Showing posts with label koodankulam. Show all posts
Showing posts with label koodankulam. Show all posts

Mar 23, 2012

தொடர் உண்ணாநிலை போராட்டம் - நாள் இரண்டு






கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினரின் தொடர் உண்ணாநிலை போராட்டம் குறித்து நிறைய பேருக்கு மென் கடிதம் அனுப்பியிருந்தேன். அதற்கு பதில் அளித்த Naanarkaadan Oviyanilaa எனும் தோழர் பின் வரும் வாழ்த்துறையும், அறிக்கையும் அனுப்பியிருந்தார். அது இன்றைய தினம் போராட்டக்கூட்டத்தினரிடையே வாசிக்கப்பட்டது. ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி.





போராட்டம் வெல்ல நாமக்கல் மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றம் வாழ்த்துகிறது . இந்தப் போராட்டத்திற்குப் பொருத்தமான தோழர் பகத்சிங் கின் அறிக்கை.......

லாகூர் சதிவழக்கு விசாரணை நடைபெற்ற சிறப்பு நீதிமன்றத்தில்,பகத்சிங்கால் எழுதப்பட்டு,ஐந்து தோழர்களால் கையொப்பமிடப்பட்டு,வாசிக்கப்பட்ட அறிக்கையின் சிறு பகுதி....

....புரட்சியின் இலக்கை அடைவதற்காக கைக்கொள்ள வேண்டிய வழிமுறை சமாதானப் பூர்வமானதாய் இருக்க வேண்டுமா அல்லது வேறுவகைப்பட்டதாய் இருக்கவேண்டுமா என்பதை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு,அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களிடமே இருக்கிறது என்று நாங்கள் அறிவிக்கிறோம்.புரட்சியாளர்கள் பிறர்க்கென வாழும் கோட்பாட்டை உடையவர்களாதலால்,அவர்கள் சமாதானத்தை நேசிப்பவர்கள். அவர்கள் நேசிக்கும் சமாதானம்,கோழைத்தனத்தின் விளைவாய் பிறப்பதும்,துப்பாக்கி முனையில் பேணப்படுவதுமான போலி சமாதானம் அல்ல.நீதியையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக்கொண்ட உண்மையான நிரந்தரமான சமாதானமே.தவிர்க்க முடியாத கட்டாய சூழ்நிலையில் எடுக்கப்படும் நடவடிக்கையாக, கடைசிப் புகலிடமாக மட்டுமே புரட்சியாளர்கள் வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் கையிலெடுக்கின்றனர்.
மனிதனுக்காக சட்டம்-ஒழுங்கேயொழிய, சட்டம்-ஒழுங்கிற்காக மனிதன் அல்ல என்று நாங்கள் கருதுகிறோம்.

மக்களது விருப்பதின் வெளிப்பாடாக இருக்கும் வரை மட்டுமே சட்டத்தின் புனிதத்தை பேண முடியும்.எப்போது அது ஒடுக்கும் வர்க்கத்தின் கையில் வெறும் கருவியாக மாறிவிட்டதோ,அப்போதே அது தனது புனிதத்தையும் தனிச்சிறப்பையும் இழந்துவிடுகிறது.பொதுமக்களின் சமூகத்தேவைகளுடனான தனது பொருத்தத்தை சட்டம் இழந்த உடனேயே அது, அநீதி இழைப்பதற்கும் கொடுங்கோலாட்சி செலுத்துவதற்குமான கருவியாக மாறிவிடுகின்றது.

தற்போதைய அரசாங்கத்தின் சட்டங்கள்,எமது மக்களின் நலனுக்கு எதிராக,அந்நிய ஆட்சியாளர்களின் நலனுக்காகவே இருக்கின்றன.அதனாலெயே அறநெறிகளின்படி,எமது மக்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் அச்சட்டங்களுக்கு கிடையாது.........

---------- பகத்சிங்


இன்று தோழர் பகத்சிங்கின் நிணைவு நாள். அதையொட்டி கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக நடந்துவரும் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் அவரது சிந்தைனைகளை நிணைவுகூர்ந்து பேசுவது என்று நேற்று முடிவு செய்தோம். அதற்கு பொருந்திவருமாறு நாமக்கல் மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றம் தோழரும் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக விடுதலைப் பாதையில் பகத்சிங் எனும் புத்தகத்திலிருந்து எங்களைத் தூக்கிலிடக் கூடாது, சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற தலைப்பில் பகத்சிங் எழுதிய கடிதத்தின் இறுதி பத்திகளை வாசித்தேன்:

கைதிகளைச் சுடும் படைப்பிரிவிற்கு உத்தரவிடுங்கள்:

எங்களது இறுதி முடிவைப் பற்றிய கேள்வியைப் பொறுத்து எங்களை சில வார்த்தைகள் கூற அனுமதியுங்கள். எங்களைக் கொலை செய்வதென்று நீங்கள் தீர்மானித்துவிட்டதால் அதனை நீங்கள் நிச்சயமாய் நிறைவேற்றி விடுவீர்கள். உங்கள் கையில் அதிகாரம் இருக்கிறது. இந்த உலகத்தில் அதிகாரமே மிகப்பெரும் நியாயத்தைக் கொடுக்கிறது. “வல்லான் வகுத்ததே வாய்க்கால்” எனும் முதுமொழியே உங்களை வழிநடத்தும் உந்து சக்தி என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் மீதான விசாரனை முழுவதுமே அதற்கு ஓர் சான்று.

