Showing posts with label தமிழ் இலக்கியம். Show all posts
Showing posts with label தமிழ் இலக்கியம். Show all posts

Jun 19, 2017

காதலுக்குப் பிறகு.....

புனைவு - கொற்றவை.
நன்றி: http://tamizmagazine.blogspot.in/



காதலுக்குப் பிறகு …….

வரலட்சுமி குளித்து முடித்து ஈரத்தலையுடன் வர கொதிக்கும் சாம்பாரில் மல்லித் தழைகளைக் கிள்ளிப் போட்டு அமத்தியபடி மதிவாணன் “என்ன லட்சு குளிச்சுட்டியா… சரி உக்காரு” என ஒரு ஸ்டூலை எடுத்துப் போட்டான் மதி.  மேடு தட்டிய தன் வயிற்றை பிடித்தபடி மெல்ல அமர்ந்தாள் லட்சு. ஹேர் டிரையரை எடுத்து லட்சுவின் ஈர முடிகளின் மேல் சூடான காற்றை லாவமகாக காட்டினான் மதி.

“இன்னைக்கு என்ன டிஃபன் மதி”

“இட்லி சாம்பார்பா”

“போதும் மதி சட்னி கிட்னியெல்லாம் வேண்டாம்”

“நல்ல புருஷன் நல்ல பொஞ்சாதி” என்றபடி வந்தாள் வசந்தி.

லட்சுமி மதி சிரித்துக்கொள்ள “அம்மா” என்றபடி வசந்தியின் இடுப்பிலிருந்து இறங்கி ஓடினாள் காதல்.

“காது குட்டி இட்லி சாப்பிட்டீங்களா” என தாடையை பிடித்து ஆட்டியபடி கேட்டாள் வரலட்சுமி

“ம்ம் சாப்பிட்டேம்மா பப்பு தொட்டு கொடுத்தாங்க அம்மூ”

“செல்லம்” என முத்தமிட்டாள் வரலட்சுமி

“குட் கேர்ள் அப்ப அப்பா சொன்னபடியே இப்ப டி.வி போடுறேன்” என டி.வியை ஆன் செய்தான் மதி.

“அப்பா ஹிமாமாரி ஹிமாமாரி”

“சரி சரி”

தொலைக்காட்சியை மிடுக்கிவிட்டு மீண்டும் லட்சுவின் ஈர முடிகளை சுடு காற்றில் ஆடவிட்டான் மதி.

“அப்புறம் என்னடி முடிவு பண்ணி இருக்க… மாசம் ஏழாச்சு…”

“பச்… அம்மா…”

“ஆமாண்டி முதல் குழந்தைக்கும் இதே மாதிரிதான் எட்டா நடந்து… பாட்டா படிச்சு…. உசுர வாங்காதீங்கடி…”

மதி தன் விரல்களை லட்சுவின் முடிகளுக்குள் ஓட்டினான் “ம்ம்ம் நல்லா உலர்ந்திருச்சு” என தொங்கும் வயரை சுருட்டி அலமாரியில் வைத்தான்.

“அத்தை சாப்பிடலாம் பசிக்குது”

“எடுத்து வைக்குறேன்… என் கேள்விக்கு பதில் சொல்லுங்க மாப்ள”

சிரித்தபடி தட்டுகளை எடுத்து மேஜையில் வைத்தான் மதி. பாட்டிலில் தண்ணீர் பிடித்து வைத்தாள் வரலட்சுமி

“ஹிமாமாரி எத்தனை தடவை சொல்லி இருக்கேன் மண்ணுல விளையாடாத மண்ணுல விளையாடாதன்னு” என்று தொலைக்காட்சிப் பாட்டி மிரட்டிக் கொண்டிருக்க

“அம்மா அம்மா அம்மூ டீவில”

ஹாட் பேக்கை எடுத்து வந்து மேஜையில் வைத்த வசந்தி “இந்த வீட்ல நண்டு சிண்டுக்குக் கூட நான் தொக்கு”

மதி சாம்பாரை கிண்ணத்தில் ஊற்றி எடுத்து வந்தான்.

“அத்தை உக்காருங்க”

“நீங்களும் உக்காருங்க மாப்ள”
மூவரும் அமர்ந்தார்கள். இட்லிகளை எடுத்து வைத்துக் கொண்டார்கள்.

“அம்மா அந்த சாம்பாரை இப்படித் தள்ளு”

சாம்பாரை ஊற்றி ஒரு வாய் வைத்த லட்சு “மதி இன்னைக்கு சாம்பார் சூப்பர்… ம்ம் என் டிரெயினிங் வீண் போகலை”

“ம்ம் அப்படியா சொல்ற… எனக்கென்னமோ கொஞ்சம் புளி கூட ஊத்திட்ட மாதிரி இருக்கு என்றான் இட்லியை மென்றபடி

“இங்க நான் என்ன பேசிக்கிட்டிருக்கேன்… நீங்க உப்பு புளி பிரச்சினைய..”

“ஐயோ அம்மா வளைகாப்புத்தான… வச்சுக்குவோம்… ஆனா ஆளுங்க… கூட்டம்.. சடங்கு… சம்பிரதாயம் இதெல்லாம் வேண்டாம்… எத்தனை தடவை சொல்றது”

“என்ன மாப்ள”

“அத்தை உங்களுக்கே தெரியும்… எங்களுக்கு இந்த சாமி… சடங்கு சம்பிரதாயத்துல எல்லாம் நம்பிக்கை இல்லை… போன தடவையே உங்க மனசு திருப்திக்காகத்தான் ஒத்துக்கிட்டோம்…”

“மாப்ள நான் என்ன ஐயர கூப்பிட்டு ஹோமம் கீமமெல்லாம் பண்ணனும்னா சொல்றேன்… அக்கம் பக்கம்… நம்ம சொந்தங்கள்ல சொல்லிவிட்டு… கை நிறைய வளையல் போடச் சொல்லி… நல்லா வாழுற பொம்பிளைங்ககிட்ட ஆசி வாங்க நினைக்குறது ஒரு குத்தமா”

வரலட்சுமி சாப்பிட்டு எழுந்தவள் தட்டை பேசினில் போட்டு கை கழுவ

“என்னடி மறைமுகமா கைய கழுவிட்டேன்னு சொல்றியா”

“கை காஞ்சிடும் பரவால்லையா… அப்புறம் அது தரித்திரம்னு புலம்ப மாட்டியே”

“ம்க்கும்… “ என எழுந்தவள் தட்டை போட்டு கை கழுவினாள். “இப்ப நீ எதுக்கு கை கழுவுன”

மதியும் கை கழுவி வந்து ஆஃபீஸ் கிளம்பத் தேவையான ஃபைல்களை எடுத்து வைத்தான்.

“பிச்கூ… பச்சக்… ஹ ஹ ஹா… ஜெம்ஸ் சாக்லேட் பந்துடன் ஒரு பிச்கூ பொம்மை இலவசம்…”

“அம்மா அம்மா ஜெம்ஸ்… அப்பா”

“சரி காதல் குட்டி அப்பா ஆஃபீஸ்லருந்து வரும்போது வாங்கிட்டுவ் வரேன்”

உம்மா! கொடுத்து சைக்கிளில் உட்கார்ந்து அரையை வட்டமிட்டாள் காதல்

ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியின் ஒலியை குறைத்த வசந்தி
“ஏண்டி புள்ளதாட்சி பொம்பளைக்கு நிறைமாசம் நெருங்கும்போது வளையல் போடுறது பழங்காலத்துல இருந்தே இருக்கு… அதுவுமா உங்க கொள்கைக்கு இடிக்குது…”

“அம்மா அது இடிக்கல… ஏன் வளையல் போட சொல்றாங்கன்னு எனக்கும் தெரியும்… ஆனா ஆளுங்கள கூப்பிடுறதுதான் எனக்கு புடிக்கல… இங்க அங்கன்னு சந்தனம் பூசுறது குங்குமத்தை நெத்தில பெயிண்ட் அடிக்குறது… இதெல்லாம் என்னால சகிச்சுக்க முடியாது…”

“அதுவுமில்லாம நல்லா வாழ்ந்த பொம்பள வாழாத பொம்பளைன்னு வேற லிஸ்டு போடுறீங்க… குழந்தை பிறக்காத பொம்பளைங்க இருந்தா மலடின்னு கூப்பிட மாட்டீங்க… இதெல்லாம் தேவையாத்த… “

“ம்ம்ம் அதான… எல்லாம் உங்கள சொல்லனும் மாப்ள… ஆம்பிளை மாதிரியா நடந்துக்குறீங்க நீங்க”

“ஏந்த்தை  ஆம்பிளைக்குன்னு தனி நடை இருக்கான்ன”

“ம்க்கும்… என்னமோப்பா… நான் வாழ்ந்த காலத்துல அப்படித்தான்… பொம்பிளைங்க பைய புருஷன் பின்னால நடக்கனும் ஆம்பிளைன்னா வேகவேகமா முன்னால நடக்கனும்… இங்க ரெண்டும் ஒரே மாதிரில்ல நடக்குது”

சிரித்த மதி “என்னை அன்பா பார்த்துக்க ஒருத்தரும்… என் கிட்ட இருக்குற அன்பை எந்த நடிப்பும் இல்லாம… கூச்சமும் இல்லாம காட்ட எனக்கொருத்தரும் தேவைப்பட்டாங்க… அதேதான் உங்க பொண்ணுக்கும்… அதுக்காகத்தான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்…. நடை பழக இல்லத்த”

“ஆமாமா… அதான் தெரியுமே உங்க அன்பு… கிறுக்கு என்னான்னு… ஏன் மாப்ள கூப்பிடுற மாதிரியா புள்ளைக்குப் பேரு வச்சிருக்கீங்க…”

“ஏந்த்தை காதல் சுருக்கமாத்தான இருக்கு”

“ஐயோ அந்தப் பேரை… புள்ள வெளிய விளையாடும்போது காதல் ஏய் காதல்னு கூப்பிட்டா ஊரே ஒருமாதிரி பார்க்குது மாப்ள

“ஏந்த்தை காதல்ங்குறது அப்படி ஒரு கெட்ட வார்த்தையா என்ன”

வரலட்சுமி சிரித்தவளாக எழ

“என்ன லட்சு”

“ஒண்ணுமில்லப்பா இளனி குடிக்கலாம்னு”

“ஏன் என்கிட்ட கேட்டா நான் எடுத்து தரமாட்டனா”

