது? ஆணாதிக்க வக்கிர சமூகத்தின் வளர்ப்பினால் நடக்கிறது!

ஒழுக்கமற்ற சமத்துவமற்ற சமூகம் தான் ஒழுக்கமற்ற, ஆதிக்க மனநிலை கொண்ட மனிதர்களை உருவாக்குகிறது!

வக்கிரம் பிடித்த சமூகம் தான் வக்கிர மனிதர்களை உருவாக்குகிறது!

இது ஒரு வக்கிரம் பிடித்த சமூகம்! அதன் விளைவுதான் இத்தகைய மனிதர்கள்!

இன்றைக்கு எனக்கு நேர்வது நாளை இன்னொரு பெண்ணுக்கு நேரும்!

சொல்ல இயலாது! என்னை துன்புறுத்தி மகிழ நினைக்கும் அந்த நபரின் பிள்ளைக்கோ, மனைவிக்கோ, சகோதரிகளுக்கோ கூட இத்தகைய துன்புறுத்தல்கள் நிகழலாம்!

என்னை போன்ற பெண்களுக்கு விழிப்புணர்வு இருப்பதால் அதை நாங்கள் கடந்து செல்கிறோம்! விழிப்புணர்வு இல்லாத பெண்களின் நிலை? பென்கள் அடங்கி வீட்டிற்குள்ளே இருங்கள்! ஆணாதிக்க கட்டுப்பாட்டிற்கு அடங்கி இருங்கள், சமூக வலைதலங்களில் ஏன் இருக்கிறீர்கள்…  என்பதுதானே பெரும்பாலரின் பதிலாக இருக்க முடியும்!

10 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து எழுதியும், பேசியும் வந்தாலும்.. எந்த  content கவனத்தைப் பெறுகிறது? அந்த வக்கிரவான்கள் பேசுகிறார்கள் “attention seeking” .. அந்த வக்கிர மண்டைகளுக்கு உடல் தொடர்பான பதிவுகள் தான் தென்படுகிறது! யாரிடம் பிரச்சினை உள்ளது?

பொம்பள பொம்பள என்று சொல்லி ஆண்களுக்கு அதிகாரம் வழங்கும் சமூகமே… விசத்தை பரப்புவது நீங்கள்.. களையெடுப்பது நாங்கள்.. அதில் அவ்வப்போது காயங்கள் ஏற்படத்தான் செய்கிறது. விஷச் செடியின் வீரியம் அப்படி! முடிந்தவரை  முற்போக்காளர்கள் அதை களைய முற்படுகிறார்கள். அதில் நீங்களும் கைகோர்க்கவில்லையெனில்.. நாளை உங்களின் பிள்ளைகளுக்கு இந்த சமூகம் மிகவும் ஆபத்தான, வக்கிரமான, கொடூரமான நிலைமைகளையே மீதம் வைத்திருக்கும்! ஏற்கனவே நாம் நம் மகள்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்!

ஆணாதிக்கம் எங்கே இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே இருங்கள்! பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்பதைப் போல்….


Apr 26, 2020

பெண்கள் தங்கள் முற்போக்கு அறிவை யாரிடம் மெய்ப்பிக்க வேண்டும்?

