Showing posts with label #அம்பேத்கர். Show all posts
Showing posts with label #அம்பேத்கர். Show all posts

Jun 22, 2020

சட்டங்களால் சாதி ஆதிக்கத்தை, ஆணவக் கொலைகளை தடுக்க இயலாது!

வழக்கம் போல ஆணவக் கொலைகளைத் தடுக்கும் சட்டம் இயற்ற வேண்டும் என்னும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன!


தொட்டதற்கெல்லாம் ஒரு சட்டம் இருக்கிறதென்று தெரிந்துதானே இங்கே எல்லா குற்றங்களும் நடக்கின்றன!

 

பொதுபுத்திதான் இதை நல்லவர் கெட்டவர், ஊழல், இலஞ்சம், ‘விலைக்கு வாங்கிவிட்டார்கள்’ என்று பார்க்கிறதென்றால் முற்போக்கு அரசியல் சக்திகளும் அப்படி பார்ப்பது வியப்பாக உள்ளது!

 

சட்டங்களால் குற்றங்களைத் தடுக்க இயலும், நீதி கிடைக்கும் என்றால் இந்நேரம் இந்தியா ஒரு பொற்காலத்தை எட்டியிருக்க வேண்டுமல்லவா?

 

"நீதிமன்றம், காவல்துறை, இராணுவம் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்புகளும் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்ய உருவாக்கப்பட்டவை. மக்களுக்காக அல்ல" - கார்ல் மார்க்ஸ்.

 

வர்க்க முரண்பாடுகளின் விளைவாக தோன்றியதே அரசு! அதன் பாகங்கள் நீதிமன்றம், காவல்துறை, இராணுவம் மற்றும் சிறைச்சாலை என்கிறார் லெனின்…

இதன் பொருள் என்னவென்று கூட விளங்கிக்கொள்ள மனமின்றி, கம்யூனிஸ்டுகள் எப்போதும் வர்க்கத்தையே பேசிக்கொண்டிருப்பார்கள் என்று இன்னமும் எதிர்திசையில் தள்ளப் போகிறீர்களா?

 

ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலவும் உற்பத்தி முறைக்கு ஏற்ற சட்டதிட்டங்களும், பண்பாடும் தோன்றும். அது ஆளும் வர்க்க அதாவது சொத்துடைமை வர்க்கத்தின் நலன் காக்கவே என்பதைத்தான் காலம் காலமாக கம்யூனிஸ்டுகள் கத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை பார்ப்பனர்கள் / துரோகிகள் / கற்பனாவாதிகள் என்று சொல்லி சொல்லி சட்டவாதம் பேசி என்ன மாறியுள்ளது? கம்யூனிஸ்டுகள் பேசும் வர்க்க அரசியலில் என்றாவது சாதி எதிர்ப்பை, பார்ப்பனிய எதிர்ப்பைக் கைவிட்டோ, இதர ஆதிக்கங்களை ஆதரித்தோ, தாங்கியோ பேசியுள்ளார்களா என்ன?

 

தயவு செய்து சாதியும் வர்க்கமும் கை கோர்க்கும் இடத்தை உணர முற்படுங்கள். அது சொத்துடைமை, தனியுடைமை, நிலவுடைமை, முதலாளித்துவம் என்னும் அமைப்புமுறையின் அடித்தளம். சாதி ஒருவிதமான படிநிலை அமைப்பு பாலினம், மதம், இனம் உள்ளிட்ட அனைத்து அடையாள அடிப்படையிலான மேலாதிக்கமும், உழைப்புப் பிரிவினையும், ஒதுக்கலும், ஒடுக்குமுறையும் அப்படியே.

ஆனால் அவை தோன்றியது வர்க்க முரண்பாட்டிலிருந்தும், செல்வக் குவிப்பிற்காகவுமே. இதை விளங்கிக்கொள்ள பெரிய சவால் ஏதும் இருக்கிறதா? வர்க்க முரண்பாட்டினால் விளையும் கொந்தளிப்புகளை, புரட்சியை ஒடுக்க தோற்றுவிக்கப்பட்டதே அரசு, காவல்துறை, இராணுவம், மதம் ஆகிய நிறுவனங்கள். பண்பாடும் அதிலிருந்தே.. அதாவது உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்தே உதிக்கிறது… இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை…

 

பெண்கள் அன்றாடம் பாலியல் மற்றும் குடும்ப வன்முறைக்கு உள்ளாகிறார்கள். அதற்காக ஆணாதிக்கத்தை ஒழித்துவிட்டு வர்க்கப் போராட்டம் நடத்துங்கள் என்று எப்படி சொல்ல இயலாதோ அதேபோல் தான் சாதியை ஒழித்துவிட்டு வர்க்கப் போராட்டத்தைப் பேசுங்கள் என்று சொல்வது புரிதலற்ற நிலை.

எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. அந்த தொடர்பு புள்ளியை தான் மார்க்சியம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கம்யூனிஸ்டுகளும் புரிய வைக்கப் போராடுகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள மறுப்பதே சாதி ஒழிப்பில் நிலவும் பின்னடைவுக்கு காரணம் என்பதை இந்த நிலையிலாவது தயவு செய்து விளங்கிக் கொள்ளுங்கள்.

 

சாதி வெறியால் தலித்துகளின் உயிர்கள் இப்படி அநியாயமாகப் பறிக்கப்படுகையில், நீதி மறுக்கப்படுகையில், தலித்துகள் மீது வன்முறை ஏவப்படுகையில் “இப்போதாவது இவர்கள் இந்த தனி உடைமை அமைப்பின் குரூரத்தை விளங்கிக் கொள்ள மாட்டார்களா” என்றே நெஞ்சம் பதைபதைக்கிறது.

தலித் மக்களைக் காக்க இந்து மத எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, சமூக நீதிக்கான போராட்டங்களோடு நின்றுவிடாமல் சாதியமைப்பின் அடித்தளத்தை தகர்த்திடுவதற்கான பாதை எது என்பதை தலித்திய அறிவுஜீவிகளும், தலித்திய அரசியல் செயல்பாட்டாளர்களும் இனியாவது கண்டுணர்வது அவசியம். பெண்களைக் காக்கவும், சாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கவும் கூட அது அவசியமாகிறது.

 

எல்லாவற்றுக்கும் மேலாக கண்ணுக்குத் தெரியாமல் உயிர்களை விழுங்கிக் கொண்டிருக்கும் கொடிய வறுமையை இன்னும் இதர ஒடுக்குமுறைகளை, சுரண்டலை ஒழிக்க சட்டத்தில் வழியில்லை தோழர்களே! இதனால் எல்லாம் பாதிக்கப்படுவது அனைத்து சாதி மக்களும் தான்...

 

இது ஒரு மன்றாடலே! தலித் மக்களுக்காகவும், உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்காகவும்!

 