சிரித்து தலையாட்டியபடி வரலட்சுமி அமர மதி இளநீரின் கொண்டையை சீவியபடி

“அத்தை காதல்னா என்ன அன்புதான… அன்புன்னு பேர் வச்சுக்குறதில்லையா… அதுமாதிரி இது காதல்… அவ எங்க காதலுக்கு அடையாளமா பொறந்திருக்கா… எங்க காதல் சின்னம்”

“நல்லா வியாக்கியானம் பண்றீங்க…”

“இதென்னமா கொடுமையா இருக்கு… உன் கேள்விக்குத்தான பதில் சொன்னாரு”

“ஆத்தா உம் புருஷன நான் ஒண்ணும் சொல்லலத்தா… சரி வளைகாப்புக் கதை என்ன”

“ம்ம்ம் நம்ம குடும்பக் கதைதான்…”
“அடியேய்”

“அம்மா என் புருஷனும் நீயும் அத்தையும் போட்டுவிட்டா போதும்… சும்மா அவங்கள இவங்களன்னு கூப்பிட்டு… வர்ரவங்களுக்காக தாலிய போடு… மெட்டிய போடும்ப… அப்புறம் பட்டு புடவை கட்டும்ப… எல்லாத்துக்கும் மேல நகை ஸ்டாண்டு மாதிரி வந்து நிக்கச் சொல்லுவ…”

“ஏண்டி ஒரு நாள் போட்டா குறைஞ்சா போயிடுவ…”

“என் புருஷனோ… ஏன் என் மாமியாரோ கூட அதைப் பத்தி கவலைப்படல… நான் ஏன் மத்தவங்களுக்காக கண்டதையும் மாட்டிக்கனும்…”

“அப்ப அவங்க ஒத்துக்கலன்னா இதையெல்லாம் மாட்டிக்குவல்ல… என் பேச்சை மட்டும்”

“இல்ல அவரு எனக்கு புருஷனாவே ஆகியிருக்க முடியாது….”

”ஐயோ ஐயோ… உன்னால அவரு கெட்டாரா இல்ல அவரால நீ கெட்டியா… கடவுளே…”

“அவரலாதான் நாங்க கெட்டோம்த்தை…”

“இதுக்கு என்ன எடக்கு வச்சுருக்கீங்க மாப்ள”

“அவருதான எல்லாரையும் படைச்சாருன்னு சொல்றாங்க…”

“இல்ல சாமி… இல்ல.. உங்க ரெண்டு பேரையும் சத்தியமா அவரு படைக்கல…”

“அப்ப அவரு படைக்காதவங்களும் இந்த பூமில பிறந்திருக்காங்கன்னு ஒத்துக்குறீங்க… ம்ம்…”

“மாப்ள அந்த வெள்ளைத் தாடிக்காரர படிச்சுட்டு ஏன் மாப்ள இப்படி வம்பு பண்றீங்க…”

“ஒரு வெள்ளை தாடிக்காரன் இல்லத்த மொத்தம் மூணு பேரு…”

“அம்மூ அம்மூ எனக்குப் பசிக்குது…”
“என்னடி வேணும் என் தங்கம்” என காதலை தூக்கினாள் வசந்தி

“எனக்கு எனக்கு க்ரீம் பிச்சி தர்றியா…”

”காதல் குட்டி க்ரீம் பிச்சி அதிகமா சாப்பிட்டா பல்லெல்லாம் சொத்தையாத்தான் வளரும்…”

“இல்லம்மா ஒண்ணே ஒண்ணு”

“சரி சாப்பிடு உடனே வாய் கொப்பளிக்கனும்…”

“ம்ம்ம் சரிம்மா”

அடுக்களை சென்று வசந்தி பிஸ்கட்டை எடுத்து கொடுக்க

“அம்மூ இன்னொண்ணு” என கண்ணடித்து கிசுகிசுத்தாள் காதல்

“உங்கம்மா பார்த்தா…. சரி இந்தா… வாங்கிட்டு அந்தப்பக்கமா ஓடிடு”

பிஸ்கட்டை வாங்கிக் கொண்டு ஓடினாள் காதல்

“கடைசியா என்னதான் சொல்றீங்க..”

“அத்தை நமக்குள்ள வச்சுக்குவோம்… யாரையும் கூப்பிட வேண்டாம்… நீங்க அம்மா அப்பா போதும்…”

“என்னமோ போங்க… அந்த கறுப்பு சட்டைக்காரன் மட்டும் உயிரோட இருந்தான்.. இந்நேரம் நான் நேரா அவன் வீட்டுக்கே போயிருப்பேன்…”

பையை எடுத்து தயார் செய்து ஷூவுக்கு பாலீஸ் போட்டான் மதிவாணன்

“ஏன்யா உனக்கு சாமி… சடங்கு… இதுல எல்லாம் நம்பிக்கை இல்லன்னா நீ உன்னோட வச்சுக்க வேண்டியதுதான… எதுக்குயா மேடை போட்டு பேசி… புஸ்தகமெல்லாம் போட்டு எங்க வூட்டு புள்ளைங்கள கெடுத்தன்னு கேட்டிருப்பேன்…”
”அப்போ.. சாமி இருக்கு… இந்த பூஜை பண்ணுங்க… மண் சோறு சாப்பிடுங்க… அவனைத் தொடாதீங்க… இவள வீட்டுக்குள்ள விடாதீங்க… தீட்டுன்னு அவங்க ஏம்மா மேடை போட்டு பேசுனாங்க.. புஸ்தகமெல்லாம் போட்டாங்கன்னு அவரு பதிலுக்கு கேட்டிருப்பாரு…”

“நீங்கல்லாம்… ச்சே… போடி…”

சரித்த மதி “நான் ஆஃபீஸ் கிளம்புறேன்… லட்சு நீ ரெஸ்ட் எடு… மறக்காம ஜூஸ் குடி… நான் சாய்ந்திரம் வந்தப்புறம் வாக் போகலாம்”

“சரிடா செல்லம்” என லட்சு இரு கைகளை விரிக்க

அவள் வயிறு அமுங்காதவாறு மென்மையாக அவளைக் கட்டிப் பிடித்து உதட்டில் முத்தம் வைத்தான் மதி. லட்சு இடது கன்னத்தை திருப்ப.. ஒரு செல்லக் கடி கடித்தான் மதிவாணன் “ஸ்… அம்மா”

வசந்தி சிரித்துக் கொண்டாள்

காதலுக்கு முத்தம் கொடுத்து “பைடா குட்டி…”

“பைப்பா… சாந்திரம் ஜெம்ஸ்… பிச்சுக்கூ… மறந்துடாத…”

“பிச்சுக்கூ… ” என ஐந்து விரல்களை குமித்து திறந்து காட்டிவிட்டு சென்றான் மதிவாணன்

“சரிடி நான் குழந்தைய தூங்க போட்டுட்டு மார்கெட் போயிட்டு வரேன்…”

“ம்ம்ம் சரிம்மா..” என தன் அறைக்கு சென்றாள் வரலட்சுமி.

இரண்டு தலையனைகளை முதுகிற்கு முட்டு கொடுத்து மெல்ல சாய்ந்து உட்கார்ந்தாள்.

“உன்னால அவரு கெட்டாரோ… அவரால நீ கெட்டியோ…..” அம்மாவின் கேள்வி அவள் நினைவுகளைக் கிளறியது.

II

புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்க கூட்டம் கூட்டமாக மக்கள் வேடிக்கைப் பார்த்து சென்றனர். ஒரு புத்தகக் கடையில் “பெண் ஏன் அடிமையானாள்” என கேட்டபடி கையில் தடியோடு புன்னகைத்தபடி அமர்ந்திருந்தான் ராமசாமி.

டாவின்சியின் தூரிகைக்காக கணக்கான புன்னகையோடு அமர்ந்த மோனலிசா போல் அல்லாது ஆட்டம் காட்டி ஓய்ந்த குழந்தையின் சிரிப்பு அது.

இரண்டு கைகள் அந்தப் புத்தகத்தை எடுத்தன.

“ஓ சாரி… நீங்களும் எடுக்குறீங்களா…” சொன்ன குரலை நிமிர்ந்து பார்த்தாள் வரலட்சுமி

வாரப்படாத தலை. குறவனின் கண் போன்ற லேசான பழுப்பு நிறக் கண்கள். அளவான மூக்கு… சிறிய கறிய உதடுகள்… பூப்போட்ட வெள்ளை சட்டை.. கருப்பு ஜீன்ஸ்… உட்லண்ட் ஷூவோடு நின்றிருந்தான் ஒருவன்.

“பரவால்ல இருக்கட்டும் நான் வேற காபி வாங்கிக்குறேன்” என்றவள் கவுண்டரை நோக்கி நடந்தாள்.

“பெண் ஏன் அடிமையானாள் வேணும்”

“அங்க இருக்குமே”

“அதை இவரு எடுத்துக்கிட்டாரு”

“அப்படியா… சரி இருங்க வேற காபி இருக்கான்னு பார்க்குறேன்…” என தேடியவன் “அடடா ஒரு காபிதான் இருந்திருக்கு…”

”என்னங்க இப்படி சொல்றீங்க…”

“சாரி மேடம்… நாளைக்கு வந்துடும்…”

“பச்… நான் நைட்டு ஊருக்குப் போறேன்….சரி விடுங்க நான் பார்த்துக்குறேன்” என கடையை விட்டு வெளியே வந்து நடந்தாள்.

பணத்தை கொடுத்து புத்தகத்தை வாங்கி வேகமாக அவளைப் பின் தொடர்ந்தான் மதி

“மேடம்”

“ம்…” என திரும்பினாள் வரலட்சுமி

“இந்தாங்க…”

“நீங்க ஏன் எனக்கு புத்தகம் கொடுக்குறீங்க…”

“இல்ல ஆசைப்பட்டீங்க.. முக்கியமான புத்தகம் வேற… அதான் என்னோட பரிசா…”

“எதுக்கு பரிசு…. நான் கேட்டனா”

“ஐயோ தப்பா நினைக்காதீங்க… ஊருக்குப் போறதா சொன்னீங்க… நான் இங்கதான் இருப்பேன்… நாளைக்கு வந்து வாங்கிக்குவேன்…”

‘நானும் ஊர்ல வாங்கிக்குறேன்… ம்ம் தள்ளுங்க… ஆளைப் பாரு ஆளை…”

மதிவாணன் வருந்தி இடது பக்கம் திரும்பினான்

“ஆசைப்பட்டாளேன்னு கொடுத்தா… ச்சே” எனப் போக

“எக்ஸ்கியூஸ் மீ” எனக் குரல் கேட்க. மதிவாணன் திரும்பினான்.

