Showing posts with label #Religion. Show all posts
Showing posts with label #Religion. Show all posts

Jun 22, 2020

சட்டங்களால் சாதி ஆதிக்கத்தை, ஆணவக் கொலைகளை தடுக்க இயலாது!

வழக்கம் போல ஆணவக் கொலைகளைத் தடுக்கும் சட்டம் இயற்ற வேண்டும் என்னும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன!


தொட்டதற்கெல்லாம் ஒரு சட்டம் இருக்கிறதென்று தெரிந்துதானே இங்கே எல்லா குற்றங்களும் நடக்கின்றன!

 

பொதுபுத்திதான் இதை நல்லவர் கெட்டவர், ஊழல், இலஞ்சம், ‘விலைக்கு வாங்கிவிட்டார்கள்’ என்று பார்க்கிறதென்றால் முற்போக்கு அரசியல் சக்திகளும் அப்படி பார்ப்பது வியப்பாக உள்ளது!

 

சட்டங்களால் குற்றங்களைத் தடுக்க இயலும், நீதி கிடைக்கும் என்றால் இந்நேரம் இந்தியா ஒரு பொற்காலத்தை எட்டியிருக்க வேண்டுமல்லவா?

 

"நீதிமன்றம், காவல்துறை, இராணுவம் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்புகளும் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்ய உருவாக்கப்பட்டவை. மக்களுக்காக அல்ல" - கார்ல் மார்க்ஸ்.

 

வர்க்க முரண்பாடுகளின் விளைவாக தோன்றியதே அரசு! அதன் பாகங்கள் நீதிமன்றம், காவல்துறை, இராணுவம் மற்றும் சிறைச்சாலை என்கிறார் லெனின்…

இதன் பொருள் என்னவென்று கூட விளங்கிக்கொள்ள மனமின்றி, கம்யூனிஸ்டுகள் எப்போதும் வர்க்கத்தையே பேசிக்கொண்டிருப்பார்கள் என்று இன்னமும் எதிர்திசையில் தள்ளப் போகிறீர்களா?

 

ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலவும் உற்பத்தி முறைக்கு ஏற்ற சட்டதிட்டங்களும், பண்பாடும் தோன்றும். அது ஆளும் வர்க்க அதாவது சொத்துடைமை வர்க்கத்தின் நலன் காக்கவே என்பதைத்தான் காலம் காலமாக கம்யூனிஸ்டுகள் கத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை பார்ப்பனர்கள் / துரோகிகள் / கற்பனாவாதிகள் என்று சொல்லி சொல்லி சட்டவாதம் பேசி என்ன மாறியுள்ளது? கம்யூனிஸ்டுகள் பேசும் வர்க்க அரசியலில் என்றாவது சாதி எதிர்ப்பை, பார்ப்பனிய எதிர்ப்பைக் கைவிட்டோ, இதர ஆதிக்கங்களை ஆதரித்தோ, தாங்கியோ பேசியுள்ளார்களா என்ன?

 

தயவு செய்து சாதியும் வர்க்கமும் கை கோர்க்கும் இடத்தை உணர முற்படுங்கள். அது சொத்துடைமை, தனியுடைமை, நிலவுடைமை, முதலாளித்துவம் என்னும் அமைப்புமுறையின் அடித்தளம். சாதி ஒருவிதமான படிநிலை அமைப்பு பாலினம், மதம், இனம் உள்ளிட்ட அனைத்து அடையாள அடிப்படையிலான மேலாதிக்கமும், உழைப்புப் பிரிவினையும், ஒதுக்கலும், ஒடுக்குமுறையும் அப்படியே.