May 2, 2020

வசுமித்ரவின் அடுத்த நூல் அம்பேத்கரியப் பார்ப்பனியம்



எதிர்வினைகள் பற்றிய வரலாற்று பின்னணி தெரியாதவர்களுக்கான குட்டிக் கதை:
சமூகம்/சமூக பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகளும் கோட்பாட்டுருவாக்கமும் மனித அறிவு/சமூக/அரசியல்-பொருளாதார வரலாற்று வளர்ச்சியின் ஓர் அங்கம். இதனை தத்துவம் என்று எளிமையாக புரிந்துகொள்ளலாம். அப்படி ஒரு தத்துவம் உருவாவதும், அதுபற்றிய திறனாய்வுகள்/விமர்சனங்கள் நடப்பதும் ஓர் அறிவுசார் செயல்பாடு. இது வெறும் மேதமையை பறைசாற்றுவதற்காக அல்ல, நாம் தீர்க்க நினைக்கும் பிரச்சினைகளுக்கு உரிய பதில்களை/தீர்வுகளை கண்டடைவதற்கான ஒரு தொடர்ச்சியான பயணம்.
அந்த வகையில் மார்க்சியம் மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்புகள்/செயல்திட்டங்கள் பற்றிய விமர்சனம் அதற்கு எதிர்வினைகள் என்பதற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு.
புத்தரா கார்ல் மார்க்ஸா என்று அம்பேத்கர் தொடங்கிய விவாதம் மற்றும் அம்பேத்கரின் பெயரைச் சொல்லிக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அடையாள அரசியலுக்கு (அதுவும் ஒருவகையான பின்நோக்கிய சாதியவாதம்) எதிராக இந்திய அளவில் விவாதங்கள் நடக்கிறது. (உலக அளவில் அடையாள அரசியலுக்கெதிரான போர் நடந்து கொண்டிருக்கிறது) இதில், ரங்கநாயகம்மா அம்பேத்கரின் சிந்தனைகள் பற்றி குறிப்பிடத்தக்க திறனாய்வை முன் வைத்தவர்.
மார்க்சியம் கற்று சில வேலைகளில் ஈடுபட்டபோது நான் எதிர்கொண்ட சம்பவங்கள் சாதிய அடையாள (இடது) அரசியலின் ஆபத்தை உணரச் செய்தது. அவ்வேளை ஒரு தோழர் மூலம் ரங்கநாயகம்மாவின் நூல் என் கைக்கு வந்தது. படித்தபோது அது மொழிபெயர்க்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். அதை தமிழில் மொழிபெயர்த்தேன் ஜூன் 2016 இல் முதல் பதிப்பு வெளிவந்து அதன் பிறகு இரண்டு பதிப்புகளைக் கண்டது.
முதிர்ச்சியான சமூகங்களில் தத்துவார்த்தப் போர்/உரையாடல் (Discourse) என்பது ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். ஆனால் தமிழ்நாட்டில் (இணைய சகாபதத்தில்) அது மலிந்து கொண்டே வருகிறது! வாய்ப்பே இல்லை!
சிலரின் சாதிய பிழைப்புவாதம் அந்த நூலை விமர்சன நூலாக காணும் பக்குவத்தை அவர்களுக்கு வழங்கவில்லை. எனவே அவதூறுகளை அள்ளி வீசினார்கள். கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள இயலாதவர்கள் இன்றளவும் கூட்டங்கள் நடத்திக்கொண்டு எங்களின் சாதியை மட்டுமே முன்வைத்து வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வசைகளை தொகுத்து எதிர்வினை என்னும் பெயரில் ஒரு நூலை வெளியிட்டு வசைபாடி புளங்காகிதம் அடைந்தனர். என் மதிப்பிற்குரிய நண்பரும், இயக்குனரும் அவர்களின் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றியிருந்தார்! (சமீபத்தில் தான்!).
சில ‘இலக்கியவியாதிகள்’ வரட்டுவாதம், மொண்ணை மார்க்சியம் என்று மீண்டும் ஏதோ ஒரு சொல்லாடல் மூலம் கடக்கின்றனரே ஒழிய சாதி என்றால் என்ன? சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கரிடம் உள்ள தீர்வு என்ன என்பதற்கு பதில் அளிக்கவியலாதவர்கள். (தெரிந்தால் சொல்லிவிட மாட்டார்களா!).
வேடிக்கை என்னவெனில், தொடர்ச்சியான உரையாடல் என்னும் அடிப்படையில் நாங்கள் (நானும் வசுவும்) அதற்கடுத்து இரண்டு நூல்களைக் கொண்டுவந்தோம். சாதியப் பிரச்சினயும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூல் சாதியப் பிரச்சினை பற்றிய முக்கியமானதொரு ஆய்வை முழுமையாக முன் வைக்கும் நூல் (மொழிபெயர்ப்பு), அதனோடு சில கட்டுரைகளும், என் பதிலுரைகளும் உள்ளது. அதுகுறித்து இன்றுவரை அவர்கள் வாய் திறக்கவில்லை. (ஏனெனில் தலைப்பில் அம்பேத்கர் பெயர் இல்லை)