“கொடுங்க”

மதிவாணன் புரியாமல் பார்க்க “இல்ல ஊர்லையும் கிடைக்காமத்தான் நான் இங்க வாங்கிடனும்னு வந்தேன்…”

புன்முறுவலுடன் “இந்தாங்க…”

“கையெழுத்துப் போட்டுக் கொடுங்க நான் அன்பளிப்பாவே வச்சுக்குறேன்…”

“எதுக்குங்க வம்பு நீங்க காசு கொடுத்துடுங்க…”

சிரித்த வரலட்சுமி “எவ்வளவு”

“40 ரூபாய்”

100 ரூபாயை எடுத்து கொடுத்தாள் வரலட்சுமி

”சாரிங்க என்கிட்ட சில்லறை இல்ல”

“ம்ம்ம் .. சரி காண்டீன்ல மாத்திக்குவோம்… காஃபி சாப்பிடலாம்ல…”

“ம்ம் சாப்பிடலாம் காஃபிக்கான காசைக் கழிச்சுட்டு மிச்சத்தைக் கொடுத்தா போதும்….”

வரலட்சுமி சிரித்தபடி போனாள். பெண் ஏன் அடிமையானாள் என தெரிந்துகொள்ள அன்று லட்சுமி வாங்கிய புத்தகம் உண்மையில் அவளுக்கு ஒரு மகத்தானக் காதலனைப் பரிசளித்தது.

III
காதல் பிறந்தாள். 3 வருடம் கழித்து இப்போது காதலுக்குப் பிறகு வரலட்சுமி மீண்டும் கருவுற்றிருந்தாள்.

“ஏன் லட்சு முதல் குழந்தைக்கு காதல்னு பேர் வச்சுட்டோம். அடுத்த குழந்தை ஆண் குழந்தையா இருந்தா அன்புன்னு பேர் வச்சுடலாமா… பொண்ணா இருந்தா நேயா… சரியா… உனக்கு ஒகேதான..”

“பையனா இருந்தா நேசன்னு வச்சுக்கலாம்… ஆனா எனக்கு பையன் வேண்டாண்டா…”

அவளது கண்களை தன் கண்களால் முத்தமிடுவது போல் பார்த்த மதிவாணன்அவள் தாடையைப் பிடித்து சற்றே நிமிர்த்தி “லட்சு உனக்கு சின்ன வயசுல நடந்ததை நினைச்சு குழப்பிக்காத… நாம எல்லாத்தையும் வெளிப்படையா சொல்லி வளர்த்தா ஒரு தப்பும் நடக்காது”

அவன் தோளில் சாய்ந்து “சரி மதி”

அவள் கண்ணீரை துடைத்தான் மதிவாணன்.

நேற்று நடந்ததை நினைத்துப் பார்த்தவளுக்கு பழைய நினைவுகள் வந்து அச்சமூட்டியது.

III

அப்போது அவளுக்கு வயது 8 தம்பிக்கு 6. பொம்மைகளை வைத்து விளையாடியபடி இருக்க

“அக்கா அக்கா இங்க பாரேன் எனக்கு எப்படி இருக்கு… எங்க உனக்குக் காமி…”

“என்னக்கா இது உனக்கு வேற மாதிரி இருக்கு…”

“ஆமாம் தம்பி உனக்கு மூணு இருக்கு… எனக்கு ஒண்ணுதான் இருக்குல்ல….”

“அக்கா அப்ப நீ எது வழியா ஒண்ணுக்குப் போவ…”

“இது வழியாத்தாண்டா…”

“உனக்கு நீளமா இல்லையே… அப்ப ஒண்ணுக்கு கீழ வருமா…”

“ம்ம்ம் வருதே…”

“உனக்கு இப்படியே இருக்குமா சுருங்குமா…”

“ஏண்டா…”

“இல்ல எனக்கு இப்ப… தொட்டுப் பாரேன் எப்படி சுருங்கி காஞ்சு போன மாதிரி இருக்குன்னு…”

“ஆமாண்டா…”

“சில நேரத்துல இப்படி ஆகிடுதுக்கா….”

“சரி விடு… சரியாகிடும்… நான் வெளிய போய் விளயாடப் போறேன்”

பாவாடையை சரி செய்து கொண்டு ஓடினாள் வரலட்சுமி

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி தன் வயிற்றைத் தடவினாள் வரலட்சுமி. பனிக்குடத்தில் உப்புப் பரவியது.

“அக்கா வர்றியா இன்னைக்கும் தொட்டு தொட்டு விளையாடலாம்…”

“போடா நீ அழுத்தி தொடுற வலிக்குது…. இனிமேல் நான் உன்கூட விளையாட மாட்டேன்… போடா…”

IV

குலுங்கி குலுங்கி அழுதாள் வரலட்சுமி… “இப்ப எனக்குப் பையன் பிறந்தா அவனும்… என் பொண்ணை அப்படி…”

“நான் தெரியாமத்தான அவனுக்கு … தம்பியும் தெரியாமத்தான அப்படி கேட்டான்…”

“ஐயோ எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கனும்… இல்ல மத்தவங்க வீட்லையும்…”

“ஏன் அம்மா அப்பா சின்ன வயசுலையே அதைச் சொல்லிக் கொடுக்கல…”

“ஆம்பிளை பொம்பிளைக்கு உறுப்பு வேற வேற… ஏன் என்னன்னு அம்மா அப்பா சொல்லி இருந்தா தம்பிக்கு அப்படி ஒரு சந்தேகம் வந்திருக்குமா…”

“இன்னைக்கு நான் குத்த உணர்ச்சில துடிக்குற மாதிரி… எம் பொண்ணு… ம்ஹூம்…”

“லட்சு இது ஒரு சாதாரண விஷயம்…. உடல் உறுப்புகளை பத்தி தெரிஞ்சுக்குற ஆர்வத்துல உன் தம்பி அக்காங்குற முறைல உன்கிட்ட அப்படி கேட்டிருக்கான்… நீயும் தம்பிதானன்னு சொல்லிக் கொடுத்திருக்க… விடு… இதுக்கெதுக்கு தினம் தினம் அழுதுகிட்டிருக்க….”

“நாம நம்ம பிள்ளைங்களுக்கு அந்த வயசு வரும்போது எல்லாம் சொல்லிக் கொடுத்து வளர்ப்போம்… அழாத படு… எவ்வளவு புத்தகங்கள் படிக்குற இந்தச் சின்ன விஷயத்தை உன்னால தாண்ட முடியலையா என்ன லட்சு” என அவள் நெற்றியில் முத்தம் வைத்து அவளைப் படுக்க வைத்தான்.

IV

நேசன் ஓடி வந்தான் “அம்மா அம்மா… ஏம்மா நான் டவுசர் போடுறேன்.. அக்கா மட்டும் ஸ்கர்ட் போடுறா…” ஆஃபீசிலிருந்து வந்து காலணியை கழட்டிய வரலட்சுமியிடம் கேட்டான் நேசன்.
வரலட்சுமி சற்று அதிர்ச்சியுடன் பார்த்தவள் “அக்காகிட்ட இதைப் பத்தி கேட்டியா நேசன்”

“இல்லம்மா உன்கிட்டத்தான் கேக்குறேன்… ஏம்மா அக்கா ஒண்னுக்கு போற மாதிரி ஈசியா டிரஸ் போடுது… நான் மட்டும் ஏம்மா… அவசரமா வரும்போது…. இந்த டவுசர் கஷ்டமா இருக்கும்மா… சில நேரத்துல ஜிப்புல மாட்டிக்குதும்மா…”

ஃபோனை எடுத்தாள் வரலட்சுமி.

புத்தகங்கள் போஸ்டர்களோடு வந்தான் மதிவாணன்

“நேசன் குட்டி… காதல் செல்லம் இங்க வாங்க இங்க வாங்க… அப்பா என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு பாருங்க….”

“என்னதுப்பா”

“குட் டச் பேட் டச்” என்ன புக்பா இது

நேசனை தூக்கி மடியில் வைத்தவனாக மதிவாணன் “ம் இதுதான் உங்க உடம்பை பத்தி தெரிஞ்சுக்கத் தேவையான புத்தகம்”

“ஹை”

“அப்பா இது நான்…. இது அக்காவா”

“ஆமாம் நேசன்… காதல் பார்த்தியா இது… ஆம்பிளைங்க உடம்பு… அவங்க உடம்புல…”

“நேசன் இது பொம்பிளைங்க உடம்பு…”

வண்ண வண்ணப் படங்கள் போடப்பட்டிருந்த புத்தகங்களை தங்கள் மேல் போட்டபடி பிள்ளைகள் உறங்கிப் போயிருந்தார்கள்.

“அம்மா ஜிப்புல மாட்டிக்குதும்மா… அக்காக்கு அந்தப் பிரச்சினை இல்லல்ல…” என்று நேசன் கேட்டது நினைவுக்கு வர “ஒருவேளை தம்பிக்கும் அதனாலதான் எனக்கு எப்படி இருக்குன்னு…. ”

பதில் கிடைத்தவளாக வரலட்சுமி

“மதி நான் ஸ்கூல் பிள்ளைங்களுக்கு ‘நோ யுவர் பாடி’ன்னு வகுப்பெடுக்கலாம்னு இருக்கேன்”  தனது கைகளை அவன் தோளின் மீது போட்டு அவன் முதுகில் தன் முகத்தை பதித்தாள் வரலட்சுமி

“வேலைக்கும் போயிட்டு எப்படி லட்சு” அவளை நோக்கி திரும்பினான் மதிவாணன்

“மாசத்துல ஒரு நாள் லீவு எடுக்கலாம்..  அந்த டைம்ல எடுக்குறேன்”

“உன் உடம்பு அதுக்கு ஒத்துழைக்கும்னா செய்யு… கிடைக்குற ஒரு நாளையும்… அலைய முடியுமான்னு பார்த்துக்கோ”

“முடிஞ்ச அளவுக்குப் பண்றேன்…”

“ம்ம் சரி…” அவளை தன் நெஞ்சின் மேல் இறுக்கிக் கொண்டான் மதி. அவனின் வெம்மையான மூச்சுக் காற்று அவளின் நெற்றியை சூடேற்றியது.

தன் இடதுகாலை மதிவாணனின் தொப்பையின் மேல் போட்டபடி அவனுள் ஒடுங்கியவளாக அவன் கன்னத்தை ஈரமாக்கியவாறு அன்றிறவு நிம்மதியாக உறங்கினாள் வரலட்சுமி.

