Showing posts with label வர்க்கம். Show all posts
Showing posts with label வர்க்கம். Show all posts

Jul 2, 2023

பொருளாதார விஷ ஊசி - எச்சரிக்கை


 மார்க்சிய எதிர்ப்பாளர்கள் மிக சாமர்த்தியமாக சமூகத்தில் விஷ ஊசி ஏற்றுவார்கள். குறிப்பாக தாராளவாத (academic) அறிவுஜீவிகள்! அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். வார்த்தை ஜாலங்களில் வல்லவர்கள் அவர்கள். அவர்கள் ஏற்றுவது விஷ ஊசி என்று தெரிய நாம் மார்க்சியம் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூலதனத்திற்கு அறிமுகம் என்னும் நூலையாவது படித்திருக்க வேண்டும்.

 மூலதன இருப்பையும், சுற்றோட்டத்தையும், அடுத்தவரின் உழைப்பை அபகரித்து இயங்கும் உற்பத்திமுறையை அப்படியே தக்க வைத்துக்கொள்ள முதலாளித்துவமானது வண்ண வண்ணமாக, புதிய புதிய சீர்திருத்தங்களை முன் வைத்து மக்களை தன் வயப்படுத்த முயலும். அதில் சிலர் நேரடியாக முதலாளித்துவ பொருளாதாரவாதிகள் என்று தெரியவரும், சிலரது எழுத்துக்கள் முதலாளித்துவ / மூலதன எதிர்ப்பு போலவும், மார்க்ஸை விட இவர் சிறந்த வழிமுறைகளை சொல்கிறார். பொருளாதார நிர்ணயவாதமாக இல்லாமல் ”ஜனநாயக சோஷலிசம்” பேசுகிறார் என்றெல்லாம் முன்வைப்பார்கள். மார்க்ஸைப் படிக்காதது போலவே நடிப்பார்கள். மார்க்ஸ் சொன்ன பிரச்சினைகளை இவர்கள் வேறு கலைச்சொற்கள் மூலம் வியாக்கியானம் செய்து, தீர்வை மூலதனத்திற்கு சாதகமாக வைப்பார்கள்.

கொச்சையான முதலீட்டிய எதிர்ப்பாளர்” அல்ல என்ற சொல்லாடல்களில் உள்ளது விஷம்! (இதுல தமிழ்ல terminology correction வேற)…

 மார்க்ஸ் எதிர்த்தது மூலதனத்தையல்ல… தனியுடைமை உற்பத்தி முறையை அதன் விளைவான சமூக-அரசியல்-பொருளாதார அமைப்பை. இதுவெல்லாம் புரிய கண்டிப்பாக மார்க்சியம் படிக்க வேண்டும்.

 பொதுவாக (98%) முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்கள் பொருளாதாரம் என்பதை தனித்ததொரு entityயாக காண்பார்கள். ஆனால் மார்க்ஸ் பொருளாதாரம் என்பதை எந்த பொருளில் சொல்கிறார் என்பதில் தான் அது சமூக விஞ்ஞானமாக இருக்கிறது.

இத்தகையவர்கள் பிரச்சினைக்குரிய அல்லது அநியாயமாக கட்டி எழுப்பப்பட்ட ஆபத்தான கட்டிடத்தை தகர்ப்பதை விட்டுவிட்டு விரிசல்களுக்கு எப்படி பூச்சு வேலை பார்க்கலாம் என்று Capitalistic economic engineering வேலை பார்ப்பார்கள், அதாவது இலாபம் என்னும் தேவைக்காக உழைப்பாளர்களின் உழைப்பை உறிஞ்சி இயங்கும் அநியாயமான உற்பத்தி முறையை எதிர்க்காமல் விநியோகத்தை எப்படி நியாயமாக செய்யலாம் என்னும் சாமர்த்தியவாதமது.

 மார்க்சிய எதிர்ப்பாளர்கள் உழைப்புச் சுரண்டல் பற்றி பேச மாட்டார்கள், அல்லது அதை சரி செய்ய இதை செய்யலாம், அதை செய்யலாம் என்று நாய்க்கு எலும்புத்துண்டை எப்படி, எந்த விகிதாச்சாரத்தில் போடலாம் என்று ஆலோசனை வழங்கிக் கொண்டிருப்பார்கள். மார்க்ஸை முழுமையாக படிக்காமல் அல்லது படித்தாலும் வர்க்க உணர்வால் வளர்ச்சி, உயர்வு, “ஜனநாயகம்” (உண்மையில் அது போலி ஜனநாயகவாதம்) ஆகிய “இலட்சியவாத” மனம் கொண்டவர்களால் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. யாரும் இங்கு மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை, ஆனால் உழைப்புச் சுரண்டல் மிக்க பொருளாதார அமைப்பை ஏற்பதென்பது உண்மையில் மானுடத்திற்கு செய்யும் துரோகம்.

மூலதனத்திற்கு வரி போடுவது, கூலியை ஏற்றிக் கொடுப்பது, தொழிலாளர் நலத் திட்டங்களை அறிவிப்பதென்று வகை வகையாக ஆலோசனை வழங்குவார்கள்…. ஆனால் இது எதுவுமே தனியுடைமை உற்பத்தி முறையை, அடுத்தவர் உழைப்பில் நடக்கும் செல்வக் குவிப்பையும், அதன் விளைவான படிநிலை சமூக அமைப்பின் வன்முறையையும் (சாதி உள்ளிட்ட அமைப்பு) தடுக்கப் போவதில்லை. முதலாளித்துவ உற்பத்தி முறையில் சூழலியல் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற பரிந்துரையெல்லாம் நகைச்சுவையானது.. லாபத்துக்காக மனுசங்க ரத்ததையே உறிஞ்ச தயாரா இருக்குற காட்டேறிகிட்ட உறிஞ்சுன ரத்தத்தை அப்படியே ராவா நிலத்துல துப்பாத.. மரம் செத்துப் போய்டும், சுத்திகரிச்சு துப்புன்னு சொல்ல சொல்ற மாதிரி இருக்கு!