பெண்கள் மயிர் வெட்டி தான் தங்கள் முற்போக்கு அறிவின் தெளிவை மெய்ப்பிக்க வேண்டுமெனில்.. ஆணுக்கு எதை வைத்து அவர் முற்போக்குவாதி, அனைத்திலிருந்தும் விடுபட்டவர் என்று அளப்பது?
ஆம்பிளை அடையாளம் தானே மீசை, தாடி? பெரியார், மார்க்ஸ், ஏங்கல்ஸ்,லெனின் என எல்லாரும் வைத்திருந்தார்கள்... முகப்பு படம் கூட வைக்க துணிவில்லாதவர்கள் ஆண்களை பார்த்து இக்கேள்வியை கேட்பார்களா?
முற்போக்கு ஆண்களே மீசையை மழியுங்கள்.. தாடி மயிர் வைக்காதீர்கள்.. நீங்கள் முற்போக்குவாதி... அதிலும் புரட்சிகர ஒரிஜினல் கம்யூனிஸ்ட் முதலில் மயிரை நீக்குங்கள் உலகுக்கு உங்களின் ஆணாதிக்க அடையாள துறப்பை மெய்ப்பியுங்கள் என்று கூறுவார்களா? 
கண்காணிப்பு அரசியல், தூய்மைவாதம், வரட்டு வாதம் இதெல்லாம் உங்களிடமிருந்து ஒழியாதா?
******** 
பெரியாரை படிக்கத் தொடங்கிய நாள் முதல் “பெண்கள் அழகுணர்ச்சியிலிருந்து விடுபட வேண்டும்” என்றும் “பெண்கள் என்ன நகை மாட்டும் ஸ்டாண்டா” என்று பெரியார் கேட்கிறார் என்பதையெல்லாம் குறிப்பிட்டு எழுதியும் வந்துள்ளேன். பின்னர் மார்க்சியம் கற்ற பின்னர் நுகர்வு கலாச்சாரத்திலிருந்து விடுபடுவதன் அவசியத்தை பெண் உடல், உடை, உறவு ஆகியவற்றை உள்ளடக்கி எழுதியும், பேசியும் வந்துள்ளேன். அதில் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் நிச்சயமாக தத்துவப் பிழை இருக்காது என்றே நம்புகிறேன்.
இது எதுவும் தெரியாமல் புதிதாக என் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட வருபவர்கள் அவ்வப்போது பல பட்டங்களை வழங்கிச் செல்வார்கள்.
பெண்கள் அழகுணர்ச்சியிலிருந்து விடுபடுதல் என்பது ஆணைப் போல செய்தலோ அல்லது ஆண் வரையறுத்திருக்கும் முற்போக்கு அளவையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மெய்ப்பித்தலோ அல்ல. அது அவசியமும் இல்லை. ஒருவர் தம் உடலை தன் அடையாளமாக கருதுவதைவிட தன் அறிவை அடையாளமாக கருத வேண்டும் என்பதே அழகுணர்ச்சியிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்கான பொருள்.
தன்னை அடுத்தவருக்காக அழகுபடுத்திக்கொள்ளுதல் என்பதிலிருந்து விடுபடுதல்; அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது, அழகுநிலையங்களுக்கு சென்று அழகுபடுத்திக்கொள்வதை தவிர்ப்பது என்று சில கொள்கைகளை பின்பற்றலாம். ஆனால் ஆணாதிக்க முதலாளித்துவ நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு (ஆண்களுக்கும்) இதை முற்றிலும் தவிர்க்க முடியுமா? Grooming என்றொரு அளவை கொண்டே இங்கு வேலை கொடுக்கப்படும். வேலைக்கு வரும் பெண்கள் ஒப்பனை அணிவது இங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுய தொழில் செய்பவராக இருந்தாலும் பொதுவெளிக்கென்று ஒரு தோற்றத்தை கொண்டிருக்கவில்லையெனில் அது சார்ந்த மதிப்பீடுகளும் இந்த ஆணாதிக்க உலகின் கேடு!
நிலைமை இப்படி இருக்க துறவு மனப்பான்மைக்கு நிகராக இங்கு சிலர் முற்போக்கு அரசியலின் பெயரால் பெண்களை எல்லா நேரமும் கண்காணித்துக் கொண்டே இருப்பது இணையவெளி அராஜகம். நீங்கள் ஏன் புகைப்படம் போடுகிறீர்கள் என்று சிலர் பலமுறை என்னிடம் கேட்டுள்ளார்கள்.
பிரதான முரண்பாடு, இரண்டாம் முரண்பாடு என்றெல்லாம் பிரித்துக்கொண்டு வேலை செய்வதே தற்போது முக்கியம் என்பவர்கள் ஏன் இப்படி இணையவெளி கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்? (முற்போக்கு பேசுபவர்களை மட்டும்) தூய்மைவாதம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்?
இவர்களுக்கு உண்மையில் எதிரி யார்?
தனிப்பட்ட நபர்களை கண்காணித்து தூய்மைவாத கேள்விகளை எழுப்புவதுதான் முற்போக்கு அரசியலா? எந்த தத்துவத்தில் அது உள்ளது? தொடர்ந்து முற்போக்கு அறிவூட்டிக்கொண்டே இருப்பதும், அமைப்பில் அணிதிரட்டி பிற்போக்கான உற்பத்தி முறையை முற்போக்காக மாற்றி அமைப்பதற்கான போராட்டத்தில் மக்களை இணைப்பதும் தானே புரட்சிக்கான தேவை? அதைவிடுத்து ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு அசைவிலும் ஒருவரைப் பற்றிய முன்முடிவுகளை வைப்பதும், முத்திரை குத்துவதும், ஆதாரங்களே இன்றி எதிரி போல் சித்தரிப்பதுமே சிலரின் வேலையாக இருக்கிறது.
மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய ‘சில’ அடிப்படை கொள்கைகள் (ஒரு கம்யூனிஸ்ட் என்பவர் அமைப்பில் இருந்தால் மட்டுமே கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி உடையவர் என்பதையும் அறிவோம்):
1. உழைப்புச் சுரண்டலில் ஈடுபடக் கூடாது.
(ஆனால் தனியுடமையின் ஏற்றத்தாழ்வு மிக்க பொருளாதார சூழலில் - சிறு,குறு தொழில் செய்பவர்கள் தற்போதைய முறையின் கீழ் இதனை பின்பற்றுவது சவாலுக்குறியது).
2. வாடகை, வட்டி வாங்கி பிழைக்கக் கூடாது. உழைத்து வாழ வேண்டும்.
3. எந்த வகையிலும், வடிவத்திலும் ஏற்றத்தாழ்வு பார்க்கக் கூடாது.
4. வீட்டில் வேலைப் பிரிவினையை சமமாக வைத்திருக்க வேண்டும்.
5. அதிகாரத்திற்கு விலை போகக் கூடாது. மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது.
6. உழைப்புச் சுரண்டல் மூலம் சொத்து சேர்க்கக் கூடாது.
- இதில் சில தெளிவுகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. தம் உழைப்பில் அல்லது குடும்பத்தினர் சேர்ந்து உழைத்து சுறிதளவு நிலமோ, சொந்த வீடோ, கடையோ வைத்திருந்தால், அப்படி உழைத்து பாட்டன் முப்பாட்டன் சேர்த்த சொத்து பரம்பரையாக வந்திருந்தால் அது உழைப்புச் சுரண்டலில் – அதாவது உபரி மதிப்பில் – தனியுடைமை அபகரிப்பு செய்து ஈட்டிய சொத்து அல்ல – என்பதால் அதை பறிமுதல் செய்யச் சொல்லி வழிகாட்டுதல் இல்லை! (நீ கம்யூனிஸ்டு ஆனா சொந்த வீட்ல இருக்க, கார் வச்சிருக்க என்றெல்லாம் அறியாதவர்கள் கேள்விகள் கேட்பார்கள்! என்கிட்ட சொந்த வீடுமில்ல, காரும் இல்லீங்கோ!)
உழைப்புச் சுரண்டலில் – உபரி மதிப்பு அபகரிப்பில் ஈடுபட்டு சொத்துக் குவிப்பு, செல்வக் குவிப்பில் ஈடுபடுபவர்களின் சொத்து, அவர்களிடம் இருக்கும் உற்பத்திச் சாதனங்கள் (ஏனென்றால் அவை அவர்களின் உழைப்பால் சேர்ந்த சொத்து கிடையாது) போன்றவற்றை – அதாவது முதலாளிகள், பெருமுதலாளிகளின் சொத்துகளை, நிலவுடைமையாளர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான அவசியத்தைப் பற்றி தான் மார்க்சியம் பேசுகிறது.
புரட்சிகர உற்பத்தி முறை / உற்பத்தி உறவுகளுக்கு மாறுகையில் அதாவது பொதுவுடைமை சமூகத்திற்கு மாறுகையில் படிப்படியாக மாற்றங்கள் நடைபெறும்.
(இந்த பட்டியலில் விரிவாக இன்னும் நிறைய சேர்க்கலாம். நான் இங்கு சுட்டிக்காட்டுவது தனி நபராக ஒருவர் குறைந்தபட்சம் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள். இதுவும் மார்க்சியத்தை கற்று அதிலிருந்து சாரமாக முன்வைப்பது…)
7. அதேபோல் #கம்யூனிஸ்டுகள் இந்த வேலைதான் செய்யவேண்டும். இது நல்ல வேலை, அது கெட்ட வேலை என்றெல்லாம் எந்த ‘அறவாதமும்’ தத்துவத்தில் இல்லை. ஓர் அரசு ஊழியர் அரசிடம் வேலை செய்துகொண்டே எப்படி சங்கம் அமைத்து தம் உரிமைக்காகவும், மாற்று அமைப்பிற்காகவும் இந்த அமைப்பிற்குள் இருந்துகொண்டே போராடுகிறாரோ, அதேபோல் தான் தனியார் நிறுவனங்களில் தம் உழைப்புச் சக்தியை விற்று வாழும் நிலையில் உள்ள உழைப்பாளிகளின் நிலையும். கம்யூனிஸ்டா இருந்துக்கிட்டு சீரியல்ல வேலை பார்க்குற, சினிமால வேலை பார்க்குற, நடிக்குற என்றெல்லாம் கேட்பவர்கள் தத்துவத்தை தவறாக முன்வைக்கிறார்கள் அல்லது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் என்றே பொருள். (அறிவார்ந்த வகையில் உரையாட இயலாதவர்கள் வசுவிடம் வைத்த கேள்விகள் இவை).
நிலவும் அமைப்பில் இருந்துகொண்டே தான் மாற்று அமைப்பிற்கான போராட்டங்கள், அறிவூட்டலில் ஈடுபட முடியும். துறவு மனப்பான்மையில் செயல்பட்டால் அது கருத்துமுதல்வாதம் அல்லது பொறாமை.
அமைப்பில் முழுநேரம் ஈடுபட்டு மக்களுக்காக உழைக்கும் தோழர்கள் நிச்சயமாக தியாகிகளே. அதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை. அதற்காக அமைப்பில் இல்லாதவர்களை எல்லா நேரமும் மட்டம் தட்டும் மனநிலையில் இருப்பதென்பது ஓர் அதிகார மனோபாவம். இது முற்போக்கு பண்பாகாது! முற்போக்குவாதி என்பவர் எப்போதும் உரையாடலில் ஈடுபடுவார், குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்குபவர் அல்ல!
புரட்சிக்கான வேலைகள் நடந்துகொண்டிருப்பதும், சமூக இயக்கம் ஒரு பொருளாதார அமைப்பின் கீழ் நடப்பதும் சமகாலத்தில் நடைபெறுவதுதான். கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு அவரவர் சமூகத்திற்கு பங்களிப்பு செய்வது என்பதும் நடப்பதுதான்.
அதேபோல் பெண்கள் விசயத்திற்கு வருவோம். ஜென்னி, க்ளாரா ஜெட்கின், சிமோன் தே பொவ்வா உட்பட அனைத்து முற்போக்கு பெண்களும் கூந்தல் மயிர் வைத்திருந்தவர்கள், பொதுவெளிக்கேற்ற வகையில் தங்களை ‘அலங்கரித்து’க் கொண்டவர்கள் தானே! அவர்களை முன்வைத்து இந்த முற்போக்கு காவல்கர்கள் கேள்வி கேட்பார்களா?
மதவாதிகளுக்கும் சில #முற்போக்கு ஆர்வக் கோளாறுகளுக்கும் வித்தியாசமில்லை. அதுவும் பெண்களையே தான் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலேயே இவர்கள் முற்போக்கு முகமூடி கிழிந்து தொங்கிவிட்டது.
மக்களிடம் #மார்க்சியம், முற்போக்கு #அரசியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்தரப்பட்ட பிரிவினர் நமக்கு தேவைப்படுகிறார்கள். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர்களை குத்திக்கொண்டே இருந்தால், ஓடத்தான் வேண்டும். நாற்காலியை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு போட்டி போட இங்கு யாரும் வரவில்லை.
அமைப்பில் இல்லாதவர்கள் தம்மால் இயன்றதை செய்ய முற்படுகிறார்கள். யாருக்காக? தம் சொந்த நலனுக்காகவா? (விளம்பரப் பிரியை என்றால் வலது பக்கம் போனா இன்னும் சிறப்பான வாய்ப்பும், பணமும், புகழும் கிடைக்கும்).
நட்பு சக்திகளை குடைந்து இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்?