காதலும் நேசனும் அருகில் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள்.


2014 july (16.7.14)
https://drive.google.com/file/d/0BwdaEHEd7U78ZHZid2o4WHdkVnc/view  


Oct 11, 2016

இதுவரை வசுமித்ரவுக்குக் கிடைத்துள்ள பட்டங்கள்

தமிழ்நாட்டில் அறிவுச்சூழல் எத்தகைய தரத்தில் இருக்கிறது என்பதற்கு சமீப கால ‘அவதூறுகளே’ சாட்சி. அனைத்து ‘விமர்சனங்களிலும்’ அறிவார்ந்த பார்வைகள் இருக்கிறதோ இல்லையோ, தனிப்பட்ட தாக்குதல்களுக்கும், அவதூறுகளுக்கும், இன்னும் சொல்லப் போனால் முட்டாள்தனமானப் பேச்சுகளுக்கும் பஞ்சமே இல்லை.

இந்த இணையவெளி ஏற்படுத்தும் மாயை ஒவ்வொருவரையும் எப்படியெல்லாம் ‘மாற்றுகிறது’ என்பதைக் காணும்போது சற்று அதிர்ச்சிகரமாகவும் இருக்கிறது. பண்பையும், உண்மையையும் அது விழுங்கிவிட்டது என்பதற்கப்பால், (இடதுசாரிகள்’ என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்களிடம்) தத்துவத்தைக் கூட குழிதோண்டி புதைத்துவிடும் அளவுக்கு இந்த முகநூலானது ஓர் அடையாள நெருக்கடியை ஏற்படுத்துகிறது!
சில மாதங்களுக்கு முன்புவரை இந்த நோய் இலக்கிய உலகை மட்டுமே பீடித்திருந்தது. தற்போது அது ஒரு சில ‘இடதுசாரி’களையும் தாக்கியிருக்கிறது.
இலக்கிய உலகின் ‘விமர்சன’ப் போக்கு
1. ஓர் இலக்கியக் கூட்டம் முடிவடைந்த பின்னர், அது தொடர்பானப் பதிவுகள் முகநூலில் தொடர்ந்தது. அப்படி ஒரு விவாதத்தில் நேசமித்ரன் என்பவருக்கு வசுமித்ர சில கேள்விகள் வைத்ததும் தொடங்கியது தாக்குதல்கள்.
அவர் வசுமித்ரவுக்கு அளித்த பட்டங்கள்: ப்ளாட்ஃபார்ம் டிக்கெட்டுக்குப் பின்னாடி இருக்கிற ஆங்கிலத்தைக் கூட படிக்கத் தெரியாதவர், ரவுடி, அடித்துவிடுவார் என்பதாக. அதிலும் உச்சபட்சமாக, அதுநாள்வரை வசுமித்ரதான் எனது கவிதை மேம்படவு, தான் அடைந்த உச்சத்திற்கும் வழிகாட்டி என்றெல்லாம் என்னிடமே சிலாகித்த அவருக்கு திடீரென்று வசுமித்ர ரமேஷ் பிரேதனைக் காப்பியடிப்பவராகிப் போனார்.
இதன் தொடர்ச்சியகக் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், வசுமித்ர மட்டும் உத்தமனா, குடிப்பதில்லையா என்றெல்லாம் சீறிவிட்டு, பொண்டாட்டியைப் போட்டு அடிக்கிறார் என்று ‘மிகுந்த நாகரீகத்தோடு’ ‘விமர்சனங்களை’ எழுதினார். ஆனால், இதுவரை நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. இந்த ’மோதல்’ வசுமித்ரவின் எழுத்து சார்ந்து வந்ததல்ல. தேனியில் கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் குறித்து நேசமித்ரன் வைத்த புகார்களுக்கு பதிலளிக்கச் சென்று, அதாவது தன் நண்பனுக்காகப் பேசச் சென்று வசுமித்ர பெற்ற பட்டங்கள் இவை. ஆனால், இன்று அந்த நண்பர் தன்னைக் கேவலமாகப் பேசிய அந்த நேசமித்ரனோடு ‘மிகுந்த நட்பில்’தான் இருக்கிறார்! ஓர் இலக்கிய இதழ் நடத்தினால் போதும், நட்பாவது மண்ணாங்கட்டியாவது!
2. எங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கூடிப் பழகி, பின்பு ஒரு பதிவிற்கு எதிர்கருத்து தெரிவித்ததாலேயே வசுமித்ரவுக்கு ‘சாதிவெறியர்’ பட்டம் கொடுத்தவர் பேய்க்காமன் என்பவர். பேய்க்காமன் எனும் பெயரை அவருக்கு வைத்ததே வசுமித்ரதான், அவர் இயற்பெயர் விஜயபாஸ்கர். (தலித் சாதியைச் சேர்ந்தவர்). எங்கள் திருமணத்தைக் கூட அவருடைய பொறுப்பில்தான் நடத்தினோம்.
இதில் நகைச்சுவை என்னவென்றால், இன்று தமுஎகச ‘தொண்டர் படை’ எஸ்விஆருக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வருவதுபோல் அன்று தமிழ்ச்செல்வன் குறித்து பேய்க்காமன் எழுதிய அவதூறுக்கு எந்தப் படையும் வரவில்லை. வசுமித்ர மட்டுமே நண்பன் என்ற முறையில் பேய்க்காமனைத் தொடர்பு கொண்டு தவறாக எழுதியிருக்கிறார் என்று சொன்னதோடு, சில எதிர்கருத்துகளையும் வைத்தார். தொலைபேசியில் ‘அப்படியா வசு, சரி வசு’ என்றெல்லாம் பேசிவிட்டு, அடுத்த நொடி, முகநூலில் தமிழ்ச்செல்வனைப் பேசினால் வசுமித்ராவுக்கு ‘ஏன் பொங்குது’ என்று ஆரம்பித்து ‘சாதி வெறி’ என்று தனது சாதியை முன்வைத்து முத்திரை குத்திவிட்டு ஓடிவிட்டார். அவருக்கு நான் வைத்த கேள்விகள் இன்றும் அப்படியே இருக்கிறது.
சில மாதங்கள் கழித்து என்னுடையக் கட்டுரை ஒன்று சிறப்பாக இருப்பதாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்! நான் பதில் ஏதும் அளிக்கவில்லை! எனக்கிருந்த ஒரே கேள்வி, வசுமித்ர சாதிவெறியர், அவர் மனைவி ‘முற்போக்காளர்’! (பெண் என்பதாலா?)
3. விக்ரமாதித்தன், தேவதச்சன் இருவரை விமர்சித்து வசுமித்ர ஒரு பதிவை தனது வலைப்பூவில் எழுதினார். அதற்கும் இலக்கிய உலகில் ஒரே புலம்பல்! இங்கு எல்லாமே வழிபாட்டு மனநிலைதான் இருக்கும் போல! விமர்சனத்திற்கு துளியும் இடமில்லாத ஒரு சமூகமாக சில ’அறிவுஜீவிகள் / இலக்கியவாதிகள்’ மாற்றிவருகின்றனர். இப்போது அந்தப் பட்டியலில் சில இடதுசாரி அமைப்புகளின் உறுப்பினர்களும் சேர்ந்திருக்கிறார்கள்.
புத்தகக் கண்காட்சியில் வசுமித்ர ஓர் அரங்கில் உட்கார்ந்திருந்தபோது, ஒரு ‘கவிஞர், எழுத்தாளர்’ ‘அவங்களை எல்லாம் விமர்சிக்கிற! நீ என்ன பெரிய ஆளா’ என்று தானாக வம்பிழுத்து, (அப்போது அவர் குடித்திருந்தார்) மிகவும் அநாகரீகமாகப் பேசி, உணர்ச்சியைத் தூண்டிவிட்டபடியே இருந்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் வசு அவரைத் தள்ளிவிட, அங்கு ஒரு சலசலப்பு ஏற்பட்டது!
ஆனால், அச்சம்பவம் குறித்து பதிவுகள் எழுதிய ‘இரு பெரும் ஆளுமைகளில்’! ஒருவர், இந்த இலக்கியவாதிகள் ஏன் இப்படிக் குடித்துவிட்டு பொதுவெளியில் கலாட்டா செய்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக தனது கற்பனையிலிருந்து எழுதினார்.
மற்றொருவரோ வசுமித்ர என்பவர் விரலை கடித்துவிட்டாராமே என்று எழுதினார்!
தோழர்களே! இதுதான் இங்கு நிலவும் ‘விமர்சன அரசியல்’!
4. அதேபோல் சம்பந்தமே இல்லாமல் லக்‌ஷ்மி சரவணக்குமார் என்பவர் என்னைப்பற்றி அவதூறாக ஒரு பதிவு எழுதினார். அதையும் நாங்கள் எப்படிக் கையாண்டோம் எனும் பதிவு எங்கள் தளங்களில் உள்ளது! ஆனால், தாமாக வந்து அவதூறைத் தொடங்கிவிட்டு, எந்த இலக்கியவாதியாவது எங்களைப் பற்றி ஏதேனும் எழுதினால், உடனே அங்கு ஆஜராகி கேவலமானப் பதிவுகளை எழுதுவதை தொடர்ந்துவந்தார். அதற்கு நான் என்ன பதிலடி கொடுத்தேன் என்பது எனது வலைப்பூவில் உள்ளது!
இவரும் தன்னுடைய அத்தகைய செயலுக்குக் கொடுத்த விளக்கம் ‘எவரோ ஒருவரின் தூண்டுதலுக்கு உள்ளாகி அப்படி செய்துவிட்டேன்’ என்று தனிப்பட்ட முறையில் சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டு, பொதுவெளியில் வழக்கம் போல தனிப்பட்ட காழ்ப்புகளைத் தொடர்ந்து எழுதினார். அதற்கும் எதிர்வினைகளைப் பதிவு செய்தோம்.
5. இந்த இலக்கியவாதிகள் சிலர் ஏன் தமது ‘இலக்கிய வளர்ப்புத் தொண்டினை’ மற்றப் பெண்களிடமே காட்டுகின்றனர், ஏன் தமது மனைவிக்கு அத்தகைய ‘அறிவினை ஊட்டுவதில்லை’ என்று ஒரு கூட்டத்தில் கேள்வி எழுப்பியதற்காக, அபிலாஷ் சந்திரன் என்பவர் முகநூலில் ‘பொங்கி எழுந்தார்’. கற்பனைக் கதை என்கிற பெயரில், வசுமித்ரவுக்கு என் மீது சந்தேகம், எந்த ஆணும் என்னுடன் பேசுவதை அவன் விரும்புவதில்லை, அவனது நிழல்கூட என்னைக் கண்கானித்தபடியே இருக்கிறது என்று சரோஜாதேவி பத்திரிகைக்குக் கதை எழுதுவதுபோல் எழுதினார்.
அதற்கொரு ‘போராட்டத்தை’த் தொடுக்க வேண்டியதாயிற்று! (சம்பந்தப்பட்டவர் அதன் பிறகு மன்னிப்பு கேட்டார்)
6. இப்போது எஸ்விஆரை விமர்சித்ததும், தமுஎகச ‘தொண்டர் படை’ ஒன்று கிளம்பியிருக்கிறது பட்டங்களுடன் – ரவுடித்தனம், அராஜகம், வயசுக்கு மரியாதை கொடுக்காமல், படித்த திமிர், பொறுக்கி இப்படியாக… இதில் உச்சபட்ச கேவலம் என்னவென்றால், கூட்டத்தில் அடிக்கடி தண்ணீர் குடித்ததைக் கூட ‘ஆளுமைக் கோளாராக’ இழுத்துப் பிடித்து எழுதுவதென்பதுதான்! என்னவகையானப் பண்பு இது! ஒருவேளை இந்த பூர்ஷுவா அறிவுஜீவிகளுக்கு தாகமே எடுக்காதோ?