ஆனால் அவை தோன்றியது வர்க்க முரண்பாட்டிலிருந்தும், செல்வக் குவிப்பிற்காகவுமே. இதை விளங்கிக்கொள்ள பெரிய சவால் ஏதும் இருக்கிறதா? வர்க்க முரண்பாட்டினால் விளையும் கொந்தளிப்புகளை, புரட்சியை ஒடுக்க தோற்றுவிக்கப்பட்டதே அரசு, காவல்துறை, இராணுவம், மதம் ஆகிய நிறுவனங்கள். பண்பாடும் அதிலிருந்தே.. அதாவது உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்தே உதிக்கிறது… இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை…

 

பெண்கள் அன்றாடம் பாலியல் மற்றும் குடும்ப வன்முறைக்கு உள்ளாகிறார்கள். அதற்காக ஆணாதிக்கத்தை ஒழித்துவிட்டு வர்க்கப் போராட்டம் நடத்துங்கள் என்று எப்படி சொல்ல இயலாதோ அதேபோல் தான் சாதியை ஒழித்துவிட்டு வர்க்கப் போராட்டத்தைப் பேசுங்கள் என்று சொல்வது புரிதலற்ற நிலை.

எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. அந்த தொடர்பு புள்ளியை தான் மார்க்சியம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கம்யூனிஸ்டுகளும் புரிய வைக்கப் போராடுகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள மறுப்பதே சாதி ஒழிப்பில் நிலவும் பின்னடைவுக்கு காரணம் என்பதை இந்த நிலையிலாவது தயவு செய்து விளங்கிக் கொள்ளுங்கள்.

 

சாதி வெறியால் தலித்துகளின் உயிர்கள் இப்படி அநியாயமாகப் பறிக்கப்படுகையில், நீதி மறுக்கப்படுகையில், தலித்துகள் மீது வன்முறை ஏவப்படுகையில் “இப்போதாவது இவர்கள் இந்த தனி உடைமை அமைப்பின் குரூரத்தை விளங்கிக் கொள்ள மாட்டார்களா” என்றே நெஞ்சம் பதைபதைக்கிறது.

தலித் மக்களைக் காக்க இந்து மத எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, சமூக நீதிக்கான போராட்டங்களோடு நின்றுவிடாமல் சாதியமைப்பின் அடித்தளத்தை தகர்த்திடுவதற்கான பாதை எது என்பதை தலித்திய அறிவுஜீவிகளும், தலித்திய அரசியல் செயல்பாட்டாளர்களும் இனியாவது கண்டுணர்வது அவசியம். பெண்களைக் காக்கவும், சாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கவும் கூட அது அவசியமாகிறது.

 

எல்லாவற்றுக்கும் மேலாக கண்ணுக்குத் தெரியாமல் உயிர்களை விழுங்கிக் கொண்டிருக்கும் கொடிய வறுமையை இன்னும் இதர ஒடுக்குமுறைகளை, சுரண்டலை ஒழிக்க சட்டத்தில் வழியில்லை தோழர்களே! இதனால் எல்லாம் பாதிக்கப்படுவது அனைத்து சாதி மக்களும் தான்...

 

இது ஒரு மன்றாடலே! தலித் மக்களுக்காகவும், உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்காகவும்!

 


Feb 3, 2015

மதம் பிடித்த பேச்சு






வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில் இந்திய அரசியல் வெளியில் இப்போது உச்சபட்ச நகைச்சுவை பேச்சுகளை கேட்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால் உலக அரங்கில் இந்திய அறிவின்மானம் கப்பலேறிக் கொண்டிருக்கும் வேளையில் அப்பேச்சுக்களை உதிர்ப்பவர்கள் இந்து மதம் என்னும் மதம் பிடித்த தன்மையில் அவற்றை மிகவும் பொறுப்புள்ள பேச்சாக கருதுவதே.

இந்து-இந்திய தேசிய உணர்வை வலுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட அப்பேச்சுகள் கலாச்சார காவல், சமஸ்கிருதமயமாக்கல், கல்விகளில் இந்துத்துவத்தை உட்புகுத்துதல் எனத்  தொடங்கி, விஞ்ஞானத்திற்குள் புகுந்து இப்போது ஒரு பெண்ணின் கருவறைக்கு ஆணை பிறப்பிப்பதில் வந்து நின்றிருக்கிறது.

