Dec 29, 2018

மார்க்சியம் ஒரு விஞ்ஞானம்


மார்க்சியத்தில் பெண்ணியம் இல்லை, தனிமனித மனம் இல்லை, மனித மையம் இல்லை, தலித்தியம் இல்லை இதை அதோடு சேர்க்க வேண்டும், அப்பொழுதுதான் மார்க்சியம் முழுமையான பார்வையோடு கூடிய தத்துவ்வாதமாக இருக்கும் என வாதிப்பவர்களை நோக்கி தோதாத்ரி கூறுகிறார்:
“மார்க்சியம் ஒரு விஞ்ஞானம். அது நியூட்டனின் அல்லது ஐன்ஸ்டைனின் விதியைப் போன்றது. தத்துவரீதியாக அது இயங்கியல், பொருள்முதல்வாதம் சமுதாய ரீதியாகப் பொருளாதார உறவுகள் தாம் எல்லாவற்றிற்கும் அடிப்படையானவை என்பது மார்க்சியம். மாறுதல்களை ஏற்றுக்கொள்வது மார்க்சியம். வர்க்கப் போராட்டம்தான் சமுதாயத்திற்கு உந்துவிசை என்பது மார்க்சியம். சுரண்டலற்ற சமுதாயத்தினைப் பற்றிக் கூறுவது மார்க்சியம். மற்றவை அப்படியல்ல. பெண்ணியம் பெண் விடுதலை பற்றியது. தலித்தியம் விளிம்புநிலை மக்கள் பற்றியது. பெரியாரியம் அடிப்படை மாறுதலை வலியுறுத்தாமல், சமூக சீர்திருத்தக் கருத்துகளை முன்வைப்பது. இவற்றிற்கும் மார்க்சியத்திற்கும் வேறுபாடுகள் உண்டு. இவை முற்போக்கானவைதாம் என்றாலும், இவை மார்க்சியத்தினை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. பெண்ணியக் கொள்கைகளில் மார்க்சியம் சார்ந்ததும் உண்டு. தலித்தியத்தில் மார்க்சியம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்கள் கூறும் காரணம் அது வன்முறையானது என்பதாகும்.
பெரியாரியவாதிகளும் மார்க்சியத்தினை அவர்களின் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறார்கள். அது பெரியாரிய மார்க்சியம் எனப்படுகிறது. இப்படி முரண்படும் கோட்பாடுகளை மார்க்சியத்துடன் இணைப்பது என்பது சாத்தியம்தானா?
மேலும் இந்த வாத்த்தினை முன்வைப்பவர்கள் மார்க்சியம், பெண்ணியம், பெரியாரியம், தலித்தியம் ஆகியவற்றைச் சமமாகவே காண்கின்றனர். இது சரியான பார்வை ஆகாது. மார்க்சியம் அடிப்படையானது. இதன் உதவியுடன் சகலத்தையும் விளக்க முடியும். ஆனால், பெண்ணியத்தையோ, பெரியாரியத்தையோ (தலித்தியத்தையும் – கொற்றவை) வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் விளக்க முடியாது.
பெண்ணியம், பெரியாரியம், தலித்தியம் ஆகியன முன்வைக்கும் கருத்துகள் அந்தந்தத் துறைகளுக்குப் பொருத்தமானவைவே. இவற்றில் ஒட்டுமொத்தப் பார்வை என்பது இல்லை. இவற்றில் உண்மை உண்டு. ஆனால் அந்த உண்மை துறை சார்ந்த உண்மையே தவிர சகலத்திற்கும் பொருத்தமான உண்மையில்லை. மார்க்ஸ் கூறும் வர்க்கப் பார்வை எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். மற்றவை அப்படி அல்ல. எனவே அடிப்படியான ஒன்றைத் துறை சார்ந்த பார்வையுள்ளவற்றிற்குச் சமமாக மார்க்சியத்தைக் காண்பது சரிதானா என்ற கேள்வி எழுகிறது…. இதற்குமாறாக மார்க்சியத்துடன் பெண்ணியம், தலித்தியம், பெரியாரியம் என்று எல்லாவற்றையும் இணைத்தாலோ இவற்றிற்குச் சம்மாக மார்க்சியத்தைப் பார்த்தாலோ மார்க்சியம் வினோதமான உடையணிந்த கோமாளியாகவே இருக்கும்.” – அம்பேத்கரும் அவரது தம்மமும் நூலில் வசுமித்ரவின் முன்னோட்டத்தில் இடம்பெறும் மேற்கோள் (மூல நூல்: எஸ். தோத்தாத்ரி, மார்க்ஸ் எப்படி இருப்பார்?, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக் 68.69)
தொன்று தொட்ட காலம் தொடங்கி காலம் காலமாக தத்துவப் போராட்டம் என்பது நடந்து வந்திருக்கிறது. குறிப்பாக மார்க்சியம் தோன்றிய பின்னர் அதற்கு எதிரான முதலாளித்துவ போலி ஜனநாயக இயங்கள் பரப்பப்பட்ட போது இந்தியாவிலும் மார்க்சியம் ‘எதிர்’ மற்ற துறை சார் இயங்கள் குறித்த தத்துவார்த்த விமர்சனங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தன… இருக்கின்றன…
ஏதோ புதிதாக இன்று நாங்கள் எல்லோரையும் பிரிக்க வந்தது போல் பேசி இங்கு சிலர் புனிதர்கள் ஆக முயல்கின்றனர். அத்தகையோர்க்கு தத்துவப் போராட்டம் என்றால் என்ன அது எதற்கு தேவை என்கிற புரிதலோ, தேவையோ இல்லை என்பதே பொருளாகும்.
மார்க்சிய சித்தாந்தத்தை வலியுறித்திப் பேசினாலும் நடைமுறையில் எல்லா ஜனநாயக சக்திகளோடும் இணைந்து தான் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை மெய்ப்பித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே தங்களுக்கு நல்லவர் பட்டம் வேண்டி அடுத்தவர்களுக்கு பிரிவினைவாத சாயம் பூசுவது வேடிக்கையானது!
நடைமுறையில் கைக் கோர்ப்பது என்றால் என்ன? கூட்டங்களுக்கு தலை கணக்கு சேர்ப்பதா? இல்லை பாராளுமன்ற அதிகாரத்தில் பங்கு வேண்டி கூட்டணி அமைத்துக் கொள்வதா? இது நடந்துகொண்டுதானே இருக்கிறது!
ஆனால் அந்த நடைமுறை என்பது தற்காலிக ஜனநாயகப் போராட்டம். ஆனால் நாம் அடைய வேண்டிய இறுதி இலக்கு என்பது என்ன? அதற்கு சரியான உலக கண்ணோட்டத்தினைப் பெறாமல் எங்கணம் நாம் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது? அதில் வெற்றி பெருவது. அதற்கான வழிகாட்டுதலை முன்வைக்கையில் எல்லாம் “கம்யூனிஸ்டுகளுக்கு சாதியைப் புரிந்துகொள்ளத் தெரியவில்லை” என்பதாக கூறுவோரிடத்து
“இதுவும் தேவை அதுவும் தேவை” என்னும் சமரசவாதமா பதில்?
“இவரிவர் இடத்தில் x,y,z பிரச்சினைகளுக்கு எதிரான கலகக் குரல்கள் எழும்பின, சிற்சில சீர்திருத்தங்கள் கிட்டின ஆனால் தீர்வு வேண்டுமெனில் சரியான தத்துவ வழிகாட்டி வேண்டும்” என்பது பிரிவினைவாதமா, தத்துவார்த்த தர்க்கவாதமா? சரியான தத்துவத்தை வழங்காமல் மக்களை போராட்டங்களுக்கான கருவிகளாக மட்டும் பயன்படுத்துவது மக்களுக்கு செய்யும் துரோகம் என்று கார்ல் மார்க்ஸ் கூறுகிறார்.
அம்பேத்கரை விமர்சிப்பதும், மார்க்சியத்தை வலியுறுத்துவதம் தவறான உள்நோக்கம் கொண்டது (அதுவும் இன்னார் இந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதால் என்னும் வாதம்!) என்னும் ‘போராளிகள்’ உண்மையிலேயே மக்களின் நலன்களுக்காகத் தான் பேசுகிறார்கள் என்றால் திறந்த மனதுடன் மார்க்சியத்தை கற்றுக்கொள்ளலாமே? எது அவர்களைத் தடுக்கிறது? வர்க்கத்திற்கு அப்பாற்டட்து சாதி என்பதே அம்பேத்கரிய / தலித்தியமாக முன்வைக்கப்படுகிறது? இதற்கு ஒத்து ஊதவேண்டுமா? அல்லது அது தவறு என்று விளக்குவது பிரிவினைவாதமா? அறிவுக்கு இங்கு இடமுண்டா இல்லையா?
அம்பேத்கரை முன் வைத்து பரப்பப்படும் தலித்தியத்தை, பௌத்தத்தை சரியாகப் புரிந்துகொள்வது என்பதோ அல்லது அவரின் (அதன்) வரையறைகளை அடையாளம் காண்பது என்பதோ அவரை மறுத்தலிக்கும் எண்ணம் கொண்டதல்ல மாறாக அவரை முன்வைத்து இங்கு மக்களை ஏமாற்றும் சில தலித்திய பிழைப்புவாதிகளை அடையாளம் கண்டுகொள்வது என்பதாகும்.
மார்க்சிய தத்துவார்த்த விமர்சன அடிப்படியிலான உரையாடல் என்னவென்று தெரிந்துகொள்ள சந்திப்போம் ஜனவரி 2 அன்று. இக்சா மையம் மாலை 6 மணி. 