வசுமித்ர கேட்ட கேள்வி என்ன? முதலில் அவர் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டாரா? இவர்களாக ரஙக்நாயகம்மா நூல் குறித்து ஒரு விவாதத்தைத் தொடங்கிவிட்டு, அதற்கு நேரடியாகத் தொடர்புடைய வசு பதில் சொல்ல எழுந்தபோது, வசு அங்கு வந்திருப்பதைக் கண்டு ’அச்சமுற்ற’ ஆதவன் நேரம், காலம், இது ரங்கநாயகம்மா மேடையல்ல என்றெல்லாம் முதலில் வாய்ப்புத் தரவே மறுத்து, பின்னர் வசு பேசியிருக்கிறார். அதிலும் அவர் விருதுபற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை, நூல் பற்றிய எஸ்விஆரின் கருத்தோடு உடன்படவில்லை என்று சொல்லிவிட்டு ‘எஸ்விஆர்’ எப்படி மார்க்சிய அறிஞர் என்று மட்டுமே கேட்டிருக்கிறார். எஸ்.வி.ஆரை கம்யூனிஸ்டு இல்லை, மார்க்சிஸ்ட் இல்லை என்று வசு சொல்லவில்லை, மார்க்சிய அறிஞர் என்றால் மார்க்சியத் தத்துவத்தை வளர்தெடுக்க அதற்கென அறிவார்ந்த (Schoalrly contribution) பங்களிப்பு செய்திருக்க வேண்டும். எஸ்விஆரின் பங்களிப்பை வாசகர்களே படித்தறியலாம்! அது மார்க்சியத்தை வளர்க்க உதவக்கூடியதா, அல்லது திரிக்கவும், சிதைக்கவும் உதவக்கூடியதா என்பதையும் அறிந்துகொள்ளலாம்! ஆனால் இதற்கு மார்க்சியத்தை அறிந்திருப்பது அவசியம்!
என்னோடு உரையாடும் ஒவ்வொரு புரட்சிகர அமைப்புகளும் (இந்த மார்க்சிஸ்ட் கட்சி போல் அல்லாத) அதில் உள்ள தோழர்களும் எஸ்விஆர், வ. கீதா, அ. மார்க்ஸ், ரவிக்குமார் ஆகியோரை மார்க்சிய எதிர்ப்பாளர்கள் (anti-marxists) என்றுதான் எப்போதும் வசைபாடி வந்துள்ளார்கள். பொதுவெளியிலும் அத்தகையப் பதிவுகள் உள்ளன. ஆனால், இன்றைக்கு வசுமித்ர மட்டுமே எஸ்விஆரை அவதூறு செய்வதாக இவர்கள் திரிக்கிறார்கள். இத்தனைக்கும் வசுமித்ர எஸ்விஆரை மார்க்சிய எதிர்ப்பாளர் என்றுகூட சொல்லவில்லை. மார்க்சிய அறிஞர் என்றால் அதற்கான பங்களிப்பு என்ன என்றுதான் கேட்கிறார். மேலும் எஸ்வீஆர் எழுதிய ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம், அந்நியமாதல், இருத்தலியமும் மார்க்சியமும் போன்ற நூல்கள் எதற்குப் பயன்படக்கூடியவை என்ற அடிப்படையில், இவர் ஒரு தலைமுறையை சீரழித்தவர் என்று பேசியிருக்கிறார். இதில் என்ன தவறு அல்லது பொறுக்கித்தனம் அல்லது சாதி வெறி?
ஒருவரை மார்க்சிய அறிஞரா என்று கேட்பதில் என்ன அராஜகம், மேதாவித்தனம்? இவர்களைப் போல் சதா சர்வ காலமும் ‘மூத்தவர்களுக்கும்’, ‘நண்பர்களுக்கும்’ துதிபாடிக் கொண்டே இருக்க வேண்டுமா? வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கோஷ்டி கானம் பாடிக்கொண்டு தம்முடைய சொந்த போட்டி, பொறாமைகள், வன்மத்தின் காரணமாக ‘கூலி உழைப்பை’க் கேவலப்படுத்தி, தனிப்பட்ட வாழ்க்கையைப் பேசி சீண்ட வேண்டுமா? தமக்கு லைக் போடுவதற்காக கும்பல் சேர்ப்பிற்காக வசைச் சொற்களை நிரப்பி அவதூறு செய்ய வேண்டுமா? இதுபோன்ற பேச்சுகள் ‘ஜனநாயகம்’, ‘நாகரீகமான பேச்சு’ ஆனால் ஒரு விமர்சனம் வைத்தால் ‘ரவுடி’, ‘திமிர்’, பொறுக்கி, ‘சீரியலுக்கு வசனம் எழுதும் கேவலப்பட்டவன்’, (இப்போது நடிப்புத் தொழில் செய்யும் கேவலம் வேறு சேர்ந்திருக்கிறது).
மார்க்சியத்தின் பெயராலும், முற்போக்கு அமைப்பு என்ற பெயரிலும் இவர்கள் செய்யும் இந்த கும்பல்வாத அராஜகத்திற்குப் பெயர் குண்டாயிசமே அன்றி மார்க்சியமல்ல என்று மட்டுமே சொல்ல முடியும்.
தோழர்களே! விமர்சனம் செய்தாலோ, கேள்வி கேட்டாலோ இந்த ‘முற்போக்கு குண்டர்கள்’ என்ன செய்வார்கள் என்பதை நீங்களே அவர்களது எழுத்துகளைப் படித்தறியலாம். இதுபோன்ற எந்த வகையான அவதூறுகளும், அவமானப்படுத்தல்களுக்கும் நாங்கள் சோர்வுறப் போவதில்லை!
காலம் கடந்து நிற்கப்போவது மக்களுக்கு அறிவூட்டக்கூடிய எழுத்துகளே அன்றி இதுபோன்ற கேவலப்பட்ட ‘அவதூறுகள்’ அல்ல! இப்படியெல்லாம் எழுதுவதன் மூலம் இந்த முகநூலில், தமது நட்பு வட்டத்தில் இவர்கள் ‘புரட்சியாளராக’ வலம் வர முடியும். ஆனால் சமூக மாற்றத்திற்குத் தேவைப்படும் அறிவு வளர்ச்சிக்கான பங்களிப்பு என்னவென்று பார்க்கும்போது ‘அற்பப் பதிவுகளே’ அதிகமாக மிஞ்சும்!
நாங்கள் என்ன தொழில் செய்கிறோம் என்பது வெளிப்படையாகத் தெரிவதாலேயே இவர்கள் தனிப்பட்ட தாக்குதலைத் தொடுக்க முடியும், இல்லையா! ஆனால், அமைப்புகளில் இருப்பவர்கள், பதிப்பகம் நடத்துபவர்கள், சில எழுத்தாளர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், எப்படி சம்பாதிக்கிறார்கள் (எஸ்விஆர் உட்பட) என்று எதுவும் பொதுவில் தெரியாததால், அவர்கள் ‘முழுநேர’ புரட்சியாளர்கள். அமைப்பில் அட்டெண்டஸ் போட்டுக்கொண்டு, போராட்டங்களில் கலந்துகொண்ட செல்ஃபிகளைப் பகிர்ந்துகொண்டு, எல்லாருடைய பக்கங்களிலும் தாமாக சென்று விருப்பக்குறி இட்டு, சிலபல கமெண்டுகளையும் எழுதிவிட்டால் போதும் சமூகத்திற்காகத் தம்மையே அர்ப்பணித்துக்கொண்டவர்கள்! தம்முடைய சொந்த அடையாளத்திற்காக அமைப்பைப் பயன்படுத்திக்கொள்வதைவிட உதிரிகளாக இருந்துகொண்டு தம் எல்லைக்கும், பொருளாதாரத்திற்கும் உட்பட்டு சில வேலைகளைச் செய்வது எவ்வளவவோ மேலானது.
உழைப்பாளிக்கு, கூலி உழைப்பு அடிமைகளாக இருப்பதைத் தவிர வேறு சாத்தியங்கள் இல்லாத ஒரு அமைப்பில், கிடைக்கும் வாய்ப்புகளைத்தான் ஒருவர் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதைக் கூட அறியாத முற்போக்கு குண்டர்களாக இவர்கள் இருப்பது தெளிவாகிறது! இன்னொரு விஷயம், மார்க்சியத்தைப் பேசுவது, பாட்டாளி வர்க்க அரசியலைப் பேசுவதென்பது ஏதோ ஒழுக்க நெறியல்ல, அது சமூகம் என்னவாக மாறவேண்டும் எனும் இலக்கை முன்வைத்து முன்னேறும் ஒரு அரசியல் தத்துவம் மற்றும் நடைமுறை வழிகாட்டி. ஆனால், இன்றைய நிலைமையில் ஒருவர் நிலவும் அமைப்புக்கு உட்பட்டே உழைத்து வாழ முடியும். தன்னைப் போல் மற்றவரும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகிறார் என்பதையும் கணக்கில் கொண்டு எல்லாருக்கும் உழைப்புச் சுரண்டலில் இருந்து விடுதலை வேண்டும் என்பதால் மார்க்சியத்தைப் பேசுகிறோம். ஆனால் இவர்கள் பேசுவது முட்டாள்தனமான தூய்மைவாதம், அது ஒரு மதவாதக் கோட்பாடு! புறச்சூழலை கணக்கில் கொள்ளாத கருத்துமுதல்வாதம்.
‘படைப்பு’ (அல்லது வேலை) என்று வரும்பொழுது, அதன் மீது ஒருவருக்கு என்னவிதமான அதிகாரமும், சுதந்திரமும் இருக்கிறது என்பதைப் பொறுத்தே ஒருவரின் ‘அரசியலை’ விமர்சிக்க முடியும்! வசுமித்ர ஒரு சிலரைப் போல் ‘ஓனர்’ அல்ல, அவன் ஒரு கூலி உழைப்பாளி! கிடைக்கும் கூலிக்கு மாரடிக்கும் ஒரு பாட்டாளி! ஆனால், அந்தப் பாட்டாளி சம்பந்தப்பட்ட முதலாளிகளுக்கு விசுவாசமாக தனது அரசியலை சமரசம் செய்துகொண்டு, அம்முதலாளித்துவ நிறுவனங்களின் சுரண்டலுக்கு ஆதரவாகப் பேசினாலோ அல்லது அவர்களின் ‘சரக்கினை’த் தூக்கிப் பிடித்து எழுதினாலோ, புகழ்ந்துரைத்துக் கொண்டே ‘காக்காப் பிடிக்கும்’ வேலைகளைச் செய்தாலோ விமர்சிக்கலாம். (தான் பெற்ற விருது பற்றிய செய்தையைக் கூட பொதுவெளியில் பகிரக் கூடாது என்று சொல்லும் ‘பொறுக்கி’ அவன்!).
தொழிலை இழுத்து பேசி இவர்கள் தம்மை பிற்போக்குவாதிகள், கருத்துமுதல்வாதிகள், எல்லாவற்றுக்கும் மேல் தம் அடையாள நெருக்கடியின் காரணமாக, (தம்மை ஆதரித்து பேசாத சில அற்பக் காரணங்களுக்காக) தத்துவத்தைக் கூட விலை பேசுபவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.
இத்தகைய போக்குகளை ஊன்றிக் கவனிக்கும் போது இந்துத்துவப் பாசிஸ்டுகள், இந்துந்துவ குண்டர்களுக்கு இவர்களும் சற்றும் சளைத்தவர்களல்ல என்பதையேக் காண முடிகிறது.