மூலதனம் (முதலீட்டிய மண்ணாங்கட்டி) என்பது வெறும் பணம் தொடர்பானது மட்டுமல்ல அது நிலம், வளம், உற்பத்தி சாதனங்கள், உழைப்பளர்களின் உழைப்புச் சக்தி உள்ளிட்ட அனைத்தும் செல்வந்தர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது. அதற்கு ஏற்றவாறு தான் சமூக அமைப்புகளும், அரசு இயந்திரமும், கட்டுப்பாடு அம்சங்களும் தோன்றும். இவை இரண்டையும் பிரிக்கவே இயலாது என்பதைத்தான் மார்க்ஸ் மிக அழகாக வெளிச்சம் போட்டு காட்டுகிறார். (லெனினின் அரசும் புரட்சியுமாச்சம் படிக்கனும்). வர்க்கப் பகைமைகளின் இணக்கம் காண முடியாததன் விளைவே அரசு என்கையில் அந்த அரசிடம் மன்றாடி மன்றாடி, சீர்திருத்தங்களை முன் வைத்து என்ன கிடைக்கும்? எலும்புத் துண்டு! அது போதுமா? அந்த இத்துப் போன எலும்பை தின்ன உடம்புல உயிரும் தெம்பும் இருக்கனும்ல.. அதை ஏன் ஒரு முதலாளி விட்டு வச்சிருக்கான் தெரியுமா? மறுபடியும் அடுத்த நாள் வந்து அவனுக்கு உழைச்சுக்கொட்ட.. சீர்திருத்தவாதிகள் இதைப் பேசுகிறார்களா?

 சீர்திருத்தங்களால் என்ன மிஞ்சும்? ஊறுகாய் போன்ற சமூகநீதி! இந்த காரணங்களால் தான் நாம் முதலாளித்துவ ஜனநாயகம் / சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் இயக்கங்களை, தலைவர்களை எதிர்க்கிறோம். அதேவேளை மார்க்சியவாதிகள் ஒண்ணும் எதிர்காலத்தில் வாழ்பவர்கள் அல்ல, இன்றைய தேவைக்கு குறைந்தபட்ச சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்கிற காரணங்களால் அதன் போதாமைகள் மற்றும் ஆபத்துகள் தெரிந்தும் அதை ஆதரிக்கின்றனர். சிலர் அதோடு சமரசம் செய்துகொள்கின்றனர். இந்த புள்ளிகளில்தான் இங்கு கம்யூனிஸ்ட் முகாமகள் பிரிந்து முரண்பட்டு நிற்கின்றனர். இது புரியாம மொதல்ல உலக கம்யூனிஸ்டுகளே ஒன்று கூடுங்கள்னு அறைகூவல் விடுக்கனும்னு அடையாள அரசியல் பேராசிரிய பெருமக்கள் நக்கல் செய்வதுண்டு.

 மூலதனத்துக்கு வரி போட்டா, அதை எப்படி ஏமாத்தனும்னு முதலாளிகளுக்கு தெரியாதா என்ன? ஏற்கனவே இங்க பல வகையா நிறுவன உருவாக்க வழிமுறைகள் இருக்கு… வரி ஏய்ப்பு, வரி விதிவிலக்குன்னு எல்லாமே மூலதனத்துக்கு சாதகமானதுதான்!

ரொம்ப சிம்பிளா கேக்குறேன்.. இன்னா மயிறுக்கு நான் அடுத்தவனுக்கு உழைச்சு கொட்டனும்? எல்லாருக்கும் பொதுவா இருக்க வேண்டிய ”கச்சாப் பொருளையெல்லாம்” மூலதனங்குற பேர்ல 10 பேரு கட்டுப்பாட்டுல வச்சிருப்பாங்க, அவனுங்க முடிவு பண்ணுற அளவுக்கு நான் உழைக்கனும், அவனுங்க போடுற பிச்சைய நான் வாங்கிக்கனும், எப்ப நான் என் புருஷன் கூட படுக்கனும், என் புள்ளை குட்டிங்க கூட நேரம் செலவு பண்ணனுங்குறது…(அதையும் கூட சந்தோஷமா செய்ய போதுமான கூலியோ, ஓய்வு நேரமோ இருக்காது) வரைக்கும் அவனுங்க நிர்ணயிக்குற உழைப்பு நேரம் தான் முடிவு பண்ணும். இது இப்படித்தான இருக்கும்னு வாழ்றது ஒரு பொழைப்பா?

உன்னை யாருமா கூலி வேலைக்கு போகச் சொன்னாங்க.. உனக்கு திறமை இருந்தா நீயும் அவங்கள மாதிரி தொழில் பண்ணி பொழைச்சுக்கோன்னு வருவாங்க.. பெரு மூலதனம் இல்லாம இங்க என்னா மயிற புடுங்க முடியும்னு முடியாதுன்னு தெரிஞ்சுக்க மறுபடியும் மார்க்ஸ் தான் உதவுவாறு!

 சிறு குறு உற்பத்தியாளர்கள் நிலைமை என்ன ஆகிட்டுருக்குன்னு பார்க்கனும்!

எல்லாத்துக்கும் மேல நான் எதுக்கு அடுத்தவங்க உழைப்பை உறிஞ்சு வாழனுங்குறேன்!

 எல்லாத்தையும் பொதுவுல வை! எல்லாரும் சேர்ந்து உழைப்போம்! எல்லாத்தையும் பொதுவா பிரிச்சுப்போம்! இதுதான் மானுட நீதி… உண்மையான சமூக நீதி… மக்களாட்சி..

 மார்க்சியம் படிங்க.. மக்களாட்சி, சமூக நீதி, ஜனநாயகம், மனித உரிமைன்னு மூதலாளித்துவத்துக்கு வெண்சாமரம் வீசிக்கிட்டே, விச ஊசி ஏத்துற உள்ளூர், வெளியூர், சர்வதேச பேராசிரியர்கள் கிட்ட எச்சரிக்கையா இருங்க! அம்புட்டுதேன்!

