Jun 3, 2022

பொதுவுடைமை என்றால் என்ன?

 


கம்யூனிசம் என்றால் இருப்பவர்களிடம் இருந்து பிடுங்கி இல்லாதவர்களிடம் கொடுப்பதா?

 இல்லை!

 உன் கிட்ட மட்டும் எப்படி இருக்கு என் கிட்ட ஏன் இல்ல என்று கேட்பது!

 "ஓ! எல்லாமே எங்க பாட்டர், முப்பாட்டர்களிடம் இருந்து அடித்துப் பிடுங்கி தொடங்குனுச்சா? ஓ அதை "மூலதனமா" வச்சு காலம் காலமா எங்க உழைப்பைச் சுரண்டி சேர்த்த சொத்துகளா என்று ஆய்வுப் பூர்வமாக அந்த ரகசியத்தைச் கண்டறிந்த மார்க்சிய தத்துவத்தைப் பற்றிக் கொண்டு உழைப்பாளர் விடுதலைக்காக போராடுபவது. உழைப்புச் சுரண்டல் அற்ற ஒரு சமுதாயத்தை (பொருளாதார அமைப்பை) நிறுவ இயக்குபவது!

இருப்பவினிடம் பிடுங்குதல் என்பது!

 எம்மிடமிருந்து பலவந்தமாக பிடுங்கப்பட்டதை திருப்பி எடுத்துக் கொள்வது. பொதுச்சொத்தை தனியுடமை ஆக்கி வைத்துள்ள நிலையை ஒழித்து மீண்டும் பொதுவுடமை ஆக்குதல். அனைவரும் உழைத்து உழைப்புக்கேற்ற பலனை சமமாகப் பிரித்து கொள்ளுதல் என்று பொருள்.

கம்யூனிசம் என்பது ராபின் ஹுட் ஹீரோயிஸம் அல்ல!

 செயற்கையாக உருவாக்கப்பட்ட லாபம், அதாவது உழைப்பு சுரண்டல் அதை ஒழித்தல் என்பதாகும்

 மூலதனம், லாபம் என்கிற பெயரில் உழைக்காமல் வாழும் கூட்டத்தை உழைப்பில் ஈடுபடுத்துவது, அதாவது நம்மை பலவந்தமாக கூலி உழைப்பில் ஈடுபடுத்தியது போல் அவர்களையும் சோஷலிச உழைப்பு முறையில் ஈடுபடுத்துவது! அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்! இதை வன்முறை என்று அச்சமூட்டுவார்கள்.

 முதலாளித்துவமே ஆகப் பெரிய வன்முறை தான்!

ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூக உறவுகளை சமத்துவ உற்பத்தி உறவுகளாக நிலை நாட்டுவது... அதாவது உழைப்பைக் கொள்ளை அடித்து ஒரு பக்கம் மட்டுமே குமித்து வைப்பதால் சாய்ந்திருக்கும் தராசை சமநிலைக்கு கொண்டு வருவதாகும்.

 கம்யூனிச கட்டத்திற்கு செல்லும் முன் சோஷலிசம் என்னும் கட்டம் உள்ளது. முதலாளிகள் தனிச் சொத்தாக கைப்பற்றி வைத்துள்ள உற்பத்தி சாதனங்களை பாட்டாளி வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது (சொத்தையெல்லாம் புடுங்கிப்பாங்க என்று அறை குறையாக இதை சொல்லி கம்யூனிஸ்ட்கள் குறித்து அச்சமூட்டுவார்கள்).

 முதலாளித்துவத்தை பணிய வைக்கும் போராட்டம் நீண்டு நெடியது. அதில் தாங்கள் சுரண்டி சேர்த்த சொத்துகளை காக்க மூலதனம் கொண்டு தொழிலாளர் வர்க்க அரசை ஒழிக்க பல சதிகள் நடக்கும்! அடக்குமுறைகள் ஏவப்படும்! உள்ளூர் பெரு முதலாளிகள், ஏகாதிபத்திய நாடுகள், நிதி நிறுவனங்களுடன் கைக் கோர்த்துக் கொண்டு பல நெருக்கடிகளை கொடுப்பார்கள்! குறிப்பாக பொருளாதாரத் தடை என்கிற பெயரில் சோஷலிச நாடுகளின் அத்தியாவசியப் பொருட் தேவைகளைக் கூட தராமல் அவர்கள் இருப்பை, வளர்ச்சியைக் கெடுப்பார்கள்.

இதைக் கண்டு சோஷலிசம் எங்கே தாக்குப் பிடிக்கிறது என்று கூப்பாடு போட வேண்டியது!

 ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்தின் சதிகளை முறியடிக்க சோஷலிச நாடுகள், கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. அமெரிக்காவை முறியடிக்க சைனா... போராடுகிறது!

 ரஷ்யாவை முடித்து வைத்தது ஏகாதிபத்தியம்..

 கியூபா, வெனிசுலாவில் நடப்பதை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

 உலகமயமாக்கல் என்பது ஏகாதிபத்தியத்தின் உச்சகட்ட சதி.. (இதெல்லாம் நடக்கும் என்று மார்க்ஸ் எங்கல்ஸ், லெனின் கணித்து சொன்னார்கள், மாவோ, ஹோசி மின், ஸ்டாலின் எல்லாம் என்ன செய்தார்கள் என்று படிக்கவும்).

 மூலதன ஆதிக்கத்தை எதிர்த்து போராடுகையில் இடைக்கால அரசியல் பொருளாதார சமரசங்களை சோஷலிச நாடுகள் எடுக்க நேர்கிறது. இதில் பாதை மாறிப் போக நேர்கிறது! பின்னடைவுகள் ஏற்படுகின்றன! ஆய்வுகள் செய்து மீண்டும் சரியான பாதைக்கு திரும்புவார்கள்!

 கம்யூனிஸ்டுகளே இப்படித்தான்! இன்னைக்கு எல்லாம் எங்கய்யா உண்மையான கம்யூனிஸ்ட் இருக்காங்க!

 சோசலிசம் தோத்துப்போச்சு! வளர்ச்சி இல்ல! பஞ்சம் பசி பட்டினி என்று கிளப்பி விடாமல்

 சோஷலிச நாடுகளில் என்ன நடக்கிறது, கம்யூனிஸ்ட் அரசியல் போராட்டம் என்றால் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு முன் நிபந்தனை மார்க்சியத்தை படிக்க வேண்டும். படித்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மனம் வேண்டும். அந்த மனதிற்கு தான் வர்க்க உணர்வு என்று பெயர்.

 #பொதுவுடைமை என்றால் என்ன!

 

No comments:

Post a Comment