Jun 20, 2014

பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம் - அம்பை



தமிழில் தற்போது எழுதிவரும் ஆண் எழுத்தாளர்களுக்கு இணையாகப் பொருட்படுத்தக்கூடிய அளவில் பெண் எழுத்தாளர்கள் அதிகம் இல்லை என்று சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் எழுதியிருந்தார். அத்துடன், “பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள் மூலம் ஊடக பிம்பங்களாக ஆனவர்கள். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்குப் பெண்களாகத் தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது” என்றும் கூறியது தமிழ் இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பெண் எழுத்தாளர்கள் சந்திக்கும் விமர்சனங்களை வரலாற்றுப்பூர்வமாக எழுத்தாளர் அம்பை இக்கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.
வெகு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் எழுத்தாளர் (ஆண் எழுத்தாளர்தான்!) ஒரு மூத்த ஆண் எழுத்தாளருக்கு எழுதிய கடிதத்தில் என் கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ‘அம்பையின் கதைகளைப் படிக்கும்போது அவர் உடல் ரீதியாகத் திருப்தியுறாதவர் என்று தெளி வாகத் தெரிகிறது’ என்ற தொனியில் அமைந் திருந்தது அவர் விமர்சனம். கருணை உள்ளம் கொண்ட அந்த மூத்த எழுத்தாளர், அந்தக் கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார் தன் கருத்தொன்றையும் கூறாமல். உடனே அந்தக் கடிதம் எழுதியவர் எழுதியிருந்த கதைத் தொகுப்பு ஒன்றைப் படித்தேன். தாங்க முடியவில்லை. ‘திருப்தியுற்றவர்கள் கதைகளின் தரம் இதுதான் என்றால், நல்லவேளை நான் திருப்தியுறவில்லை’ என்று தோன்றியது.

பெண் எழுத்து குறித்தும், பொதுவாகப் பெண்களைக் குறித்தும் இருக்கும் இந்த நோலாமை தமிழ் இலக்கிய விமர்சன மரபிலும், தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு தொடர் கண்ணியாக இருந்துவருகிறது. கல்வியை, உரிமைகளை, வெளிப்பாட்டுக் கான நியாயமான இடத்தைக் கோரும் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் குறையுள்ளவர்கள், அந்தக் குறை பாடுதான் அவர்களை எல்லா வகையிலும் செயல்படத் தூண்டுகிறது என்ற எண்ணம் பல காலமாக இருந்துவருவதுதான்.

இந்தக் குறைகள்தான் என்ன? அழகின்மை, தோற்றப் பொலிவின்மை, ஓர் ஆணின் துணையின்மை, பெண்களுக்கு இருக்கக்கூடாத அதீத காம இச்சைகள் இவைதான் பெண்களை இயக்கும் அடிப்படையான குறைகள்/காரணங்கள் என்ற கருத்து தொடர்ந்து நிலவிவருகிறது. அத்தனையும் பெண் உடல் மேல் கட்டப்பட்டவை. இவை மட்டும் இல்லாதிருந்தால் பெண்ணின் செயல்பாடும் வெளிப்பாடும் வேறு மாதிரி இருந்திருக்கும் என்ற நோக்கு. பெண் மட்டும் ஆண்கள் உவகையுறும் “பெண் தன்மை” கொண்ட வளாக இருந்திருந்தால் சரித்திரத்திலும் இலக்கியத்திலும் அவள் பங்கு வேறு வகைப்பட்டிருக்கும் என்ற கணிப்பு.

பாரதி எழுதிய விமர்சனம்

இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. சக்ரவர்த்தினி பத்திரிகையில் பாரதியார் 1906-ல் பெண்கள் அரசியல் உரிமை கோருவதைப் பற்றி எழுதும்போது, இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஒரு முறை தி. ஜானகிராமனின் கதை ஒன்றைக் குறித்து குகப்ரியை விமர்சித்தபோது, “குகப்ரியை மாமி மடியாக எழுதுபவர்” என்று தி. ஜானகிராமன் பதிலளித்தார் என்று குகப்ரியை என்னிடம் குறிப்பிட்டதுண்டு. ஒரு பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆபாசமான முறைகளில் எழுத்திலும் செயலிலும் என்னைக் கேவலப்படுத்திய பெரும் கவிஞர் கூறியதெல்லாம், இவள் சுதந்திரமானவள் அதனால் நடத்தை கெட்டவள் (நடத்தை கெட்டவள் எனக் குறிப்பிடும் பெண்கள் இத்தகையவர்கள் கணிப்பில் எப்படிப்பட்டவர்கள் என்ற விளக்கங்களை ஆராய்ச்சி செய்யப் பல பக்கங்களும் அசாத்தியப் பொறுமையும் வேண்டும்) என்பதுதான். சமீபகாலத்தில், திருமணம் செய்துகொள்ளாத அல்லது தனிப் பெண்ணாக வாழும் பெண் எழுத்தாளர்களை “உய்விக்க” வரும் சில ஆண் எழுத்தாளர்கள் வைக்கும் முதல் கட்டுப்பாடு இலக்கியக் கூட்டங்களுக்குப் போகக் கூடாது, கவிதைகள் எழுதக் கூடாது என்பதுதான். ஓர் ஆணின் மேலான துணை கிடைத்த பின் ஒரு பெண்ணுக்கு இவை எல்லாம் தேவையா என்ன? இப்படி உய்விக்கப்பட ஆதரவு தராத பெண்களுக்கு ஊடகங்களிலோ வேறு எங்காவதோ வேலை கிடைத்துவிட்டால் தொலைபேசியில் இரவு கூப்பிட்டு “யாருடன் உறவு கொண்டதால் (அவர்கள் இதற்கு உபயோகிக்கும் விரசமான மொழி வேறு) இந்த வேலை கிடைத்தது?” என்று கேட்கும் ஆண் எழுத் தாளர்களையும், தொடர்ந்து இரவில் தொலைபேசியில் கூப்பிட்டு, விரசமாகப் பல ஆண் எழுத்தாளர்கள் பேசுவதால் இரவு வேளைகளில் தொலைபேசித் தொடர்பையே துண்டித்துவிடும், அஞ்சலட்டைகளில் அருவருக்கத்தக்க படங்களை சிலர் வரைந்து அனுப்பித் தொடர்ந்து செய்யும் இம்சைகளால் வீட்டையே மாற்றிய பெண் எழுத்தாளர்களையும் எனக்குத் தெரியும். இவற்றை எல்லாம் பார்க்கும்போதும், இது குறித்து எங்களுக்குள் நாங்கள் பேசிக் கொள்ளும்போதும், சமீபத்தில் பெண் எழுத்து மற்றும் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை நோக்கும்போதும், பெண் வெறுப்பு என்பது எவ்வளவு தீவிரமான, இன்னும் பெயரிடப்படாத மனநோய் என்பது தெரிகிறது.

இலக்கிய உலகில் பெண்ணுக்கு அளிக்கப்படும் இடம் எந்த வகையிலும் ஆணின் இடத்தைக் குலைக்கக் கூடாது, அது இரண்டாம் நிலையிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் தொடர்ந்து இருக்கும் ஒன்றுதான். ராஜம் கிருஷ்ணனின் மலர்கள் நாவலுக்கும், ஜெகச்சிற்பியனின் திருச்சிற்றம்பலம் நாவலுக்கும் முதல் பரிசு ஆனந்த விகடனில் பகிர்ந்து அளிக்கப் பட்டபோது, அவை தொடர்களாக ஆனந்த விகடனில் வெளிவரத் தொடங்கின. தாயற்று, தான் வளரும் உறவுக்காரர்களின் குடும்பத்தில் சிறுமைபடுத்தப்படுவதால் தாழ்வு மனப்பான்மையால் வாடும் ஒரு பெண்ணைப் பற்றிய கதையாகப் பல பக்கங்கள் கொண்ட நாவல் மலர்கள். திருச்சிற்றம்பலம் நாவலைவிட மிகப் பெரியது. மலர்கள் நாவலில் பாதிகூட முடிந்திராதபோது ராஜம் கிருஷ்ணனுக்குக் கடிதம் போயிற்று, ஜெகச்சிற்பியனின் நாவல் தொடர் இன்னும் ஓர் அத்தியாயத்துடன் முடிவதால் மலர்கள் நாவலையும் அடுத்த ஓர் அத்தியாயத்துடன் முடிக்கும்படி. ஒரே பரிசு பெற்ற ஓர் ஆண் எழுத்தாளரின் நாவல் முடியும்போது பெண் எழுத்தாளரின் நாவல் தொடர்ந்து வருவது அவரை அவமானப் படுத்துவதாகும் என்ற நோக்கில் எழுதப் பட்ட கடிதம். சென்னைக்கு வெளியே இருந்த ராஜம் கிருஷ்ணன் விரைந்து வந்து நாவலைத் தேர்ந்தெடுத்தவர்களில் ஒருவரான, கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதனை அணுகி, தனக்கு நியாயம் கிடைக்கும்படிச் செய்யக் கோரினார். கி.வா.ஜ. எடுத்துக் கூறிய பின்தான் மலர்கள் தொடர்ந்து தொடராக வந்தது.