 ஒரு உதாரணத்துக்கு இந்த கட்டுரை.. நேரம் கிடைக்கும் போது தமிழ்ல மொழிபெயர்க்கிறேன்’ 🙂

 https://newrepublic.com/article/117673/piketty-read-marx-doesnt-make-him-marx?fbclid=IwAR20mbC4Dp_tFEYz_E5ljuSKdEhTZ5ilDdoaadnpL57waVVBVQbv4vy6t7U

 உழைப்புச் சுரண்டலையும், மூலதனத்தையும் ஒழிப்போம்! படிநிலைகளை ஒழிப்போம். உண்மையான ஜனநாயகத்தை நிலை நாட்டுவோம்! அதற்காக மார்க்சியத்தை, கம்யூனிஸ்ட் அரசியலை (விமர்சனம் இருந்தாலும் அதை விவாதித்தபடியே) உயர்த்திப் பிடிப்போம் 🙂


மேலே உள்ள பதிவைப் படித்த பின் இந்த கட்டுரையை படித்து தெளிவு பெறலாம் 🙂

https://saavinudhadugal.blogspot.com/2018/11/blog-post.html?fbclid=IwAR0VJdPBjLxVN8gvfePb-2aVgi8lf-Z0vdrAmgpiBUFR5oaF79wm-D1MZ_E
மார்க்ஸின் மேற்சொன்ன அந்த விளக்கத்தை வைத்து நாம் ‘பொருளாதார அமைப்பு’ எனும் பதத்தை கவனிக்க வேண்டும். ’உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தம்’ என்பதை ‘உண்மை அடித்தளம்’ என்று குறிப்பிட்டு அவர் அதை ‘பொருளாதார அமைப்பின்’ அடித்தளம் என்கிறார்.

 

Feb 13, 2020

சமூகமாக நாம் யார்?



சமூகத்தில் நம் வாழ்வாதாரத் தேவைகளை (பொருள் தேவைக்காக) பூர்த்தி செய்துகொள்வதற்கான செயல்பாடுகளில் (இயக்கத்தில்) நாம் எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே நமது அடையாளம். இதுவே வர்க்க அடையாளம்.

இது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நிலவும் அடையாளம். இந்த படிநிலையை அதிகாரப்பூர்வமாக நிலைநாட்ட அரசு, மதம், பண்பாடு, காவல்துறை, சட்டம் போன்ற ‘நிர்வாக’, ‘நம்பிக்கை’, (‘ஆன்மீகம்’) அமைப்புகள் உருவாயியன. எல்லா நாடுகளிலும் இதுவே சமூகத்தின் இயங்குமுறை. எல்லா நாடுகளிலும் மதம் என்பது ஆளும் வர்க்க நிறுவனமே.

இந்தியாவில் அது இந்து மதம் என்னும் சித்தாந்தத்தில் இயங்குகிறது. சாதி என்னும் உழைப்புப் பிரிவினையின் அடிப்படையிலான படிநிலையை அது திடப்படுத்தி வைத்துள்ளது. இப்பின்னணியில் வலதுசாரி பாசிச எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்பதை நாம் மதத் தாக்குதல், மத வெறுப்பு, மத மாற்றம் என்பதோடு நிறுத்திக்கொள்வோமெனில் அது வெறும் பூச்சு சேலை மட்டுமே.

ஓர் இந்து முதலாளி இந்து தொழிலாளியை சுரண்டாமல் இருப்பாரா, ஒரு கவுண்டர் (நாடார், தேவர்… இதர) முதலாளி கவுண்டர் தொழிலாளியை சுரண்டாமல் இருப்பாரா, கேட்டால் அவர்கள் பார்ப்பனிய புத்தி உடையவர்கள் என்பதா பதில்? ஒரு தலித் முதலாளி தலித் உழைப்பாளியை சுரண்டாமல் இருப்பாரா? இஸ்லாமிய, கிறித்தவ முதலாளி இஸ்லாமிய, கிறித்தவ தொழிலாளியை சுரண்டுவதில்லையா (இலாபம் என்பதை அடிப்படையாக கொண்ட உற்பத்தி முறையில் - உழைப்பு ரீதியாக). ஒரு பெண் முதலாளி மற்றொரு பெண் தொழிலாளியிடம் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடமாட்டாரா? ஒரு தமிழன் நாட்டை ஆண்டால் தமிழனாகிய தொழிலாளியை சுரண்டுவதை ஒழித்துவிடுவாரா? தமிழன் முதலாளியாக இருந்தால் தமிழச்சிகளுக்கு விடுதலை கிடைத்துவிடுமா?

சாதி-மத ஒழிபிப்பு என்னும் பெயரில் ஒரு குறிப்பிட்ட மட்டத்தோடு நின்றுவிட்டால் ஏற்றத்தாழ்வுகளுக்கான காரணத்தை (உழைப்புச் சுரண்டலுக்கான), ஆணி வேரை எப்படி கண்டடைவது? இதை விளக்கியவர்கள் கார்ல் மார்க்ஸ் எங்கல்ஸைத் தவிர யாரேனும் உள்ளனரா?

அம்பேத்கரிடம் இதற்கு தீர்வு உண்டா? அல்லது காஞ்சா ஐயலய்யா மற்றும் இதர தலித்திய, தாராளவாத சமூக ஆர்வலர்களிடம் தீர்வு உண்டா? பெரியார், அம்பேத்கர் போன்றொர் சாதியப் பிரச்சினை குறித்து பெரும் கவனத்தை ஈர்த்தார்கள். பார்ப்பனரல்லாதார், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகள் மீது கவனம் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்கள். முற்போக்கு சிந்தனைகளை வளர்த்தார்கள். குறிப்பிட்ட அளவு சட்டரீதியான சீர்திருத்தங்களை, உரிமைகளை பெற்றுத்தந்தார்கள் என்பது மறுக்கமுடியாதது. ஆனால் அவை எதுவும் உண்மையான சமத்துவத்தை அனைத்து மட்டத்திலும் எய்திட போதுமானதல்ல.