Dec 28, 2018

அம்பேத்கரும் அவரது தம்மமும்



“அம்பேத்கரும் அவரது தம்மமும்” – மார்க்சியக் கண்ணோட்டத்தில் வசுமித்ர எழுதியுள்ள திறனாய்வு நூல்.

சமூகத்தின் எந்த ஒரு பிரச்சினையையும் சரியாக புரிந்துகொள்ள அடிப்படையில் நமக்கு பொருள்முதல்வாத கண்ணோட்டம் தேவைப்படுகிறது. ஏனென்றால் இதுவே மனித மனம், குணம், கருத்து ஆகிய தனிமனித பண்புகள் மற்றும் அது ஏதோ தனியிருப்பைக் கொண்டதாக நம்முள் ஏற்றிவைக்கும் மதங்கள் (மற்றும் அரசு, ஆளும் வர்க்க சிந்தனைகள், பண்பாடு.. இதர) குறித்த சரியான, விஞ்ஞானபூர்வமான புரிதலை வழங்கும். கார்ல் மார்க்ஸ் (எங்கல்ஸ் மற்றும் ஜென்னியின் துணையோடு) பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை வரலாற்றியல் பொருள்முதல்வாதமாக, இயங்கியல் பொருள்முதல்வாதமாக வளர்த்து எடுத்து மார்க்சியமென்னும் பெருங்கொடையை சமூகத்திற்கு வழங்கினார்.

வியாக்கியானம் மட்டும் செய்துகொண்டிருக்காமல் தலைகீழ் மாற்றத்தை கொண்டுவருவதற்கான அரசியல்பொருளாதாரத்தையும், விஞ்ஞானபூர்வ சோசலிச திட்டத்தையும் மார்க்ஸ் வழங்கினார். இந்த சிந்தாந்தத்தை உள்வாங்கி நூற்றாண்டு காலங்களாக மார்க்சியர்கள், மார்க்சிய ஆய்வாளர்கள் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் சமூக பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் பேசியதோடு, நடைமுறைக்கான வேலைதிட்டங்களையும் முன்வைத்துள்ளனர். உலகெங்கிலும் புரட்சிகர மாற்றங்களை நிகழ்த்தியும் காட்டியுள்ளனர்.

