Feb 10, 2023

மகளே தாயுமானவள் ❤️

 


என் வாழ்நாளில் மிக முக்கியமான, பொக்கிஷம் என்று நான் கருதும் பதிவிது.

 என் மகள் வருணா எனக்கொரு புத்தகத்தையும், ஒரு பாடலையும் இன்று பரிசளித்தாள். அந்த புத்தகத்தின் பெயர்: நச்சியல்பான பெற்றோர்! தலைமுறை தலைமுறையாக பெற்றோரால் அடைந்த பாதிப்புகளைக் கடந்து உங்கள் வாழ்வை மீட்டெடுத்தல். (ஆங்கில தலைப்பின் மொழிபெயர்ப்பாக நான் கொடுத்துள்ளது).

 பாடல்:  #londonssong today  by Matt Hartke

 என்னது! நச்சியல்பான பெற்றோரா! என்று தலைப்பைப் பார்த்து அப்படியென்றால் ”நீ ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த தாயா” என்று நினைத்துவிடாதீர்கள்!

 இல்லை! நான் என் வாழ்வை மீட்டெடுக்க என் மகள் எனக்கு உதவுகிறாள்! தன் தாயின் துன்பகரமான வாழ்விற்கான (பகுதியளவு) காரணங்களை அறிந்த ஒரு மகள் அன்பையும், காயங்கள் ஆற்றும் அருமருந்தையும் தருகிறாள். இந்த புத்தகத்தை அவள் 3 முறை படித்துவிட்டாளாம்!

 நச்சியல்பான பிள்ளை வளர்ப்பு என்பது வளையம் போன்றது! பிற்போக்குத்தனமான சமூகத்தின் விளைவான ஒரு சங்கிலித் தொடர்.. நமது பெற்றோர் அதற்கு பலியாடு! அவர்களின் பெற்றோரும் அதற்கு பலியாடு!

 எனது குழந்தைப் பருவம் ஒரு கொடுங்கனவு! குடும்ப வன்முறை, உறவினரின் பாலியல் துன்புறுத்தல் என்று கொடுமைகளால் மட்டுமே நிறைந்தது. என் தாய் எந்த வகையிலும் நச்சியல்பானவள் அல்ல! பாவம்! அவளும் ஆணாதிக்க குடும்ப (வன்முறை) அமைப்பின் பலியாடே!

 மிகவும் மோசமான குழந்தைப் பருவ காலத்து பாதிப்பினால் நாமே அறியாமல் ஏதேதோ ரணங்கள், மன அழுத்தம், கவலைகள், மனப்பதற்றம் ஆகியவை நமக்குள் தேங்கிக் கிடக்கும். உரிய நேரத்தில் அதனை ஆற்றாது தவற விட்டுவிடுகிறோம்.  எனக்குள் சமீப காலமாக அவை மேலெழத் தொடங்கியுள்ளன! ஆம் அந்த நடுக்கத்தை அவ்வப்போது உடலில் உணர்கிறேன்! ஏனென்றால் அத்தனை காயங்களையும் மனம் மட்டுமல்ல உடலும் தான் தாங்கிக் கொள்கிறது!

 இது பற்றிய பேச்சு அத்தனை எளிமையானதல்ல!

 எங்கள் வாழ்க்கை குறித்து நானும் எனது மகளும் நிறைய பேசுவோம்! மன நலன் குறித்துப் பேச நாங்கள் தயங்குவதே இல்லை! எதையுமே பேசுவதை தவிர்ப்பதுமில்லை! ஏனென்றால், காயங்கள் ஆற்றும்! தலைகோதி தேற்றும் விரல்கள் அவளுக்கும் தேவைதானே! நிச்சயம் ஒவ்வொருவருக்கும் தேவை! ஆனால் இதையெல்லாம் பேசினால் நம்மை என்ன நினைப்பார்கள் என்கிற தயக்கம் அதற்கு தடை போடும்.

 எங்கள் வாழ்வை மீட்டெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகத்தான் என் மகள் எனக்கு இன்று இந்த புத்தகத்தையும், பாடலையும் பரிசளித்தாள். அந்த பாடல் ஒரு தந்தை தனது மகளுக்காக எழுதியது. அதைக் கேட்ட உடன் அவள் என்னைத்தான் அதில் கண்டதாக கூறினாள். இதை விடப் பேரானந்தம் என்ன இருக்க முடியும்?

 மகளே தாயுமானவள் ❤️

 இந்த புத்தகம் குறித்து படிக்கப் படிக்க பகிர்வேன்!

 உங்கள் தனிப்பட்ட வாழ்வையெல்லாம் ஏன் பகிர்கிறீர்கள் என்று யாரேனும் வருவீர்கள் எனில், உங்களுக்கு நான் சொல்வதெல்லாம் “தனிப்பட்டது என்று எதுவுமில்லை! அனைத்தும் அரசியல்மயமானதே! சமூகமயமாக்கல் என்பது புறத்தால் நிகழ்வது! அது அக பாதிப்பை ஏற்படுத்துகிறது! எனவே தனிமனித பாதிப்புகளுக்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. அதிலிருந்து மீளத் தவிக்கும் மனங்களின் துடிப்பு எனக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது.

 அதோடு சக மனிதர்களின் வாழ்வை மேம்படுத்த இது ஓர் அறிவார்ந்த பகிர்வு!

 #kotravai shares love!

#momdaughterlove

No comments:

Post a Comment