தற்போது #அம்பேத்கர், #பெரியார் பெயரைச் சொல்லி தாராளவாதிகள் சாதியை இன்னமும் பண்பாட்டு பிரச்சினையாக மட்டுமே சித்தரித்துக்கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பூர்ஷுவா அதிகாரத்தில் தங்களுக்கும் அதிகாரம் வேண்டும். தாங்களும் முதலாளிகளாக வேண்டும் என்பதைத் தவிர இவர்கள் பேசும் சமத்துவத்தில் ஏழ்மையை ஒழிக்கவும், பெண் ஒடுக்குமுறையை ஒழிக்கவும் விஞ்ஞானபூர்வ தீர்வு என்ன இருக்கிறது? குறைந்தபட்சம் இந்த ஒடுக்குமுறைகளுக்கான காரணங்களாவது சரியாக விளக்கப்படுகிறதா?

மதம், பண்பாடு என்று தொடங்கி அகவாதத்தில் முடிவதைத் தவிர வேறொன்றுமில்லை. வெறுப்புரசியல், திருத்தல்வாதம், சீர்திருத்தவாதம், சாதிய அணிதிரட்டல் என்னும் பாதையில் இவ்வரசியல் பயணிக்கிறது.

சமத்துவம் என்பது வெறுமனே பண்பாட்டு நிலையில் எய்தப்படுவதல்ல. அது மனிதனை மனிதன் அன்போடு நடத்த வேண்டும் என்னும் எண்ணம் தொடர்பானது மட்டுமல்ல. இங்கு நிலவும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் பொருளாயத அடிப்படை ஒன்றுதான். அதுவே செல்வக் குவிப்பிற்கான சுரண்டல் முறை. அதனை உணரவிடாமல், நமது பொது எதிரி யார் என்று உணரவிடாமல் செய்வதே முதலாளித்துவத்தின் கைக்கூலியான அடையாள அரசியல்வாதிகளின் நோக்கம்.

மீண்டும் மீண்டும் சொல்கிறேன் சாதி ஒழிப்பு பற்றிய பேச்சுகள், ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம், மத அடிப்படைவாத எதிர்ப்பு வியாக்கியானங்கள் (புலம்பல்கள்) பேசப்படுவதாலேயே ஒருவரிடம் சாதி ஒழிப்பிற்கான தீர்வு இருக்கிறது என்றாகாது. அவர் சமூக விஞ்ஞானியும் ஆகிவிட முடியாது. அவர்களை சமூக அக்கறையாளர்கள், ஆய்வாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், தேவைப்பட்டால் தலைவர் என்றுகூட சொல்லிக்கொள்ளலாம்.

சமூக விஞ்ஞானம் என்பது வரலாற்று வளர்ச்சியோடு தொடர்புடையது. அது உற்பத்தி முறையோடு தொடர்புடையது. அது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தோடு தொடர்புடையது. அதனை சரியாக ஆய்வுசெய்து பிரச்சினைகளின் ஆணிவேரை அறிவியல்பூர்வமாக முன்வைப்பவரே சமூக விஞ்ஞானி. மற்றவர்கள் சமூக உனர்வாளர்கள் மட்டுமே.

இன்னார் இந்த தொழிலில் ஈடுபடுவதால் அவர்களுக்கு இந்த பண்பு இருக்கிறது அல்லது இல்லை என்பது மேலோட்டமான வியாக்கியானம். அவர்கள் அந்த தொழிலில் மட்டும் ஈடுபடுவதற்கான வாய்ப்பும், அதிகாரம் எப்படி தோன்றி வளர்ந்தது? மற்றவர் விலக்கிவைக்கப்பட்டதற்கான வரலாற்று காரணம் என்ன? அதன் அடிப்படை (இயங்குதளம்) என்ன? எந்த ஒன்றிலிருந்து அனுமதித்தலும், விலக்கலும் நடைபெறுகிறது? மதம், சாதி மட்டும்தான் அதை தீர்மானிக்கிறதா? அப்படியென்றால் பார்ப்பனியம் ஏன் இந்தியாவை விட்டு மற்ற நாடுகளில் அதன் அதிகாரத்தை நிலைநாட்ட முடியவில்லை. அங்கு ஏன் சாதிகளை ஏற்படுத்தவில்லை?

குறிப்பிட்ட தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிட்ட பண்பாடு இருக்கும் என்பது சரி. ஆனால் மூடநம்பிக்கை என்பது அனைத்து மட்டத்திலும் இருக்கும். சொல்லப்போனால் நிலவுடைமை பண்பாடு என்பது பெண்களை உடைமையாக கருதும் பிற்போக்குத்தனமான அமைப்பு. கடவுள் நம்பிக்கை இருக்கும் இடத்தில் மூடநம்பிக்கை இருக்கவே செய்யும். இது ஆதிக்க சாதியானாலும் சரி, தாழ்த்தப்பட்டோர் ஆனாலும் சரி. இயற்கையை வழிபடுவதோ, அல்லது கடவுளை வழிபடுவதோ… சடங்கு சம்பிரதாயங்கள் என்பதே மூடநம்பிக்கைதான். அது அனைத்து சாதிகளிலும் உள்ளது.

குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட வேலையில் மட்டுமே ஈடுபடுகின்றனர் என்பதைத்தான் தனியுடமை அடிப்படையிலான உழைப்புப் பிரிவினை என்று மார்க்சியர்கள் காலம்காலமாக விளக்கியுள்ளனர். போலி சிந்தனையாளர்கள் போல் அன்றி அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளனர். படிநிலையில் மேலே இருப்பவர்கள் உற்பத்திச் சாதனங்கள் தொடங்கி… கல்வி வரை கீழே இருப்பவர்களுக்கு கிடைகாமல் செய்தனர். ஆகவே மேலே இருப்பவர்கள் அறிவு, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என்று சகல தளங்களிலும் முன்னேறுவதற்கான வாய்ப்பு அமைந்துவிட்டது. கீழே இருந்தவர்கள் பல போராட்டங்கள் நடத்தி இன்று மேலே வருகின்றனர். இப்போது அதுபற்றிய விழிப்புணர்வு மேலோங்குகிறது. போராட்டங்கள் நடைபெறுகின்றன. இது மேல்நிலையில் உள்ளோருக்கு ஆபத்தாக, போட்டியாக தெரிவதால் மீண்டும் முரண்பாடுகள் முற்றுகின்றன. (இது ஆண் பெண் முரன்பாடுக்கும் பொருந்தும்). அதன் விளைவாக மேல்நிலையில் இருப்பவர்கள் மீண்டும் தங்களது அடையாளங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள நினைக்கிறார்கள். அந்த படிநிலையை சாதி என்னும் ஏற்பாட்டின் மூலம் இங்கு சட்டதிட்டமாக்கி வைத்தது அவர்களுக்கு கருவியாக, பேராயுதமாகப் பயன்படுகிறது. எதிர் தரப்பினரும் அதே ஆயுதத்தை ஏந்தினால்?

மேலாதிக்க சக்திகளுக்கு அந்த ஆயுதம் கைவரப்பெற்ற நிலைமைகளை ஆய்வுசெய்யாமல், சொல்லப்போனால் அந்த ஆயுதம் எது என்பதைக்கூட ஆய்வு செய்யாமல், அதை ஆய்வு செய்வதற்கு உதவும் அறிவியல் கோட்பாட்டை படித்தறியாமல் கம்பு சுழற்றுவதால் இழப்பு யாருக்கு? எதிரி அங்கு சிரித்துக்கொண்டிருக்கிறான். தன்னை இனம் காண முடியாது என்னும் இருமாப்பில் எதிரி சிரித்துக்கொண்டிருக்கிறான். சாதி, மதம், மொழி, பாலினம், உடல்திறன், இனம் என்பதற்கப்பார்பட்டு நமக்கென்று ஓர் இருப்புநிலையை அவன் (அது) ஏற்படுத்திவைத்திருக்கிறான். அதுவே உழைப்பாளி என்னும் நிலை. உழைப்புச் சக்தியை விற்றால் மட்டுமே பிழைக்க முடியும் என்னும் நிலைமை. எந்த சாதியானாலும், எந்த பாலினமானாலும் (இன்னும் இதர..) நீ இந்த பூமியில் பிழைத்திருக்க என்ன செய்கிறாய் என்பதில்தான் உன்னுடைய சமூக பாத்திரம் அல்லது அடையாளம் இருக்கிறது. அதுவே உனது புத்தியை தீர்மானிக்கிறது. அதிலிருந்து விடுபடுவதே அரசியல் விழிப்புணர்வு - வர்க்க நீக்கம், சாதிய நீக்கம், பாலின அடையாள நீக்கம், மதப் பற்றிலிருந்து (சொல்லப்போனால் கடவுள் மறுப்பு தேவை).

பிறப்பின் அடிப்படையிலான அடையாளரீதியான உணர்விலிருந்து விடுபட்டு – உற்பத்தி உறவில் உனக்கு என்ன இடம் - வர்க்க உணர்வு பெறுவது என்றாகிறது. இதுவே கம்யூனிஸ்ட் என்னும் உணர்வு. தேடலின் வழி அல்லது கற்றலின் வழி இந்த உணர்வை பெற்றபின் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கான அடித்தளம் எது என்பதை ஒரு முழுமையான கண்ணோட்டத்தில் பார்த்து அதை உறுதிபட எடுத்துரைத்துக்கொண்டிருப்பது அவசியமான பணி.

உண்மையில் வலதுசாரி எழுச்சி என்பது முதலாளித்துவத்தோடு, உலக மூலதன வளர்ச்சியோடு, உலகமயமாக்கலோடு, ஏகாதிபத்தியத்தோடு தொடர்புடையது. உலகெங்கிலும் இன்றைக்கு வலதுசாரி ஆதிக்கமும், அடையாள அரசியல் பிளவுவாதமும் மேலோங்கி இருக்கிறது. இத்தகையதொரு முழுமையான பார்வையைப் பெற நமக்கு மார்க்சியம் உதவுகிறது. அதனை கற்காமலேயே வர்க்கம் என்று தட்டையாக சாதியை அனுகமுடியாது, முதலாளித்துவத்தை விட பார்ப்பனியமே பிரதான பிரச்சினை அல்லது ஆபத்தானது என்று பேசுவது அறிவுடைமை ஆகாது.

வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்திப் பேசுவதால் மற்ற ஒடுக்குமுறைகளை நிராகரிப்பதாக காண்பது பார்வைக்கோளாறன்றி வேறில்லை. எல்லாவற்றிற்குமான இணைப்பு, அடித்தளம் எது என்பதை உணர்த்தும்போது மட்டுமே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். பிளவுபடுத்தும் சக்திகளை அடையாளம் காட்டமுடியும். அது ஒன்றே புரட்சிகர பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
உழைக்கும் வர்க்கம் என்னும் உணர்வை பெறுக! நம் பொது எதிரி யார் – அதனது சேனைகள் யார் என்பதை என்பதை உணர்க! உழைக்கும் வர்க்க ஒற்றுமை ஓங்குக!

(நான் பகிர்ந்திருந்த ஒரு பதிவுக்கு வந்த எதிர்வினைகளுக்கு பதிலாக இது எழுதப்பட்டது)


Dec 14, 2018

இராமாயணம் – மார்க்சியப் பெண்ணிய மறுகதையாடல்




ரங்கநாயகம்மாவின் இராமாயணம்: ஒரு விஷ விருட்சம் என்னும் நூல் இராம இராஜ்ஜியத்தை சாதியவாத, நிலவுடைமை முறையிலான ஆணாதிக்க சமூகம் என்றுரைக்கிறது.