மார்க்சியமானது உலகப் பெரும்பான்மையான தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சினைகளை ஆய்வு செய்யவும் தீர்க்கவும் வழிகாட்டுவதால் இது சர்வதேசிய பொருத்தப்பாடு கொண்டதாக இருக்கிறது. மானுட விடுதலைக்கான ஒளிவிளக்கு மார்க்சியம்! அதன் மையமும், சாரமும் பாட்டாளி வர்க்கப் புரட்சி! பொதுவுடைமை சமூகத்தை நிர்மாணித்து சமத்துவத்தை நிலைநாட்டுதல் என்பதாகும். அனைத்துவகையான படிநிலை அமைப்புகள், ஏற்றத்தாழ்வுகளை களைய இதைவிட சிறந்ததொரு சித்தாந்தம் இதுவரை நிறுவப்படவில்லை.

உலகளவிலும், இந்திய சூழலும் அதை பொருத்தியும், நடைமுறைபடுத்தியும் பெரும் தியாகங்களைச் செய்தும், இன்னுயிர் ஈந்தும் கம்யூனிஸ்ட்கள் (என்று சொல்லும் போது அனைத்து நாட்டு மத, இன, சாதி, பாலின மக்களும் ஆவர்) வளர்த்தெடுத்த பாட்டாளி வர்க்க அரசியலை முறியடிக்க இன்று பல்வேறு சக்திகளும், அமைப்புகளும், பூர்ஷுவா அறிவுஜீவிகளும், ஏகாதிபத்திய தரகர்களும், மதவாத சக்திகளும் (அறிந்தும், அறியாமலும்) முயன்று வருகின்றனர்.

அவற்றுள் பின்நவீனத்துவம், தலித்தியம் என்னும் சித்தாந்தமற்ற ஒரு கண்ணோட்டத்தை சாமர்த்தியமாக இங்கு பரப்பிவிட்டிருக்கின்றனர். மார்க்சியத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த பாட்டாளி வர்க்க அரசியல் அழித்தொழிப்பு சதிகளுக்கு பெரும்பாலும் அறியாமையின் காரணமாக தலித்துகள் பலியாக்கபப்டுகின்றனர்.

பிறப்பின் அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையைக் கொண்ட சாதி என்னும் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு அரசியல் ஒருங்கிணைப்பை குறிப்பிட்ட சாதியினரை முதன்மையாக ஒருங்கிணைப்பதாக முன்வைத்து செயல்படும் இந்த அரசியலானது அம்பேத்கர் என்னும் தலைவரை முன்வைத்து உணர்ச்சிகரமான அரசியலாக வளர்த்தெடுக்கப்பட்டுவிட்டது. (விவரங்களுக்கு சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் நூலைக் காணவும்).

சாதி என்பதை தனித்த ஒரு மனநிலை பிரச்சினையாக காண்பதும், பண்பாட்டு பிரச்சினை என்பதை தனித்த ஒன்றாக காண்பதும், இந்து மதத்திலிருந்து வெளியேறி பௌத்தத்திற்கு மாறுவதாலும், சட்டவாத கோரிக்கைகளை முன்வைத்தும் சாதியை ஒழித்துவிட முடியும் என்பதாக இந்த ‘இயமற்ற ஒரு இயம்’ முன்வைக்கப்படுகிறது! இதில் துளியும் பொருள்முதல்வாத கண்ணோட்டம் என்பது இருப்பதில்லை.

இந்த பின்னணியில் தான் அம்பேத்கரையும், பௌத்தத்தையும் எப்படி புரிந்துகொள்வது என்று பல மார்க்சிய ஆய்வாளர்கள் நூல்களை எழுதிவந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக நானும் இரண்டு நூல்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தினேன். ஆனால் முதல் நூலின் பெயரை மட்டுமே படித்துவிட்டு இங்கு ஆதிக்கசாதிகளின் வெறிக்கு நிகராக நடந்த இணைய தாக்குதல்கள் அராஜகத்தின் உச்சம். கருத்து சுதந்திரம் பேசும் அத்தகைய பெருந்தகைகள் தாங்கள் அப்படி ஒன்றை வாய்ப்பேச்சாக மட்டுமே பேசுபவர்கள் என்பதை மெய்ப்பித்தனர்.

முன்னெப்போதையும் விட இப்போது வீரியமாக பண்பாட்டு புரட்சி, நீலப் புரட்சி, தலித்திய பண்பாட்டு மையங்கள், தலித்திய அறிவுஜீவிகள் மன்றம், தலித்திய பௌத்த மாநாடுகள் என்று பல்வேறு நிறுவனங்கள் மூலம் தீவிர தலித்திய அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. காலம் காலமாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் இத்தகைய எழுச்சி வரவேற்கத்தக்கதே. அதேவேளை அதன் போக்கில் குறை நிறைகளை பேசுவதென்பது தலித்துகளுக்கான விடுதலை அரசியலுக்கும் அவசியமானதே. ஏனென்றால் தாழ்த்தப்பட்ட சாதியின் பெரும்பான்மை என்பது உழைக்கும் வர்க்கமாகும். வர்க்க அரசியலை (தந்திரமாக) புறக்கணிக்கும் போக்கு ஒரு சில தலித்திய அமைப்புகளிடமும், தலித்தியவாதிகளிடம் காணப்படுவதால் இது அவசியமாகிறது.

அத்தகையதொரு திறனாய்வை மேற்கொள்வதென்பது தலித்தியம் என்னும் பெயரில் முன்வைக்கப்படும் அம்பேத்கரியம் – அதன் தலைவர் அம்பேத்கர் மற்றும் அவரின் பெயரால் பரப்பப்படும் புத்த தம்மம் (நவயான பௌத்தம்) ஆகியவற்றை ஆய்வு செய்வது என்பதாகும். வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் இவற்றை நாம் அனுக வேண்டியுள்ளது. 