அம்பேத்கரின் புத்தரும் தம்மமும் நூலை முன் வைத்து வசுமித்ர - அம்பேத்கரும் அவரது தம்மமும் என்னும் நூலை எழுதினார். அம்பேத்கர் முன்வைக்கும் புத்தர் மற்றும் பௌத்தம் பற்றிய திறனாய்வு நூல் அது. மேலும், பகுத்தறிவுக்கு உட்படுத்தாமல் அதனை உயர்த்திப் பிடிக்கும் தலித்தியவாதிகள்/கம்யூனிஸ்டுகள்/பின்நவீனத்துவவாதிகள் சிலரையும் கேள்விக்கு உட்படுத்தும் நூல் அது. நூலின் தலைப்பை வைத்து மீண்டும் அவதூறுகள்! நூலைப் படிக்காதீர்கள் என்று ‘காமெடி’ பிரச்சாரம் செய்தனர்.
இது மட்டுமல்லாது, ‘பெரிய இலக்கியவாதி’ என்று அறியப்படும் ஒருவர் (தமிழ்நாட்டு குடிமகன் அல்ல!) தன்னுடைய மார்க்சிய/கம்யூனிஸ்ட் வெறுப்பை தீர்த்துக்கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ரங்கநாயகம்மாவையும் (என்னையும்) பகடிகள் செய்து பஞ்சாயத்து செய்வார். மார்க்சியம் என்றால் என்னவென்று கேட்டுப்பாருங்கள்! விளங்கிவிடும்!
ஒழுங்கு, அமைப்பு இதெற்கெல்லாம் கட்டுப்படவியலாத அனார்கிச அரசியலை/சீர்கேட்டை பின்நவீனத்துவத்தின் பெயரால் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்நபர் சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு என்னவென்றால் – கட்டவிழ்ப்பு, அனைத்தையும் கட்டவிழ்த்து குலைத்துப் போட்டு, எவ்வித ஒழுங்குமின்றி அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்வது! அதாவது கட்டற்ற ’நுகர்வு’ வாழ்க்கை வாழ்வது! இதில் அம்பேத்கர் மீது மட்டும் இவருக்கு ஏன் கரிசனம்? ஏனென்றால் இவருக்கு துணை நிற்கும் பதிப்பகத்தாரின் பிழைப்புவாதம் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ‘கூவுவதற்கு’ ஏதாவது தேவையல்லவா!
பொதுவுடைமை என்பது சர்வாதிகாரம் என்பார்கள்! எது சர்வாதிகாரம் என்பதற்கு போதுமான விளக்கங்கள் உள்ளன! அதையெல்லாம் படிக்கவும் மாட்டார்கள். நானும் மார்க்சிஸ்ட் தான் தல என்பார்கள்! ஆனால் எல்லா நேரமும் கம்யூனிச வெறுப்பையே உமிழ்ந்துகொண்டிருப்பார்கள்!
இதை அனைவரும் காணவோ, அறியவோ மாட்டார்கள்! அத்தகையோரின் வெறுப்பரசியலுக்கு தொடர்ந்து நானும் வசுவும் (எங்களுக்கு துணை நிற்கும் சில தோழர்களும்) எதிர்வினைகளை ஆறிக்கொண்டே இருக்கிறோம். அதன் தொடர்ச்சியான பதிவே இது.
“சங்கிகள் கை மேலோங்கி இருக்கும் இந்த நேரத்தில்… அம்பேத்கருக்கு செருப்பு மாலை அணிவித்து அவர்கள் அராஜகம் செய்யும் நேரத்தில் இது தேவையா?” என்று யாரேனும் வருவீர்கள் என்றால், வரலாற்றுப் பக்கங்களை புரட்டுங்கள். சுதந்திரப் போராட்ட காலம் தொடங்கி இன்றுவரை உள்நாட்டு நிலவுடைமையாளர்கள் (சாதி எதிர்ப்பும் சேர்த்துதானே!), முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கம்யூனிஸ்டுகள் இயங்கிக் கொண்டிருக்கும்போது, பிரிவினைவாதம் செய்தவர்கள், செய்பவர்கள் யார் என்பது விளங்கும்.
அந்த நேரத்தில், இந்த நேரத்தில் ஒரு கூட்டம் மார்க்சியத்தில் எதுவுமில்லை என்று சொல்வதோடு கம்யூனிஸ்டுகளின் பங்களிப்புகளை/தியாகங்களை எல்லாம் போகிற போக்கில் அவதூறு செய்துகொண்டு, (அதேவேளை அவர்களை பயன்படுத்திக்கொண்டும்) தம் பிழைப்புவாத அடையாள அரசியலை பரப்பிக் கொண்டு உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் போக்கு இருக்கும்வரை இத்தகைய எதிர்வினைகளை தடுக்கவியலாது!
நியாயமாக நீங்கள் அவர்களைப் பார்த்து ”ஏன் இப்படி பிரிவினைவாதத்தில் ஈடுபடுகிறீர்கள்? பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத்தை ஒரு பொது எதிரியை நோக்கி அணிதிரட்ட ஏன் முட்டுக்கட்டை வகிக்கிறீர்கள்” என்று கேள்வி கேட்கலாம்!
****
இனி வசுவின் பதிவிலிருந்து Vasu Mithra 