இந்நூலை படித்த பின்னர் அல்லது ஒரு சில வரிகளைப் படித்ததுமே கூட ஒழுக்கவாதிகள் இதை கொளுத்திவிட துடிப்பார்கள். அவர்களால் காகிதங்களை ரிக்க முடியுமே ஒழிய சிந்தனைகளையல்ல…”

என்கிறார் மார்க்சிய எழுத்தாளரான ரங்கநாயகம்மா. இராமாயணம்: ஒரு விஷ விருட்சம் என்னும் தன்னுடைய நூல் குறித்துதான் இவ்வாறு கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை மார்க்சிய கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்துள்ளார். ஆனால் இராமாயணத்திற்கும் கார்ல் மார்க்ஸின் மார்க்சியத்திற்கும் என்ன தொடர்பு? இந்நூலைப் படிக்கும்ஒழுக்கவாதிகள்ஏன் இதை ரிக்குமளவுக்கு சினம் கொள்வார்கள்? ரங்கநாயகம்மா இந்நூலில் அந்தளவுக்கு இராம இராஜ்ஜியத்தை கூறு போட்டிருக்கிறார்.

பொதுவான கருத்தின்படி, இராம இராஜ்ஜியம் என்பது ஒழுக்கத்தின் உச்சம், அதுவே நல்லாட்சிக்கான அளவுகோல். ஆகவே நாம் மீண்டும் அந்த உன்னத காலத்திற்கே செல்ல வேண்டும். காந்தியும் கூட இந்த எண்ணத்தைக் கொண்டிருந்தார்:

“… கடந்த கால இராம இராஜ்ஜியம் என்பது சந்தேகத்திற்கிடமின்றி ஓர் உண்மையான ஜனநாயக ஆட்சி. சராசரி மனிதனுக்குக் கூட தாமதமின்றி, பொருள் செலவின்றி துரிதமாக நீதி கிடைத்துவிடும்.”

ஆனால் ரங்கநாயகம்மாவிற்கோ இராம இராஜ்ஜியமானது நாம் அடைய விரும்பும் மேன்மையான ஒழுக்கத்தை கொண்டிருக்கவில்லை. பணக்கார வர்க்கத்தின் நலன்களுக்காக ஆட்சி புரிந்தகொடுங்கோல்ர்களானதசரதன், இராமன், இராவணன் போன்ற மன்னர்களின் ஆட்சியானது ஏற்றதாழ்வுகள் நிறைந்த ஆபத்தான ஆட்சி என்று எழுதுகிறார் ரங்கநாயகம்மா.
மார்க்ஸைப் பொறுத்தவரை, வர்க்கம் என்பது உற்பத்திச் சாதனங்களை உடைமையாக கொண்டிருக்கும் முதலாளிகள் கூட்டமும், அந்த சொத்துடைமை வர்க்கத்திற்காக உழைத்து உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் உழைப்பாளர்கள் என்னும் இரண்டு முரண்பட்ட பிரிவினர் மற்றும் அவர்களுக்கிடையிலான பாகுபாடுகளாகும். இதன் அடிப்படையில் ரங்கநாயகம்மாவைப் பொறுத்தவரை இராம இராஜ்ஜியம் என்பது நிலபுலன்கள், மாட மாளிகைகள், தோட்டங்கள், குதிரைகள், மாடுகள், ஆநிரைப் பண்ணைகள், தங்கம், வெள்ளி மற்றும் இதர பொக்கிஷங்களையெல்லாம் அளப்பரியதாகக் கொண்டிருந்த செல்வந்தர் வர்க்கத்தினை ஆதிக்க சமூகமாகக் கொண்டிருந்த சமூகத்தின் இராஜ்ஜியமாகும். நாட்டை ஆண்ட மன்னனுக்கு உகந்த வகையில் சமூகத்தைப் பராமரிக்க உழைப்பது தான் உழைக்கும் வர்க்கத்தின் கடமை. அத்தகைய சமூகத்தில் ஏழ்மை, அடிமைத்தனம், விபச்சாரம், நிலப்பிரபுத்துவம், ஏழை விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டிப் பிழைத்தல் என்னும் வர்க்க அமைப்போடு சாதிய ஒழுங்குமுறையும் நிலவியது. அதோடு பெண்களுக்கு எந்தவித சுதந்திரமும் இல்லை. பல்வேறு தடுப்பரண் அமைப்புகளின் வாயிலாக பெண்கள் முற்றிலுமாக வீடிற்குள்ளேயே முடக்கப்பட்டார்கள்.

இராம இராஜ்ஜிய பண்பாடென்பது ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட வேண்டிய பண்பாடாகும். அதனால் தான் இராமாயணத்தை தங்கள் மதக் கொள்கையாக தழுவிக்கொண்டவர்களுக்கு அதன் மீதான விமரசன நூல் என்பது ரிக்குமளவுக்கு சினமூட்டக்கூடியது.

இராமாயணம்: ஒரு விஷ விருட்சம் 1994 இல் முதல் முதலில் பதிப்பிக்கப்பட்டது. 1975, 1976 இல் இரண்டு தொகுதிகள் தொடர்ச்சியாக கொண்டுவரப்பட்டன. பின்னர் ஆந்திராவில் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணிபுரியும் பி.ஆர். பாபுஜி, ஆர். வெங்கடேஸ்வர ராவ், ஆரி சீதாராமய்யா மற்றும் சி. பத்மஜா ஆகிய நால்வரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

வால்மீகி இராமாயணத்தின் சமஸ்கிரத மூல காலவரிசைப்படியே இந்நூலும் எழுதப்பட்டுள்ளது. மூலத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் மற்றும் உத்ர காண்டம் என ஏழு காண்டங்கள் உள்ளன. ஒவ்வொரு காண்டமும் கடவுளென மன்னன் இராமனின் வாழ்வை வெவ்வேறு காலகட்டங்களாக விளக்குகின்றன. ‘இராமாயணம்: ஒரு விஷ விருட்சம்நூல் 700 பக்கங்களைக் கொண்ட நூலாகும். 16 நீண்ட கதைகள் மற்றும் ஒவ்வொரு துணைக் கதைக்கும் மற்றொன்றிற்கும் தொடர்புடைய பதினொருஇணைக்கதைகளையும், விமர்சனத்திற்கு ஆதாரமாக மூல சர்க்கத்தை அல்லது யாப்புகளை ஆதாரமாகக் கொண்ட 600 அடிக்குறிப்புகளையும் கொண்டதாகும்.