இப்படித்தான் வசுமித்ர எழுதியிருக்கும் இந்நூலுக்கான தேவையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ரங்கநாயகம்மாவின் நூலை மொழிபெயர்த்ததிலிருந்து இங்கு நிகழ்ந்த அடையாள அரசியல் வெறியாட்ட தாக்குதல்களால் நானும் வசுமித்ரவும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தோம். தனித்து விடப்பட்டவர்களாகவும் மனச்சோர்வு கொண்டோம். அதேவேளை எங்களின் இந்த பங்களிப்பை சமூக மாற்றத்திற்கான தேவையாக புரிந்துகொண்ட தோழர்களின் ஆதரவும் ஆங்காங்கே கிடைத்தும் வந்தது.
முகநூலில் ஆபாசமான வசைகளை ஏவிவிட்டனர். ரவுடிகள் போல் ஒரு கூட்டம் செயல்பட்டது. வசுமித்ரவுக்கு தொலைபேசி மிரட்டலும் வந்தது. பதில் அளித்துக்கொண்டே இருந்தோம். இரண்டாவது ஒரு நூலையும் நான் கொண்டு வந்தேன். இரண்டாவது நூல் பற்றி மூச்சில்லை, பேச்சில்லை!

இந்த வன்ம வெறுப்பரசியல் போக்கு வசுமித்ரவை உறுத்திக்கொண்டே இருந்தது. அவ்வப்போது அவன் சிறு பதிவுகள், கட்டுரைகள் என்று அடையாள அரசியல் குறித்து எழுதி வந்தான். ஒரு கட்டத்தில் இந்த சமூக ஊடகங்களில் எழுதுவது பயனற்றது என்ற உணர்வு ஏற்பட தான் ஒரு முழுமையான ஆய்வு நூலை எழுதப் போவதாக முடிவு செய்தான். முகநூலை விட்டு வெளியேறினான். ஆய்வைத் தொடங்கினான்.

இதற்கிடையில் எங்கள் வாழ்நிலைமைகளில் அடுத்தடுத்து சரிவு ஏற்பட இருவரும் கடும் மன உளச்சலுக்கு உள்ளானோம். அருகருகில் இருந்துகொண்டு இதை கையாள முடியாது என்று முடிவெடுத்து ஒரு இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டோம். (வசு தன் முன்னுரையில் இதனை தனிமைத் துயரின் நடுவில் இந்நூலை எழுதினேன் என்று பதிவு செய்திருக்கிறான். அதையும் கூட நான் 4,5 நாட்களுக்கு முன்பு தான் படிக்க நேர்ந்தது!).

ஆளுக்கொரு திசையில் பயணிக்க தொடங்கினோம். தொடர்பற்று! (பொருளாதார நிலைமையிலிருந்தும்) முழுவதும் முடங்கிப் போன வசு என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பது கூட தெரியாத ஒரு இயந்திரமாக நானும் நடமாடிக் கொண்டிருந்தேன். ஏறத்தாழ 8 மாதங்கள்.

“அண்ணி அண்ணன் அம்பேத்கர் புக்கை முடிச்சுட்டார் அண்ணி” என்று ஒருவர் ஒரு நாள் சொன்னபோது அதிர்ச்சியடைந்தேன் என்பதே உண்மை. அதிலும் அது 920 பக்கங்கள், இருநூற்றுக்கும் அதிகமான ஆதார நூல் பட்டியலை கொண்டிருக்கிறது என்கிற செய்திகள் எல்லாம் எனக்கு உண்மையில் அச்சத்தையே ஏற்படுத்தியது (ஏனென்றால் அவ்வளவு கல் எறிதலை பெற்றிருக்கிறேன் அல்லவா).

அசுரவதம் நிகழ்வின்போது சந்தித்துக் கொண்டோம். அதோடு மீண்டும் தண்டவாளம் விரிசலடைந்தது. தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக நான் வண்டியிலிருந்து விழுந்த விபத்தே மீண்டும் எங்களுக்குள் உரையாடலை ஏற்படுத்தியது. நூலை முடித்துவிட்டேன் என்றான். கண்ணீர் மட்டுமே பதிலாக அமைந்தது!

அதன் பிறகு இந்நூலுக்கான உழைப்பைப் பற்றியும் அவன் விவாதித்த கம்யூனிஸ்ட் தோழர்கள் பற்றியெல்லாம் அறிந்துகொண்டேன். சமீபத்தில் தோழர் சந்தானத்தையும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நூலின் தேவையை பற்றி அவர் பேசியது, மனநிறைவை தந்தது.   தோழர் தி.சு நடராஜன் முன்னுரை எல்லாவற்றையும் தெளிவுபடுத்தியது. தோழர் பாலசந்திரனின் அவர் எங்கள் நலம்விரும்பி மட்டுமல்ல, மார்க்சிய நலம்விரும்பியும் கூட. இவர்களின் இணைவில் இந்த நூல் வெளியீட்டிற்கும் தயாராகிவிட்டது.


மாதிரி நூல் கைக்கு வந்ததும் நான் ஒரு பிரதியை பெற்றேன். வசுமித்ரவின் முன்னுரையை வாசித்துக் கொண்டிருக்கிறேன். வசுவிற்குள் இப்படி ஒரு பக்குவமான அறிவுஜீவி ஒளிந்திருப்பதை கண்டு நம்பிக்கையோடு இருக்கிறேன்.

20 வருட பரந்துபட்ட வாசிப்பு – இந்திய தத்துவங்கள், இலக்கியம், கவிதை, மார்க்சிய நூல்களின் வாசிப்பனுபவம்.  தற்போது அம்பேத்கரின் தொகுப்பு நூல்களையும், பௌத்த நூல்களையும் கூர்மையாக, உன்னிப்பான அவதானிப்பகளோடு ஆய்வு செய்திருக்கிறான். (கொஞ்சம் பொறாமையாகவும் உள்ளது!)

ஒரு ஆய்வை முன்வைக்கையில் அது சமூகத்தை நோக்கிய உரையாடல். அது அறிவார்ந்த உரிமையும் கூட. அதற்கு வரக்கூடிய எதிர்வினைகள் அறிவார்ந்த வகையில் இருக்க வேண்டுமேயன்றி சிறுபிள்ளைத்தனமான அவதூறுகளாக சாதி வெறி பேச்சுகளாக இருப்பது அவரவரின் பிழைப்புவாத பேச்சாக மட்டுமே இருக்க முடியும்.