பெண்களின் பொறுப்பு?

நாற்பதுகளில் குமுதினி திவான் மகள் நாவலை எழுதியபோது அதை வெளியிடப் பத்திரிகைகள் முன்வரவில்லை. காரணம் அதில் கலப்புத் திருமணம் இருந்தது. பிறகு அது தொடராக மணிக்கொடியில் வெளிவந்தது. ஒரு பிரபல பதிப்பாளர் ஒரு முறை ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபோது, என் பேராசிரியரைச் சந்திக்க வந்தார். அப்போது நானும் அங்கே இருந்ததால் என்னைப் பேராசிரியர் அறிமுகப்படுத்தியபோது, சம்பிரதாயத்துக்கு என்னையும் எழுதும்படிக் கூறி, என் எழுத்துக்களை வெளியிட ஆர்வமிருப்பதாகக் கூறினார். கூறிய உடனேயே நம் பண்பாட்டைக் குலைக்காமல் எழுதும் எதையும் தான் வெளியிடத் தயார் என்று சேர்த்துக்கொண்டார். என் எழுத்து பண்பாட்டைக் குலைப்பது என்ற முடிவுக்கு அவர் முதலிலேயே வந்திருந்தார் என்பது தவிர, பண்பாட்டை நிலைநிறுத்துவது பெண்களின் பொறுப்பு என்ற கருத்தும், பண் பாட்டுக்கான விளக்கம் ஒன்றும் அவரிடம் இருந்தது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவர் வெளியிடக்கூடிய புத்தகங்களை நான் எழுதவில்லை என்பது வேறு விஷயம்.

எழுத்துக்கான மரியாதை

எழுத்தை அதன் இலக்கியத் தன்மை கொண்டு அளந்த நல்ல கணங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்திருக்கின்றன. கௌரி அம்மாள் எழுதிய கடிவாளம் நாவலுக்கு வ.ரா. முன்னுரை எழுதினார். மங்கை என்ற பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த குகப்ரியைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. குமுதினி, சாவித்திரி அம்மாள், சரஸ்வதி அம்மாள், ராஜம் கிருஷ்ணன், குகப்ரியை, அநுத்தமா, ஆர். சூடாமணி போன்ற எழுத்தாளர்களின் நாவல்களையும் கதைகளையும் மட்டுமல்ல, அவர்கள் ஆங்கிலத்திலிருந்து செய்த பல மொழிபெயர்ப்புகளையும் வெளியிட கலைமகள் போன்ற பத்திரிகைகள் முன் வந்தன. குமுதினி போன்ற எழுத்தாளர் களுக்கு ஆங்கில இலக்கியத்துடன் நல்ல பரிச்சயம் இருந்ததுடன் மொழிபெயர்ப்பின் அவசியத்தையும் நன்கு உணர்ந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். ஆங்கில இலக்கியத் தின் பல நல்ல எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் சூடாமணி. எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் எழுதியவர். அப்படி எழுத என்னைத் தூண்டியவர். பல ஆண் எழுத்தாளர்கள் தீபாவளிக் கதைகளை தீபாவளி மலர்களுக்கும், அரைப் பக்க ஒரு பக்கக் கதைகள், மோதிரக் கதைகள் என்று மற்ற பத்திரிகைகளுக்கும் எழுதிக் குவித்துக் கொண்டிருந்தபோது தனக்குப் பிடித்ததை மட்டும் எழுதியதுடன், என் கவனத்தைச் சிறப்பான இலக்கியத்தின்பால் திருப்பியவர்.
இலக்கிய விமர்சனம் என்பது ஒருவரின் ஜனநாயக உரிமை என்பதில் யாருக்கும் மறுப்பேதும் இல்லை. பெண்-ஆண் என்ற இரு பாலாரின் எழுத்துக்களும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் அவை பெண்ணின் தோற்றத்தையும், “அளவுக்கு மீறிய” என்று சிலர் கணிக்கும் இச்சைகளையும், அவள் உடல் மற்றும் வாழ்வு குறித்த கற்பிதங்களையும் ஆதாரமாகக் கொண்ட இலக்கிய அபத்தங்களாக இருக்கக் கூடாது. குன்றுபதேசம் செய்வது தமிழ் இலக்கிய மற்றும் பதிப்பு உலகில் காலம்காலமாக இருக்கும் வியாதி. அதற்கு இலக்காகப் பெண்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் பேனாவை எடுத்து எழுதியோ, மேடையில் பேசியோ, வலைதளத்தில் எழுதியோ பெண்கள் உய்வுறப் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை கருணை உள்ளம் இவர்களுக்கு!

பெண்கள் என்றால் உருகும் குணம். இத்தகையவர்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான். பெண்கள் தங்கள் வெளிப்பாட்டுக்கான வழிகளையும், தரங்களையும் நிர்ணயிக்க வல்லவர்கள். ஆசான்களைத் தேர்ந்தெடுக்கவும் ஒதுக்கவும் தெரிந்தவர்கள். பெண்களுக்காக இத்தனை சொல்பவர்கள், அவரவர் சொந்த வெளிப்பாடு உய்யும் வழியைப் பார்த்துக்கொண்டால் இலக்கியச் சரித்திரத்தில் இருக்கும் மௌனங்களையும், ஒதுக்கல்களையும் களைய முடியும். அப்படிக் களைய வேண்டியதுதான் இப்போதைய தேவையும்கூட.

இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல.

நன்றி: http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article6136159.ece


மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையை (தொடர்ந்து) கொளுத்துவோம்! - ராஜன் குறை கிருஷ்ணன்


சமூக முரண்பாடுகள் உண்மையில் நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டு இருக்கின்றன. கடந்த சில நூற்றாண்டுகளில் உருவான சுதந்திரவாத, மக்களாட்சி இலட்சியங்கள் ஒவ்வொரு நிலையிலும் ஆதிக்க சக்திகளுக்கு உவப்பாக இல்லை. பெண்ணியம் என்பது கடைசியாக வீசிய மிகப்பெரிய பேரலை. பிரஞ்சுப் புரட்சிக்கு தூண்டுகோலாயிருந்த ரூஸோவின் “சமூக ஒப்பந்தம் (Social Contract) தலைப்பினை எடுத்து மேற்கத்திய அரசியல் தத்துவம் உண்மையில் “பாலியல் ஒப்பந்தம்” (The Sexual Contract) என்று வாசித்த கரோல் பாட்மெனின் நூல் மிகப்பெரிய அறிவார்த்த புரட்சி என்றால் மிகையாகாது. ஆனால் 1988-இல் கரோல் பாட்மென் மேற்கத்திய அரசியல் தத்துவ வரலாற்றை நிர்நிர்மாணம் (de-construct) செய்யும் இந்த நூலை எழுதுவதற்கு முன்பே நூறாண்டுகளாக அரசியலுக்கு வெளியிலும் சமூக கலாசார தளங்களில் பெண்களின் சமபங்கு குறித்து பெரியதொரு விழிப்புணர்வு உலகெங்கும் பரவியிருந்தது எனலாம். ஈரோட்டுப் பெரியாரும் எட்டையபுரம் சுப்பிரமணிய பாரதியும் அதன் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள்.

பெண் என்ற சமூக அடையாளத்தின் பிரச்சினை என்னவென்றால் அந்த அடையாளத்தை எந்த பெண் கையிலெடுப்பதும் அந்த பெண்ணுடன் வசிக்கும் ஆணுக்கு தொல்லையாக மாறுவதுதான். மிக ஒடுக்கப்பட்ட சமூக குழுவிலும் பெண் ஆணால் ஒடுக்கப்பட்டவளாக அல்லது அவனுக்கு வசதியான விதத்தில் கட்டமைக்கப்படவளாக இருக்கிறாள். குறியியக்கம், மொழி ஆகிய வலைப்பின்னல்கள் மூலம் மனிதன் கட்டமைத்த ஒடுக்குமுறைகளில் மிக நுட்பமானதும், சிக்கல் மிக்கதுமான ஒடுக்குமுறை பெண் உடல்களை பெண் தன்னிலைகளாக உருவாக்கும் செயல்தான். கடந்த முப்பதாண்டுகளாக உலகின் சிறந்த பல்கலைகழகங்களில் படிக்கும் யாரும் இந்த நுண் ஒடுக்குமுறை குறித்த ஆழமான புரிதல்களை சந்திக்காமல் இருக்க முடியாது. ஆனால் சில ஆண் உடல் கோழைகள் அங்கும் அரற்றிக்கொண்டும், பிதற்றிக்கொண்டும் இருக்கத்தான் செய்கின்றன (ஹார்வர்டு பல்கலை முன்னாள் தலைவர் உட்பட).

அதன்பிறகு இன்று ஏதோ பெண்ணிய அலை ஓய்ந்துவிட்டது என்ற ஒரு ஊடக மாய்மாலத்தை வலதுசாரி சக்திகள் செய்கின்றன. அது மிகப்பெரிய அபத்தம். அலை அலையாக பெண்ணிய சிந்தனை இன்று உலகின் ஒவ்வொரு சமூகப்பகுதியிலும் பரவிக்கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் ஏராளமான பெண்கள் எழுத முற்படுவதும்.