// அம்பேத்கரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட இடத்திற்கு தள்ளியதும். அவர் குறித்து ஆக்கப்பூர்வமான கட்டுரைகளோ புத்தகங்களோ தமிழில் வராததற்குக் காரணம், அம்பேத்கர் கூறியதனைத்தும் சரி என்பதாலோ, அம்பேத்கரின் ஆய்வுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதென்றோ, தத்துவ ஆசிரியர்கள், ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதென்றா அர்த்தம் அல்ல. மாறாக அம்பேத்கரை திறனாய்வு செய்தால், செய்தவரின் சாதி பார்க்கப்படும். எந்த யோசனையும் இல்லாமல் அவர்மீது சாதிய வன்மத்தைக் கக்க முடியும். இதன் விளைவாக அம்பேத்கர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தலைவராக உருமாற்றமடைந்தார். விமர்சிக்க நினைத்தவர்களும் நமக்கு எதுக்கு வம்பு, நாமும் ஜெய்பீம் சொல்லி வைப்போம் என்று அம்பேத்கரியர்களான சோகக் கதை இதுதான்.
உதாரணத்திற்கு, இந்தியா தனக்கான சட்டத்தை எழுத வக்கற்றுப் போயிருந்த காலத்தில், அம்பேத்கர் தனது அரசியல் அறிவை முன்வைத்தார், சட்டங்களை தனியாக எழுதினார், அவர் இல்லையென்றால் அரசியல் சாசனமே இல்லை என்று அவருக்குப் புழகாராம் சூட்டப்படும், ஆனால், நான் கூலிக்கு எழுதுபவனாக இருந்தேன் என அம்பேத்கரே கூறியிருக்கிறாரே என்று கேள்விகளை முன்வைத்தால், உடனே அந்த சட்டத்தை எரிப்பேன் என அம்பேத்கரே சொல்லிவிட்டாரே என்று குரல் வரும். நாம் இப்பொழுது நடுவில் குழம்பி நிற்க வேண்டி வரும். அரசியல் சட்ட நிர்ணயகர்த்தா அனைத்தும் தெரிந்தவர் என்ற பாத்திரத்தை ஏற்பதா, இல்லை சட்டத்தை எரிப்பேன் என்ற பாத்திரத்தை ஏற்பதா.?//