நாங்கள் எதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்றால், உங்களது நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நாங்கள் அரசுக்கெதிராகப் போர் தொடுத்துள்ளோம். ஆகையால் நாங்கள் போர்க்கைதிகளே. எனவே நாங்கள் போர்க் கைதிகளைப் போலவே நடத்தப்பட வேண்டும். அதாவது தூக்கிலிடுவதற்குப் பதிலாக நாங்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று கோருகிறோம். உங்களது நீதிமன்றம் சொன்னதைத்தான் நீங்களும் மனதிற் கொண்டுள்ளீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையதே. எஙகளுடைய மரணதண்டனையை நிறைவேற்றுவதற்காகக் கைதிகளைச் சுடும் படைப்பிரிவொன்றை அனுப்பி வைக்குமாறு மிகுந்த கனிவுடன் இராணுவத் துறைக்கு உத்தரவிடுவீர்கள் என்று நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்கிறோம்.


தங்கள்......

பகத்சிங்
                                                                                                                                     
ராஜகுரு

சுகதேவ்.





இவர் பெயர் தோழர் பெருமாள். இன்றைய பேச்சாளர்களில் என்னை மிகவும் கவர்ந்த பேச்சாளர். இடிந்தகரை பகுதிக்கருகிலிருந்து வந்துள்ளார். மீனவ சமூகத்தை சார்ந்தவர்.

கோட்பாட்டு சொல்லாடல்கள், தத்துவார்த்த கேள்விகள் என்றெல்லாம் கவலைகொள்ளாமல், மண்ணின் மைந்தராக, ஒடுக்கப்பட்ட குரலாக அவர் பேசியது ”உண்மை”. வயிற்றெரிச்சலோடு நாங்கள் என்ன உங்களிடம் உங்கள் சொத்தையா கேட்கிறோம் நியாத்தைதானே பேசுகிறோம் எனும் தொணியிலிருந்தது.

உதயகுமார் வெறும் தலைவர் அல்ல, எங்களில் ஒருவர் எனும் உணர்வை வெளிப்படுத்தும் அப்பகுதி மக்கள் அவர் மீது எத்தகைய அன்பையும், நம்பிக்கையும் கொண்டுள்ளார்கள் என்பதை நேரில் காணும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்தது.
_________________________

கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினரின் தொடர் உண்ணாநிலை போராட்த்தில் நாளை கணிணி தொழிற்துறையினர் கலந்து கொள்கின்றனர். கணினி தொழில் நுட்ப பணியாளர்கள் இதில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.



தோழர்களே, வெகுஜன ஊடகங்கள் பெரிதாக இந்த போராட்டம் குறித்து பேசுவதில்லை, ஆகையால் முடிந்தவரை நீங்கள் உங்கள் தொடர்பு வட்டங்களுக்கு இந்த போராட்ட செய்தியை எடுத்துச்செல்லவேண்டும்.





பெரும் திரளான மக்கள் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று வெளிப்படுத்துவதே அம்மக்களுக்கு நாம் செய்யக்கூடிய உதவி.



Mar 22, 2012

கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தொடர் உண்ணாநிலைப்போராட்டம்



கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தொடர் உண்ணாநிலைப்போராட்டம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

தாயகம், ம.தி.மு.க. அலுவலகம், எழும்பூர், சென்னை. அணைவரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் கடந்த பல பத்தாண்டுகளாகவும், கடந்த 7 மாதங்களாக இடிந்தகரை பகுதி மக்களின் ஒருங்கிணைந்த தீவிரமான போராட்டமாக உருவெடுத்தது இடிந்தகரையில் இன்று ஒரு நெருக்கடியான நிலையை எட்டியுள்ளது. மத்திய அரசின் பொய், புரட்டு, இந்திய அணு விஞ்ஞானிகளின் அறிவியலுக்குப்புறம்பான பிரச்சாரம் இவையெல்லாவற்றையும் மீறி உழைக்கும் மக்களின், மீனவ மக்களின் போராட்டம் அசாத்திய உறுதியுடனும் கொள்கைப் பிடிப்புடனும் தொடர்ந்து வந்துள்ளது. மக்கள் மலையென நம்பிய தமிழக அரசு தான் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, சங்கரன்கோவில் தேர்தல் வரை காத்திருந்து இப்போது அணு உலையைத் திறக்க உத்தரவிட்டிருக்கிறது.

இந்தச்சூழ்நிலையில் தொடர்ந்து அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் மக்களை அச்சுறுத்தும் நோக்கத்தோடு ஆயிரக்கணக்கில் போலிஸார், துணை இராணுவம் மற்றும் தொழில் துறை பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களுடன் இடிந்தகரையை முற்றுகையிட்டுள்ளனர். இது சட்டத்திற்குப்புறம்பானது மட்டுமல்ல, ஜனநாயகம் என்ற கருத்திற்கே எதிரானதும் கூட.