Mar 9, 2020

பெண்ணியம் என்றால் என்ன?



பெண்ணியம் என்றால் என்ன? – கொற்றவை

காப்டன் விஜயகாந்திற்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு! அதேபோல் இங்கே பலருக்கு பிடிக்காத வார்த்தை “பெண்ணியம்”. பெண்ணியம் என்றால் என்னவென்று அறியாததால் வரும் வெறுப்பென்று நாம் கடந்து செல்லலாம், ஆனால் உண்மையில் அதற்கு மறுபெயர் பெண் வெறுப்பு (misogyny).  காலம் காலமாக அடங்கிப் போன பெண்களையே பார்த்துப் பழகிப் போன சமூகத்திற்கு பெண்கள் தங்களது உரிமைகளை வலியுறுத்திப் பேசத் தொடங்கியதும் பயம் தொற்றிக்கொண்டது. கம்யூனிசம் என்னும் பூதத்தைக் கண்டு முதலாளிகள் நடுங்குவதைப் போல் பெண்ணியம் என்னும் பேய் கண்டு ஆணாதிக்கச் சமூகம் அஞ்சுகிறது.

இப்போதெல்லாம் எங்கே பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்? பெண்கள் அடங்க மறுக்கிறார்கள். பெண்ணாதிக்கமே மேலோங்கியுள்ளது என்பன போன்ற எள்ளல்களை நாம் கேட்க முடிகிறது. வேடிக்கை என்னவெனில், இத்தகைய எள்ளல்களும் ஆணாதிக்கமே என்பதை அறியாத அப்பாவிகள் அவர்கள்!
பெண்ணியம் என்றால் என்னவென்று பார்ப்பதற்கு முன்பாக “அடங்கிப் போதல்” என்னும் போதனை குறித்து நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதிகாரம் மற்றும் படிநிலை என்ற ஒன்று உருவாகாத சமூகத்தில் அடிபணிதல் என்னும் ‘ஒழுக்கம்’ (அல்லது விதி) இருக்கவில்லை!

அதிகாரம் என்பது எப்போது உருவானது என்று காலத்தை பின்நோக்கி ஆய்வு செய்தால் செல்வக் குவிப்பு தோன்றிய போது என்கின்ற உன்மை நமக்குப் புலப்படும். அனைவரும் சமமாக இருந்த ஒரு சமூகத்தில் யாரும் யாரையும் ஆள்வதற்கான தேவை இருக்கவில்லை. யாரும் அடிபணிந்து நடக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை.  ‘சமமாக இருத்தல்’ என்றால் என்ன? சமத்துவம் என்ற சொல் கூட இங்கே பலரது வயிற்றில் புளியைக் கரைக்கிறது! ஏன்?

