Feb 13, 2020

சமூகமாக நாம் யார்?



சமூகத்தில் நம் வாழ்வாதாரத் தேவைகளை (பொருள் தேவைக்காக) பூர்த்தி செய்துகொள்வதற்கான செயல்பாடுகளில் (இயக்கத்தில்) நாம் எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே நமது அடையாளம். இதுவே வர்க்க அடையாளம்.

இது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நிலவும் அடையாளம். இந்த படிநிலையை அதிகாரப்பூர்வமாக நிலைநாட்ட அரசு, மதம், பண்பாடு, காவல்துறை, சட்டம் போன்ற ‘நிர்வாக’, ‘நம்பிக்கை’, (‘ஆன்மீகம்’) அமைப்புகள் உருவாயியன. எல்லா நாடுகளிலும் இதுவே சமூகத்தின் இயங்குமுறை. எல்லா நாடுகளிலும் மதம் என்பது ஆளும் வர்க்க நிறுவனமே.

இந்தியாவில் அது இந்து மதம் என்னும் சித்தாந்தத்தில் இயங்குகிறது. சாதி என்னும் உழைப்புப் பிரிவினையின் அடிப்படையிலான படிநிலையை அது திடப்படுத்தி வைத்துள்ளது. இப்பின்னணியில் வலதுசாரி பாசிச எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்பதை நாம் மதத் தாக்குதல், மத வெறுப்பு, மத மாற்றம் என்பதோடு நிறுத்திக்கொள்வோமெனில் அது வெறும் பூச்சு சேலை மட்டுமே.

ஓர் இந்து முதலாளி இந்து தொழிலாளியை சுரண்டாமல் இருப்பாரா, ஒரு கவுண்டர் (நாடார், தேவர்… இதர) முதலாளி கவுண்டர் தொழிலாளியை சுரண்டாமல் இருப்பாரா, கேட்டால் அவர்கள் பார்ப்பனிய புத்தி உடையவர்கள் என்பதா பதில்? ஒரு தலித் முதலாளி தலித் உழைப்பாளியை சுரண்டாமல் இருப்பாரா? இஸ்லாமிய, கிறித்தவ முதலாளி இஸ்லாமிய, கிறித்தவ தொழிலாளியை சுரண்டுவதில்லையா (இலாபம் என்பதை அடிப்படையாக கொண்ட உற்பத்தி முறையில் - உழைப்பு ரீதியாக). ஒரு பெண் முதலாளி மற்றொரு பெண் தொழிலாளியிடம் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடமாட்டாரா? ஒரு தமிழன் நாட்டை ஆண்டால் தமிழனாகிய தொழிலாளியை சுரண்டுவதை ஒழித்துவிடுவாரா? தமிழன் முதலாளியாக இருந்தால் தமிழச்சிகளுக்கு விடுதலை கிடைத்துவிடுமா?

சாதி-மத ஒழிபிப்பு என்னும் பெயரில் ஒரு குறிப்பிட்ட மட்டத்தோடு நின்றுவிட்டால் ஏற்றத்தாழ்வுகளுக்கான காரணத்தை (உழைப்புச் சுரண்டலுக்கான), ஆணி வேரை எப்படி கண்டடைவது? இதை விளக்கியவர்கள் கார்ல் மார்க்ஸ் எங்கல்ஸைத் தவிர யாரேனும் உள்ளனரா?

அம்பேத்கரிடம் இதற்கு தீர்வு உண்டா? அல்லது காஞ்சா ஐயலய்யா மற்றும் இதர தலித்திய, தாராளவாத சமூக ஆர்வலர்களிடம் தீர்வு உண்டா? பெரியார், அம்பேத்கர் போன்றொர் சாதியப் பிரச்சினை குறித்து பெரும் கவனத்தை ஈர்த்தார்கள். பார்ப்பனரல்லாதார், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகள் மீது கவனம் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்கள். முற்போக்கு சிந்தனைகளை வளர்த்தார்கள். குறிப்பிட்ட அளவு சட்டரீதியான சீர்திருத்தங்களை, உரிமைகளை பெற்றுத்தந்தார்கள் என்பது மறுக்கமுடியாதது. ஆனால் அவை எதுவும் உண்மையான சமத்துவத்தை அனைத்து மட்டத்திலும் எய்திட போதுமானதல்ல.

