Showing posts with label Tamil Hindu. Show all posts
Showing posts with label Tamil Hindu. Show all posts

Jul 1, 2020

சமஸ்திருத்த வாதங்கள்.. எச்சரிக்கை!


தமிழ் இந்துவில் அரச வன்முறையின் ஊற்றுக்கண் என்று சமஸ் எழுதியிருக்கும் கட்டுரை ஆகப்பெரிய வன்முறையாக இருக்கிறது. வார்த்தை ஜாலங்களுடன் கூடிய ‘நல்லது சொல்றேன் கேட்டுக்கோ’ வகையிலான ’கருத்து’ சொல்லி ஓர் அவியலை சமைத்திருக்கிறார்.

நல்ல போலீஸ் கெட்ட போலீஸ் என்னும் புரிதலே பரவாயில்லை என்னும் அளவுக்கு இருக்கிறது இவரது நல்ல அரசு கெட்ட அரசு வியாக்கியானம்.

ஆயுதப்படை அல்லது காவல் துறை வழியே நாம் காணும் வன்முறைகள் யாவுமே அரசின் வன்முறைதான் என்று சரியாகத் தொடங்கி பின்னர் அதை ஜனநாயக விழுமியங்கள் குறைந்த பிரச்சினையாகக் காண்கிறார் (விழுமியம் விழுமியம்…ஸ்ஸ்ஸ்). “சமத்துவமும், அதிகாரத்தில் மக்கள் பிரதிநிதித்துவமும், ஜனநாயக விழுமியங்களும் குறைந்த சமூகங்களில் தன்னுடைய அரசாங்கம் வழியே அந்த வன்முறையை அடிக்கடி வெளிப்படுத்துவதாக இருக்கிறது” என்கிறார்! எது? அரசு? சரி அரசு என்றால் என்ன? அதை மட்டும் கேட்டுவிடாதீர்கள்… அரசு என்றால் மக்களைக் காக்க இருக்கும் ஓர் அமைப்பு, அதில் “விழுமியங்கள்” பிரச்சினையால் வன்முறை நிலவுகிறது! அவ்வளவுதான்!

இடதுசாரி புரிதல்களையெல்லாம் முன் வைத்து எஸ்.என்.நாகராஜனிடம் மார்க்சியத்தைக் கரைத்துக் குடித்த ஒருவருக்கு அரசு என்றால் என்னவென்று தெரியாதா?

இதற்கு அடுத்தகட்ட பத்தி உச்சபட்ச நகைச்சுவை! “அரசின் எந்தத் துறையைக் காட்டிலும் காவல்துறை அதிகமான வன்முறையை நாட்டு மக்களின் மீது வெளிப்படுத்துவதற்கான முக்கியமான காரணம், ஒரு அரசின் கருத்தியல் சாய்வுகளைக் காவல் துறைதான் மிக அதிகமான அளவில் பிரதிபலிக்கிறது. ஆக, ஒரு கருத்தை எப்படி உள்வாங்குவது என்ற பயிற்சி அரசின் எல்லா அங்கங்களுக்கும், முக்கியமாகக் காவல் துறைக்கு அத்தியாவசியமானதாகிறது”.

என்ன மாதிரியான வார்த்தை ஜாலம் இது? வன்முறை என்பது கருத்தியல் பிரச்சினை, கருத்தை உள்வாங்கிக் கொள்ளும் பிரச்சினை? போலிக் கட்டுரை என்பார்களே, அதற்கு சிறந்த உதாரணம் இக்கட்டுரை! கீ வேர்ட்ஸ்களைப் பயன்படுத்தி மக்களைக் குழப்பி, இவர் என்னதான் சொல்ல வருகிறார் என்று புரியாமல், அறிவாளி சொன்னா சரியாத்தான் இருக்கும்… அதான் ஜனநாயகம்… ஜனநாயகம் என்னும் புளி கரைச்சல் இருக்கிறதே என்று நினைக்க வைப்பதோடு இத்தகையோரின் “அறம்” முடிந்துவிடுகிறது!.