சொத்துடைமை வர்க்கத்தின் செல்வக் குவிப்பு (உழைக்கும் வர்க்கத்தின் அடிபணிதல் அந்த சொத்துகளில் இருந்து செல்வத்தை தோற்றுவித்தாலும்) பற்றியதே மார்க்சிய சிந்தனை. ஒட்டுமொத்த நூலிலும், விரிவான அடிக்குறிப்புகள் மற்றும் ஆதாரங்கள் வழி நடக்கும் உரையாடல்கள் மற்றும் தரவுகளை கவனமாக முன்வைத்து அக்காலத்தில் நிலவிய பண்பாட்டை ஆய்வு செய்கிறார் ரங்கநாயகம்மா. உதாரணமாக, இராமனின் பட்டாபிஷேகம் குறித்து தசரத மன்னன் குழம்பியிருந்த தருவாயில் அவரை சந்திக்க வந்த வசிஷ்ட முனிவர் கேட்கிறார்:

எல்லாம் நலம்தானே? ஏதேனும் புதிய தேசங்களைக் கைப்பற்றினாயா? உன்னுடைய எதிரிகளையெல்லாம் வென்றுவிட்டாயா? […] உன் குத்தகைதாரர்கள் அனைவரும் உனக்கு அடிபணிந்து நடக்கின்றனரா? – பால காண்டம், சர்க்கம் 19, ஸ்லோகம் 45”
இராம இராஜ்ஜியத்தில் (ஒவ்வொரு காலகட்டத்திலும்மொ.ர்) வர்க்க ஒழுங்குமுறையை கண்டிப்பான முறையில் கட்டிக்காக்கும் மத மற்றும் அரசியல் பிணைப்பும் நிலவியது. சாதியக் கலப்பைத் தடுப்பதும், அடிமையுடைமையை ஊக்குவிப்பதும், பெண்களைஅந்தப்புரத்தில்வைத்துக் காக்கும் சட்டங்களை இயற்றுவதும், நாத்திகர்களை துன்புறுத்துவதும், அரச வழிபாடு என்னும் அளவுக்கு மன்னர்களை துதிபாடுதலுமாக அந்த ஒழுங்குமுறை கட்டிக்காக்கப்பட்டது.

மன்னர்களுக்கான கடமை மதங்களால் வரையறுக்கப்பட்டு, வர்க்கப் படிநிலையில் அவர்கள் உச்சத்தில் வைக்கப்பட்டார்கள். இராமனின் விசயத்தில், அவனை கடவுளாக்கி வழிபட்டனர். தசரதனுக்கு இந்த மகத்துவம் கிடைக்கவில்லை. அயோத்தியக் காண்டத்தில் வால்மீகி எழுதுகிறார்:

மன்னன் இல்லாத ஒரு நாட்டில் மேகங்கள் சூழ்வதில்லை. மழை பெய்வதில்லை. பயிர்கள் வளர்வதில்லை. வணிகம் நடைபெறுவதில்லை. பயணங்கள் நடப்பதில்லை. மனைவிகளும், பிள்ளைகளும் கட்டுப்படுவதில்லை. அரச தண்டனையில்லையென்றால் நாத்திகர்கள் கலகம் செய்வார்கள். பிராமணர்கள் சடங்கு சம்பிராதாயங்களை மீறுவார்கள். மன்னன் இல்லையெனில் அராஜகம் (anarchy) பெருகிவிடும்அயோத்திய காண்டம், சர்க்கம் 66, ஸ்லோகம் 47”

இராமன் காட்டிற்கு நாடு கடத்தப்பட்ட போது பரதன் அவர்களை சந்திக்க சித்திரக் கூடம் செல்கிறான். இராஜ்ஜியம் குறித்து சகோதரர்கள் அளவலாவுகின்றனர். மக்கள் நலன் குறித்து இராமன் ஏதும் கேட்கவில்லை. அதைவிடுத்து வணிகர்களின் நலன் குறித்து விசாரிக்கிறான். “ஓர் அரசனானவன் அனைவரையும் காக்க வேண்டும், குறிப்பாக வணிகர்களை.” (அயோத்தியா காண்டம் சர்க்கம் 100, ஸ்லோகம் 47&48) [1]. அதுமட்டுமா,  உழைக்கும் வர்க்கத்திற்கு அதிக ஓய்வு (நாட்கள்) கொடுத்துவிடாதே பரதா, அவர்கள் இன்பத்தில் மூழ்கிவிட்டால் வேலைகள் பாதிக்கப்படும்என்றான் (அயோத்தியா காண்டம், சர்க்கம் 100, ஸ்லோகம் 54) [2].

இவ்வாறாக இராம இராஜ்ஜியம் என்பது நிலவுடைமை முறையில், நிலப்பிரபுக்களால் நிர்வகிக்கப்பட்ட இராஜாங்கமாகும். ஏழை விவசாயிகள் தங்கள் விளைச்சலின் பெரும்பகுதியை மன்னர்களுக்கும், அவர்களின் படைகளுக்கும் கொடுத்தே வாழ வேண்டிய நிலைமை. வர்க்க அமைப்பும், சாதியமைப்பும் பிணைந்த ஒரு சமூகப் படிநிலையானது ஏழைகளை வாட்டியது. மதமானது சாதியக் கலப்பை தடுத்தது, மன்னர்கள் அதை நிலைத்திருக்கச் செய்தனர்.