சமத்துவம் என்று கூறுகையில், குறிப்பாக ஆணும் பெண்ணும் சமம் என்று கூறுகையில் “ஆம்பிளையும் பொம்பிளையும் எப்படி சமமாக முடியும்? சரி சமம்னே வச்சுப்போம்! எங்கள மாதிரி நீங்களும் … என்று தொடங்கி உடல் பலம் சார்ந்த வேலைகளை பட்டியலிட்டு, இதையெல்லாம் செய்ங்கன்னு தான சொல்றோம்! அப்ப மட்டும் உங்களால முடியல.  Sports Day ல பாருங்க பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பரிசு பெற்று வருகிறார்கள். நீங்களும் ஜெயிக்க வேண்டியதுதான?” என்று ‘அறிவாளித்தனமாக’ (அறிவிலிகளாக) கேள்வி கேட்கிறார்கள்.

உடலாலும் கூட பெண்களும் பலமானவர்கள் என்பதை பல பெண்கள் நிரூபித்துக் கொண்டிருந்தாலும் ஆணாதிக்க மனம் அந்த சாதனைகளை எளிதாக புறம் தள்ளிவிடுகிறது! மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது போல் பிள்ளை பெறும் ஒரு வலு ஒன்றே போதும் பெண் உடலின் வலுவான தன்மையை மெய்ப்பிக்க. அப்படியென்றால் பிள்ளை பெற முடியாத பெண்கள் பலவீனமானவர்களா? இல்லை! அதற்கும் சேர்த்தே நாம் இன்று விடை காண்போம்!

சமத்துவம் என்கின்ற சொல்லை நாம் எண்ணம், சிந்தனை, நடத்தை என்கின்ற அடிப்படையில் மனித ஒழுக்க மாண்பாக முன் வைக்கின்றோம்! உடல் பலம் சார்ந்தல்ல! உடல் பலம் என்று விதண்டாவாதமாக பேச வேண்டுமெனில், பலசாலி என்று சொல்வோமானால் ஆணும் ஆணும் கூட இங்கே மாறுபட்டவர்களே. பிரச்சினைக்குரிய சூழல் வருகையில் எல்லா ஆண்களுமே அதை எதிர்க்க துணிந்துவிடுகிறார்களா? வம்புக்குப் போகாதே என்று சொல்லி ஒதுங்குபவர்களில் ஆண் என்ன பெண் என்ன? அதிலும் குறிப்பாக மிகவும் ஆபத்தான அரசு அதிகாரத்தை எதிர்ப்பதற்கு அஞ்சுபவர்களில் ஆண் பெண் வேறுபாடு உண்டா?

இந்த பூமியில் அனைத்து உயிரினங்களும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டதே. எந்த இரண்டு நபர்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை. மாறுபட்டு இருப்பதால் ஒருவர் மேலானவர், மற்றவர் கீழானவர் என்று வகுக்கும் அதிகாரம் இங்கு யாருக்குமில்லை. மாறுபட்டிருந்தாலும் அனைவரும் சமமே என்று வலியுறுத்துவதே சமத்துவம். மாறுபட்டு இருப்பதால்  இன்னார் இன்னதே செய்யக் கடவர்” என்னும் விதிகளை ஒழித்து அனைவர்க்கும் அனைத்திலும் உரிமை உண்டு என்று வலியுறுத்துவதே சமத்துவ சிந்தனை.  ஆக, சமத்துவம் என்று பேசுகையில் உடல் பலம் சார்ந்த, உடலமைப்பு சார்ந்த ஒப்பீடு அல்ல. அது எண்ணம் சார்ந்தது. அது மனித உரிமை சார்ந்தது.

ஏற்றத்தாழ்வு என்பது ஆண் பெண் உறவில் மட்டும் நிலவுகின்ற ஒன்றல்ல. ஒவ்வொரு சமூகத்திலும் (நாட்டிலும்) பல்வேறு அடையாளங்களின் அடிப்படையில், வாழ்வாதார நிலைமைகளின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு நிலவுகின்றது. அந்த அடையாளங்களை மேலோர் - கீழோர், உயர்ந்தோர் - தாழ்ந்தோர், உயர் பிறப்பு- கீழ் பிறப்பு, பலமானவர் – பலவீனமானவர், ஏழை - பணக்காரன், வெள்ளையர் - கருப்பர் என்றெல்லாம் வகைப்படுத்தி, திடப்படுத்தி குறிப்பிட்ட பிரிவினரை குறிப்பிட்ட உடைமைகளிலிருந்து, உரிமைகளிலிருந்து, வேலைகளிலிருந்து பிரித்து வைத்தனர்.
இத்தகைய வேலைப் பிரிவினையை நிலைநாட்ட பல்வேறு விதமான கட்டுக்கதைகளும், விதிமுறைகளும், ஒழுக்கவிதிகளும், நிர்வாக அமைப்புகளும் தோன்றின. மதம் மற்றும் மத நூல்கள்  அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உலகெங்கிலும் பாலின அடிப்படையில் பெண் அத்தகைய ‘ஒதுக்குமுறைக்கு’ ஆளானாள். செய்தொழில் அடிப்படையில், மொழி, இனம், பண்பாடு, பொருளாதார நிலை என்னும் அடிப்படையில் ஆண் பெண் பேதமின்றி பல்வேறு பிரிவினர் இத்தகைய வேலைப் பிரிவினைக்கு ஆளானார்கள். இந்திய சமூகத்தில் கூடுதலாக சுத்தம்-அசுத்தம் என்னும் பார்ப்பனிய மதச் சிந்தனையை உட்புகுத்தி குறிப்பிட்ட பிரிவினர் குறிப்பிட்ட வேலை மட்டுமே செய்ய வேண்டும் என்னும் மனுவாத விதி உண்டானது. சாதியின் தோற்றுவாய் இதுவே. இந்த அசுத்தமென்னும் சிந்தனை பெண் உடல் சார்ந்தும் நிறுவப்பட்டு பெண்கள் விலக்கி வைக்கப்பட்டனர் அல்லது அடிமைபடுத்தப்பட்டனர். 