அதிகாரத்திற்காக பிறப்பிலேயே பேதங்களைக் கற்பித்து, அதை சட்டமுமாக்கி பல்லாயிரம் ஆண்டுகளாக மனித சமூகத்தையே சாதி என்னும் கொடிய நஞ்சினுள் மூழ்கடித்து வைத்திருக்கும் இந்துத்துவவாதிகள் எல்லாவற்றிலும் தாங்களே முதலானவர்கள், மேன்மையானவர்கள் என்று கூச்சலிட்டுக் கொண்டிருப்பது ஒன்றும் நமக்குப் புதிதல்ல. தங்களின் மதம் பிடித்த பேச்சுகளால் இவர்கள் ஆழமாக விதைத்திருக்கும் வெறுப்புணர்வு என்பது சீர் செய்யவே முடியாத அளவுக்கு சமூகத்தில் புரையோடிப்போய் உள்ளது. குறிப்பாக இந்து - முஸ்லிம் என்னும் எதிர் எதிர் கட்டமைப்பு, இந்துக்களே இந்தியர்கள், இஸ்லாமியர்கள் வந்தேறிகள் என்பதே அதன் அடிப்படை. அவ்வெறுப்பை மூலதனமாக்கி இவர்கள் செய்யும் அரசியல் மனித சமூகம் சகித்துக்கொள்ள முடியாதளவுக்கு கொடூரமானதாக இருக்கிறது.

சங் பரிவார்கள் இன்னும் இதர சமாஜ்கள், சேனைகள் மூலம் ஆண்டாண்டு காலமாக ஊட்டி வளர்த்து வந்த இந்துத்துவ வெறியானது இப்போது நேரடியாக ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும்பொழுது எந்த எல்லைக்குச் செல்லும் என்பதை சொல்லவும் வேண்டியதில்லை. சமீபத்தில் கேரளாவில் நடந்த கலாச்சார காவல் தாக்குதல், காதலனுடன் சென்ற ஒரு பெண்ணை பஞ்சாயத்தில் அனைவரின் முன்னால் முலைப்பால் கொடுக்கச் சொன்ன பஞ்சாயத்து தீர்ப்புகள், மீண்டும் ராமர் கோவில் கட்டுவோம் என்னும் முழக்கங்கள் என மத-கலாச்சார அளவில் அரங்கேரும் அராஜகங்கள் ஒருபுறம் இருக்க, இப்போது அரசு இயந்திர பிரதிநிதிகளும் சர்வ சாதாரணமாக இந்து மதம் பிடித்த பேச்சுகளை உதிர்க்கும் நிலைவந்தாகி விட்டது. பிரச்சினை என்னவென்றால், அவை சர்வதேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில், தளங்களில்கூட எவ்வித குற்ற உணர்வுமின்றி பேசப்படுகின்றன. எல்லாவற்றிலும் இந்து இந்திய அடையாளமிருக்க வேண்டும் என்னும் ஒரு வெறி இவர்களை சிந்திக்க விடாமல் செய்கிறது.