குறளி பதிப்பக வெளியீடாக ஜனவரி 2ஆம் தேதி இக்சா மையத்தில் மாலை 6 மணிக்கு நூல் வெளியீடு. தோழர்கள் அனைவரும் வந்து உரையாடல் என்னவென்று தெரிந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன் ❤️

https://www.facebook.com/events/370290703780781/?notif_t=plan_user_associated&notif_id=1545963866956410 

Dec 22, 2018

தடை செய்யப்பட்ட புத்தகம் கவிதை நூல்


பதிவு 1:

இவனிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! 
இதயமில்லாதவர்கள் இவனிடம் மிக மி்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
காணாமல் போன உங்களின் இதயம்
இவனது கவிதைகளால்
பிசுபிசுக்கும் ஈரத்தோடு உங்கள் முன் 
தலை குனிந்து நிற்பதை உங்களால் தடுக்கவே இயலாது!
இவனிடம் நான் அஞ்சி ஓடக் காரணமும் அதுவே!

சொல்வாளால் வசு நிகழ்த்தும் அறுவை சிகிச்சை வலி மிகுந்ததே.... ஆனால் நோய் குணமாகும்!
புதுப்பிறப்பெடுக்கும் மனிதர்களிடத்தில் கைமாறும் அந்த வாளின் முதல் பலி அவனாகத்தான் இருப்பான்!

அதுவே அவனது இடதான வெற்றி!

காத்திருக்கிறேன் காத்திரமான இந்த கவிதை நூலுக்காக 😍

தடை செய்யப்பட்டப் புத்தகம் - வசுமித்ரவின் நான்காவது கவிதை நூல்! சிந்தன் வெளியீடாக வரப்போகிறது. மட்டற்ற மகிழ்ச்சி. Chinthan Books - சிந்தன் புக்ஸ்
வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில்!
அட்டை ஓவிய வடிவமைப்பு என்றென்றும் எங்கள் அன்பிற்குரிய ஓவியர் மணிவண்ணன்.
நூல் வடிவமைப்பு அன்பிற்குரிய ஜீவமணி

- கொற்றவை

பதிவு 2:
#வசுமித்ர வின் நான்காவது கவிதை நூல் “தடை செய்யப்பட்ட புத்தகம்” புத்தகத் திருவிழாவை ஒட்டி வெளியீடு..
முன்னுரை: தோழர் அ.சி. விஜிதரன் ❤️ பொதுவுடைமை அரசியல் இணைத்த காதல் ஜோடிகள் இவர்கள் 
“மௌனம் என்பது சாவுக்குச் சமம்.
எதுவும் பேசாவிட்டாலும் சாகப்போகிறீர்கள்;
பேசினாலும் சாகத்தான் போகிறீர்கள்.
எனவே பேசிவிட்டுச் செத்துப் போங்கள்.”
- தஹார் ஜாவூட் டின் வரிகள் விதைக்க விரும்பும் கலை உணர்வும் பொறுப்புமே வசுவின் கவிதைகள்!
அதனால் “மொழியை கடவுளெனத் துதிக்காமல், நாயைப் போல் ஏவிவிடவேண்டும்.
அவ்வளவே.” என்கிறான் வசுமித்ர
மிகல் காந்தள் முன்னுரையிலிருந்து சில வரிகள்:
கவிஞன் அதிகாரத்துக்கு எதிரி….
ஒற்றை வரி, அறுக்கப்படும் ஆடுகள் பக்கம் நின்று, குரல்கள் வெட்டப்பட்டு குருதி தெறித்து விழும் கொலைக்களத்தின் நின்று பலிவாங்கப்படும் பரமாத்மாக்களை உடைத்தெறிய ஆடுகளை முன் செல்லச் சொல்லும் வேலைதான் தனது என உறுமுகிறது.
பாடுகளை பாடுவது பாடல் அல்ல, முட்டிகளில் நின்று பாடுகளைக் காட்டிப் பரலோகம் கெஞ்சுவோரை, பிதாக்கள் முன் எழுந்து நின்று பீடத்தையே உடைத்தெறிய வார்த்தைகளை ஏவி விட வேண்டும். அதுதான் பாட்டு.
அரசியலற்ற கலை ஒரு முழுப்பொய். இப்படிப் பல பொய்களைக் குப்பையாய், உற்பத்தியாக்கிய பல இலக்கிய பிதாக்கள் இருக்கின்றனர். ஆனால் கலை என்பது அதிகாரத்தை உடைக்க கை ஓங்கும் போது ஏந்தும் சுத்தியலாக இருக்க வேண்டும். அதுவே கலை. அவ்வளவே எனது புரிதல்.
ஓங்கும் சுத்தியல்தான் இந்தப் புத்தகம்.
கவிதைகளைப் பற்றி நான் ஒன்றும் சொல்லத் தேவையில்லை. உற்பத்தியான வார்த்தைகள் அனைத்தும், மூலமான அனைத்திற்கும் முன் நிறுத்தப்பட்ட துப்பாக்கிகள். விசையை அழுத்துவோர்க்கு அதன் வேகம் புரியும். அதன் தாக்கம் தெரியும். செவிப்பறைகள் அதிர, பெரும் ஒலிகளும் கேட்கும். கவனம்!
- கொற்றவை

Dec 14, 2018

இராமாயணம் – மார்க்சியப் பெண்ணிய மறுகதையாடல்




ரங்கநாயகம்மாவின் இராமாயணம்: ஒரு விஷ விருட்சம் என்னும் நூல் இராம இராஜ்ஜியத்தை சாதியவாத, நிலவுடைமை முறையிலான ஆணாதிக்க சமூகம் என்றுரைக்கிறது.

