Showing posts with label தமிழ் கவிதை. Show all posts
Showing posts with label தமிழ் கவிதை. Show all posts

Dec 22, 2018

தடை செய்யப்பட்ட புத்தகம் கவிதை நூல்


பதிவு 1:

இவனிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! 
இதயமில்லாதவர்கள் இவனிடம் மிக மி்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
காணாமல் போன உங்களின் இதயம்
இவனது கவிதைகளால்
பிசுபிசுக்கும் ஈரத்தோடு உங்கள் முன் 
தலை குனிந்து நிற்பதை உங்களால் தடுக்கவே இயலாது!
இவனிடம் நான் அஞ்சி ஓடக் காரணமும் அதுவே!

சொல்வாளால் வசு நிகழ்த்தும் அறுவை சிகிச்சை வலி மிகுந்ததே.... ஆனால் நோய் குணமாகும்!
புதுப்பிறப்பெடுக்கும் மனிதர்களிடத்தில் கைமாறும் அந்த வாளின் முதல் பலி அவனாகத்தான் இருப்பான்!

அதுவே அவனது இடதான வெற்றி!

காத்திருக்கிறேன் காத்திரமான இந்த கவிதை நூலுக்காக 😍

தடை செய்யப்பட்டப் புத்தகம் - வசுமித்ரவின் நான்காவது கவிதை நூல்! சிந்தன் வெளியீடாக வரப்போகிறது. மட்டற்ற மகிழ்ச்சி. Chinthan Books - சிந்தன் புக்ஸ்
வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில்!
அட்டை ஓவிய வடிவமைப்பு என்றென்றும் எங்கள் அன்பிற்குரிய ஓவியர் மணிவண்ணன்.
நூல் வடிவமைப்பு அன்பிற்குரிய ஜீவமணி

- கொற்றவை

பதிவு 2:
#வசுமித்ர வின் நான்காவது கவிதை நூல் “தடை செய்யப்பட்ட புத்தகம்” புத்தகத் திருவிழாவை ஒட்டி வெளியீடு..
முன்னுரை: தோழர் அ.சி. விஜிதரன் ❤️ பொதுவுடைமை அரசியல் இணைத்த காதல் ஜோடிகள் இவர்கள் 
“மௌனம் என்பது சாவுக்குச் சமம்.
எதுவும் பேசாவிட்டாலும் சாகப்போகிறீர்கள்;
பேசினாலும் சாகத்தான் போகிறீர்கள்.
எனவே பேசிவிட்டுச் செத்துப் போங்கள்.”
- தஹார் ஜாவூட் டின் வரிகள் விதைக்க விரும்பும் கலை உணர்வும் பொறுப்புமே வசுவின் கவிதைகள்!
அதனால் “மொழியை கடவுளெனத் துதிக்காமல், நாயைப் போல் ஏவிவிடவேண்டும்.
அவ்வளவே.” என்கிறான் வசுமித்ர
மிகல் காந்தள் முன்னுரையிலிருந்து சில வரிகள்:
கவிஞன் அதிகாரத்துக்கு எதிரி….
ஒற்றை வரி, அறுக்கப்படும் ஆடுகள் பக்கம் நின்று, குரல்கள் வெட்டப்பட்டு குருதி தெறித்து விழும் கொலைக்களத்தின் நின்று பலிவாங்கப்படும் பரமாத்மாக்களை உடைத்தெறிய ஆடுகளை முன் செல்லச் சொல்லும் வேலைதான் தனது என உறுமுகிறது.
பாடுகளை பாடுவது பாடல் அல்ல, முட்டிகளில் நின்று பாடுகளைக் காட்டிப் பரலோகம் கெஞ்சுவோரை, பிதாக்கள் முன் எழுந்து நின்று பீடத்தையே உடைத்தெறிய வார்த்தைகளை ஏவி விட வேண்டும். அதுதான் பாட்டு.
அரசியலற்ற கலை ஒரு முழுப்பொய். இப்படிப் பல பொய்களைக் குப்பையாய், உற்பத்தியாக்கிய பல இலக்கிய பிதாக்கள் இருக்கின்றனர். ஆனால் கலை என்பது அதிகாரத்தை உடைக்க கை ஓங்கும் போது ஏந்தும் சுத்தியலாக இருக்க வேண்டும். அதுவே கலை. அவ்வளவே எனது புரிதல்.
ஓங்கும் சுத்தியல்தான் இந்தப் புத்தகம்.
கவிதைகளைப் பற்றி நான் ஒன்றும் சொல்லத் தேவையில்லை. உற்பத்தியான வார்த்தைகள் அனைத்தும், மூலமான அனைத்திற்கும் முன் நிறுத்தப்பட்ட துப்பாக்கிகள். விசையை அழுத்துவோர்க்கு அதன் வேகம் புரியும். அதன் தாக்கம் தெரியும். செவிப்பறைகள் அதிர, பெரும் ஒலிகளும் கேட்கும். கவனம்!
- கொற்றவை

Mar 31, 2012

நிமிர்ந்து ஒரு முத்தம் தருகிறாள்


உங்கள் அதிகார மொழி உங்களை கைவிடும்போது
அவளை
குழந்தையாக மாற்றுங்கள்
குழைந்து விட்டதாக அறிவித்துக்கொள்ளுங்கள்


விலங்குகளினும் சிறந்த முகரும் தன்மையுடன்
இரத்த வாடையை மோப்பமிட்டு
தயார் நிலையை களி கொண்டு
முரசு கொட்டுகிறது ஊர்


பட்டாம்பூச்சியுடன் சிறகை விரித்து அவள் பறக்கையிலே
வயதின் சுருக்கங்களை முன் வைத்து
பாதுகாப்பு வளையத்திற்குள்
நிறுத்தப்படுகிறாள்

ஒவ்வொரு இரவின் முடிவிலும்
தசைகள் நெகிழும் முன்பே
உடலெங்கும் 
ஒற்றைப் பாதையில் பயணித்து வரும்
கம்பளிப் பூச்சிகள்

அது கடந்து
மண்ணை நுகர்ந்து நடக்கையில்
பார்வைகளால் அங்ககளை அளவிட்டு
கூற முடியா வார்த்தைகளின் முடிவில்....

மற்றொருநாள்
அலுவலக அறை
சுழலும் நாற்காலி
கோப்புகள் எடுக்கும் ஆணை
குனிகிறாள்
பெண்
புட்டம் தடவிய கைகள்
பச்சைக் காகிதத்தில் சுற்றுகிறது
ஆண்மையை

எல்லா முனைப்புகளும் தோற்றுப்போகையில்...
கடவுளாக்கி வழிபடுகிறது....

நிமிர்ந்து ஒரு முத்தம் தருகிறாள்
நீலம் பாவுகிறது
உங்கள் உடல்.

(2010 இல் எழுதியது...அதை மறுவாசிப்பு செய்கையில் சில வரிகள் வெறும் உரைநடை வாசகமாக இருப்பதாக தோன்றியது...அவ்வரிகளை மாற்றி இப்போது வெளியிடுகிறேன்...)