தற்போது #அம்பேத்கர், #பெரியார் பெயரைச் சொல்லி தாராளவாதிகள் சாதியை இன்னமும் பண்பாட்டு பிரச்சினையாக மட்டுமே சித்தரித்துக்கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பூர்ஷுவா அதிகாரத்தில் தங்களுக்கும் அதிகாரம் வேண்டும். தாங்களும் முதலாளிகளாக வேண்டும் என்பதைத் தவிர இவர்கள் பேசும் சமத்துவத்தில் ஏழ்மையை ஒழிக்கவும், பெண் ஒடுக்குமுறையை ஒழிக்கவும் விஞ்ஞானபூர்வ தீர்வு என்ன இருக்கிறது? குறைந்தபட்சம் இந்த ஒடுக்குமுறைகளுக்கான காரணங்களாவது சரியாக விளக்கப்படுகிறதா?

மதம், பண்பாடு என்று தொடங்கி அகவாதத்தில் முடிவதைத் தவிர வேறொன்றுமில்லை. வெறுப்புரசியல், திருத்தல்வாதம், சீர்திருத்தவாதம், சாதிய அணிதிரட்டல் என்னும் பாதையில் இவ்வரசியல் பயணிக்கிறது.

சமத்துவம் என்பது வெறுமனே பண்பாட்டு நிலையில் எய்தப்படுவதல்ல. அது மனிதனை மனிதன் அன்போடு நடத்த வேண்டும் என்னும் எண்ணம் தொடர்பானது மட்டுமல்ல. இங்கு நிலவும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் பொருளாயத அடிப்படை ஒன்றுதான். அதுவே செல்வக் குவிப்பிற்கான சுரண்டல் முறை. அதனை உணரவிடாமல், நமது பொது எதிரி யார் என்று உணரவிடாமல் செய்வதே முதலாளித்துவத்தின் கைக்கூலியான அடையாள அரசியல்வாதிகளின் நோக்கம்.

மீண்டும் மீண்டும் சொல்கிறேன் சாதி ஒழிப்பு பற்றிய பேச்சுகள், ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம், மத அடிப்படைவாத எதிர்ப்பு வியாக்கியானங்கள் (புலம்பல்கள்) பேசப்படுவதாலேயே ஒருவரிடம் சாதி ஒழிப்பிற்கான தீர்வு இருக்கிறது என்றாகாது. அவர் சமூக விஞ்ஞானியும் ஆகிவிட முடியாது. அவர்களை சமூக அக்கறையாளர்கள், ஆய்வாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், தேவைப்பட்டால் தலைவர் என்றுகூட சொல்லிக்கொள்ளலாம்.

சமூக விஞ்ஞானம் என்பது வரலாற்று வளர்ச்சியோடு தொடர்புடையது. அது உற்பத்தி முறையோடு தொடர்புடையது. அது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தோடு தொடர்புடையது. அதனை சரியாக ஆய்வுசெய்து பிரச்சினைகளின் ஆணிவேரை அறிவியல்பூர்வமாக முன்வைப்பவரே சமூக விஞ்ஞானி. மற்றவர்கள் சமூக உனர்வாளர்கள் மட்டுமே.