இந்நூலை படித்த பின்னர் அல்லது ஒரு சில வரிகளைப் படித்ததுமே கூட ஒழுக்கவாதிகள் இதை கொளுத்திவிட துடிப்பார்கள். அவர்களால் காகிதங்களை ரிக்க முடியுமே ஒழிய சிந்தனைகளையல்ல…”

என்கிறார் மார்க்சிய எழுத்தாளரான ரங்கநாயகம்மா. இராமாயணம்: ஒரு விஷ விருட்சம் என்னும் தன்னுடைய நூல் குறித்துதான் இவ்வாறு கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை மார்க்சிய கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்துள்ளார். ஆனால் இராமாயணத்திற்கும் கார்ல் மார்க்ஸின் மார்க்சியத்திற்கும் என்ன தொடர்பு? இந்நூலைப் படிக்கும்ஒழுக்கவாதிகள்ஏன் இதை ரிக்குமளவுக்கு சினம் கொள்வார்கள்? ரங்கநாயகம்மா இந்நூலில் அந்தளவுக்கு இராம இராஜ்ஜியத்தை கூறு போட்டிருக்கிறார்.

பொதுவான கருத்தின்படி, இராம இராஜ்ஜியம் என்பது ஒழுக்கத்தின் உச்சம், அதுவே நல்லாட்சிக்கான அளவுகோல். ஆகவே நாம் மீண்டும் அந்த உன்னத காலத்திற்கே செல்ல வேண்டும். காந்தியும் கூட இந்த எண்ணத்தைக் கொண்டிருந்தார்:

“… கடந்த கால இராம இராஜ்ஜியம் என்பது சந்தேகத்திற்கிடமின்றி ஓர் உண்மையான ஜனநாயக ஆட்சி. சராசரி மனிதனுக்குக் கூட தாமதமின்றி, பொருள் செலவின்றி துரிதமாக நீதி கிடைத்துவிடும்.”

ஆனால் ரங்கநாயகம்மாவிற்கோ இராம இராஜ்ஜியமானது நாம் அடைய விரும்பும் மேன்மையான ஒழுக்கத்தை கொண்டிருக்கவில்லை. பணக்கார வர்க்கத்தின் நலன்களுக்காக ஆட்சி புரிந்தகொடுங்கோல்ர்களானதசரதன், இராமன், இராவணன் போன்ற மன்னர்களின் ஆட்சியானது ஏற்றதாழ்வுகள் நிறைந்த ஆபத்தான ஆட்சி என்று எழுதுகிறார் ரங்கநாயகம்மா.
மார்க்ஸைப் பொறுத்தவரை, வர்க்கம் என்பது உற்பத்திச் சாதனங்களை உடைமையாக கொண்டிருக்கும் முதலாளிகள் கூட்டமும், அந்த சொத்துடைமை வர்க்கத்திற்காக உழைத்து உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் உழைப்பாளர்கள் என்னும் இரண்டு முரண்பட்ட பிரிவினர் மற்றும் அவர்களுக்கிடையிலான பாகுபாடுகளாகும். இதன் அடிப்படையில் ரங்கநாயகம்மாவைப் பொறுத்தவரை இராம இராஜ்ஜியம் என்பது நிலபுலன்கள், மாட மாளிகைகள், தோட்டங்கள், குதிரைகள், மாடுகள், ஆநிரைப் பண்ணைகள், தங்கம், வெள்ளி மற்றும் இதர பொக்கிஷங்களையெல்லாம் அளப்பரியதாகக் கொண்டிருந்த செல்வந்தர் வர்க்கத்தினை ஆதிக்க சமூகமாகக் கொண்டிருந்த சமூகத்தின் இராஜ்ஜியமாகும். நாட்டை ஆண்ட மன்னனுக்கு உகந்த வகையில் சமூகத்தைப் பராமரிக்க உழைப்பது தான் உழைக்கும் வர்க்கத்தின் கடமை. அத்தகைய சமூகத்தில் ஏழ்மை, அடிமைத்தனம், விபச்சாரம், நிலப்பிரபுத்துவம், ஏழை விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டிப் பிழைத்தல் என்னும் வர்க்க அமைப்போடு சாதிய ஒழுங்குமுறையும் நிலவியது. அதோடு பெண்களுக்கு எந்தவித சுதந்திரமும் இல்லை. பல்வேறு தடுப்பரண் அமைப்புகளின் வாயிலாக பெண்கள் முற்றிலுமாக வீடிற்குள்ளேயே முடக்கப்பட்டார்கள்.

இராம இராஜ்ஜிய பண்பாடென்பது ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட வேண்டிய பண்பாடாகும். அதனால் தான் இராமாயணத்தை தங்கள் மதக் கொள்கையாக தழுவிக்கொண்டவர்களுக்கு அதன் மீதான விமரசன நூல் என்பது ரிக்குமளவுக்கு சினமூட்டக்கூடியது.

இராமாயணம்: ஒரு விஷ விருட்சம் 1994 இல் முதல் முதலில் பதிப்பிக்கப்பட்டது. 1975, 1976 இல் இரண்டு தொகுதிகள் தொடர்ச்சியாக கொண்டுவரப்பட்டன. பின்னர் ஆந்திராவில் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணிபுரியும் பி.ஆர். பாபுஜி, ஆர். வெங்கடேஸ்வர ராவ், ஆரி சீதாராமய்யா மற்றும் சி. பத்மஜா ஆகிய நால்வரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

வால்மீகி இராமாயணத்தின் சமஸ்கிரத மூல காலவரிசைப்படியே இந்நூலும் எழுதப்பட்டுள்ளது. மூலத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் மற்றும் உத்ர காண்டம் என ஏழு காண்டங்கள் உள்ளன. ஒவ்வொரு காண்டமும் கடவுளென மன்னன் இராமனின் வாழ்வை வெவ்வேறு காலகட்டங்களாக விளக்குகின்றன. ‘இராமாயணம்: ஒரு விஷ விருட்சம்நூல் 700 பக்கங்களைக் கொண்ட நூலாகும். 16 நீண்ட கதைகள் மற்றும் ஒவ்வொரு துணைக் கதைக்கும் மற்றொன்றிற்கும் தொடர்புடைய பதினொருஇணைக்கதைகளையும், விமர்சனத்திற்கு ஆதாரமாக மூல சர்க்கத்தை அல்லது யாப்புகளை ஆதாரமாகக் கொண்ட 600 அடிக்குறிப்புகளையும் கொண்டதாகும்.