அடுத்ததாக அப்படியே கொஞ்சம் காலனியம், ஏகாதிபத்தியம்னு ரெண்டு கருவேப்பிலை, கொத்தமல்லியை தூவியாச்சு “காலனியக் காலகட்டத்தில் ஏகாதிபத்திய அரசின் அடக்குமுறையையும் வன்முறையையும் குழைத்து அடிமை விழுமியங்களால் கட்டப்பட்ட இந்திய அரசாங்க அமைப்பானது சுதந்திரத்துக்குப் பிறகு முற்றிலுமாகக் கலைத்துப்போடப்பட்டு, தாராள மதிப்பீடுகளால் மறுவுருவாக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகார வேட்கையோடு ஆட்சியில் அமர்ந்த நம்முடைய அரசியலர்களுக்கு ஏற்கெனவே இருந்த அமைப்பே வசதியானதாக இருந்ததன் விளைவாக அது நடக்காமலேயே போனது. இனி தொடர் சீர்திருத்தங்கள் வழியிலேனும் அது நடக்க வேண்டும்.”

அந்த இறுதி வரியில் இருக்கிறது அவர் சமைக்கும் குழம்பு எத்தகையது என்று! ”சீர்திருத்தம்” அதாவது ஒரு அரசின் கருத்தியல் சாய்வினை சரியாக உள்வாங்கிக் கொள்ளும் “சீர்திருத்தம்”.. நிலவும் அரசின் கருத்தியல் சாய்வு என்ன?

அரசு பற்றிய மார்க்ஸ், எங்க்ல்ஸ், லெனினின் மேற்கோளை எடுத்துப் போட்டிருந்தாலே போதும் மக்களுக்குப் புரிந்துவிடும். இவ்வளவு நீள “ரெசிப்பி” எதற்கு என்று தெரியவில்லை.

வர்க்கப் பகைமைகளின் இணக்கம் காண முடியாததன் விளைவே அரசு என்பதை மக்களுக்கு உணர்த்துவதே இப்போதைய உடனடி தேவை.

சொத்துடைமை வர்க்கத்தின் நலன் காக்க உருவானதே அரசு. (நிலவுடைமை, முதலாளித்துவ அரசுகள்). அதனால் தான் அடக்குமுறை, வன்முறை இதெல்லாம் அதன் உள்ளார்ந்த பண்புகளாக இருக்கின்றன. எளிய மொழியில் சொல்வதெனில், பணக்காரப் பயபுள்ளைகளோட வளர்ச்சிக்கு உழைச்சுக் கொட்டுற கூட்டத்தை அடக்கி வைக்க உருவானது தான் அரசு. அதன் “அங்கங்கள்” அனைத்தும் அதற்காக உருவானவையே. எனவே ஒரு முதலாளித்துவ ஆட்சியின் ”விழுமியங்கள்” என்பது அடக்குமுறையும் சுரண்டலும் மட்டுமே. அப்படியெனில் பயிற்சி, உளவியல் ஆலோசனைகள், சீரிதிருத்தங்களை யாருக்கு செய்ய வேண்டும்? மீண்டும் மீண்டும் வன்முறை நிறைந்த உற்பத்தி முறையான முதலாளித்துவத்திற்கு ஜல்லி அடிக்கும் வேலையைத் தவிர சமஸ் போன்ற நவ-தாராளவாதிகள் வேறு எதுவும் செய்வதில்லை.

அவருடைய கட்டுரையே அதற்கு சாட்சி!   “தாராள மதிப்பீடுகளால் மறுவுருவாக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும்.” மேற்சொன்ன பத்தியில் ஏற்கனவே இருந்த அமைப்பு சரியில்லை என்று சொல்ல முடிபவரால் சீர்திருத்தத்தையே தீர்வாக முன்வைக்க முடிகிறது. முன்மாதிரியான சமூகம் என்று சோசலிச சமூகம், பொதுவுடைமை, மக்கள் அதிகாரம் என்பதெல்லாம் “ஜாலத்திற்காக”க் கூட குறிப்பிட முடியாத அளவுக்கு இவருக்கு ஒவ்வாமை!

அவியலில் அடுத்த கலவை சாதி, வர்க்கம் என்னும் மஞ்சள் பொடி! இந்திய சமூகத்தின் ஆகப் பெரும் கேடு சாதி என்பதிலும், அது ஒவ்வொரு துறையிலும் அதிகாரத்திற்கு எப்படி துணை நிற்கிறது என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த சாதியை சீர்திருத்தத்தால் ஒழித்துவிட முடியுமா என்ன? நவதாராளவாதிகளுக்கு வியாக்கியானம் மட்டுமே எத்தனை இன்பத்தை தருகிறது! கற்பனாவாதிகள்!