இன்னார் இந்த தொழிலில் ஈடுபடுவதால் அவர்களுக்கு இந்த பண்பு இருக்கிறது அல்லது இல்லை என்பது மேலோட்டமான வியாக்கியானம். அவர்கள் அந்த தொழிலில் மட்டும் ஈடுபடுவதற்கான வாய்ப்பும், அதிகாரம் எப்படி தோன்றி வளர்ந்தது? மற்றவர் விலக்கிவைக்கப்பட்டதற்கான வரலாற்று காரணம் என்ன? அதன் அடிப்படை (இயங்குதளம்) என்ன? எந்த ஒன்றிலிருந்து அனுமதித்தலும், விலக்கலும் நடைபெறுகிறது? மதம், சாதி மட்டும்தான் அதை தீர்மானிக்கிறதா? அப்படியென்றால் பார்ப்பனியம் ஏன் இந்தியாவை விட்டு மற்ற நாடுகளில் அதன் அதிகாரத்தை நிலைநாட்ட முடியவில்லை. அங்கு ஏன் சாதிகளை ஏற்படுத்தவில்லை?

குறிப்பிட்ட தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிட்ட பண்பாடு இருக்கும் என்பது சரி. ஆனால் மூடநம்பிக்கை என்பது அனைத்து மட்டத்திலும் இருக்கும். சொல்லப்போனால் நிலவுடைமை பண்பாடு என்பது பெண்களை உடைமையாக கருதும் பிற்போக்குத்தனமான அமைப்பு. கடவுள் நம்பிக்கை இருக்கும் இடத்தில் மூடநம்பிக்கை இருக்கவே செய்யும். இது ஆதிக்க சாதியானாலும் சரி, தாழ்த்தப்பட்டோர் ஆனாலும் சரி. இயற்கையை வழிபடுவதோ, அல்லது கடவுளை வழிபடுவதோ… சடங்கு சம்பிரதாயங்கள் என்பதே மூடநம்பிக்கைதான். அது அனைத்து சாதிகளிலும் உள்ளது.

குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட வேலையில் மட்டுமே ஈடுபடுகின்றனர் என்பதைத்தான் தனியுடமை அடிப்படையிலான உழைப்புப் பிரிவினை என்று மார்க்சியர்கள் காலம்காலமாக விளக்கியுள்ளனர். போலி சிந்தனையாளர்கள் போல் அன்றி அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளனர். படிநிலையில் மேலே இருப்பவர்கள் உற்பத்திச் சாதனங்கள் தொடங்கி… கல்வி வரை கீழே இருப்பவர்களுக்கு கிடைகாமல் செய்தனர். ஆகவே மேலே இருப்பவர்கள் அறிவு, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என்று சகல தளங்களிலும் முன்னேறுவதற்கான வாய்ப்பு அமைந்துவிட்டது. கீழே இருந்தவர்கள் பல போராட்டங்கள் நடத்தி இன்று மேலே வருகின்றனர். இப்போது அதுபற்றிய விழிப்புணர்வு மேலோங்குகிறது. போராட்டங்கள் நடைபெறுகின்றன. இது மேல்நிலையில் உள்ளோருக்கு ஆபத்தாக, போட்டியாக தெரிவதால் மீண்டும் முரண்பாடுகள் முற்றுகின்றன. (இது ஆண் பெண் முரன்பாடுக்கும் பொருந்தும்). அதன் விளைவாக மேல்நிலையில் இருப்பவர்கள் மீண்டும் தங்களது அடையாளங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள நினைக்கிறார்கள். அந்த படிநிலையை சாதி என்னும் ஏற்பாட்டின் மூலம் இங்கு சட்டதிட்டமாக்கி வைத்தது அவர்களுக்கு கருவியாக, பேராயுதமாகப் பயன்படுகிறது. எதிர் தரப்பினரும் அதே ஆயுதத்தை ஏந்தினால்?