பெண்களை, சாதிய ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களை ஒடுக்கவும், அவர்களே விரும்பி அந்த அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளவும் மத ரீதியான கதையாடல்கள் உருவாக்கப்பட்டன. அவையே இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகள். ஆதியில் ஆண் பெண் என்ற பேதமின்றி வேட்டையாடுதல் முதற்கொண்டு அனைத்து வேலைகளிலும் ஆணுக்கு நிகராக ஈடுபட்டு வந்த பெண்கள் பின்னர் வீட்டு வேலை, குழந்தைப் பேறு, குடும்ப நிர்வாகத்தை மேற்கொள்ளுதல் என்று ஒதுக்கப்பட்டனர். அதேபோல் இனக்குழுக்களாக அனைவரும் அனைத்து வேலைகளிலும் ஒன்றாக ஈடுபட்டு பகிர்ந்துண்டு வாழ்ந்த நிலைமையும் மாறியது.  இனக்குழுக்களுக்குள் மோதல் ஏற்பட்டு ஒரு பிரிவு மற்ற பிரிவினரை அடிமையாக பிடித்து வரும் போக்கு இருந்தது. அப்படி பிடித்துவரப்பட்ட அடிமைகளை ஒடுக்க அதிகாரம் தேவைப்பட்டது. அதாவது அடக்குமுறை அமைப்பு.  தலைவர் (இன்றைய நிலையில் அரசு), ஒழுக்கக் கோட்பாடுகள் (மதம் போன்றவற்றின் மூலம்), தண்டனைகள் (சட்டம்) போன்றவை உருவானது.

இந்த காலகட்டத்தில் தான் “அடிபணிதல்” என்னும் ஒழுக்கம் மனித சமூகத்தில் ஒரு ‘பண்பாக’ போதிக்கப்பட்டது. மூத்தோருக்கு இளையோர் அடிபணிதல், எஜமானனுக்கு அடிமை அடிபணிதல், ஆனுக்குப் பெண் அடிபணிதல், தந்தைக்கு மகன்கள் அடிபணிதல், மன்னனுக்கு குடிகள் அடிபணிதல் என்னும் இயற்கைக்கு முரணான, மனித குலத்திற்கு அவசியமில்லாத ஒரு சிந்தனை ‘நல்லொழுக்கம்’ என்னும் பெயரில் பரப்பப்பட்டது. பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஆண்களைச் சார்ந்து வாழும் நிலையும் உருவானது. அதன் தொடர்ச்சியாக தர்மபத்தினியாக வாழ்தல் என்னும் கடமை பெண்ணின் ஒரே கடமை என்றானது. இதிலிருந்து விலகி எதைப் பேசினாலும் செய்தாலும் கேடுகெட்ட பெண்ணியவாதிகள், அடங்காப்பிடாரிகள் என்னும் பட்டங்கள் வாரி வழங்கப்படுகின்றன.

இந்த பண்பாட்டில், அதாவது காட்டுமிராண்டிகளின் காலத்தில் தோன்றிய அராஜக பண்பாட்டில் ஊரிப்போனவர்கள்  இன்றைக்கும் அதிலிருந்து மீளாமல் “உங்களை எல்லாம் (பெண்களை) யார் அடிமைபடுத்துறா?” என்பதும் “இப்பல்லாம் முன்ன மாதிரி இல்லைங்க.. அவங்கல்லாம் (சாதி) எங்க அடங்கி இருக்காங்க… அடிச்சா திருப்பி அடிங்குறாங்க” என்பதுமான வியாக்கியானங்களை செய்துகொண்டிருக்கிறார்கள்.  
மனித சமூகத்தின் வளர்ச்சி என்பது பல்வேறு காலகட்டங்களை, நிகழ்வுகளைக் கடந்து வந்திருக்கிறது. மனித சமூக வரலாற்று வளர்ச்சி என்பது  ஒரு பிரிவு மற்ற பிரிவிடமிருந்து செல்வங்களை கையகப்படுத்திய போர் என்னும் நிகழ்வுகளால் ஆனது. இழந்த செல்வங்களை, உரிமைகளை மீண்டும் பெறுவதற்கான போராட்டங்களால் நிறைந்தது. 

ஆண் பெண் இடையிலான போராட்டம் என்பதும், சாதி, மத, இன, மொழி ரீதியான போராட்டம் என்பதும் அத்தகையதே. உரிமைகள் பறிக்கப்படவில்லை எனில் போராடுவதற்கும் இங்கு அவசியமில்லாமல் போயிருக்கும். ஒடுக்குமுறை இல்லையெனில் விடுதலைப் போராட்டம் இருக்கப் போவதில்லை.
தொடக்கத்தில் பெண் உடல் சார்ந்து, அதாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் காலத்தில் பெண் ஓய்வெடுக்க வேண்டும் என்று தோன்றிய இயல்பான வேலைப் பிரிவினையானது பின்னர் குடும்பம் மற்றும் தனிச்சொத்தின் தோற்றத்தின் காரணமாக நிரந்தரமான உழைப்புப் பிரிவினையாக மாறியது. அடிபணிதல் என்பது பெண்ணின் பண்பாக அவளது இரத்த நாளங்களில் மதம், சடங்கு, பெண்மை என்னும் விஷ ஊசிகள் கொண்டு ஏற்றப்பட்டன.  பல்லாயிரம் வருடங்களாக சமூகமானது இதற்கு பழக்கப்பட்டு, மூளைச் சலவைக்கு உள்ளாகி விட்டது. பெண்களே இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாதிருப்பதே இதில் மிகவும் துயரமான விசயம். சாதிய ரீதியாக (மற்றும் இதர) ஒடுக்கப்பட்டவர்களுக்கு தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்னும் உன்மை தெரிந்து உணர்வு பெற்று ஒருங்கிணைந்து போராட வந்துவிட்டார்கள். ஆனால் பெண்களில் பெரும்பான்மையினருக்கு தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்பது தெரிவதில்லை.

ஆண் வலிமையானவன், ஆணே உயர்ந்தவன், ஆணே குடும்பத் தலைவன் என்கின்ற நிலைமை இயல்பானதே என்பதே இங்கு நிலவும் நம்பிக்கை. இந்த நம்பிக்கையோடு பெண்கள் ஆணைச் சார்ந்து, அவன் தலைமையிலான குடும்ப அமைப்பிற்கு கட்டுப்பட்டு வாழும் நிலைமைகள் உள்ள சமூகத்தைத்தான் நாம் ஆணாதிக்கம் என்கின்றோம். இது எந்த ஒரு தனியான ஆணைக் குறிப்பதல்ல. பெண்ணியம் என்பது ஆணைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதோ, ஆண் வெறுப்பை போதிப்பதோ அல்ல. பெண்களை வேறுபடுத்தி நடத்துகிறார்கள் என்னும் புரிதல் ஆணுக்கும் இல்லை, பெண்ணுக்கும் இல்லை. ஆகவே இரண்டு பாலினங்களும் இதில் பாதிக்கப்பட்டவர்களே (பிற்கால அரசியல் சூழலால், ஆணாதிக்க பாலின ஒடுக்குமுறையின் காரணமாக மூன்றாம் பாலினத்திற்கு இந்த புரிதல் ஓரளவுக்கு வந்துவிட்டது) என்னும் சமூக நிலைமையை உணரச் செய்து அதற்கெதிராக போராட பெண்கள் மட்டுமல்லாது அனைவரையும் போராட ஒன்றிணைத்து பாலின சமத்துவத்தை நிறுவ நினைப்பதே பெண்ணியம்.