அடுத்து ஒரு சொல் வருகிறது! ’அரசியல் வர்க்கம்’ இது என்னப்பா அரசியல் வர்க்கம்! பின்நவீனத்துவ ஊறுகாயா? போகிற போக்கில் வர்க்கம் என்னும் சொல்லை “வற்றலாகப் பிழிந்துவிட்டால்” கடமை முடிந்தது!

அரசியல் வர்க்கம் என்று ஒரு வர்க்கம் இருக்கிறதா? என்னமாதிரியான சித்து விளையாட்டு இது? ஏன் தனியுடைமை வர்க்கத்தின் அரசியல் என்று இவரைப் போன்றவர்களால் எழுத இயலவில்லை? சமூக நடவடிக்கைகளில், குறிப்பாக மக்களின் வாழ்வாதாரத் தேவைக்கான பொருள் உற்பத்தி நடவடிக்கைகளின் விளைவாக உண்டான பிரிவுகள் வர்க்கம். அது பிரதானமாக இரண்டு வகைப்பட்டது, உழைக்கும் வர்க்கம், உழைக்காமல் மூலதனத்தைக் கொண்டு மக்களை, வளங்களை சுரண்டிப் பிழைக்கும் வர்க்கம். உழைக்காத வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்திற்காக உருவானது அரசு என்னும் போது அரசியல் வர்க்கம் என்றால் என்ன?

கம்யூனிசத்தை ஏற்க வேண்டியதில்லை, ஆனால் வர்க்கம் என்பதை அதன் சரியான பொருளில் விளக்க வேண்டும், அல்லவா?

வர்க்கம் என்னும் சொல்லை பொருளற்ற வகையில் நீர்த்துப் போகச் செய்யும் இது போன்ற அறிவுஜீவித்தனங்களை கம்யூனிஸ்டுகள் கண்டிக்கவில்லை எனில், மக்கள் எல்லாவற்றையும் நிர்வாகக் கோளாறாக, நல்லவர் கெட்டவர் பிரச்சினையாகவே காண நேரிடும்.

அடுத்து அமெரிக்கா, ஏகாதிபத்தியம், ஜார்ஃப்ளாய்ட் போராட்டப் பாடங்கள் என்று உலா செல்லும் கட்டுரை கடைசியில் மீண்டும் “கருத்தில்” வந்து நிற்கிறது! இவர் வெறும் கருத்தை உண்டே வாழ்பவர் போல! பொருள் தேவையின்றி கருத்தால் மட்டுமே வாழ முடிவதென்பது பெரும் கொடுப்பினை!

“நெகிழ்வான அரசியல் தலைவர்கள் அமைப்பை மேலும் ஜனநாயகமயமாக்குகின்றனர். ஆனால், பலவீனமான தலைவர்கள் காவல் துறைக்கு அதிகமான அதிகாரத்தை வழங்குவதன் வாயிலாகத் தங்களைப் பலமானவர்களாகக் காட்டிக்கொள்ள முற்படுகிறார்கள்…”


சுரண்டல் வர்க்கத்திற்கான அரசு அமைப்பில் யாரந்த நெகிழ்வான அரசியல் தலைவர்களாக இருக்கக் கூடும்!

சரி அதைக் கூட விடுங்கள், அடுத்ததாக “கருத்து வேறுபாடு என்பது தேச விரோதம் அல்ல. மாறாக, தேசத்தை இப்படியும் பார்க்கலாம் என்பதற்கான இன்னொரு செயல்திட்டம். போராட்டச் செயல்பாடுகள் பயங்கரவாதம் அல்ல. அவைதான் சமூகத்தின் குரலற்றவர்களின் குரலை ஆட்சியாளர்களுக்குக் கொண்டுசேர்க்கின்றன. ஒரு கருத்தை எப்படிப் பார்ப்பது? இதைக் கற்பிப்பதுதான் இந்திய ஆட்சி நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும், மிக முக்கியமாக காவல் துறையினருக்கும் கற்பிக்க வேண்டிய அடிப்படையான சீர்திருத்தம் என்று நினைக்கிறேன்.” என்கிறார்.