மேலும் வாசிக்க: https://www.facebook.com/makalneya/posts/4061604773857497 

Sep 10, 2016

ஜீவாவின் விமர்சனத்திற்கான எதிர்வினை

சாதியப் பிரச்சினைக்கான தீர்வு... நூல் பற்றி தோழர் ஜீவானந்தம் எழுதிய திறனாய்வைப் படித்தேன். அவரே கூறியிருப்பதுபோல் கூட்டத்திற்காக தயார் செய்த கட்டுரை அது. அவர் கூட்டத்திற்கு வர முடியாமல் போனதற்கு என் கவனக்குறைவே காரணம். டிக்கெட் புக் செய்ய இன்னமும் காலம் உள்ளதே என்று நினைத்து நான் தாமதித்ததால், கடைசி நிமிடத்தில் டிக்கெட் கிடைக்காமல் போனது.
விமர்சனத்திற்கு வருவோம்: சாதியத் தாக்குதல்கள், 'மார்க்சிய தாக்குதல்களுக்கு' இடையில் வந்திருக்கும் நாகரீகமான விமர்சனம் என்பது ஆறுதல். அம்பேத்கரை நாம் எப்படியெல்லாம் புரிந்துகொள்ள முடியும் என்று 'பொறுப்போடு' பேசியுள்ள பிரியத்துக்குரிய தோழர் எங்களை நன்கறிந்திருந்தும் எங்கள் மீது தொடுக்கப்படும் 'சாதியத் தாக்குதல்' மற்றும் 'பின்னணி' குறித்த பேச்சுகளுக்கு ஒரு சிறு கண்டனங்களைக்கூட பதிவு செயாதது கண்டு கூடுதல் மகிழ்ச்சி!
தோழர் ஜீவானந்தத்துடன் மார்க்சியம் குறித்தும் - கோட்பாட்டு விளக்கம் குறித்தும் எங்களுக்குப் பல முரண்பாடுகளும், விமர்சனங்களும் உண்டு. அதை நாங்கள் உரையாடியும் வருகிறோம்.
தோழர் ஜீவா உட்பட சில தோழர்கள் பெரும்பாலும், எவருடைய மார்க்சிய நூல்களையும் - சிக்கலுடையது, திரிக்கிறது, பிரச்சினைக்குரியது என்று சொல்லியே நாங்கள் கேட்டிருக்கிறோம். மார்க்சியக் கோட்பாட்டு விளக்கம் மற்றும் நடைமுறைப்படுத்துதல் குறித்து மார்க்சியர்களிடையே முரண்பாடு இருப்பது உலகறிந்ததே. அந்த வகையில் தோழர். ஜீவானந்தத்தின் விமர்சனம் அவருடைய மார்க்சியப் புரிதலிலிருந்து வருகிறது. அதில் எப்படி மற்றவர்களுக்கு விமர்சனம் இருக்கிறதோ, அப்படி மற்றொரு கோட்பாட்டாளரிடம் ஜீவாவுக்கும் விமர்சனம் இருக்கலாம். நாகரீக உரையாடல் நிகழும்வரை, உரையாடலைத் தொடர முடியும். அவ்வளவே!
ரங்கநாயகம்மாவின் விளக்க முறையில் தோழர் ஜீவானந்தம் ஏற்கனவே முரண்பட்டு விமர்சனங்களை எழுதியுள்ளார். நானும் அவருடன் கடுமையாக முரண்பட்டு தர்க்கவாதம் புரிந்துள்ளேன். உதாரணமாக குழந்தைகளுக்கான பொருளாதாரம் நூலில் கச்சாப் பொருள் என்பது எது என்பதை விளக்குகையில், ரங்கநாயகம்மா - ஒரு பொருள் இயற்கையாக விளைந்திருக்குமெனில் அது இயற்கைப் பொருள் அதன் மீது உழைப்பு செலுத்தப்படும்போது அது கச்சாப் பொருளாகிறது (பயன் மதிப்பை்புடைய பொருள், பின்னர் அது சந்தைக்கு வரும்போது மதிப்பாக மாறுகிறது), அதாவது ஒரு கிழங்கு மண்ணுக்கடியில் இயற்கையாக இருக்கிறதென்றால் அது இயற்கைப் பொருள், அதை ஒருவர் பறித்து சமைப்பார் எனில் அப்போது அந்த கிழங்கு கச்சாப் பொருளாகிறது என்பார். சந்தைக்கு வரும்போது மட்டுமே அப்பொருள் சரக்காகிறது. இல்லையேல் தனிப்பட்ட தேவைக்காகப் பரித்து சமைத்தது என்றே பொருள்படும். பொருள், இயற்கைப் பொருள், இயற்கை வஸ்து, கச்சாப் பொருள், சரக்கு இவற்றையெல்லாம் ரங்கநாயகம்மா விளக்கும் முறையில் ஜீவா மாறுபடுவார்.
ஜீவாவைப் பொறுத்தவரை அது தவறு. //The natural things available in nature without the intervention of human labour sometimes act as raw-materials also// அவரது கட்டுரையைப் படித்தால் முழுமையான கருத்தை வாசகர்கள் அறிந்துகொள்ளலாம். ஆனால் இதில் எனக்குள்ள பிரச்சினை என்னவெனில் உழைப்பின் தலையீடின்றி இயற்கைப் பொருளானது கச்சாப் பொருளாகவும் இருக்கும் எனும்போது அது முதலாளித்துவ சிந்தனையாகிப் போகிறது. இயற்கையையே கச்சாப் பொருளாகப் பார்க்கும் பேராபத்து அதில் நிலவுகிறது.
