Showing posts with label porn. Show all posts
Showing posts with label porn. Show all posts

Feb 29, 2020

பாலியல் காணொளி


22.2.20 அன்று மாலை 6 மணியளவில் நான் வடபழனியிலிருந்து அடையாருக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தேன். பேருந்து பயணம் என்பது உண்மையில் நல்ல அனுபவம். சுவரற்ற வெளியும், பலவிதமான மனிதர்களும் காணக் கிடைப்பார்கள். ஆனால் நம் ஊரில் பொதுத்துறை அவலங்கள் பொதுப் போக்குவரத்தையும் விட்டு வைக்காததால். அரிதாகவே பேருந்தில் பயணிக்க முடிகிறது. அதுவும் நான் வசிக்கும் பகுதியிலிருந்து எங்கு செல்ல வேண்டுமென்றால் 2 அல்லது 3 பேருந்துகள் எடுக்க வேண்டும். வேறு வழியின்றி ஓலா, ஊபர் என்று தனியார் போக்குவரத்துக்கே சொத்தை இழக்க வேண்டியுள்ளது. அன்றைய தினம் திடீரென்று இந்த உண்மை சுட, பேருந்தில் பயணித்தேன்.
காணாததைக் கண்டது போல் வேடிக்கை பார்த்து வந்தபோது திடீரென்று முன் இருக்கையில் காணக் கூடாத ஒன்றை கண்டுவிட்டேன்.
ஓர் இளைஞர் தன் கைபேசியில் பாலியல் காணொளியை (‘போர்ன் வீடியோ’) மிகுந்த ஈடுபாட்டுடன் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த கைபேசிக்கு ஒரு மூடி இருந்ததால், அதை சற்று தூக்கிப் பிடித்தபடி அருகில் இருந்தவருக்கு தெரியாத வண்ணம் பார்த்தவாரு இருந்தார். ஆனால் பக்கவாட்டில் பின்னால் இருப்பவருக்கு அது தெரியும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். எதேச்சையாக நான் திரும்புகையில் என் கண்ணில் பட்டுவிட்டது. அந்த இளைஞனுக்கு 23-25 வயது இருக்கும். சுற்றி இருக்கும் உலகம் பற்றிய எந்த பிரக்ஞையுமின்றி பார்த்துக்கொண்டிருந்த அவர் நிறுத்தம் வந்ததும் எதுவுமே நடக்காததுபோல் கைபேசியை மூடிவிட்டு இறங்கிவிட்டார்.
ஒரு சிலர் இப்படி பொது இடத்தில் ‘ஆபாச’ படம் பார்க்கிறானே அவனெல்லாம் ஒரு மனிதனா என்று ஒழுக்கவாதிகளாக கல் எறிவார்கள். பெரும்பாலும் இவர்கள் பெண் என்பவள் வீட்டு வேலைக்கானவள் என்று சொல்லும் ஆபாசவாதிகளாக இருப்பார்கள்! எந்த ஒரு செயலையும் மதிப்பிடுவதை நிறுத்திக்கொண்டால் மட்டுமே நாம் பிரச்சினைகளை சரிவர ஆய்வு செய்ய முடியும்.
பாலியல் காணொளி என்பதை பாலியல் கல்வி என்கிற நோக்கோடு தயாரிப்பது குறித்து எனக்கு எந்த மறுப்புமில்லை. அதை ஒரு முறைசார்ந்து உருவாக்க வேண்டும். ஆனால் கெடுவாய்ப்பாக இந்த ஆணாதிக்க சமூகத்தில் பாலியல் காணொளிகள் ஆண் பெண் உடல்களை, காமத்தை ஒரு சரக்காக, வணிகமாகக் கையாள்வதால் ‘ஆபாச’ காணொளிகள் ஆபத்தானவையாக மாறிவிடுகின்றன. காமம் என்றால் என்னவென்றே அறியாதவருக்கும், குறிப்பாக பெண்ணை நிறைவடையச் செய்யும் நுணுக்கங்கள் அறியாதவருக்கும் இந்த ‘ஆபாச’ காணொளி கோணார் வழிகாட்டியாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. அதேவேளை அதில் காண்பனவற்றையெல்லாம் செய்து பார்க்க வேண்டும் என்கிற தீவிர உணர்ச்சியும் பிரச்சினைக்குரியது. நான் இப்போது பேச விழைவது அதுவல்ல.