நிலவும் அமைப்பின் தன்மை, அதன் ஆபத்து, அது என்ன மாதிரியான அமைப்பாக மாற வேண்டும் என்று சுதந்திரப் போராட்ட காலம் தொடங்கி இடதுசாரிகள் குரல் எழுப்பி வருகிறார்களே. அத்தகைய குரல்கள் முன்வைக்கும் சோசலிச சமூகமே நமக்கான மாற்று என்று சொல்ல இயலாத இவர்கள் எதைக் காக்க இப்படி கயிறு திரிக்கிறார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

கருத்து கருத்து, கருத்திற்கு மதிப்பு கொடுப்பதே ஜனநாயகம்… கருத்தை மதிக்கக் கற்றுக்கொண்டால் இந்த இந்து இந்திய திருநாட்டில் ஜனநாயகமும், சமத்துவமும் மலர்ந்துவிடும். குறிப்பாக ஏழ்மை, வறுமை, சாதியக் கொடுமைகள், பெண்கள் மீதான வன்கொடுமைகள், மதச் சிறுபான்மையினர் மீதான பாகுபாடு எல்லாம் ஒழிந்துவிடும்… மக்களே வாருங்கள் கருத்து மாலை உருட்டி ஜபம் செய்வோம்!

“ஒரு குடியரசு நாட்டில் இன்னமும் காவல் துறையானது ஆட்சியாளர்களின் ஏவல் துறையாகவும், மக்களிடமிருந்து இவ்வளவு அந்நியமாகவும் செயல்படுவது தொடர்பில் அவர்கள் வெட்கப்பட வேண்டும். காவல் துறையின் தவறுகளுக்காகவும் சீரமைப்புக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். சமூகம் ஜனநாயகமாக மாறுவதற்கும் அரசு ஜனநாயகமாக மாறுவதற்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது...”

காட்டுமிராண்டித்தனமான செல்வக் குவிப்பை காக்க உருவான அரசு ஜனநாயகமாக மாறும் என்று பொய்யானதொரு நம்பிக்கையைக் கொடுக்க ஒரு நெஞ்சுறம் வேண்டும். அரசு தன்னைத்தானே சீர்திருத்திக் கொண்டு காவல்துறையையும் சீர்திருத்தம்… அடடா அதோ அந்த மரத்தில் தான் அந்த ஜனநாயகக் கனி தொங்கிக் கொண்டிருக்கிறது… வாருங்கள் பரித்து உண்போம்! அரசுக்கும் கொஞ்சம் கொடுப்போம். அந்த ஞானக் கனியை உண்டதும் அரசானது மக்கள் ஜனநாயக அரசாக புதுப் பிறவி எடுத்துவிடும்…

“இதையும் மௌனமாகக் கடந்துபோகத் தூண்டும் யத்தனம் அதற்கான உயிரோட்டமான சாட்சியம்” – சமஸ் போன்றவர்கள் இப்படி ஒரு போலியான கட்டுரையை எழுதுவதை விட மௌனமாக கடந்துபோவதே மக்களுக்கும், சமூகத்திற்கும் செய்யும் பேருதவியாக இருக்கும். நன்றி.
 #JusticeforJayarajandBenix #JusticforJayrajandBennicks #JusticeForJayarajandFenix #PoliceBrutality #SathaankulamCase 


May 18, 2014

அறிவுஜீவிகள் என்பவர் யார்?

இன்றைய இந்து நாளிதழில் அரவிந்தன் எழுதிய அறிவுஜீவிகளுக்கும் ஒரு பாடம் என்றொரு கட்டுரை படித்தேன்.

அரவிந்தனின் கட்டுரைகள் பல முக்கிய பிரச்சினைகளை பேசக்கூடியவை, குறிப்பாக திரைப்படங்களில் பெண்கள் சித்தரிப்பு, ஆணாதிக்க வசனங்கள் குறித்த அவரது விமர்சனங்கள் கவனத்திற்குறியவை.