அரசு தன் அதிகாரத் தின் கோர முகத்தை இடிந்தகரை போராளி மக்கள் மீது செலுத்துமானால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய அநீதியாக இருக்கும். எனவே கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைத்து கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் பல அமைப்புகள் ஒருங்கிணைந்து ஒரு தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை ஒழுங்கு செய்திருக்கிறோம். உண்ணாநிலைப் போராட்டத்தின் முதல்நாளான 22 மார்ச் 2012 அன்று பெண் படைப்பாளிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் உண்ணாநிலையில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்:
1. கூடங்குளம் பகுதியில குவிக்கப்பட்டிருக்கும் காவல்துறையினரை திரும்பப் பெறவேண்டும். ஓர் அறவழிப்போரட்டத்தை ஒடுக்கும் நோக்கோடு போடப்பட்டிருக்கும் காலவரையற்ற 144 தடையுத்தரவு நீக்கப்படவேண்டும்.
2. குடி நீர், மின்சாரம், சுகாதார வசதிகளை முடக்குவதன் மூலம் ஒரு மக்கள் போராட்டத்தை ஓர் அரசு முடக்க நினைப்பது மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் செயலாகும். இதேபோல் உணவு, மருத்துவ வசதிகள், குழந்தைகளுக்கு தேவையான பால் போன்ற அத்தியாவசிய தேவைகள்கூட காவல்துறையால் தடுக்கப்படும் நிலை தொடரக்கூடாது.
3. இடிந்தகரையில் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் குழந்தைகள் பள்ளித் தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. இது குழந்தைகளின் அடிப்படை உரிமையையே மறுப்பதாகும். உரிய பாதுகாப்புடன், குழந்தைகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவேண்டும்.
4. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மீனவ மக்களுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
5. தங்கள் வாழ்வாதாரங்களையும் தங்கள் சந்ததிகளின் வாழ்வுரிமைக்காகவும், ஒட்டுமொத்த தமிழகத்தின் பாதுகாப்புக்காகவும் போராடிவரும் மக்களின் கோரிக்கையை ஆதரிக்காவிட்டாலும் அவர்கள் மேல் ஏவிவிடப்படும் நியா யமற்ற வன்முறை, அரசு ஜனநாயக நியதிகளுக்குப் புறம்பாக நடத்திவரும் காட்டுமிராண்டித்தனம் ஆகியவற்றை எதிர்க்க ஜனநாயக சக்திகள் முன்வரவேண்டும்.

Mar 21, 2012

An open appeal to NHRC and SNHRC


STOP REPRESSIVE MEASURES AND ECONOMIC BLOCKADE IN KOODANKULAM which is against the constitutionally guaranteed fundamental rights.

Children are the most affected without supply of food. Electricity and Water supply has been cut. People are denied of their ‘RIGHTS TO LIVE’

pl send this as a mail to

sgnhrc@nic.in, js-nhrc@nic.in, ionhrc@nic.in, shrc@tn.nic.in covdnhrc@nic.in

or fax it to SNHRC – 24951484

NHRC:

1. 91-11-23384863 (Administration)

2. 91-11-23386521 (Law Division) For Complaints-filing

3. 91-11-23073876 (Investigation)

Feb 28, 2012

கூடங்குளம் போராட்டம் - தொடரும் ஒடுக்குமுறை




கூடங்குளம் போராட்டக்காரர்களின் ஐயங்களுக்கு அறிவியல் பூர்வ விளக்கங்களை அளிக்க முடியாத மத்திய அரசு, தன் அவதூறுகளுக்கு ஆதரவு திரட்டும் பணியில் உளவியல் ரீதியான ஒடுக்குமுறையை ஏவுகிறது. ஒரு ஜெர்மானியர் சுப.உதயகுமாரனோடும், போராட்டக்குழுவினரோடும் தொடர்பில் இருந்தார் என்று குற்றம் சாட்டி நாடு கடத்தப்பட்டிருக்கிறார். அது தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகளில் ஆதாரப்பூர்வ தகவல்கள் எதுவுமில்லை. ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர், விஞ்ஞானி எனும் அடிப்படையில் லால் என்பவருடன் அவர் உரையாடியிருக்கிறார் என்பதாக குழுவினரின் தகவல்கள் சொல்கிறது. இது ஒரு புறம் இருக்கட்டும்.

பன்னாட்டு நிறுவங்கள் சந்தை ஊடுறுவலுக்கான கள ஆய்வை மேற்கொள்ள, மக்களின் நன்மதிப்பைப் பெற, வரி ஏய்ப்பு செய்யவென பல காரணங்களுக்காக தொண்டு நிறுவனங்களை நிறுவியுள்ளன. தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் பல இன்று பெருமுதலாளித்துவ நிறுவனங்களாக செயல்படுகின்றன. அவை தங்களுக்கென வசூல் இலக்கை வைத்து, அதற்கென பணியாளர்களை வைத்து செயல்படுவதை நான் கண்டுள்ளேன். அத்தகைய நிறுவனப் பணியாளர்கள் ஒருவித அதிகாரப் போக்கோடு சேவைஎனும் துருப்புச் சீட்டை முன்வைத்து வீடுகளுக்குள் புகுந்து இப்போதே செக்கைகொடுங்கள் என்று அன்பு மிரட்டல்களைவைத்தனர். எத்தனையோ தொண்டு நிறுவனஙகள் கோடிக் கணக்கில் பணம் சேர்த்து வைத்துள்ளன. இங்கு செயல்படக்கூடிய பண்பாட்டு காவல் மையங்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் பணம் நிதியுதவியாகப் பெறப்படுகிறது. நமது பண்பாட்டைக் காக்கும் அக்கறை அவர்களுக்கு ஏன் வருகிறது. Corporate Social Responsibility என்பதே ஒரு ஏய்ப்பு தான்.