சொத்துடைமை வர்க்கத்தின் செல்வக் குவிப்பு (உழைக்கும் வர்க்கத்தின் அடிபணிதல் அந்த சொத்துகளில் இருந்து செல்வத்தை தோற்றுவித்தாலும்) பற்றியதே மார்க்சிய சிந்தனை. ஒட்டுமொத்த நூலிலும், விரிவான அடிக்குறிப்புகள் மற்றும் ஆதாரங்கள் வழி நடக்கும் உரையாடல்கள் மற்றும் தரவுகளை கவனமாக முன்வைத்து அக்காலத்தில் நிலவிய பண்பாட்டை ஆய்வு செய்கிறார் ரங்கநாயகம்மா. உதாரணமாக, இராமனின் பட்டாபிஷேகம் குறித்து தசரத மன்னன் குழம்பியிருந்த தருவாயில் அவரை சந்திக்க வந்த வசிஷ்ட முனிவர் கேட்கிறார்:

எல்லாம் நலம்தானே? ஏதேனும் புதிய தேசங்களைக் கைப்பற்றினாயா? உன்னுடைய எதிரிகளையெல்லாம் வென்றுவிட்டாயா? […] உன் குத்தகைதாரர்கள் அனைவரும் உனக்கு அடிபணிந்து நடக்கின்றனரா? – பால காண்டம், சர்க்கம் 19, ஸ்லோகம் 45”
இராம இராஜ்ஜியத்தில் (ஒவ்வொரு காலகட்டத்திலும்மொ.ர்) வர்க்க ஒழுங்குமுறையை கண்டிப்பான முறையில் கட்டிக்காக்கும் மத மற்றும் அரசியல் பிணைப்பும் நிலவியது. சாதியக் கலப்பைத் தடுப்பதும், அடிமையுடைமையை ஊக்குவிப்பதும், பெண்களைஅந்தப்புரத்தில்வைத்துக் காக்கும் சட்டங்களை இயற்றுவதும், நாத்திகர்களை துன்புறுத்துவதும், அரச வழிபாடு என்னும் அளவுக்கு மன்னர்களை துதிபாடுதலுமாக அந்த ஒழுங்குமுறை கட்டிக்காக்கப்பட்டது.

மன்னர்களுக்கான கடமை மதங்களால் வரையறுக்கப்பட்டு, வர்க்கப் படிநிலையில் அவர்கள் உச்சத்தில் வைக்கப்பட்டார்கள். இராமனின் விசயத்தில், அவனை கடவுளாக்கி வழிபட்டனர். தசரதனுக்கு இந்த மகத்துவம் கிடைக்கவில்லை. அயோத்தியக் காண்டத்தில் வால்மீகி எழுதுகிறார்:

மன்னன் இல்லாத ஒரு நாட்டில் மேகங்கள் சூழ்வதில்லை. மழை பெய்வதில்லை. பயிர்கள் வளர்வதில்லை. வணிகம் நடைபெறுவதில்லை. பயணங்கள் நடப்பதில்லை. மனைவிகளும், பிள்ளைகளும் கட்டுப்படுவதில்லை. அரச தண்டனையில்லையென்றால் நாத்திகர்கள் கலகம் செய்வார்கள். பிராமணர்கள் சடங்கு சம்பிராதாயங்களை மீறுவார்கள். மன்னன் இல்லையெனில் அராஜகம் (anarchy) பெருகிவிடும்அயோத்திய காண்டம், சர்க்கம் 66, ஸ்லோகம் 47”

இராமன் காட்டிற்கு நாடு கடத்தப்பட்ட போது பரதன் அவர்களை சந்திக்க சித்திரக் கூடம் செல்கிறான். இராஜ்ஜியம் குறித்து சகோதரர்கள் அளவலாவுகின்றனர். மக்கள் நலன் குறித்து இராமன் ஏதும் கேட்கவில்லை. அதைவிடுத்து வணிகர்களின் நலன் குறித்து விசாரிக்கிறான். “ஓர் அரசனானவன் அனைவரையும் காக்க வேண்டும், குறிப்பாக வணிகர்களை.” (அயோத்தியா காண்டம் சர்க்கம் 100, ஸ்லோகம் 47&48) [1]. அதுமட்டுமா,  உழைக்கும் வர்க்கத்திற்கு அதிக ஓய்வு (நாட்கள்) கொடுத்துவிடாதே பரதா, அவர்கள் இன்பத்தில் மூழ்கிவிட்டால் வேலைகள் பாதிக்கப்படும்என்றான் (அயோத்தியா காண்டம், சர்க்கம் 100, ஸ்லோகம் 54) [2].

இவ்வாறாக இராம இராஜ்ஜியம் என்பது நிலவுடைமை முறையில், நிலப்பிரபுக்களால் நிர்வகிக்கப்பட்ட இராஜாங்கமாகும். ஏழை விவசாயிகள் தங்கள் விளைச்சலின் பெரும்பகுதியை மன்னர்களுக்கும், அவர்களின் படைகளுக்கும் கொடுத்தே வாழ வேண்டிய நிலைமை. வர்க்க அமைப்பும், சாதியமைப்பும் பிணைந்த ஒரு சமூகப் படிநிலையானது ஏழைகளை வாட்டியது. மதமானது சாதியக் கலப்பை தடுத்தது, மன்னர்கள் அதை நிலைத்திருக்கச் செய்தனர்.

