Feb 20, 2020

உலக தாய்மொழி தினம்





“Workers of the world unite” – யேன் கொங்கனிந்து கெஸ்ஸி சங்கூக்கா?

“அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்பதை என் தாய்மொழியில் சொல்லக் கூட தெரியாத தமிழச்சியாக இந்த அறைகூவலை என் உறவினர் ஒருவருக்கு தகவல் அனுப்பிவிட்டு மொழிபெயர்ப்புக்காக காத்திருக்கிறேன்
#உலக_தாய்மொழி_தினம் 

காலனியாக்கத்தின் கோரப் பிடியில் சிக்கி கோவா போர்ச்சுகீசிய ஆக்கிரமப்பிற்கு உள்ளானபோது கோவாவிலிருந்து நிறைய கொங்கனியர் (மற்றும் மராட்டியர்கள் – இந்துக்கள்) கோவாவை விட்டு வெளியேறினார்கள். அப்போது எங்களது பூர்வீகக் குடிகளும் சொந்த மண்ணிலிருந்து வெளியேறி கேரளா, மங்களூரு, ஆந்திர எல்லை, ஆந்திரா போன்ற பகுதிகளில் குடியேறியதாக என் அம்மா சொல்லக் கேட்டது மட்டுமே நான் என் பூர்வீகம் குறித்து அறிந்த வரலாறு. (நான் இன்னும் கோவாவுக்கு சென்றது கூட இல்லை!)

அம்மாவின் குடும்பம் திருத்தனி அருகே பள்ளிப்பட்டு என்னும் ஊரிலும், அப்பாவின் குடும்பம் கேரளாவிலும் குடியேறியது. என் பாட்டி பிழைப்பிற்காக சென்னை வந்தவர். இப்படியாக நாங்கள் நாடோடி கூட்டமானோம். (இதை ஏற்கனவே நான் பதிவு செய்துள்ளேன்).
அம்மாவின் அப்பா அம்மா பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் ஹோட்டல் வைத்து பிழைத்தார்கள் (பின்னர் அதையும் அரசாங்கம் பிடுங்கிக் கொண்டது). அம்மா படித்தது தெலுங்கு வழிக் கல்வி!

அப்பாவின் அம்மா கணவால் ஏமாற்றப்பட்டு (11 வயதில் திருமணம், 16க்குள் 3 பிள்ளைகள்) சென்னைக்கு பிழைக்க வந்தவர். 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். மலையாள வழிக் கல்வி! சமையல் வேலை செய்து 3 பிள்ளைகளை ஆளாக்கியவர். வறுமை என் தந்தையை கோபக்காரனாகவும், (குடும்ப) வன்முறையாளனாகவும் மாற்றியது. (இன்றைக்கு அதை நினைத்து வருந்துகிறார்). பிழைக்க வந்த இடத்தில் கொங்கனி பேசினால் நம்மை அந்நியர்கள் (உண்மையை சொல்ல வேண்டுமெனில் முஸ்லீம்கள் என்று சொல்வார்கள்) என்று சொல்லி விரட்டிவிடுவார்கள். தொழில் நடக்காது என்ற என் அப்பாவின் அச்சம் காரணமாக தாய்மொழியை பேச நாங்கள் தடை செய்யப்பட்டோம். எழுத்துரு இல்லாத மொழியை படிக்கும் வாய்ப்புமில்லாமல் போனது! அப்பாவின் அச்சத்திற்கான காரணம் அன்று புரியவில்லை. சாதி, மத, இனம், மொழி, பாலினம், பொருளாதார நிலைமை (வர்க்கம்) காரணமாக அச்சத்தில் வாழ்கிறோம், ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறோம் என்பது பற்றிய அரசியல் தெரியாத காலத்தில்… இதுதான் இயல்பு என்று வாழ்ந்து, உழைத்து வளர்ந்தோம். பள்ளிப் படிப்பின் போது நான் தோற்காத ஒரே பாடம் தமிழ்!

என் தாய் மொழியை ‘கற்றுக்கொள்ள’ என்னால் செய்ய முடிந்ததெல்லாம் கொங்கனி அகராதி வாங்கி வைத்து வேடிக்கைப் பார்ப்பது மட்டுமே! இன்று #உலக_சிவப்புப்_புத்தக_நாளம் கூட

கால தாமதமாக அரசியல் கற்றேன். மார்க்சியம் என்னை விடுவித்தது. இங்கு நிலவும் ஒடுக்குமுறைகளுக்கான காரணம் தெரிகிறது. அதை உரக்கச் சொல்வதால் அவ்வப்போது மனதை பாதிக்கும் அச்சங்களும், வலிகளும்:

1. சாதிய அடிப்படையில் அரசியல் தீண்டாமை

2. மார்க்சியத் தத்துவப் பிடிப்பினால் அரசியல் தீண்டாமை

3. தாய்மொழி அடிப்படையில் இனவாத வெறுப்பு

4. பாலின அடிப்படையில் ஆணாதிக்க வெறுப்பு மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு.

5. ஒரு சில அமைப்புகளின் தமிழ் இனவாத அரசியல் பேச்சு மற்றும் பார்ப்பனிய இந்துத்துவ குடியுரிமை திருத்தச் சட்டம் இவற்றால் நாடற்றவர்களாக ஆகப்படுவோமோ என்னும் பேரச்சம். (CAA, NCR, NPR).

6. மிக முக்கியமாக - பிறப்பின் அடிப்படையில் ’ஆதிக்க’ அடையாளம் இருந்தபோதிலும் இரண்டு வருடங்களுக்கும் மேலாக வேலையில்லா பட்டதாரி! (தத்துவப் பிடிப்பு, அரசியல் பேச்சு மற்றும் வயது காரணமாக)

அரசியல் விழிப்புணர்வு ஒருவரை விடுவிக்கும் என்பது போய் அச்சம் குடிகொண்டு வாழும் நிலைக்கு தள்ளும் வர்க்க உணர்வற்ற ‘பிறப்பின் அடிப்படையிலான’ வெறுப்புவாத அரசியல் தீண்டாமை ஒழிக!
உழைக்கும் வர்க்க தத்துவமாம் மார்க்சியத்தின் துணை கொண்டு அதை ஒழிப்போம்!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
அறியாமை இருளில் மூழ்கி அரசியல் தீண்டாமை பேசி
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

நேற்றைய கூட்டத்தில் தோழர் ஒருவர் பேசியது “உழைப்பாளிகளுக்கு ஏதய்யா நாடு?”

உழைத்தால் மட்டுமே சோறு… தமிழன் என்பதாலோ, ஒரே சாதி என்பதாலோ இங்கே யாரும் யாரையும் காக்கப் போவதில்லை. ஆளும் வர்க்கமாக சுரண்டுபவனும், அதனால் மூளைச் சலவை செய்யப்பட்டோரும் உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்கியும் சுரண்டியுமே பிழைக்கப் போகிறார்கள். உழைப்பாளியாக நீயும் அடிமை, நானும் அடிமை! பொருளாதார அடிமை!

உழைக்கும் தமிழா! வா தமிழா! உனக்கும் எனக்கும் விடுதலை தேவை! உன்னையும் என்னையும் இணைப்பது மொழியல்ல, சாதியல்ல, மதம் உள்ளிட்டவை அல்ல… நம் வர்க்க நிலைமை!

தமிழ் மட்டுமே தெரிவதால் என் தாய்மொழி மறந்த தமிழச்சியாக மீண்டும் சொல்கிறேன் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்”

No comments:

Post a Comment