அந்தவகையில் ஜனநாயகத் திருவிழா எனும் பக்கத்தில் (இன்று – மே.18,2014) மற்றவர்களின் கட்டுரையைக் காட்டிலும் நான் அரவிந்தனின் கட்டுரையையே முதலில் படிக்க தேர்வு செய்தேன்.  பஜகவின் வெற்றி, மோடியின் வெற்றி மற்றும் காங்கிரசின் தோல்வி குறித்த அவருடைய அவதானிப்புகளில் எனக்கும் உடன்பாடுண்டு.  அதேவேளை எதிர்மறைப் பிரச்சாரம் என்றொரு பார்வையை வைத்து அறிவுஜீவிகளுக்கு ஒரு பாடம் என்று ஒரு கருத்தைப் பகிர்ந்திருக்கிறார். தலைப்பும் அதையேச் சொல்கிறது. எதிர்மறை பிரச்சாரம் குறித்த அவரது பார்வையும் முடிவும் உடன்படக்கூடியதாக இல்லை.

முதலில் தலைப்பிலேயே எனக்கு ஒரு நெருடல் இருக்கிறது அறிவுஜீவிகளுக்கும் என்று ஒரு ‘ம்’அன்னாவை வைத்துள்ளார்.

அடுத்து //மோடியைக் கடுமையாக எதிர்ப்பதன் மூலமும் மோடியையே தேர்தலின் மைய சக்தியாக ஊடகங்கள் மாற்றின. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஊடகங்களும் அறிவுஜீவிகளும் மோடிக்கு அளவுக்கதிகமான முக்கியத் துவம் கொடுத்துவந்தார்கள். அரசியல் களத்தில் எதிர்மறைப் பிரச்சாரமும் ஆக்கபூர்வமான விளைவுகளைத் தரும் என்பதால் இதுவும் மோடிக்குச் சாதகமாயிற்று.

ஒருபுறம் செயலற்ற எதிரி. மறுபுறம் எல்லாமுனைகளி லிருந்தும் கவனம் பெற்றுவரும் ஒரு ஆளுமை. இவற்றுக்கு மத்தியில் மாற்றம் தேடும் மக்கள். இந்நிலையில் மக்களின் தேர்வு என்னவாக இருக்குமோ அதுதான் இந்தத் தேர்தலில் நடந்திருக்கிறது.
ஜனநாயக நாட்டில் மக்களுடனான தொடர்பை அறுத்துக்கொள்ளும் எந்த சக்தியும் தன் வலிமையைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதே இந்தத் தேர்தல் தரும் மிகப் பெரிய பாடம். அளவுக்கதிகமான எதிர்ப்பும் ஒரு நபரின் நாயக பிம்பத்துக்கு வலு சேர்க்கும் என்பது துணைப் பாடம். முதலாவது பாடம் கட்சிகளுக்கு. இரண்டாவது பாடம் அறிவுஜீவிகளுக்கு.//

எதிர்மறைப் பிரச்சாரம் என்று ஒரு சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் – அரசியல் களத்தில் எதிர்மறைப் பிரச்சாரமும் ஆக்கபூர்வமான விளைவுகளைத் தரும் என்கிறார். எதிர்மறைப் பிரச்சாரம் என்றால் – Negative Propaganda என்று பொருள் இல்லையா? மோடி அல்லது பாஜக அல்லது மத அடிப்படைவாதக் கட்சிகள் குறித்த அல்லது அவர்களைப் பற்றிய அல்லது அவர்களை எதிர்க்கும் பிரச்சாரம் என்பது எவ்வாறு எதிர்மறைப் பிரச்சாரமாகும்?  இவ்வார்த்தைத் தவறான பொருள் கொடுக்கும்படி இடம்பெற்றுள்ளது என்பதே எனது கருத்து.

அறிவுஜீவிகளும் அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள் என்பதை எப்படி புரிந்துகொள்வது. எந்த அளவுகோலை வைத்து இது அளவுக்குட்பட்ட முக்கியத்துவம் அல்லது இது அளவுக்கதிகமான முக்கியத்துவம் எனும் முடிவுக்கு ஒருவர் வரமுடியும்? அரவிந்தன் எந்த அளவுகோலை வைத்து இம்முடிவுக்கு வந்தார் என்பது தெரியவில்லை.