அவையெல்லாம் நல்லகாரியங்களுக்கு பயன்படுத்தப்படவேண்டும், அரசை எதிர்க்கும் போராட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வீர்களானால் வெளிநாட்டில் நிதியுதவி பெரும், இந்தியாவில் வாழும் வெளிநாட்டவரிடமும் நிதியுதவி பெரும் அணைத்து தொண்டு நிறுவனங்களையும், பண்பாட்டு மையங்களையும், ஆய்வு நிறுவனங்களையும் தடை செய்ய வேண்டும். 

இந்திய நாடு பிச்சைக்காரர்களை உருவாக்கும்.... இந்தியர்கள் பெண்களை, குழந்தைகளை வன்புணர்சி செய்து கொடுமைகளுக்கு ஆளாக்குவர், இந்தியக் குடும்ப வாரிசுகள் தங்கள் பெற்றோர்களைத் தெருவில் கைவிடுவர், இந்தியக் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளைக் கைவிட்டுச் செல்வர்.... இந்திய அரசுகள் கல்வியை தனியார் மையமாக்கும். இந்திய அரசுகள் மருத்துவப் பராமரிப்பை உரிய வசதிகளோடு, போதிய அளவில் வழங்காது, பெண்களுக்கு, சிறுபான்மையினருக்கு அநீதியிழைக்கும்.... இவற்றையெல்லாம் களைய வெள்ளைக்காரன் வருவான்....அவனது நிறுவனங்களின் பணம் பெறப்படும்.... இந்திய அரசுகள் செய்ய மறுக்கும் பணியை வெளிநாட்டவர் செய்யலாம்...ஏனென்றால் அவர்கள் மறைமுகமாக இந்திய அரசின் பொறுப்பின்மைக்குஉதவி செய்கிறார்கள்.....


ஆனால் இந்திய அரசின் அந்நிய நாட்டு உறவின்விளைவாக மேற்கொள்ளப்படும் உயிர் கொல்லிதிட்டங்களுக்கெதிராக போராடும் மக்கள் அமைப்புகள் வெளிநாட்டவர்ர் எவரிடமும் பணம் பெறக்கூடாது....அவர் தன்னார்வலராக இருந்தாலும் கூட.....கட்டவிழ்த்துவிட்ட அவதூறுக்கு வலு சேர்க்கும் விதமாக இன்னும் எத்தனை உளவியல் தாக்குதல்கள் நடக்கப்போகிறது?

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்து நீர் வளங்கள் உள்ளிட்ட அணைத்து வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் தாரை வார்த்துக் கொடுக்கும் அரசுகளின் ஒப்பந்தங்களின்பின்னால் இருப்பது எவரின் பணம்?

தமிழக அரசு இப்பிரச்சனையில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தமிழக அரசு அமைத்த வல்லுனர் குழு போராட்டக் குழு அமைத்த வல்லுனர் குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மக்களையும் சந்திக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் அளித்திருக்கும் அறிக்கையை தமிழ அரசு ஏற்கக்கூடாது. இன்று சுப. உதயகுமாரன் உள்ளிட்ட குழுவினரை முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சந்திப்பது போராட்டத்தின் ஒரு முக்கியக் கட்டமாக உள்ளது. அத்தரப்பினரின் கோரிக்கைகள் இதுவரை மத்திய அரசு காது கொடுத்துக் கேட்கவேயில்லை. தமிழக முதல்வராவது அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்க மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அந்நிய நாட்டு நெருக்கடிகளுகாக அம்மக்கள் கைவிடப்படுவது மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது.   உயிர் கொல்லி திட்டத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் தமிழர்கள் உயிர் பறிபோகக்கூடிய சூழலை தமிழக அரசு தடுக்க வேண்டும். 