பிராமணர்களை, பிராமணிய வாழ்க்கை முறையை உயரிய பீடத்தில் வைத்துப் போற்றுவதும் மன்னனின் கடமையாக வகுக்கப்பட்டது. ஒரு நாள் தசரதன் வேட்டைக்குச் சென்றபோது, அஜாக்கிரதையான அவனுடைய அம்பெய்தலால் ஒரு முனிவரின் மகனான கரனனை தாக்கிக் கொன்றான். கொல்லப்பட்ட மகனே அரசனுக்கு எப்படி ஆறுதல் சொல்கிறான் என்று எழுதுகிறார் ரங்கநாயகம்மா: “கவலைப்படாதீர்கள் மன்னா ஒரு பிராமணனைக் கொன்ற பாவம் உங்களைச் சாராது, ஏனென்றால் நான் ஒரு சூத்திரப் பெண்ணிற்கும், வைசிய ஆணிற்கும் பிறந்தவன் தான்

சாதியமைப்பானது அன்றாட வாழ்வில் மிகவும் வலிமையுடன் தாக்கம் செலுத்தியது. அது, மேல்நிலையில் உள்ள சாதிகளின் பண்புகளும், மதிப்பீடுகளுமே சிறந்தது என்று கீழ்நிலையில் தள்ளப்பட்ட சாதிகள் நினைக்குமளவுக்கு உட்செறிக்கப்பட்டது. மதத்தைக் கட்டிக்காக்கும் பிராமணர்கள், முனிவர்கள், பூசாரிகள் ஆகியோர் மன்னர்களுடன் கூடிக் குலாவினர். பதிலுக்கு மன்னர்கள் பிராமணர்களுக்கும், வணிகர்களுக்கும் பாதுகாவலர்களாக இருந்தார்கள். போர் மற்றும் இராணுவக் கட்டாய சேவைகளின் மூலமாக சத்ரிய உணர்வைக் கட்டிக்காதார்கள். தாழ்த்தப்பட்ட சூத்திரர்கள் மேல்நிலைக்கு முன்னேற முடியாத வகையில் தடுக்கப்பட்டனர். தலைமுறை தலைமுறைகளாக அவர்கள் சொத்தோ செல்வமோ இல்லாத வர்க்கங்களாக நிலைத்திருந்தனர்.

இராமன் தான தர்மங்களைச் செய்தான் என்பது உண்மையே, இருப்பினும், அதிலும் பிராமணர்களுக்கே முன்னுரிமை (அயோத்திய காண்டம், சர்க்கம் 32, ஸ்லோகம் 45) [1] ஏனென்றால் அது புண்ணியம், அது தெய்வீகப் பலன்களைத் தரக்கூடியது என்று வேதங்களில் எழுதப்பட்டுள்ளது. நிலவுடைமை சமூகங்களும், முதலாளித்துவ சமூகங்களும் தான தர்மத்தை ஒரு புண்ணிய செயலாக கருதுகின்றன. ஒரு சமத்துவமான சமூகத்தில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக யாரும் யாருடைய தயையையும் கொடையையும் எதிர்பார்த்து வாழ வேண்டிய நிலை இருக்காது; மாறாக உரிமைகளின் அடிப்படையிலான ஏற்பாடுகளே நிலவும்.

ஆர்வமூட்டும் வகையில் அடுத்துவந்த காலங்களில் இராமாயணக் கதை பெண்கள் பலராலும் மறுகதையாடல் செய்யப்பட்டுள்ளது. சந்த்ரபதி இராமாயணமானது சீதையின் கண்ணோட்டத்தில் அவளுக்கு நிகழ்ந்த அநீதிகளைப் பேசுகிறது. அதில் இராமன் “ஒரு குழப்பவாதி, பலவீனமானவன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 16ஆம் நூற்றாண்டில், மொல்லா என்னும் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண் ஒருவர் பிராமணக் கவிகளுக்கு சவால் விடும் வகையில் இராமாயணத்தை சமஸ்கிருதத்திலிருந்து செவ்வியல் தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தார். அதன் மூலம் அந்த புராணக் கதைகளின் மீது இருந்து வந்த ஆதிக்க சாதி ஆண் மைய அதிகாரத்தை தகர்த்தார். அதேபோல் சம்ஹித ஆர்னியின் சீதா இராமாயணம் பட்டுவா சுருள் பட ஓவியர் மொய்னா சித்ரகர் என்பவரால் படக்கதையாக சொல்லப்பட்டது. அதில் சீதை தன்னுடைய பிறப்பு முதல் திருமணம் வரை, கடத்தப்பட்டது முதல் திரும்பி வந்தது வரை, அதன் பின்னர் கைவிடப்பட்டு குழந்தைப் பெற்றது வரையிலான கதை ஓவியங்கள் மூலம் சொல்லப்பட்டுள்ளது.

மார்க்சியப் பெண்ணியவாதியான ரங்கநாயகம்மா பிராமணிய ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்துவதோடு, இராமாயணமானது அடிமைகளும், விவசாயிகளும், தாழ்த்தப்பட்ட சாதியினரும், பெண்களும் அடங்கி இருக்கச் செய்ய ஆளும் வர்க்க எஜமானர்கள், செல்வந்தர்கள் மற்றும் ஆதிக்க சாதியினரின் பண்பாட்டினை கட்டிக்காக்கும் வகையில் அதனை பிரச்சாரம் செய்கிறது என்று கூறுகிறார்.

“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்க கருத்தியல்களே ஆளும் கருத்தியல்களாக இருக்கின்றன” என்று மார்க்ஸும் எங்கல்ஸும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் எழுதினார்கள். “சுதந்திரமானவனும், அடிமையும், உயர்குடியும், சாமானியரும், நிலப்பிரபுவும் அடிமையும், பட்டரை முதலாளியும் தொழிலாளியும்” எதிர் எதிராக இருக்கினறனர்; அவர்கள் வர்க்க உணர்வால் பிரிந்து முரண்பட்டு நிற்கினர்னர். மிகப் பெரிய இந்த சமூக ஏற்றத்தாழ்வு இராமாயணத்தில் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இராமாயணத்தை மார்க்சியக் கண்ணோட்டத்தில் மறுகதையாடல் செய்வதானது இங்கு சலசலப்பை ஏற்படுத்தக் கூடியதுதான். ஆனால் அவரது கடுமையான ஆய்வு அத்தகையோருக்குத் தேவையான விடையை அளிக்கவல்லது.

ஆங்கிலத்தில்: லாவண்யா ஷன்போக் அரவிந்த்
தமிழாக்கம்: கொற்றவை