மேலும் அவரின் கூற்றுபடியே தேர்தல் அறிவுப்பு வரும் முன்னரே மோடிதான் தங்கள் பிரதமர் வேட்பாளர் என பாஜக அறிவித்ததை எவரும் அறிவர். அவரின் கட்டுரையும் அவர்களின் அனுகுமுறையை பேசுகிறது. பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட ஒரு நபரை சுற்றி எந்த அளவுக்கு விளம்பரங்கள் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறதோ அதே அளவுக்கு அவர் பற்றிய விமர்சனங்கள் எதிர்ப்பலைகள் நிலவுவதுதானே அரசியல் களம். மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மையினருக்கு, இசுலாமியர்களுக்கு எதிராக  அந்நபரின் கடந்தகால அரசியல் செயல்பாடுகள் அரங்கேறியிருக்கும் பட்சத்தில் அச்செயல்பாடுகள் குறித்த விவாதங்களும் அந்நபர் பற்றிய விமர்சனங்கள் உச்சத்தில் இருக்கும் என்பது இயல்புதானே. இது எவ்வாறு எதிர்மறைப் பிரச்சாரமாகும்?

பாஜக வெற்றிக்கும் மோடியின் வெற்றிக்கும் மைய / தேசிய ஊடகங்கள் பெரும் பங்காற்றின என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவ்வூடகங்கள் மோடியை கடுமையாக எதிர்த்தனவா அல்லது விவாத மேடையை ஒரு வியாபார மேடையாக மாற்றி லாபம் கண்டுகொண்டனவா என்பதை சொல்லத் தேவையில்லை. மோடியை கடுமையாக எதிர்த்த ஊடகம் எது என்பதும் எனக்கு உண்மையில் விளங்கவில்லை. தேர்தல் சமையத்தில் எனக்குத் தெரிந்து நமோ விளம்பரங்கள் காட்சி ஊடகங்களில் கொடி கட்டிப் பறந்தன.

ஆக நேரடி ஆதரவாளர்கள் மறைமுக ஆதரவாளர்கள் என இருதரப்பும் ஒவ்வொரு மணித்துளையும் மோடி தலைமை குறித்து பிரச்சாரங்கள், விளம்பரங்கள், மற்றும் விவாதங்களை மேற்கொள்கையில் எதிர் தரப்பு எந்த அளவோடு நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும் என அரவிந்தன் எதிர்பார்க்கிறார் என்பதும் விளங்கவில்லை.

மேலும் இம்முறை பாஜகவின் வெற்றிக்குப் பின் இருக்கும் கார்ப்ரேட் அரசியல் என்ன என்பதை ஒரு மூத்த பத்திரிகையாளரான அவர் நிச்சயம் அறிந்திருப்பார். கார்ப்ரேட் லாபி, பார்ப்பனிய இந்துத்துவ லாபி, பார்ப்பனிய ஊடக லாபி, பனியாக்கள் லாபி என பல லாபிகள் இணைந்து இந்தியாவின் பிரதமரை தீர்மானித்துள்ளது அதை நோக்கி மக்களின் மனதை பலவகைகளில் கட்டமைத்தது. கூடுதலாக கருத்துக் கணிப்புகள் என்பது மக்கள் மனதை வெற்றி பெறப் போகும் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் எனும் ஒரு மனநிலையை உருவாக்கும் என்பதாகவே நான் கருதுகிறேன்.
பெரும்பான்மை ஊடகங்களின் கருத்துக்கணிப்பு யாரை முன்மொழிந்தன என்பதை நாம் அறிவோம். அந்தக் கருத்துக் கணிப்பு படமும் அக்கட்டுரையின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

மெய்மை இதுவாக இருக்க ஊடகங்கள் மோடியைக் கடுமையாக எதிர்த்ததன என்பது முரண்பாடான ஒரு கருத்தாகவே இருக்கிறது.

அடுத்ததாக அறிவுஜீகளுக்குப் பாடம் என்கிறார் அரவிந்தன். அறிவுஜீவிகள் என்றால் பாடம் கற்றுக்கொண்டேதான் இருக்க வேண்டும். எல்லா அறிவையும் பெற்றுவிட்டேன் என்று சொல்பவர் அறிவுஜீவியாக இருக்க முடியாது. ஆனால் அரவிந்தன் சுட்டிக்காட்டியிருக்கும் இரண்டாவது பாடமான மோடி – எதிர்மறைப் பிரச்சாரம் என்பதை பாடமாக எடுத்துக்கொள்வதாக இருப்பின் அறிவுஜீவிகளின் சமூகப் பாத்திரம் என்ன என்பதை  விளக்கி அவர் உதவி செய்ய வேண்டும்.  ஒரு நபர் அல்லது அமைப்பு அல்லது கட்சி அல்லது சம்பவம் குறித்து எந்த அளவில் அறிவுஜீவிகள் தங்களது எதிர்ப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அவர் விளக்க வேண்டும்.

