Showing posts with label studio green. Show all posts
Showing posts with label studio green. Show all posts

Sep 25, 2015

பெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே

//அப்படியானால் படத்தில் என்னதான் இருக்கிறது? காதல் என்னும் பாவனையில் ஆண் பெண் உறவுக்கான ஏக்கம் காட்சி ரீதியாகவும் வசனங்களின் மூலமாகவும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. இவற்றை எந்த அளவுக்குச் சில்லறைத்தனமாகவும் ஆபாசமாகவும் வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கிறார்.// ((திரிஷா இல்ல நயந்தாரா திரை விமர்சனம் - tamil hindu)

திரைப்படங்களை / படைப்புகளை பெண்ணிய நோக்கிலிருந்தும் விமர்சனபூர்வமாக அணுகும் வெகு சிலரில் அரவிந்தனும் ஒருவர். அவருடைய திரை விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை. அனைவரும் படிக்க வேண்டிய ஒன்றும்கூட...

நான் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் பிட்டு படம்டி எனும் பாடல் கேட்டபோதே நிச்சயமாக இது ஒரு கேவலமானப் படமாகத்தான் இருக்கும் என்று யூகித்திருந்தேன். தன் மேல் நம்பிக்கை இல்லாத ஒருவரே இப்படி விடலைப் பருவ காம உணர்வுகளையும், பெண்களை தூற்றுபவர்களாகவும்.. அதிலும் குறிப்பாக காதலில் பெண்கள் ஏமாற்றுபவர்கள், மோசமானவர்கள் என்பதாக மிகைப்படுத்தி ஏதோ ஆணினத்தை இரட்சிக்க வந்தவர்கள் போல் தங்களை முன்வைப்பர்.

நடிகர் விஜய் இந்தப் பாதையைத்தான் முன்னெடுத்தார். அதற்கு அவர் தந்தையே வழிகாட்டி. அதேபோல் சிம்பு, தனுஷ் என்று பட்டியல் நீள்கிறது. பெண்களை சபிப்பதன் மூலம்… பெண்ணினத்தை தாழ்த்துவதன் மூலம் இவர்கள் ஒரு பெரும் கூட்டத்தை தங்களின் ரசிகர்களாக உருவாக்கலாம், ஆனால் பெண்களுக்கெதிரான மோசமான நஞ்சையே இவர்கள் விதைக்கின்றனர் என்பதை அவர்கள்தான் அறியவில்லை, அல்லது அறிந்தும் ‘பிழைப்பிற்காக’ முதுகெலும்பற்ற காரியத்தை செய்கின்றனர் என்றால் அவர்கள் வீட்டுப் பெண்கள் எப்படி இதை சகித்துக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை.

பெண் பற்றிய ஆபத்தான கருத்தியல்களை விதைப்பதிலும், ஆணாதிக்க கட்டமைப்பை அப்படியே கட்டிக்காப்பதிலும் திரைப்படங்கள் மற்றும் இதர ஊடகங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. உண்மையில், பெண்களைப் பற்றி மட்டுமின்றி ஆண்களையும் சதா சர்வ காலம் பெண்ணையே சார்ந்திருப்பவராகவும், பெண்ணுக்காக அலைபாய்பவராகவும், காமமே கண்ணாய் இருப்பவர்களாகவும் காட்டும் இந்த ஆபாச பிழைப்புவாதப் போக்கை உண்மையில் எதிர்க்க வேண்டியவர்கள் ஆண்களே.
ஆணையும் பெண்ணையும் பிரித்தாளும் செயல்களின் மூலம் இலாபமடைபவர்கள் முதலாளிகள் / நடிகர்கள் ஆனால் பெரும் நஷ்டமடைவது சமூகம். அந்த சமூகம் என்பதில் உங்கள் வீட்டுப் பெண்ணும் அடக்கம் என்பதை ஆண்கள் நினைவுகொள்ள வேண்டும்.
பெண் இனத்தை மீண்டும் மீண்டும் கொச்சைப் படுத்துவதும், குடித்துவிட்டு பெண்களை சபித்துக்கொண்டே இருப்பதும், பெண்களைத் தாழ்த்துவதுமாக இருக்கும் இவர்களுக்கு உண்மையில் பெண் உடலைக் காட்டாமல் பிழைப்பு நடத்தும் துணிவு இருக்கிறதா?
இதில் பெண்களின் பங்கு இல்லையா? அதில் நடிப்பவரும் ஒரு பெண்தானே என்றெல்லாம் அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரே ஒரு பதில்தான் என்னிடம் உள்ளது: ஆண், பெண் இருவரும் இதே ஆணாதிக்க சமூகத்தில்தான் பாடம் கற்கிறோம். பொது ஆணிற்கு இருக்கும் அதே அறியாமைதான் பொது பெண்ணிற்கும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, பெண் என்பவள் victimize செய்யப்பட்டவள், அவளுக்கு அத்தகைய வாய்ப்புகளே வழங்கப்படுகின்றன.ஆனால் அவர்களுக்கும் தார்மீக பொறுப்பு உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை.

ஆனால், முதன்மையில் இங்கு நாம் குறை சொல்வது ஆணினத்தை அல்ல, ஆணாதிக்க சமூகத்தின் சிந்தனைகளைக் கொண்டு தம் பிழைப்பை ஓட்ட நினைக்கும் அந்த ‘படைப்பாளர்கள்’ பற்றி மட்டுமே. அத்தகையவர்கள் ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம். இந்த சமூகத்தின் முன் எவர் ஒருவர் ஒரு படைப்பின் மூலம், செயலின் மூலம் ஒரு சிந்தனையை, ஒரு உடையாடலை, ஒரு படைப்பை முன் வைக்கிறாரோ – (அதாவது கருத்து சொல்லிகள்) அவர் பற்றிய விமர்சனமே இது. அத்தகையோருக்கு பொது புத்தியில் உள்ளவர்களைக் காட்டிலும் கூடுதல் பொறுப்புள்ளது….

ஜீ.வி பிரகாஷ், ஆதிக் மற்றும் அதுபோன்ற திரைத்துறையினர் தம் செயலுக்காக உண்மையில் வெட்கித் தலை குனிய வேண்டும்.

அரவிந்தனின் சொற்களில் சொல்வதானால் //ஆதிக் இப்போதுதான் திரை உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவரது பார்வை விசாலமாகி, திறமையும் கலை உணர்வும் வளர்ந்து செழித்து அவரால் பல நல்ல படங்களைத் தர முடியலாம். அப்படி நேரும் பட்சத்தில் தன் முதல் படத்தை நினைவுகூரும்போது அவருக்குக் கட்டாயம் கூசும்.//

Related Links: 

http://tinyurl.com/nbcbtsn
http://www.cinemapettai.com/news/ladies-hates-trisha-illana-nayanthara/ 

@CameoFilmsIndia   
SonyMusicSouth @Aadhikravi