Feb 5, 2012

மாண்பு மிகு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு,




4.2.2012 கூட்டத்தை முடித்து விட்டு வீடு வந்தவுடன் தொலைக்காட்சியில் ஒரு செய்தியைப் பார்க்க நேரிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் .சிதம்பரம் பாளையங்கோட்டையில் அணு  உலையை விரைவில் திறக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார். இன்னும் எத்தனை நாளுக்குத்தான் ’22 வருடங்கள் எங்கேயிருந்தார்கள் அவர்கள், யார் இந்த சுப. உதயகுமாரன், எங்கிருந்து பணம் வருகிறது இவர்களுக்கு” எனும் முட்டாள்தனமான கேள்விகளையே இவர்கள் வைத்துக் கொண்டிருக்கப்போகிறார்கள். ’கூகிள் சர்ச்’ செய்தாலே போதுமான வரலாறு கிடைக்கிறதே, அதன் மூலம் இது கடந்த 23 வருட காலப் போராட்டம் என்பதை ஒரு குழந்தை கூட படித்து அறிந்து கொள்ளும். கார்ப்பச்சேவ் பதவி இழந்தது, ராஜீவ் காந்தியின் மறைவு என்று பல்வேறு காரணங்களால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பிறகு 1997 - அப்போதைய பிரதமர் ஹெச்.டி. தேவே கவுடா மற்றும் ருஷிய பிரதமர் போரிஸ் யெல்ஸ்டன் 1988ல் மீன்டும் ஒரு துணை ஒப்பந்தத்தை கையெழுத்திட்டனர்.  1989ல் நடந்ததை மேலே குறிப்பிட்டுள்ளேன்...இப்படி தொடர்ந்து போராட்டங்கள் வெவ்வேறு அமைப்பின் கீழ், தலைமைகளின் கீழ் நடந்து வந்திருக்கிறது. இதற்கு மேலும் ஆதாரமாக, நேற்றைய கூட்டத்தில் ஞாநி  அவர்கள் சொன்னதை இங்கு பகிர்கிறேன். 1987, செப்டம்பர் மாதம் நடந்த கூட்டத்தில், அணு  உலைகளினால் ஏற்படவிருக்கும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு போராட்டத்தில் அவர் பேசியுள்ளார், அவர் சொன்னது “சென்ற தலைமுறையக் கடந்து இன்று அடுத்த தலைமுறைக்கு இப்போராட்டம் நீண்டு தொடர்ந்து வந்திருக்கிறது” ஆம்...இது தான் உண்மையை, ஆனால் இந்த உண்மையை மத்திய அரசு மறைக்கிறது. வெகுஜன ஊடகங்களாவது இப்போராட்ட வரலாற்றை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
தொழில்நுட்பம் உச்சத்தில் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் இணைய இணைப்பு என்பது பயணங்களின் போதுகூட நமக்கு கிடைக்கிறது.  2G அலைக்கற்றை ஊழலில் தொடர்பிருப்பதாக சொல்லப்படும். சிதம்பரம் அவர்களுக்கு இது கூடவா தெரியாமல் இருக்கும். பாளையங்கோட்டையில் பேச செல்வதற்கு முன் கூட கூகிளில் அவர் தேடியிருந்தால், போராட்ட வரலாற்றை அவர் படித்திருக்கலாம். இத்தருணத்தில் படைப்பாளர் இயக்கத்தினரிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், சிதம்பரம், தினமலர், காங்கிரஸ், RSS ஆகியோர் மாற்று அறிவை அதாவது சமூகத்திற்கு நன்மை விளைவிக்கக்கூடிய பரிந்துரைகளைக் கொண்ட மாற்றுச் சிந்தனையாளர்கள் எழுதிய புத்தகங்களைத் தேடி கற்பதில்லை என்பது தெரிகிறது. குறைந்தபட்சம் அணு சக்திக் கதிர்களால் ஏற்பட்டிருக்கும்  ஆபத்து குறித்த உலக அறிஞர்களின் ஆய்வுகள், கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்கள் இயக்கத்தின் அறிவியல்பூர்வ தகவல்களைக் கொண்ட வெளியீடுகள், மத்திய அரசின் வல்லுனர் குழுவினரின் அறியாமையை வெட்ட வெளிச்சமாக, ஆதாரபூர்வமாக பேசும் வெளியீடுகள், மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களை நம் கைக்காசுகளைப் போட்டாவது வாங்கி அணுப்புவோம்.
சிதம்பரம் மற்றொரு அரைத்த மாவை மீண்டும் அரைத்தார் – அது தான் அப்துல் கலாமின் பரிந்துரைகள். ”அப்துல் கலாமே சொல்லிவிட்டார்” அப்துல் கலாமே பேசிவிட்டார்....அப்துல் கலாமே சாப்பிட்டு விட்டார் என்று பேச்சுக்கு பேச்சு அவரை இழுத்தார்....மிக்க மகிழ்ச்சி.