மேலாதிக்க சக்திகளுக்கு அந்த ஆயுதம் கைவரப்பெற்ற நிலைமைகளை ஆய்வுசெய்யாமல், சொல்லப்போனால் அந்த ஆயுதம் எது என்பதைக்கூட ஆய்வு செய்யாமல், அதை ஆய்வு செய்வதற்கு உதவும் அறிவியல் கோட்பாட்டை படித்தறியாமல் கம்பு சுழற்றுவதால் இழப்பு யாருக்கு? எதிரி அங்கு சிரித்துக்கொண்டிருக்கிறான். தன்னை இனம் காண முடியாது என்னும் இருமாப்பில் எதிரி சிரித்துக்கொண்டிருக்கிறான். சாதி, மதம், மொழி, பாலினம், உடல்திறன், இனம் என்பதற்கப்பார்பட்டு நமக்கென்று ஓர் இருப்புநிலையை அவன் (அது) ஏற்படுத்திவைத்திருக்கிறான். அதுவே உழைப்பாளி என்னும் நிலை. உழைப்புச் சக்தியை விற்றால் மட்டுமே பிழைக்க முடியும் என்னும் நிலைமை. எந்த சாதியானாலும், எந்த பாலினமானாலும் (இன்னும் இதர..) நீ இந்த பூமியில் பிழைத்திருக்க என்ன செய்கிறாய் என்பதில்தான் உன்னுடைய சமூக பாத்திரம் அல்லது அடையாளம் இருக்கிறது. அதுவே உனது புத்தியை தீர்மானிக்கிறது. அதிலிருந்து விடுபடுவதே அரசியல் விழிப்புணர்வு - வர்க்க நீக்கம், சாதிய நீக்கம், பாலின அடையாள நீக்கம், மதப் பற்றிலிருந்து (சொல்லப்போனால் கடவுள் மறுப்பு தேவை).

பிறப்பின் அடிப்படையிலான அடையாளரீதியான உணர்விலிருந்து விடுபட்டு – உற்பத்தி உறவில் உனக்கு என்ன இடம் - வர்க்க உணர்வு பெறுவது என்றாகிறது. இதுவே கம்யூனிஸ்ட் என்னும் உணர்வு. தேடலின் வழி அல்லது கற்றலின் வழி இந்த உணர்வை பெற்றபின் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கான அடித்தளம் எது என்பதை ஒரு முழுமையான கண்ணோட்டத்தில் பார்த்து அதை உறுதிபட எடுத்துரைத்துக்கொண்டிருப்பது அவசியமான பணி.

உண்மையில் வலதுசாரி எழுச்சி என்பது முதலாளித்துவத்தோடு, உலக மூலதன வளர்ச்சியோடு, உலகமயமாக்கலோடு, ஏகாதிபத்தியத்தோடு தொடர்புடையது. உலகெங்கிலும் இன்றைக்கு வலதுசாரி ஆதிக்கமும், அடையாள அரசியல் பிளவுவாதமும் மேலோங்கி இருக்கிறது. இத்தகையதொரு முழுமையான பார்வையைப் பெற நமக்கு மார்க்சியம் உதவுகிறது. அதனை கற்காமலேயே வர்க்கம் என்று தட்டையாக சாதியை அனுகமுடியாது, முதலாளித்துவத்தை விட பார்ப்பனியமே பிரதான பிரச்சினை அல்லது ஆபத்தானது என்று பேசுவது அறிவுடைமை ஆகாது.

வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்திப் பேசுவதால் மற்ற ஒடுக்குமுறைகளை நிராகரிப்பதாக காண்பது பார்வைக்கோளாறன்றி வேறில்லை. எல்லாவற்றிற்குமான இணைப்பு, அடித்தளம் எது என்பதை உணர்த்தும்போது மட்டுமே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். பிளவுபடுத்தும் சக்திகளை அடையாளம் காட்டமுடியும். அது ஒன்றே புரட்சிகர பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
உழைக்கும் வர்க்கம் என்னும் உணர்வை பெறுக! நம் பொது எதிரி யார் – அதனது சேனைகள் யார் என்பதை என்பதை உணர்க! உழைக்கும் வர்க்க ஒற்றுமை ஓங்குக!

(நான் பகிர்ந்திருந்த ஒரு பதிவுக்கு வந்த எதிர்வினைகளுக்கு பதிலாக இது எழுதப்பட்டது)


No comments:

Post a Comment