‘ஆபாச’ காணொளி காண்பது சரியா தவறா என்பதைக் காட்டிலும் அதை காண வேண்டிய வேட்கையை ஏற்படுத்தும் சமூக நிலைமையை நான் யோசிக்கிறேன். இந்தியா பாலியல் வறட்சி கொண்ட நாடு. பசி, பட்டினி ஏழ்மை போன்று காமப் பசிக்கு தீனியற்ற நாடு.
விவரம் தெரிந்த வயதிலிருந்து மனிதர்களுக்கு பாலுணர்வு ஏற்பட்டு அது பதின்பருவ வயதில் கிளர்ச்சியாக உருவெடுத்து 20 வயதிலெல்லாம் தீவிர வேட்கையாக மாறுகிறது. 18, வயது 21 வயது திருமண வயது என்று நிர்ணயிக்கப்பட்டுவிட்டாலும் திருமணத்தை சாத்தியப்படுத்துவது ஒருவரின் பொருளாதார நிலைமையே ஆகும். போதாக்குறைக்கு இந்துத்துவ மூட நம்பிக்கைகளின் காரணமாக சாதி, சோதிடம் என்று சில பல தடைகளை வேறு கடக்க வேண்டும். வேலையில்லாத இளைஞருக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள். சிலர் மாப்பிள்ளைக்கு அரசு உத்தியோகம் இருக்க வேண்டும் என்பார்கள். இப்படியாக சராசரி திருமண வயது 30; (இல்லை 35 என்று கூட சொல்லலாம்) என்று வந்து நிற்கிறது. அதுவரை காமத்த்தில் உண்டான உடல்களுக்கு காமம் மறுக்கப்படுகிறது.
இதற்கிடையில் காதல், காதலற்ற தோழமை, சாட்டிங், டேட்டிங் என்று ஏதேதோ வகையில் பாலியல் தேவையை சிலர் நிறைவேற்றிக் கொள்கின்றனர். பணம் படைத்தவர்களுக்கு நல் வாய்ப்புகள் கிடைத்துவிடுகிறது. பணமற்றவர்கள் மற்றும் சமூகத்தின் ஒழுக்கவாத கண்காணிப்புகளுக்கு அஞ்சுவோருக்கு வடிகால்?
வல்லுறவுகளுக்கு பாலியல் வரட்சி என்பது முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை நாம் மறுத்துவிட முடியாது. குழந்தைகள் இதன் இலகுவான இலக்காகின்றனர்.
காமம் பற்றிய ஆணாதிக்க கருத்தியலையும், கட்டுப்பாடுகளையும் மதவாத அதிகாரத்தையும் கட்டுடைக்க வேண்டிய தேவை இருக்கிறது. தறிகெட்ட அல்லது முறையற்ற சுதந்திர பாலுறவு வேண்டுமென்பதல்ல வாதம். உரிய வயதில் இயல்பூக்க தேவைகளை ஒருவர் பெற வேண்டும் என்னும் புரிதலை வளர்ப்பதே நோக்கம். புரிதலோடு பாதுகாப்பான, பாலியல் சுரண்டலற்ற வழிமுறையையும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. நம் குழந்தைகளை, பெண்களை பாலியல் வன்முறையிலிருந்தும், இளைஞர்களை பாலியல் மனநோயிலிருந்தும் காக்க இது அவசியம்.

நன்றி Vanakkam India News