மாண்பு மிகு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு,
அப்துல் கலாம் யார்...எங்கிருந்து வந்தார் என்பது தாங்களுக்குத் தெரியாததல்லவா. குடியரசுத்  தலைவராக கேப்டன் லட்சுமி பாயை இடது சாரிகள் முன்வைத்தபோது பாரதிய ஜனதாவால் நிறுத்தப்பட்டவர் அப்துல் கலாம். ஆனால் வாஜ்பேயி அவர்களை விட மிக மோசமான இந்துத்துவ குணங்கொண்டவராக இருக்கிறார் கலாம். அய்யா நீங்கள் கூறும் திருவாளர் அப்துல் கலாம்தான் பாராளுமன்றத்தில் காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேவின்  அதிகாரப்பூர்வ குருவான சாவர்க்கரின் படத்தை திறந்து வைத்தவர். பகவத் கீதை என்ற நூலை சத்தியம் என்று நம்பும் பரிதாப ஆத்மா...அய்யா வாஜ்பேயி யார் 1942ல் பட்டேஸ்வர் கிராமத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளார்களுக்கு எதிராக மக்கள் திரள,  போலிஸ் அடக்க, மக்கள் கொந்தளிக்க  பிரிட்டிஷ் அரசு அவர்களை, அந்தப் பழங்குடி மக்களை துவம்சம் செய்து மக்கள்  தலைவர்களைக் காட்டிக் கொடுக்கச் சொன்னது. மக்கள் மறுத்தனர். ஆனால் மக்கள் தலைவர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டனர். அய்யா காட்டிக்கொடுத்த அந்த உன்னத ஆத்மாக்கள் நம்பர் 1. பிரேம் பிகாரி வாஜ்பாயி. நம்பர் 2 அடல் பிகாரி வாஜ்பாயி...அய்யா எப்படி இருக்கிறது பாருங்கள் வரலாறு. மிக்க மகிழ்ச்சி இந்த அப்துல் கலாமும், வாஜ் பேயிம் அவர்கள் சார்ந்த அமைப்புகளும் சொல்வதனால் எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் இந்தியாவை மனநோயாளர்களின் நாடு என்றழைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறீர்கள் என்றே அர்த்தம். அய்யா இந்தியாவை அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று கேட்டு ஆட்சி நடத்துவதற்கு பதில் அவர்களை  சர்வாதிகாரிகளாய் மாற்றி மக்கள் குடியரசை ஒழியுங்கள் நிம்மதியாய் போகும். நீங்கள் இந்த அணு உலைக் கருத்தாக்கத்துக்கு உங்களால் முடிந்த அளவுக்கு ஆதரவு தெரிவித்து அதைத் அன்னை சோனியா காந்தியின் கையில் கத்தரிக்கோல் பிடித்து ரிப்பன் வெட்ட நினைக்கிறீர்கள்.  நாங்கள் முடிந்த அளவுக்கு போராடுகிறோம்.  அய்யா உள்துறை அமைச்சரான உங்களுக்கு அப்துல் கலாமும், அணு உலையும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கும் மேல் உதயகுமாரன், புஷ்பராயன், ஜேசுராஜன், அம்மக்களின் வாழ்வாதாரம், இயற்கை மாசுபடாதிருத்தல் ஆகியவை எங்களுக்கு  முக்கியம்.
அணுகுண்டுகள் பற்றி அதன் பேரழிவு பற்றி கவிஞரொருவர் ஒரு மிக அற்புதமான கவிதையொன்றை இயற்றியிருக்கிறார். அதைத் தங்களின் பார்வைக்கும் வைக்கிறேன். ’சில இரவுகளில்’ -
சில இரவுகளில்
எனது தூக்கம் திடீரென்று கலைக்கப்படுகிறது
எனது கண்கள் திறக்கின்றன
அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்த
அந்த விஞ்ஞானிகளைப் பற்றி நினைக்கிறேன்
ஹிரோஷிமா - நாகசாகியில் நிகழ்ந்த
பயங்கர இனப்படுகொலை பற்றிய செய்தியைக் கேட்டபோது
இரவில் அவர்கள் எப்படித் தூங்கியிருப்பார்கள்?

தாங்கள் செய்வது சரியல்ல என்ற உணர்வு
அவர்களுக்கு ஒரு வினாடியாவது ஏற்பட்டதா?
ஏற்பட்டிருந்தால் காலம் அவர்களை
குற்றவாளிக் கூண்டில் ஏற்றாது
இல்லையென்றால் வரலாறு அவர்களை
ஒரு போதும் மன்னிக்காது.