நாயக பிம்ப கட்டமைப்பு என்பதை ஒரு கார்ப்ரேட் லாபி, கார்ப்ரேட் ஊடக லாபி செய்து கொண்டிருக்கையில் சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட அறிவுஜீவிகள் செய்ய முடிவதெல்லாம் எதிர் பிரச்சாரம் மட்டுமே (எதிர்மறைப் பிரச்சாரமல்ல). சொல்லப் போனால் அத்தகைய அறிவுஜீவிகள் சிறுபான்மையினரே. அவர்களின் எதிர்ப்பும் எதிர் பிரச்சாரமும் மோடிக்கு சாதகமாகி அவரது வெற்றிக்கு வழிவகுத்துவிட்டதென்றால், அவர்களது குரலுக்கு அத்தனை சக்தி இருந்திருக்கிறது என்பதை ஒரு நேர்மறை விஷயமாகவே வைத்துக்கொள்வோம். அதே போல் அறிவு ஜீவிகள் ஆதரிக்கும் ஆனால் பெரும்பான்மையினர் (அறிவுஜீவிகள் அல்லாதோர்) எதிர்க்கும் பிரச்சினைகளுக்கும் இவ்விதி பொருந்துமா? ஆனால் அங்கும் மக்கள் நலன் சவக்குழி தோண்டி புதைக்கப்படுகிறதே.

1)  மோடிக்கு எதிராக, பிஜேபிக்கு எதிராக, மத அடிப்படைவாத கட்சிகளுக்கு எதிராக அறிவுஜீவிகள் செய்தது எதிர்மறைப் பிரச்சாரமா அல்லது அவர்கள் முன்வைத்தது உண்மைகளா?

2) அறிவுஜீவிகள் என்றால் யார்? அரசியல் களத்தில் ஒரு குறிப்பிட்ட நபரை எதிர்ப்பவர் அனைவரும் அறிவுஜீவிகளா? அறிவுஜீவிகள் அனைவரும் மக்கள் நலனில் அக்கறைக் கொண்டவர்கள்தாமா? ஆளும் வர்க்க அறிவுஜீவிகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்து இருக்கிறதா?

இறுதியாக அறிவுஜீவிகளின் அளவுக்கதிகமான எதிர்ப்பு நாயக பிம்பத்திற்கு வலு சேர்க்கும் என்றால் இந்நேரம் நம் நாட்டில் ஏன் உலகெங்கிலும்கூட கார்ல் மார்க்சும், எங்கல்சும், லெனினும், மாவோவும் இன்னும் இடது சாரி உழைக்கும் வர்க்க அரசியலை முன் வைத்து பேசிய தலைவர்களும் அல்லவா பெரும்பான்மை மக்கள் மனதில் கதாநாயகர்களாக மிளிர வேண்டும்.  ஆனால் நிஜம் அதுவா?
அப்படி பார்த்தால் ஆளும் வர்க்க அறிவுஜிவிகளான பெரும்பான்மையினருக்கு அதிகமான எதிர்ப்பு இடதுசாரி கட்சிகள் (குறிப்பாக மாவோயிஸ்டுகள்) மீதுதான் என்பதாக சொன்னால் இந்நேரம் இடதுசாரி கட்சிகள் வெற்றிவாகை சூடியிருக்க வேண்டுமே?

எல்லாவற்றிற்கும் அப்பால் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதானால் முதலாளித்துவ ஊடகங்கள் கடுமையாக எதிர்க்கும் இடதுசாரி கட்சிகள் தேர்தலின் மைய சக்தியாக மாறி இருக்க வேண்டுமே.

நண்பர் அரவிந்தன் சரியான ஒரு விஷயத்தைச் சொல்ல தவறான சொற்களைத் தேர்ந்தெடுத்துவிட்டாரோ என தோன்றுகிறது.


தொடர்புடைய சுட்டி:

http://saavinudhadugal.blogspot.in/2012/01/literatus.html - 

எழுத்தாளர் (Literatus)