கண்டபடி பாலுறவு வைத்துக்கொள்ளவும், குடும்பத்திற்கு அடங்காமல் நடக்கவும், கணவனை வீட்டு வேலைச் செய்யச் சொல்லி சீரியல் பார்க்கவுமே பெண்கள் பெண்ணியம் பேசுகிறார்கள் என்கிற அவதூறும் நிலவுகின்றது. பாலுறவு சுதந்திரம் என்பது “மண்ணும் பொண்ணும் ஒன்னு” என்று ஆணாதிக்க சொத்துடைமை அடக்குமுறைக்கு எதிராக பேசப்படுகிறது. குடும்பம் என்னும் அமைப்பு வன்முறையாக மாறுகையில் அதற்கு அடங்கமறுப்பது அவசியமானதே. அதேபோல் ஆம்பிளையை வீட்டு வேலை செய்யச் சொல்வது என்பது சமத்துவமான வேலைப் பிரிவினையாகும். ஒருவர் உழைப்பில் மற்றவர் சுகபோகமாக வாழும் நிலையை ஆண் பெண் இடையே மட்டுமின்றி சமூகத்தின் அனைத்து உறவுகளிலும் ஒழித்திட வேண்டும்.

முற்காலத்தில் பெண்கள் வீட்டு வேலை மட்டும் செய்யும் நிலை இருந்தது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னரே இப்போது அவர்களுக்கு ஓட்டுரிமை, கல்வி, வேலை போன்ற உரிமைகள் கிடைத்துள்ளன.  ஆனாலும் பல குடும்பங்களில் பெண்கள் இன்னமும் வீட்டு வேலை, வெளி வேலை என்னும் இரட்டை உழைப்புக்கு ஆளாகி துன்புறுகிறார்கள். சில குடும்பங்களில் அன்பினால் ஆண்களும் வீட்டு வேலையை பகிர்ந்து கொள்கிறார்கள். இருப்பினும் வீட்டு வேலை என்பது பெண்களின் பொறுப்பே என்னும் கருத்தியலிலிருந்து யாரும் விடுபடவில்லை. பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் உண்ட எச்சில் தட்டைக் கூட எடுத்திடாது தட்டிலேயே கை கழுவும் பழக்கம் உள்ளது. இத்தகைய ஆண் அதிகாரச் செயல்பாடு இயல்பானதே என்று கருதும் சிந்தனையையே நாம் ஆணாதிக்கம் என்கிறோம். இது ஆண்களிடத்தும் உண்டு. பெண்களிடத்தும் உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

உலகளாவிய அளவில் பல்வேறு கட்டப் போராட்டங்கள், உயிர் தியாகங்களின் விளைவாக இன்றைக்கு பெண்களுக்கு சில உரிமைகள் கிடைத்துள்ளன. ஆனாலும் சமூகத்தின் கூட்டு மனநிலையில் பெண் என்பவள் இரண்டாம் நிலையிலானவள் என்னும் கருத்தியல் மாறவில்லை. பெண்ணின் உடை தொடங்கி, கல்வி, திருமணம், திருமணத்திற்குப் பின் வேலைக்கு செல்வதா கூடாதா என்னும் முடிவுகள், வேலைக்குச் சென்றால் பணத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் போன்ற கட்டளைகள் என்று ஆணாதிக்கம் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. பெண் குழந்தையை பெற்றுக்கொள்வதே சுமை, அவமானம் என்னும் நிலை இன்னமும் தொடரத்தானே செய்கிறது. கொள்ளி போடும் உரிமை ஆணுக்குத்தானே உள்ளது. இது வாரிசுரிமை, சொத்துடைமை சார்ந்த தந்தை வழிச் சமூகத்தின் விதி. இப்படியாக நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

பெண்ணியம் என்ற ஒன்று பெண்கள் மட்டும் பேசுவதல்ல. அதேபோல் பெண்கள் பேசக் கூடியதெல்லாம் பெண்ணியமும் அல்ல. பெண்கள் தினம் என்னும் பெயரில் ‘சிறந்த இல்லத்தரசி’, ‘பெண்மையை போற்றுவோம்’ என்னும் வகையிலான புகழுரைகளை பெண்ணியம் என்று முன்வைப்பது வேடிக்கையானது. இத்தகைய புகழுரைகள் ஆணாதிக்க சமூகம் வகுத்திருக்கும் கடைமைகளை செவ்வனே செய்து முடிப்பவள் என்பதற்காக கொடுக்கப்படும் லஞ்சம். அவ்வளவே. அந்த குடும்பக் கடைமைகளை மீறும் பெண்களை இந்த சமூகம் கொண்டாடுமா என்பதே கேள்வி.
ஆண்கள் தாங்கள் ஏதோ உயர்ந்தவர்கள், பலசாலிகள், ஆண்மை மிக்கவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்களும் இந்த ஏற்றத்தாழ்வு மிக்க சுரண்டல் பொருளாதார அமைப்பில் பொருளாதார அடிமைகளே என்று உணராமல் இருக்கிறார்கள். பெண்ணியவாதிகள் அத்தகைய ஆண்களுக்காகவும், அதாவது வீடு, சமூகம் என்று சுரண்டப்படும் உழைக்கும் வர்க்கமாக சக ஆண் உழைப்பாளனின் விடுதலைக்காகவும் சேர்த்தே போராடுகிறார்கள். பாலின ரீதியாக பெண் உடல் சார்ந்தும் ஒடுக்கப்படுவதால் அவர்கள் உடல் சார்ந்த கருத்தியல்களுக்கு எதிராகவும் போராடுகிறார்கள். இந்த போராட்டத்தில் பெண்களோடு ஆண்களும் போராடுகிறார்கள். பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களும், அவர்களை பின்பற்றுபவர்களும் கம்யூனிஸ்டுகளும் அதற்கு சான்று. ஆனால் பொதுச் சமூகமானது இத்தகையோர் குறித்து தவறான புரிதல்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வைத்துள்ளது.