ரங்கநாயகம்மா உழைப்புக்கு (உழைப்பு நடைமுறைக்கு) முக்கியத்துவம் கொடுத்து விளக்கும் முறை மற்றும் மேற்சொன்ன உதாரணத்தில் பொருள், கச்சாப்பொருள் பற்றியெல்லாம் மார்க்சின் மூலதனத்தை வைத்து அவர் விளக்கும் முறையில் எனக்கு எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை என்று நான் ஏற்கனவே அவரிடம் உரையாடி இருக்கிறேன். இப்படி எங்களுக்குள் நிறைய முரண்பாடு உண்டு. அது கோட்பாட்டு விளக்கம் சார்ந்தது. (அதுமட்டுமின்றி உழைப்புசார் உறவுகள் மற்றும் உற்பத்தி உறவுகள் இரண்டும் ஒன்றே என்ற விளக்கத்தையும் ரங்கநாயகம்மா அளித்து விட்டார், அதையும் நான் அவரிடம் பகிர்ந்திருக்கிறேன்.)
அடிப்படையில் மார்க்சியம் என்பது தனியுடைமையை எதிர்க்கிறது. அதன் அடிப்படையிலான உற்பத்தி முறையை, உழைப்புப் பிரிவினையை, உழைப்புச் சுரண்டலை (விளக்குகிறது) எதிர்க்கிறது. இந்த அடிப்படையிலிருந்தே ரங்கநாயகம்மா அம்பேத்கரை விமர்சிக்கிறார். ஏனென்றால் அம்பேத்கரது பொருளாதார சிந்தனை ஆளும் வர்க்கக் கருத்தியலின் அடிப்படையில் உள்ளது. அது முதலாளித்துவ பொருளாதாரத்திற்கே உதவக்கூடியது எனும் வகையில் தலித் மக்கள் விடுதலைக்கு அது போதாது. இதுதான் ரங்கநாயகம்மா முன் வைக்கும் சாரம். அதேபோல் சாதி ஒழிப்புக்கு அம்பேத்கர் முன் வைக்கும் தீர்வு பௌத்தம் (அஷ்டாங்க மார்க்கம், பஞ்சசீலம்). அதன் போதாமையை மார்க்சியக் கண்ணோட்டத்திலிருந்து அவர் விளக்குகிறார். இதையெல்லாம் இவர்கள் (ஜீவா, ஏறத்தாழ இதே கேள்விகளை தனது கட்டுரையில் முன் வைத்த அவரது நண்பர், மற்றும் சிலர்) ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதை அவர்களது விமர்சனங்களின் வாயிலாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.
அம்பேத்கரை கராராக விமர்சிப்பதில் இவர்களுக்கு அச்ச உணர்வு இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. அதற்கு பொருள்முதல் பார்வை என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். காலவரிசிப்படி புரிந்துகொள்ள வேண்டும் , குறிப்பிட வேண்டும் என்பதெல்லாம் சரி, ஆனால், நாம் ஒருவருக்கு மட்டும் பொருள்முதல்வாதப் பார்வையை apply செய்து புரிந்துகொண்டு சார்புநிலை எடுக்க வேண்டுமெனில், இதே நிலைப்பாட்டை காந்தி தொடங்கி இந்துத்துவவாதிகள், மத நூல்கள் என அனைத்திற்கும் கொடுத்து, எல்லாவற்றிலுமிருந்து 100கிராம் வீதம் எடுத்து ஒரு கதம்ப மார்க்சியத்தை உருவாக்கலாம்.
உண்மையில் இவர்கள் அம்பேத்கரை பரிதாபத்திற்குரிய ஆளுமையாக மாற்றுகிறார்கள். ஆனால் ரங்கநாயகம்மா (நாங்களோ) அவரை அப்படிப் பார்க்கவில்லை. மாபெரும் அறிவுஜீவி, சாதி ஒழிப்பிற்காக பல ஆய்வுகளையும், பணிகளையும் மேற்கொண்ட ஆளுமை என்கிற வகையில், அறிவுதளத்தில் அம்பேத்கரின் சிந்தனைகள், திட்டங்கள் குறித்து திறனாய்வு செய்கிறார். ஒரு பொருளாதார அறிஞர் என்கிற வகையில், அவருடைய பொருளாதார திட்டங்களில் உள்ள சிக்கலை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறார். (இங்கு கூறுமுறை கொஞ்சம் கராராக, முகத்தில் அறைந்தார் போல் உள்ளது அவ்வளவே!)
அதேபோல் புத்தரை ஒட்டுண்ணி என்கிறார் என்றால், உழைக்காமல் மற்றவர் உழைப்பில் (உபரியைக் கைப்பற்றி வாழ்வதற்கு அது சமம்) வாழும் ஒருவரை அப்படி சொல்வதில் என்ன தவறு? மார்க்சியம் மதத்தை (தொழிலாக) போதிப்பதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் இவர்கள் ஏன் அதற்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என்று எனக்குப் புரியவுமில்லை. (இது என்ன மார்க்சியம்?) எல்லாரும் உழைத்து வாழ வேண்டும். எல்லாருமே இரண்டு வகையான உழைப்பிலும் ஈடுபட வேண்டும். இது மார்க்சிய அடிப்படை. இதை விளக்கினால் இதை அறவாதம் என்கிறார்கள். உழைப்புச் சுரண்டல் என்பது அறமற்ற செயல்தானே? பொருள்முதல்வாத பார்வையற்ற ஒருவர் எப்படி மார்க்சியத்தை அடிப்படையாக வைத்து பேசுவார்? உழைப்பாளர்களை பரிதாபத்துக்குறிய வகையிலா அவர் சித்தரிக்கிறார்? மார்க்ஸ் முன்வைத்த அடிக்கட்டுமான தகர்ப்பு, சோஷலிச சமூக உருவாக்கம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், புரட்சி என எல்லாவற்றையும் முன்வைத்துத்தானே பேசுகிறார். அதுமட்டுமின்றி அம்பேத்கரிடமிருந்து எதை எடுத்துக்கொள்ளலாம் அல்லது எது பயனளிப்பது என்பதையும் பட்டியலிட்டுள்ளார்.