இங்கேதான் ஒரு பிரச்சினை வருகிறது. பெண்கள் எழுதினால் அதற்கு அதிக கவனம் கிடைக்கிறது. அது தரமாக இல்லாவிட்டாலும் முன்னிலைப் படுத்துப்படுகிறது என்று ஒரு பிரச்சினையை சில ஆண் உடல் கோழைகள் முன்வைக்கிறார்கள். மேலாக கேட்டவுடன் பெரிய நியாயம் போல இது தொனிப்பதால் பிற ஆண் உடல்களில் தங்கியுள்ள ஆணாதிக்க ஊற்றுகள் பீரிடுகின்றன. எவ்வளவு பெரிய அபத்தம் இது என்பதை சிறிது யோசித்தாலும் கூட யார் வேண்டுமானாலும் விளங்கிக்கொள்ள முடியும். தோழர்களே! ஒரே ஒரு நிமிடம் யோசியுங்கள். இந்த ஆண் எழுத்தாளர்கள் தங்கள் சக ஆண் எழுத்தாளர்கள் மீது இதே குற்றச்சாட்டை வைத்ததில்லையா? தகுதியில்லாவர்கள் கவனம் பெற்றுவிட்டார்கள், தகுதியுள்ளவர்கள் கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக கலை, இலக்கிய, சிந்தனை வெளிகளில் நிலவுவதுதானே? இதில் ஆணெண்ண, பெண்ணெண்ண? பெண்களுக்கிடையிலும் தகுதியும், கிடைக்கும் கவனமும் சரியான விகிதத்தில் இல்லை என்று எத்தனையோ பிரச்சினைகள் உண்டு. சமூக இயக்கம் எப்பவுமே பழுதுகளுக்கு உட்பட்டதுதான்.  

ஆனால் பெண்கள் அவர்களாயிருப்பதாலேயே கவனம் பெற்றுவிடுகிறாரகள் என்ற ஜெயமோகனின் கூற்று ஊரே நன்கறிந்த அவருடைய அழுக்கு பாசிச மனதின் கூற்று. அவர் அடிப்படையில் அருவருக்கத்தக்க ஆணாதிக்கவாதி என்பதை அவர் புனைவெழுத்தும் சரி, புனையாத எழுத்தும் சரி ஒயாமல் நிருபித்து வந்துள்ளன, எனவே அவர் இன்றைக்கு பொதுக்களத்தில் கவனம் பெற இதை மீண்டும் எழுதியதில் எனக்கு எந்த வியப்பும் இல்லை. ஆனால் வியப்பெல்லாம் பிற ஆணுடல்களிடையே மெல்ல, மெல்ல அதற்கு பெருகி வரும் ஆதரவுதான்; என்ன நடக்கிறது இங்கே என்ற வியப்பை எனக்கு ஏற்படுத்துகிறது.

தோழர்களே! தயவுசெய்து ஒரு விஷயத்தை கவனியுங்கள். ஒரு வேளை இதில் ஒரு நியாயமான பிரச்சினை இருக்கலாம் என எடுத்துக் கொள்வோம். ஆணாதிக்க சமூகத்திற்கு எப்படியும் பெண்களை காட்சிப்பொருளாக்க வேண்டும். குறிப்பாக ஊடகங்கள் பெண் பிம்பங்களை குறித்து ஏதாவது ஒரு காரணத்திற்காக பேசியே தீரவேண்டும். இதனால் கலை, இலக்கிய தளத்திலும் பெண்கள் சிறிது சாதித்தவுடனேயே அவர்கள் மேல் புகழ் வெளிச்சம் பாய்வதால் அவர்கள் மேலும் சிறப்பாக படைப்பாக்க செயல்பாட்டில் ஈடுபடாமல் தடைபட்டு போய்விடுகிறது என்ற ஒரு நிலை இருப்பதாகக் கொள்வோம். (இவ்வித நிலையை உருவாக்குவதும் ஆண் ஆதிக்க சமூகமும், ஊடகமும்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.) இப்போது அக்கறையுள்ள ஒரு குரல் எப்படி ஒலிக்க வேண்டும்?

“பெண்களுக்கு சுலபத்தில் அங்கீகாரம் கிடைக்கும் நிலை அவர்களது படைப்பாற்றல் விகசிப்பதற்கு தடையாக மாறிவிடக்கூடாது. அவர்கள் தங்கள் மேல் விழும் புகழ் வெளிச்சத்தை கவனமாக புறந்தள்ளி அவர்களது படைப்பாற்றலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும்.” இப்படி ஒருவர் சொன்னால் அது அக்கறை.
“பெண்கள் அவர்களாயிருப்பதாலேயே அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. ஆண்களுக்கு கிடைப்பதில்லை” என்பது காழ்ப்பு. ஆணாதிக்கம்.

அப்படி பெண்களை அங்கீகரிப்பது யார் ஐயா? ஆண்கள்தானே? பெண்களா எல்லா ஊடகங்களையும் நடத்துகிறார்கள்? பெண்களா பட்டியல்கள் போட்டு யார் மனம் கவர்ந்த இளம் இலக்கியவாதி, முற்றிய இலக்கியவாதி என்று கூறுகிறார்கள்? இதுவரை எந்த பிரபல பத்திரிகையாவது பாமாவிடம் உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்கள் யார் என்று கேட்டு பட்டியல் வெளியிட்டிருக்கிறதா? சு.தமிழ்செல்வியிடம் கேட்டிருக்கிறார்களா? அப்படியே கேட்டு வெளியிட்டாலும் அதை யாரும் பொருட்படுத்தப் போகிறார்களா? “Can the subaltern speak?” என்ற பெண்ணிய மேதை காயத்ரி ஸ்பிவாக்கின் கேள்வியின் பொருளே அதுதானே?

எந்த இளம் பெண் எழுத வந்தாலும் சந்திக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே உங்கள் எழுத்தை நான் கவனித்துவருகிறேன்; பிரமாதம் என்று வழிந்து நிற்பது ஆண்களின் குற்றமா? அல்லது அந்த பெண்களின் குற்றமா? பின்னர் அந்த பெண் யாரோடு நெருக்கமாக இருக்கிறாள் என்று புறம்பேசி கதை வளர்த்து திரிவது ஆண் எழுத்தாளர்களா? பெண் எழுத்தாளர்களா? பெண்ணை எந்த நிலையிலும் பெண்ணாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று ஆணாதிக்க திமிர் பிடித்து அலையும் எழுத்தாளர்கள் மத்தியிலிருந்து ஒருவர் சொல்கிறார்: “பெண்கள் அவர்களாக இருப்பதாலேயே கவனம் கிடைத்துவிடுகிறது”. அந்தக் “கவனத்தை” “அவர்கள் அவர்களாக இருப்பதற்கு” நீங்கள் ஏன் சார் தருகிறீர்கள்? எந்த ஆண் எழுத்தாளராவது ஒரு பெண்ணை சந்தித்தவுடன் “உன் எழுத்து சரியில்லை; நிறைய படி; பயிற்சி செய்” என்று சொல்லியிருப்பார் என்று என்னால் நம்பக்கூட முடியவில்லை. ஏன் என்று கேட்டால் அப்போது சொல்வார்கள்: “அவர்கள் இப்போதுதான் எழுத வருகிறார்கள்” என்று. ஒரு புறம் வக்கிரத்துடன் ஆசீர்வாதம் (vulgar patronization); இன்னொருபுறம் தகுதியில்லாமல் கவனம் பெறுவதாக தார்மீக ஆவேசம் (punitive anger). ஆணாதிக்கத்தின் டபுள் ஆக்டு சூப்பர் இல்லையா?

கடைசியாக ஒன்று. இந்த “தரம்” என்ற கேடுகெட்ட வார்த்தை ஒன்று உண்டு. இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் கையாளும் அதே தகுதி தரம்தான் இதுவும். முதலில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தரம் என்பதற்கு பிரபஞ்ச அளவுகோல் எதுவும் கிடையாது என்று அறிவுடையோர் சிலர் உணரத்தொடங்கி பல பத்தாண்டுகள் கடந்துவிட்டன என்று சொல்லலாம். தரம் என்பது சமூக இயக்கத்தில் முகிழ்வது. சினாய் மலைகளில் நெருப்புத்தூண்கள் உருவாக்கும் விதிகளின்படி உருவாவதல்ல. இலக்கிய விமர்சனம் என்பது தொடர்ந்து தரம் குறித்த விவாதத்தை நிகழ்த்துவது அவசியம். ஆனால் அதன் அடிப்படை விதி பெரியோரை வியந்தாலும் சிறியோரை இகழாததாகவே ஜனநாயகப் பொதுமன்றத்தில் இருக்க முடியும.

இந்த விவகாரத்தில் அடிபட்ட பெயர்களில் மிகுந்த வேதனை தரக்கூடிய ஒன்று மறைந்த ஆர்.சூடாமணி. இவரது இலக்கிய மேதமையை புரிந்துகொள்ளாத  பொறுப்பற்ற பேச்சுகள் இலக்கிய விமர்சனம் என்பதோ திறனாய்வு என்பதோ இன்னம் தமிழில் எவ்வளவு கேவலமான இடத்தில் இருக்கிறது என்பதையே சுட்டுகின்றன. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று சில உரத்த குரல்கள் எவ்வளவு சுலபமாக அபத்தத்தை உண்மையாக அலங்கரித்து வைத்துவிடுகின்றன என்று பார்த்தால் இந்த மொழியில் எழுதுவதற்கே அச்சமாக இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு பொறுப்பான மனிதன் ஜனநாயகப் பொதுமன்றத்தில் பெண்கள் என்ற அடையாளத்தை ஒட்டுமொத்தமாக சீண்டிப்பார்பானேயானால் அதன் பொருள் அவன் சமூகத்தின் அறவுணர்வினை சீண்டிப்பார்க்கிறான் என்பதேயாகும், தகுதியில்லாத பெண் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்று ஒருவர் பொதுக்களத்தில் சொன்னவுடன், எத்தனை குரல்கள் வெடித்துக் கிளம்புகின்றன. எவ்வளவு கேவலமான கேலிகளும், கிண்டல்களும் உருவாகின்றன என்று பார்த்தால் நீறுபூத்த நெருப்பாக பரவி நிற்கும் ஆணாதிக்க வெறி தெரியும்.

அதற்குத்தான் அன்றே சொன்னான் மகாகவி: “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்” என்று. தொடர்ந்து கொளுத்திக்கொண்டே இருக்க வேண்டும். சென்னை வீடுகளில் தினமும் கொசுக்கொல்லிகளை கொளுத்துவது போல. நிறுத்திவிடக் கூடாது.

நன்றி - ராஜன் குறை கிருஷ்ணன்
மூலம் - http://tinyurl.com/nex2ukp