Showing posts with label நவீன கவிதைகள். Show all posts
Showing posts with label நவீன கவிதைகள். Show all posts

Jul 30, 2010

மூளுக தீ


விளிப்பெயர் சுவாசமற்றுத் திரிகிறது

கூடதற்கு சவம்

வாளெடுத்து பேதங்களில் வீசுகையில்

இடம் பெயறாது குறிகள் நிமிர்கின்றன

ஓநாய் பற்களுடன்


தசை மேடுகள் அச்சத்தின் குழந்தைகள்

கரைந்தழும்

சமிக்ஞை காகிதத்தை முத்தமிட்டமர்கையில்

தசைகளற்ற விலங்கு

தனதான உறுப்பைக் கவ்வியணைக்கிறது


குறியழிந்தாலும் சொல்லழிவதில்லை..


தீ

சுடுகிறது

தசை

விறைத்திருந்தாலும்

அவிழ்ந்திருந்தாலும்


தண்ணீருக்கெதிராய் மூளுவதில்லை

தீ

தீ

யாகவே இருக்கிறது

எழுக

பெண்

மரத்தில் இலையுள்ளது

மலருள்ளது

கனியுள்ளது

பூமி கிழிய

வேரோடிப் புணரும்

விதியுள்ளது

எழுக

பெண்

எல்லாவற்றையும்

எல்லாவிதமுமாக

துறந்தபடி

எழுக

பெண்

Jul 28, 2010

சாத்தான்கள் அச்சுறும் புன்னகை


வானம் தொடக் கூசும்
அப் பாதை
கால்களைக் கூவி
அழைத்துக் கொண்டேயிருக்க

வழியில் வரப்போகும்
சப்தம் விரியத்தொடங்குகிறது
பின் மூளையில் இக்கணமே

அதிர்வுறுகிறதென் சலனம்

மைல்களுக்கப்பால் நெளிந்துகொண்டிருக்கும்
இருளின் வாசனை
நாசிகளை நெருங்குகையில்
அரவம் உறங்கும் குடல்களை
பிரட்டி எடுக்குமோ

சாலையில் எழுப்பிய மேடுகளாய்
இடைவெளி விட்டு
இடைவெளி விட்டு
தொண்டைக்குழி எழும்ப
வியர்வையின் நீரைத்தான்
ஊற்றுவனோ மரம் வைத்தவன்

கடவுளைத் தொட்டிரா கைகள்
எவ்வாறு பாறைகளை உணரும்

கண்களை மூடித்துயில்கையில்
மோதவே செய்கிறது அனுக்கள்

பின்
வாங்குகிறது
கரிய நிறத்திலான ஏதோ ஒரு உருண்டை

உருவத்தைக் கிழித்து
சாத்தான்கள் அச்சுறும் புன்னகையுடன்
உதைத்தெழுப்பி
விளையாடுகிறது
அக்
குழந்தை

நிச்சலனம்.

Jul 2, 2010

கவி பிம்பம்


வனயிளமுலைகளை
கவிஞர் வார்த்தையுதிர்க்கையில்
மரங்கள் கூடி மூட்டும் காட்டுத்தீயை வரைந்துவைத்தேன்

உதடுகளுக்குவமையாய் அவன் விரல்கள் பழம் தேடி அலைகையில்
வன்மம் கிழித்தொரு சொற்கள் பொழியும்
செந்நா சுழண்டெழுந்தது
வனச்சர்ப்பமென

திரு கவிஞர்
கழுத்தைச் சுற்றி வரிகள் பதித்து
தலை புதைய இடம் வேண்டி நின்ற கணம்
புன்னகைத்தது
பணிய மறுக்கும் குரலொன்று

இடையின் வளைவுகளுக்கு
நுரையடங்கும் அலைகளை
முன்னிருத்தினார் கவிஞர்
பெண் மதத்தில்
பிறக்கப்போகும் சிசு
காலூன்றி நடக்கும் காலம் வரை சுமந்து செல்லும்
பெரும் பேழையை காட்சிக்கு வைத்தேன்

என்னிரு பாதங்களை பற்றிக்கொண்டு
இவ்வுலகையவன் தாரைவார்க்கையில்
சட்டகத்திற்கு வெளியில் நிற்கும்
என்னொரு
காலை மடித்து
சிலுவை செய்தேன்
பாடிய கவிச்சொற்களால் ஆணிகள் செய்து
அறைந்தேன்
அவனிரு கைகளை

என்னுடல்
என்மொழி
என் கனா
விடுதலை
நான்.

கல்லெறியும் குளம்.



கரையான்கள் தீண்டாத கதவுகளுக்கு பின்னால்
புனிதம் காத்திருந்தது
உதடுகள் தொங்க முத்தம் கேட்டு

காத்திருக்கிறது
புனிதம்
வியர்வை பொங்கும் கரங்களை
பிசைந்தவாறு
முத்தத்தின் வாசனை
முத்த
வாசனை
புனிதத்தின் துர்மணம்
முத்தம்
வருந்தி விலக

புனிதம் அறிவித்தது

உங்களில் எவர் புனிதர் இல்லையோ
அவர்களுக்கே என் உதடுகள்...

மதத் தரகர்
தூபமிசைப்போர்
கடவுளின் காவற்காரர்
துரோகத்தை மந்திரமாய் ஈணுபவர்
கொலையாளி
வரலாற்று விற்பனன்
ஜனநாயகவாதி
கொள்கை பரப்பாளன்
அரசியல்வாதி
கலைக் காப்பாளர்கள்
ஒழுக்கம் செய்து விற்பனைக்கு வைப்போர்
தசைக்கு கீழ் ஆடை அணிவோர்
கைகளில்
அரிதாரம் வழி வழியும் பாவைகள்
மிதக்கிறது மறைக்கப்பட்ட வரலாற்று பக்கஙகளில்
துர்மணம் சூழும் பெயரற்ற கண்ணீர்

எல்லோருக்கும் சாத்தியமாயிற்று
ஒரே வானம்
ஒரே மௌனம்
ஒரே சொல்