அதேபோல் அம்பேத்கர் முன்வைத்த புத்தரைத்தான் அவர் நையாண்டி செய்கிறார். (புத்தர் துறவரம் மேற்கொண்டதற்கு அம்பேத்கர் சொல்லும் கதையைப் படித்தால்…..) புத்தரை எப்படி அணுகுவது என்பதையும் ரங்கநாயகம்மா தெளிவாகவே விளக்குகிறார். சமூகத்தை எப்படி ஆய்வு செய்வது, நிலவும் ஏற்றத்தாழ்வுக்கான அடிப்படைக் காரணத்தை எப்படி புரிந்துகொள்வது என்று விளக்கும் தத்துவம் மார்க்சியம்; அதனால் மார்க்சியம் தேவை என்கிறார். மார்க்சியத்தின் அடிப்படைகளை, அதாவது ஏற்றத்தாழ்வைக் களைந்திட மார்க்சியம் எப்படி உதவும் என்று போதுமான அளவுக்கு விளக்கியுள்ளார்.
போதா குறைக்கு வலிந்து மார்க்ஸ் கூட உழைக்கவில்லை, கட்சித் தோழர்கள் உழைப்பதில்லை என்று இவர்களாகவே எடுத்துக்கொடுத்து வியாக்கியானம் செய்கிறார்கள். (உச்சபட்சமாக, தீவிரவாத குழுக்களுக்கு லைசன்ஸ் வழங்குகிறார் என்று ஏதோ பதிவு செய்திருக்கிறார். இது ஏதோ அமைப்பு சார்ந்த பிரச்சினையாக இருக்கும்போலிருக்கிறது. உண்மையில், இவர்கள் யாருக்கு pointகளை எடுத்துக் கொடுக்கிறார்கள்?).
கார்ல் மார்க்ஸோ, கட்சித் தோழர்களோ உபரியைப் பெற்று, உழைப்புச் சுரண்டலில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்தவில்லை, நடத்துவதுமில்லை. மத போதனைகளில் ஈடுபடவில்லை. அரசுக்கு ஆதரவாக சமரசம் செய்துகொள்வதில்லை. பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குத் தேவைப்படும் அணிதிரட்டலுக்குத் தேவையான உழைப்பில் ஈடுபடுகின்றனர். (அதில் கட்சி, இயக்கம் சார்ந்து பலவீனங்கள், குறைபாடுகள் இருக்கலாம்). முன்னவர் சமூக மாற்றத்திற்காக மூளை உழைப்பில் ஈடுபட்டவர். கட்சித் தோழர்கள் (பெரும்பாலும்) உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள். நேரடியாக இது உற்பத்திக்கு பங்களிக்காவிட்டாலும் சுரண்டல் நிறைந்த உற்பத்தி முறையை தகர்த்தெரிவதற்கான சமூக மாற்றத்திற்காக உழைக்கிறார்கள். இந்த அமைப்புகளை அரசு நிதி கொடுத்து வளர்ப்பதில்லை. அதேபோல், அந்த அமைப்புகளும் - கடன் பெற்றவர், இராணுவ வீரர்களை (ஒருகட்டம் வரை பெண்கள்) அமைப்பில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று அரசை திருப்திபடுத்தும் ‘கொள்கைகளை’ வைத்திருப்பதில்லை என்பது யதார்த்தம்.
ஆனால், புத்தரின் ‘மூளை உழைப்பு’, ‘செயல்பாடு’ அத்தகையதா? புத்தரோ, பௌத்த மடாலயங்களோ, மத நிறுவனங்களோ அப்படி இல்லை. அதுமட்டுமின்றி மத நிறுவனமாக பௌத்தம் எப்படி அரசுக்கு சாதகமான கருவியாக பின்னாளில் மாறியது என்றெல்லாம் மார்க்சிய ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். அதே நிலைப்பாட்டைத்தான் ரங்கநாயகம்மாவும் கொண்டுள்ளார். ஆனால் இவர்களின் நிலைப்பாடு என்னவென்பதுதான் எனக்கு விளங்கவில்லை.
பாட்டாளி வர்க்க விடுதலைக்கான மக்கள் இயக்கம் என்பது சுரண்டல்வாத சமூகத்தில் அவசியம் என்பதையும் இதுபோன்ற அமைப்பு முறை கொண்ட அரசியல் இயக்கத்தின் தேவையைக் கூட நிராகரிக்கும் அளவிற்கோ அல்லது அவர்களை ஒட்டுண்ணி என்று சொல்லும் அளவுக்கோ ஒருவர் முட்டாளாக இருக்க முடியாது. ஆனால், தம்மை இந்த இணைய வெளியிலும், ‘விமர்சகர் வட்டத்தி்லும்’ நிரூபித்துக்கொள்ளும் பதட்டத்தில், எப்படிப்பட்ட ‘குதர்க்கமான’ கேள்விகளை பூரிப்பின்றி முன்வைக்கும் நிலைக்கு இவர்கள் ஆளாகிறார்கள் என்பது சற்று வியப்பாகவே உள்ளது.
உழைக்கும் வர்க்கத்திற்கு உழைப்புச் சுரண்டலைப் பற்றியும், தாம் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாவதையும் எளிமையாகப் புரியும் வண்ணம் ரங்கநாயகம்மா விளக்குகிறார் என்பதே என்வரையிலான கருத்து. மார்க்சியத்தைப் புரிந்துகொள்வதில் எனக்கு அவருடைய எழுத்துகள் பேருதவியாக இருந்திருக்கின்றன. இனி வாசகர்கள் அவருடைய நூலையும், மார்க்சிய மூல நூல்களையும் தாமே நேரடியாகப் படித்து சீர் தூக்கிப் பார்த்து தெளிவு பெறலாம்.