அய்யா அணுகுண்டுகளுக்காக அதன் பேரழிவிற்காக இந்த உருக்கம் மிகுந்த கவிதையை எழுதியது வேறு யாருமல்ல அணு உலை வேண்டும் வேண்டும் வேண்டும் என்று அப்பாவி மக்களின் வாழ்வாதரத்தின் மீதும் உயிரிலும் அடித்து விளையாடும் நீங்கள் கூறும் அப்துல் கலாம் திறந்து வைத்த புகைப்படத்தில்...பாரளுமன்றத்தில் இன்னும் காந்தியை திறந்த கண்களால் வெறித்துக்கொண்டிருக்கும் சாவர்க்கர் அவர்களின் வழிமரபான அய்யா அடல் பிகாரி வஜ்பேயிதான். ஆனால் பாருங்கள் அவரும் தான் பிரதமராய் இருந்தபோது பொக்ரானை வெடித்துவிட்டு suo motu அறிக்கையில் 5 வது விளக்கமாக
இப்போது இந்தியா மறுக்கமுடியாதபடி ஒரு அணு ஆயுத அரசாக உள்ளது. இந்தத் தகுதி " நாங்கள் தேடி எங்களுக்கு வழங்கப்பட்டதல்ல; மற்றவர்கள் எமக்கு மானியமாக அளித்த அந்தஸ்தும் அல்ல. அது "எம் விஞ்ஞானிகளும் பொறியியலாளர்களும் தேசத்துக்கு வழங்கிய கொடை.” மேலும்  " மனித குலத்தின் ஆறில் ஒரு பங்குக்கு, இந்தியாவுக்கு உள்ள உரிமை.” மிக்க மகிழ்ச்சி. ஆனால் தாங்கள் விரும்பாத வகையில்தான் இதை சுட்டிக்காட்டியதற்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஒரு குறிப்பிட்ட எல்லை வரை ஒரு இந்திய குடிமகளாக எனது வீட்டின் மின்சாரத் தேவைகளுக்கு நீங்கள் என்னைத் துணைக்கழைப்பதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. அப்படி ஒரு மின்சாரத்தை நான் விரும்பவில்லை. மன்னித்திவிடுங்கள்.  அய்யா ஒரு இடைத்தகவலாக நீங்கள் வழிமொழியும் அப்துல்கலாமும் பொக்ரான் அணுகுண்டு வெடிப்பில் ஒரு தொழில் நுட்ப வல்லுனர். அவரிடம் இப்பொழுது கேளுங்கள் அணு குண்டு நல்லதா என்று...மிக எளிதாக அவரால் சொல்ல முடியும். கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று. நீங்களும் உங்கள் கடமையைச் செய்கிறீர்கள். ஆனால் அய்யா அது ஒரு மத்திய உள்துறை அமைச்சராக மக்கள் மேல் அபிமானம் கொண்ட ஒருவரைப் போல் இல்லை. கடமையைச் செய் இல்லையெனில் நீ துரோகி...நாசமாய்ப் போக என்று கூறுவதைப் போல் உள்ளது. அதே போல் சுப. உதயகுமாரை நீங்கள் அடிக்கடி விளிப்பது மிகவும் அறுவெறுக்கத் தக்க ஒன்றாக உள்ளது. இன்றைய நிலையில் அவர் அப்துல் கலாம் வாஜ்பேயி ஏன் உங்களை விட மிகக் கீழான வசதியில் மக்களின் சார்பாக நிற்கும் ஒரு மனிதன் அவ்வளவே. அய்யா ஒரு சிறிய ஆலோசனை தாங்கள்  ஏன் பாரதிய ஜனதாவிலோ அல்லது ஆர்.எஸ்.எஸ்.ஸிலோ இணையக் கூடாது.( கூடங்குள மக்கள் கிறித்தவர்கள் என்ற அளவில் பூசிய மதச் சாயம் குறித்து நீங்கள் விரிவாக விளக்காமல் போனதற்காக)   எங்களுக்கு இப்பொழுது நீங்கள் அடிக்கடி முன் மொழியும் பெயராக ஆகிவிட்ட அப்துல் கலாம் மற்றும் சோனியா காந்தி என்ற பெயர்களில் வெறுப்புக் கூடிக்கொண்டே போகிறது. அதிலும் பின்னவருக்குப்  பின் இணைக்கப்பட்டிருக்கும் காந்தி என்ற பதத்திற்கு உள்ள  பொருள் இன்னும் கொச்சையாக உள்ளது. அது சம்பந்தப்பட்ட  நபரான மோகன் தாஸ் கரம் சந்தை ஞாபகப்படுத்துவதோடு, அது என்னை அவரை மகாத்மா என்றழைக்க கூச்சப்படவும் வைக்கிறது. ஆனால் பெயருக்கும் கவிதைக்கும் அறிக்கைக்கும் உளறலுக்கும் உள்ள வித்தியாசங்களை நானறிவேன் என்பதை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். மேலும் கூடங்குள அணு உலைக்கு செலவான தொகை 13,500 கோடிகள் என்பது ஸ்பெக்ட்ராம் கொள்ளையில் அடிக்கப்பட்டதைவிட மிகக் குறைவாகவே உள்ளது. ( estimated 2G scam value is 176,645 crore (US$ 39 billion) எனவே அய்யா அவர்கள் நிதி விவகாரங்களில் இந்தியாவுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதாலும், சம்பந்தப்பட்ட வழக்கில் தாங்கள் இணைந்திருப்பதாலும்...அது குறித்து உங்கள் மனந்திறந்த விளக்கத்தை அதே  பாளையங்கோட்டையில் வைத்து விளக்கினால் நான் மகிழ்வேன்.
அப்துல் கலாமென்ன ஒட்டுமொத்த மானுட அறிவுக்குமான அளவுகோலா ஐயா, அவருக்கு மட்டும் தான் அறிவியல் அறிவு இருக்கிறதா?    Dr. சாந்தா போன்றோர் அணு  சக்திக் கதிர்களால் புற்று நோய் வராது என்று சொல்வது எத்தனைப் பெரிய துரோகம் என்பதை வரலாறு சொல்லும். இப்படி சூதும் வாதும் செய்யும் நீங்கள், போபர்ஸ் ஊழல், 2ஜி ஸ்பெக்டரம் ஊழல், காமன் வெல்த் ஊழல் ஆகிய ஊழல்களில் பங்கு வகித்த உங்கள் கட்சியாளர்கள், தலைமைகள், RSS, பா.ஜ.கவினருக்கு  சுப. உதயகுமாரன் பற்றியும், கூடங்குள மக்களைப் பற்றியும் பேசுவதற்கான அறுகதை கிடையாது என்பதை குறித்துக்கொள்ளுங்கள். 