குற்றச் செயல்களில் ஆண்கள் ஈடுபடுவது போல் பெண்களும் ஈடுபடுகின்றனர். ஆனால் ஆண்கள் செய்கையில் அதை வீரமாக பார்க்கும் இந்த சமூகம் பெண் இப்படி நடந்துகொள்ளலாமா என்று இயற்கைக்கு மாறான பிறப்பின் அடிப்படையிலான ஒரு தூய்மைவாத கேள்வியை வைப்பதும், பெண்ணியம் பேசுவதால் தான் பெண்கள் குற்றங்கள் இழைக்கின்றனர் என்பதும் அபத்தமானது. குற்றங்கள் நிகழ்வதற்கு மோசமான பொருளாதார அமைப்பும் அதற்கு ஏற்றவாறு உருவாகி இருக்கும் பண்பாடுமே காரணம். இதற்கு ஆண் பெண் பேதமில்லை. குற்றமிழைக்கும் பெண்களுக்கு பெண்ணியவாதிகள் வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பதுமில்லை.
பெண்ணியத்திலும் பல வகைகள் உள்ளன.  ‘ஆணிய’ தத்துவங்களில் அராஜகவாத போக்கு நிலவுவது போல் பெண்ணிய சிந்தனைகளிலும் சில விசயங்களில் அராஜக போக்குகள் இருக்கவே செய்யும். ஆணாதிக்க அராஜகம் போல் அல்ல; இது வர்க்க ரீதியான சிக்கல். இது விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்று.

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம். ஆனால் அதுவும் கூட பெண்கள் தினம் என்னும் வணிகக் கொண்டாட்டமாக மாற்றப்பட்டுவிட்டது. இடதுசாரிகள் தவிர மற்றையோர் இந்நாளை பெண்கள் தினம் என்பார்களே ஒழிய உழைக்கும் மகளிர் தினம் என்று கூற மாட்டார்கள்.

பெண்ணியம் என்பது பாலின அடிப்படையில் ஒடுக்கப்படுவதை ஒழித்து குடும்பம், கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து மட்டத்திலும் சமத்துவத்தை அடைந்திடுவதற்கான ஓர் அரசியல் இயக்கம். பெண்ணியம்  பேசுவோர் பெண் விடுதலை மட்டுமல்லாது சாதி மத ஒடுக்குமுறை, பொருளாதார பிரச்சினைகள், இன ஒடுக்குமுறை, போர் எதிர்ப்பு, சூழலியல் சுரண்டல் என்று பல்வேறு பிரச்சினைகளையும் முன் வைத்து போராடுகின்றனர்.

ஆண்களே உங்களின் விடுதலைக்காகவும் சேர்த்தே பெண்ணியவாதிகள் போராடுகின்றனர். உழைக்கும் வர்க்கமான உங்களுக்கும் உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

மார்ச் 8 அன்று வணக்கம் இந்தியாவில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம் 

Mar 7, 2020

பெண்களைப் புகழாதீர்கள்!


தயவு செய்து எங்களை (பெண்களை) புகழாதீர்கள்!
பெண்களைப் போற்றாதீர்கள்!
பெண்களுக்கென இந்த ஆணாதிக்க தனியுடைமைச் சமூகம் வகுத்திருக்கும் பண்புகள் மற்றும் உறவுகளை நாங்கள் செவ்வனே காக்கிறோம் என்று உருகாதீர்கள்!
நாங்கள் பொருமைசாலிகள், அன்பானவர்கள் கனிவானவர்கள் என்று பெண்மைக்குள் எங்களை அடக்காதீர்கள்!

பெண்களும் சளைத்தவர்கள் அல்ல அவர்கள்
விண்வெளிக்குப் போனார்கள், இராணுவ கமாண்டோ ஆனார்கள் ஆகவே வீர மங்கைகள் என்று கொண்டாடாதீர்கள்!
நாங்கள் ஆணின் பெண்களாக இருந்தது போதும்!
எங்களுக்குத் தேவை பொருளாதார சார்பற்ற சுதந்திர வாழ்வு!
பெண்களுக்கு மட்டுமல்ல அனைவர்க்கும் அதுவே தேவை!

மானுட விடுதலைக்காகப் போராட, அறியாமையில் இருக்கும் ஆண் பாலினத்திற்காகவும் சேர்த்து எங்களை அரசியல் பேசவிடுங்கள்!
எங்களது விடுதலைப் போராட்டத்தை ஒழுக்கம் கெட்ட பெண்ணியம் என்று கொச்சைப்படுத்தாதீர்கள்!
நாங்கள் பெண்மையிலிருந்து வெளியேற விரும்புகிறோம்!
ஆண்மையை ஒழிக்க விரும்புகிறோம்!
அனைவரையும் உழைப்புரீதியாக அடிமைபப்டுத்தும் அமைப்பை வேரோடு தகர்த்து மண்ணோடு சாய்க்க விரும்புகிறோம்!

பாலினம் கடந்து நாங்கள் சமத்துவத்தை அனைத்து மட்டத்திலும் நிறுவ விரும்புகிறோம்!
எங்களை தாயுள்ளம் மிக்கவர்கள் என்று கொஞ்சாதீர்கள்!
எங்களின் தாய்மை உங்களை நெகிழச் செய்கிறது!
அது குடும்பம் என்னும் நிறுவனத்திற்குள் அடைக்கப்படும் அரசியலை அறியாது தாய்ப் பாசம் என்று ஆராதிக்கிறீர்கள்!
உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது போல் தாய்மை என்பது வெறும் பெண்மைக்கான உணர்வு மட்டுமல்ல
தாய்மைக்குப் பேருதாரணமாக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக சிந்தித்த, போராடிய ஆண்கள் ஓராயிரம் பேர் உள்ளனர்.
பெண்களின் உடல் வழியாக பிள்ளைகள் பிறக்கிறார்கள்! அவ்வளவே!

இரத்த உறவிலான தாய்மையை ஒழித்து
உலகெங்கிலும் உள்ள பிள்ளைகளுக்கு நாங்கள் தாயாக விரும்புகிறோம்!
அதற்கு நாங்கள் போராட வேண்டும்!
எங்களுக்கும் உங்களுக்கும் சமூக அரசியல் பொருளாதார விடுதலை வேண்டும்!