பிராமணர்களை, பிராமணிய வாழ்க்கை முறையை உயரிய பீடத்தில் வைத்துப் போற்றுவதும் மன்னனின் கடமையாக வகுக்கப்பட்டது. ஒரு நாள் தசரதன் வேட்டைக்குச் சென்றபோது, அஜாக்கிரதையான அவனுடைய அம்பெய்தலால் ஒரு முனிவரின் மகனான கரனனை தாக்கிக் கொன்றான். கொல்லப்பட்ட மகனே அரசனுக்கு எப்படி ஆறுதல் சொல்கிறான் என்று எழுதுகிறார் ரங்கநாயகம்மா: “கவலைப்படாதீர்கள் மன்னா ஒரு பிராமணனைக் கொன்ற பாவம் உங்களைச் சாராது, ஏனென்றால் நான் ஒரு சூத்திரப் பெண்ணிற்கும், வைசிய ஆணிற்கும் பிறந்தவன் தான்

சாதியமைப்பானது அன்றாட வாழ்வில் மிகவும் வலிமையுடன் தாக்கம் செலுத்தியது. அது, மேல்நிலையில் உள்ள சாதிகளின் பண்புகளும், மதிப்பீடுகளுமே சிறந்தது என்று கீழ்நிலையில் தள்ளப்பட்ட சாதிகள் நினைக்குமளவுக்கு உட்செறிக்கப்பட்டது. மதத்தைக் கட்டிக்காக்கும் பிராமணர்கள், முனிவர்கள், பூசாரிகள் ஆகியோர் மன்னர்களுடன் கூடிக் குலாவினர். பதிலுக்கு மன்னர்கள் பிராமணர்களுக்கும், வணிகர்களுக்கும் பாதுகாவலர்களாக இருந்தார்கள். போர் மற்றும் இராணுவக் கட்டாய சேவைகளின் மூலமாக சத்ரிய உணர்வைக் கட்டிக்காதார்கள். தாழ்த்தப்பட்ட சூத்திரர்கள் மேல்நிலைக்கு முன்னேற முடியாத வகையில் தடுக்கப்பட்டனர். தலைமுறை தலைமுறைகளாக அவர்கள் சொத்தோ செல்வமோ இல்லாத வர்க்கங்களாக நிலைத்திருந்தனர்.

இராமன் தான தர்மங்களைச் செய்தான் என்பது உண்மையே, இருப்பினும், அதிலும் பிராமணர்களுக்கே முன்னுரிமை (அயோத்திய காண்டம், சர்க்கம் 32, ஸ்லோகம் 45) [1] ஏனென்றால் அது புண்ணியம், அது தெய்வீகப் பலன்களைத் தரக்கூடியது என்று வேதங்களில் எழுதப்பட்டுள்ளது. நிலவுடைமை சமூகங்களும், முதலாளித்துவ சமூகங்களும் தான தர்மத்தை ஒரு புண்ணிய செயலாக கருதுகின்றன. ஒரு சமத்துவமான சமூகத்தில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக யாரும் யாருடைய தயையையும் கொடையையும் எதிர்பார்த்து வாழ வேண்டிய நிலை இருக்காது; மாறாக உரிமைகளின் அடிப்படையிலான ஏற்பாடுகளே நிலவும்.

ஆர்வமூட்டும் வகையில் அடுத்துவந்த காலங்களில் இராமாயணக் கதை பெண்கள் பலராலும் மறுகதையாடல் செய்யப்பட்டுள்ளது. சந்த்ரபதி இராமாயணமானது சீதையின் கண்ணோட்டத்தில் அவளுக்கு நிகழ்ந்த அநீதிகளைப் பேசுகிறது. அதில் இராமன் “ஒரு குழப்பவாதி, பலவீனமானவன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 16ஆம் நூற்றாண்டில், மொல்லா என்னும் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண் ஒருவர் பிராமணக் கவிகளுக்கு சவால் விடும் வகையில் இராமாயணத்தை சமஸ்கிருதத்திலிருந்து செவ்வியல் தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தார். அதன் மூலம் அந்த புராணக் கதைகளின் மீது இருந்து வந்த ஆதிக்க சாதி ஆண் மைய அதிகாரத்தை தகர்த்தார். அதேபோல் சம்ஹித ஆர்னியின் சீதா இராமாயணம் பட்டுவா சுருள் பட ஓவியர் மொய்னா சித்ரகர் என்பவரால் படக்கதையாக சொல்லப்பட்டது. அதில் சீதை தன்னுடைய பிறப்பு முதல் திருமணம் வரை, கடத்தப்பட்டது முதல் திரும்பி வந்தது வரை, அதன் பின்னர் கைவிடப்பட்டு குழந்தைப் பெற்றது வரையிலான கதை ஓவியங்கள் மூலம் சொல்லப்பட்டுள்ளது.

மார்க்சியப் பெண்ணியவாதியான ரங்கநாயகம்மா பிராமணிய ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்துவதோடு, இராமாயணமானது அடிமைகளும், விவசாயிகளும், தாழ்த்தப்பட்ட சாதியினரும், பெண்களும் அடங்கி இருக்கச் செய்ய ஆளும் வர்க்க எஜமானர்கள், செல்வந்தர்கள் மற்றும் ஆதிக்க சாதியினரின் பண்பாட்டினை கட்டிக்காக்கும் வகையில் அதனை பிரச்சாரம் செய்கிறது என்று கூறுகிறார்.

“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்க கருத்தியல்களே ஆளும் கருத்தியல்களாக இருக்கின்றன” என்று மார்க்ஸும் எங்கல்ஸும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் எழுதினார்கள். “சுதந்திரமானவனும், அடிமையும், உயர்குடியும், சாமானியரும், நிலப்பிரபுவும் அடிமையும், பட்டரை முதலாளியும் தொழிலாளியும்” எதிர் எதிராக இருக்கினறனர்; அவர்கள் வர்க்க உணர்வால் பிரிந்து முரண்பட்டு நிற்கினர்னர். மிகப் பெரிய இந்த சமூக ஏற்றத்தாழ்வு இராமாயணத்தில் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இராமாயணத்தை மார்க்சியக் கண்ணோட்டத்தில் மறுகதையாடல் செய்வதானது இங்கு சலசலப்பை ஏற்படுத்தக் கூடியதுதான். ஆனால் அவரது கடுமையான ஆய்வு அத்தகையோருக்குத் தேவையான விடையை அளிக்கவல்லது.

ஆங்கிலத்தில்: லாவண்யா ஷன்போக் அரவிந்த்
தமிழாக்கம்: கொற்றவை