கலாமை விடவா இவர்கள் மக்களை நேசிக்கிறார்கள் என்று  நீங்கள் கேட்பதிலிருந்து மக்கள் அறிவற்றவர்கள், உங்கள் அடிமைகள் என்று உறுதி செய்ய விரும்புகிறீர்கள் என்பதை அறியமுடிகிறது....ஆனால் மக்கள் எல்லாக் காலத்திலும் மடையர்களாக இருப்பதில்லை, அவர்களுக்கு அறிவு வந்துவிட்டது என்பதால் ஐயமும், பதட்டமும் கொண்டே இப்படி பேசுகிறீர்கள் என்பது எங்களுக்கும் புரிகிறது.....கலாம் எங்கே மக்களை நேசிக்கிறார்.  அவர் தனக்கு கிடைக்கும் புகழாரங்களை நேசிக்கிறார்.  அவர் ஒரு அரசியல் பகடைக் காய் அவ்வளவுதான்...அவர் சொல்வதெல்லாம் மானுடம் வாழவேண்டும் என்ற நோக்கோடு அல்ல, மக்களையெல்லாம் கொன்று விட்டு, இயந்திரங்கள் மட்டும் நிறைந்த ஒரு வல்லரசு இந்தியாவை உருவாக்க வேண்டும், ‘இந்தியா’ வாழவேண்டும் என்பதற்காக மட்டும் தான். எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் அவர் தன்னைக் குழந்தைகள் பிரியர் என்று சொல்லிக் கொள்கிறார். அணுக்கதிர் வீச்சினால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும் என்ற கூறுணர்வின்றி பிதற்றிக் கொண்டிருக்கிறார். அதை எந்தக் கேள்வியும் இன்றி நீங்கள் சொல்வதாலேயே நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறீர்கள். கருத்துச் சுதந்திரம் என்று ஒன்று உள்ளதே அது பற்றி உங்களுக்குத் தெரியாதா ஐயா....உங்கள் கட்சிக்கெதிராக எதுவும் பேசமுடியாத அடிமையாக ஒருவேளை நீங்கள் இருக்கலாம்....மக்களாகிய நாங்களும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது ஐயா.
2G அலைக் கற்றை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உங்கள் வீட்டுக்கெல்லாம் ‘ரெயிட்’ ஏவப்படவில்லை, ஆனால் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வரும் ஒரு போராட்டக் குழுவினரின் மதப் பின்னணியை வேண்டுமென்றே பெரிது படுத்தி கிறித்தவ என்.ஜி.ஓக்களிடம் சோதனை நடைபெற்றது.  இவ்வளவு மோசமான ‘இந்துத்துவ’ ஒடுக்குமுறை நிலவும் ஒரு நாட்டில் அவர்கள் மதம் மாறியதால் மட்டுமே ஏதோ தப்பிப் பிழைத்தார்கள் என்று தான் சொல்வேன்.  இப்போராட்டத்தில் கிறித்தவர்கள் அல்லாதோரும், மத நம்பிக்கை அற்றோரும், மானுடத்தின் மீது, இயற்கை மீது அக்கறை கொண்டவர்கள் அணைவரும் இணைந்திருக்கிறார்கள் என்பதை ஏன் ஐயா மறைத்துப் பேசுகிறீர்கள். கீழ்த்தரமான மதச்சாயம் பூசுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ளுங்கள்.  13,500 கோடி முதலிடு போட்டாயிற்று என்று கூவுகிறீர்களே....யாரிடம் கேட்டு நீங்கள் முதலீட்டைப் போடுகிறீர்கள், மக்களிடம் அணுமதி பெற்றா ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறீர்கள்...அப்படியே மக்கள் மத்தியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினாலும் ‘எந்த மக்களிடம்’ அதை நடத்துவீர்கள் என்று நாங்கள் சொல்லவும் வேண்டுமா ஐயா?
மாட மாளிகைகளும், கார்ப்ரேட் நிறுவனங்களும், அந்நிய முதலாளிகளின் முதலீடும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மட்டும் தான் எதிர்காலம் என்று நீங்கள் சொல்கிறீர்கள், அப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு என்று சொல்லும் நீங்கள் அதை ஏற்கும் அல்லது மறுக்கும் உரிமையை ஏன் அப்பகுதி மக்களிடம் விடாமல் உங்கள் ஆட்சி அதிகார வலைக்குள்ளேயே வைத்திருக்கிறீர்கள் சிதம்பரம் ஐயா அவர்களே....
முடிந்தால் அறிவியல் பூர்வமான வாதங்களை வைத்து ஏதாவது பேசுங்கள், இல்லையேல் சொல்லுங்கள் உங்களுக்கு சில புத்தகங்களை நாங்கள் அணுப்பி வைக்கிறோம்.
இறுதியாக “நீங்கள் சொல்லும் ’எதிர்காலம்’  என்ற வார்த்தைகளில் எங்களுக்கான ’கல்லறைச் செங்கல்கள்’  எத்தனை உற்பத்தியாகிறது என்பதை நாங்கள் அறிவோம்”. 
இப்படிக்கு,
உங்கள் பாஷையில் சொல்வதானால்...
தேசத்துரோகி* கொற்றவை.

உதவிய நூல்கள் மற்றும் சுட்டி:
1. விடுதலைத் தழும்புகள் சு.போ. அகத்தியலிங்கம், தமிழ் புத்தகாலயம்
2.  ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள் எஸ்.வி. ராஜ துரை, அடையாளம்
3.  பா.ஜ.கவின் அணு ஆயுத சோதனையும், விளைவுகளும் தமிழில். சிங்கராயர், சவுத் விஷன்
4.  கூடங்குளம் அணுமின் திட்டம் (ஜனவரி, 2012) பூவுலகின் நன்பர்கள்
*  இந்திய ’தேசம்’ என்பது  இம்மண்ணில் பிறந்த அணைவருக்குமான இடம் என்பதை மறுக்கும் வகையில், அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும் வெற்றுப் பொம்மையாய் இருப்பதை விட நியாயத்திற்காக குரல் கொடுக்கும் ‘துரோகி’யாய் இருப்பது சுயமரியாதை கூடிய ஒன்று.