சமஸ்கிருத வாரம் என்பதைக் கட்டாயமாக்கும் ஒரு சுற்றரிக்கை விட்டார்கள், பின்னர் கிறிஸ்துமஸ் தினத்தை நல்லாட்சி தினமாக அறிவித்து, பலமான எதிர்ப்புகள் விமர்சனங்கள் கிளம்பியபோது சால்ஜாப்புகள் சொல்லி சமாளித்தார்கள். மஹாபாரதம் கதையல்ல நிஜம் என்று சொன்ன இந்திய வரலாற்று கவுன்சிலின் தலைவர் சுதர்ஷன் ராவ், கூடுதலாக 5000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி, காஸ்மிக் ஆயுதங்கள் இருந்திருக்கும் என்று புராணங்களை ஆதாரமாகக் கொண்டு இவைகள் இந்திய வரலாற்று உண்மைகள் என்கிறார். இந்து தேசியராக பிரச்சினைக்குரிய விதத்தில் அறியப்பட்ட தினநாத் பாத்ரா என்பவர் பள்ளிக்கூட பாட புத்தகங்களை எழுதுவதற்கான அலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வித்துறையில், வரலாற்று துறையில் மதத்தின் தாக்கம் இப்படியிருக்க, காவல்துறையில் இந்து கலாச்சார தாக்கம் என்ன செய்திருக்கிறது தெரியுமா? சுதந்திர தினத்தன்று போர்பந்தரில் பெண்களே பொதுவெளியில் நாகரீகமான உடையணிந்து வாரீர்என்று சுவரொட்டிகளை காவல்துறையே அடித்து ஒட்டயுள்ளது. சொல்லப்பட்ட காரணம் பெண் விடுதலை!
இப்படிப்பட்ட வேடிக்கைகளுக்கு மகுடம் சூட்டும் விதமாக, வேத காலத்திலேயே பறக்கும் விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன என்னும் காப்டன் ஆனந்த் போடாசின் முத்தாய்ப்பானபேச்சு. இது நடந்தது இந்திய தேசிய அறிவியல் காங்கிரசில்! சமஸ்கிருதம் மூலம் பண்டைய அறிவியல் என்பதே அக்கருத்தரங்கின் ஆய்வுப்பொருள். சர்வதேசிய முக்கியத்துவம் வாய்ந்த, அதுவும் அறிவியல் துறையில் இப்படிப்பட்ட மத-மொழிச்சார்புடைய ஒரு தலைப்பு இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பா..கவின் ஆட்சியில்தான் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறப்பின் அடிப்படியிலேயே ஒருவன் தாழ்ந்தவனாகின்றான், தீண்டத்தகாதவனாகின்றான் என்று சொல்லிவந்த இந்த இந்துதுவ மடங்கள் தற்போது கர் வாப்சிவிழாக்களை நடத்திக்கொண்டு இந்தியாவில் பிறக்கும் எவரும் இந்துக்களே என்று அரவணைக்கும்முழக்கங்களை வைக்கத் தொடங்கியுள்ளன. இந்திய தேசியத்தின் பெயரால் பயங்கரவாத எதிர்ப்பு என்னும் போர்வையில் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி வந்தவர்கள் பதின்பருவ வயது பெண்களுக்குக்கூட இந்துத்துவ வெறியேற்றி ஆயுதப் பயிற்சி கொடுத்து வருகின்றன.  இதற்கு ஆதாரமாக வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இப்படி பல்வேறு மட்டங்களில் இந்துத்துவ பிரச்சாரத்தை செய்துவந்த இவ்வரசானது தற்போது தனது  ‘சாத்வீகப்பார்வையை பெண்களின் கருவறை மீது செலுத்தியுள்ளது. இந்துக்கள் பெரும்பான்மையை நிறுவும் விதமாக இந்து மதத்தைக் காக்க வேண்டி, இந்து பெண்கள் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்என்று பா..க எம்.பி சாக்ஷி மஹாராஜ் பேசியுள்ளார். ‘சாதியத் தூய்மையைக் காக்க வேண்டுமா பெண்ணின் கருவறைக்குப் பூட்டு போடு, மதப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமா பெண்ணின் கருவறைக்கு ஆணையிடுஇதுவே மதவாதிகளின் சூத்திரம்.

மக்களே, இந்தியா சுதந்திரம் பெற்ற நாடாக இருந்தாலும் மதம் என்னும் நிறுவனம் நம் ஒவ்வொருவரின் மீதும் செலுத்தும் அதிகாரத்தை, நிகழ்த்தும் அட்டூழியத்தை இனியும் சகித்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? மதவாத அரசியலுக்கு, அது எம்மதமானாலும் சரி, அதை பின்பற்றுவது பாவம் என்று உங்கள் இறை நம்பிக்கை உங்களை வழிநடத்தவில்லையா?