உழைக்கும் வர்க்கப் பெண்களாகிய நாம்
பெண்மையை ஒழிப்போம்
ஆண்மை(ய்ய) அதிகாரத்தை தகர்ப்போம்
சாதியை வேரறுப்போம்
மதத்தைச் சாய்ப்போம்
போரை எதிர்ப்போம்
தேசிய இன விடுதலையை போற்றுவோம்
பாலின சமத்துவத்தை நிலைநாட்டி
உழைக்கும் மகளிர் தினத்தை நிறுவிய
கம்யூனிஸ்டுகளோடு அணி திரண்டு
தனியுடைமையை ஒழிப்போம்!
நம் தலைமுறைகள் மகிழ்வாய் வாழ
ஒரு பொன்னுலகம் படைத்திடுவோம்!



Dec 2, 2018

"உழைக்கும் மகளிர்” நூல் வெளியீடு


வணக்கம் தோழர்களே,

எவ்வளவு வன்மத்தை இந்த சமூக ஊடகம் (சமூகமும்) அள்ளித் தெளித்தாலும், அதன் நேர் எதிர் திசையில் உலகெங்கிலும் இருந்து முகமறியா நபர்கள் மற்றும் நண்பர்கள், தோழர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் எல்லாவற்றுக்கும் மேலாக பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மீதான அலாதியான நம்பிக்கையும் காதலும் என்னை தொடர்ந்து எழுத்தின் வாயிலாக இயங்கச் செய்துகொண்டே இருக்கிறது J

மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் இப்படித்தான் நிகழ்ந்தது. இப்போது நான்காவதாக ஒரு சிறு நூல் ஒன்றை மொழிபெயர்த்துள்ளேன்.  சிந்தன் பதிப்பக வெளியீடாக இந்நூல் வெளிவர இருக்கிறது. 

உழைக்கும் மகளிர்” – தோழர் ந.கா. க்ரூப்ஸ்கயா எழுதி, தோழர் மிக் கொஸ்த்தெலொ அவர்களின் மொழிபெயர்ப்பில் மேனிஃபெஸ்டோ ப்ரெஸ் (இங்கிலாந்து) வெளீடாக வந்த இந்நூல் உரிமம் பெற்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வரும் 9ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு #கூகை வெளீட்டு நிகழ்வை திட்டமிட்டிருக்கிறோம். அதுகுறித்தான விவரங்கள் விரைவில் பகிர்கிறேன். கால அவகாசம் குறைவாக உள்ளதால் உங்கள் அனைவரின் நாட்காட்டியில் இந்த நாளையும் நேரத்தையும் குறித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இதை எனது நேரடியான அழைப்பாக்க் கருதி நிகழ்வுக்கு வந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பாட்டாளி வர்க்கப் புரட்சி ஓங்குக! மார்க்சியமே சமூக விடுதலையின் ஒளிவிளக்கு. 

க்ருப்ஸ்கயாவும் உழைக்கும் மகளிர்நூலும்

நதேழ்தா கான்ஸ்டாண்டினோவா க்ரூப்ஸ்கயா (1869 – 1939), லெனின் என்னும் ஆளுமை மீதான பரவலான ஈர்ப்பால் மற்றுமொரு ஒரு புரட்சியாளர், கட்டுரையாளர் என்று குறைத்து மதிப்பிடப்பட்டதோடு துரதிர்ஷ்டவசமாக பலராலும்லெனினின் மனைவிஎன்று மட்டுமே அறியப்பட்டவர்.

கல்வியாளராக அவர் ஒரு தனித்துவமான ஆளுமை என்றபோதும் க்ரூப்ஸ்கயாவின் எழுத்துகள் இதுவரை ஆங்கிலத்தில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன. புரட்சியின் முதல் நாளிலிருந்தே அவர் தன்னை புரட்சிகர பணிகளில் இணைத்துக்கொண்டார்….
…. 1896இல் லெனினோடு கைது செய்யப்பட்டு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு பின்னர் ஷூசென்ஸ்கொயேவில் மூன்றாண்டுகள் உள்நாட்டு சிறைத் தண்டனையை அனுபவித்த போது க்ரூப்ஸ்கயா முதல் முதலாக எழுதியதேஉழைக்கும் மகளிர்என்னும் சிறு பிரசுரம்.
…. ருஷியப் பெண்களின் நிலை குறித்து வெளியான முதல் மார்க்சியப் படைப்பு என்னும் முக்கியத்துவம் வாய்ந்தது இச்சிறு பிரசுரம். ஜாரிசத்தின் கீழ் பெண்களின் உரிமையற்ற நிலையை ஆசிரியர் மிகவும் ஆழமாக ஆய்வு செய்கிறார். ஆண் உழைப்பாளர்களுக்கு நிகராக, சமமாகவும், மேலான வாழக்கைக்காகவும் போராடுபவர்களின் அணியில் சேரும்படி அவர் பெண்களுக்கு அழைப்பு விடுக்கிறார். “உழைக்கும் மகளிரும் உழைக்கும் வர்க்கத்தின் உறுப்பினர்களே. அவர்களது நலன்களும் அவ்வர்க்கத்தின் நலன்களோடு நெருக்கமாகப் பிணைந்துள்ளன.”

இந்தச் சிற்றேடு க்ரூப்ஸ்கயா விளக்கும் விடுதலைக்கான பாதையை விரிவாக ஆய்வு செய்ய முற்படுகிறது. அவர் காலத்தில் வாழ்ந்த பெண் உழைப்பாளர்களின் நிலைமைகளை விளக்கி வந்த இந்நூல் க்ரூப்ஸ்கயாவின் மார்க்சியக் கண்ணோட்டத்தைச் சிறப்பாக வெளிக்காட்டுகிறது. இதில் அவர் குறிப்பிடும் நிலைமைகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கால ரஷ்யாவைப் பற்றிய வரலாற்றாசிரியர்களுக்கான ஆய்வுகளுக்காக மட்டுமின்றி இன்றைய உலகின் நிலைமைகளுக்கும் பெருமளவில் பொருந்திப் போகிறது. எவ்வித மாற்றங்களுமின்றி 26 வருடங்கள் கழித்து அப்படியே இந்நுல் வெளியாகிறது என்பதே அதன் பொருத்தப்பாட்டிற்கான சான்றாகும்.

தொழிலாளர்களின் நலனுக்காக பெண்கள் தோளோடு தோள் நின்று போராடினால் மட்டுமேசுதந்திரமான இன்பகரமான வாழ்க்கைக்கான சாவியைபெண்கள் கண்டுபிடிக்க முடியும்.

ஓவியம்: மணிவண்ணன்

நான் நன்றி சொல்ல வேண்டிய தோழர்களின் பட்டியல் நீண்டது. நிகழ்வில் சந்திப்போம் J