Showing posts with label சாதி ஒழிப்பு. Show all posts
Showing posts with label சாதி ஒழிப்பு. Show all posts

Jul 4, 2019

பின்-காலனிய இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சியும், சாதியமைப்பும்



மதம் என்பது இன்றைக்கு ஆளும் வர்க்க மேலாதிக்கத்திற்குப் பயன்படும் செயலூக்கமுடைய மேற்கட்டுமானக் கருவியாகும். ஆனால், சாதியமைப்பு என்பது மேற்கட்டுமானத்தோடு மட்டும் பிணைந்திருப்பதல்ல. அது, முதலாளித்துவ உற்பத்தி உறவுகளிலும் ஆழமாகச் சிக்குண்டு, இணைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

நிலப்பிரபுத்துவ எச்சம் அல்லது நிலப்பிரபுத்துவ மேற்கட்டுமானத்தின் ஆற்றல்மிக்க தொடர்ச்சி என்பதோடு தொடர்புடைய பிரச்சினையல்ல இது. சாதியடிப்படையிலான மதிப்பீடுகள்-நம்பிக்கைகள் மற்றும் பாகுபாடுகள் மூலம் பொல்லாங்குகள் கொண்ட ஒரு புதிய பொருளாதார அடித்தளமொன்று  உருவாக்கப்பட்டு விட்டது. பல்வேறு மக்கள் பிரிவின் சாதியக் கொள்கைகளை உடைக்காமல் முதலாளித்துவ உற்பத்தியும், விநியோக அமைப்பும் அதன் மேலாதிக்கத்தை நிறுவியுள்ளது. உதாரணமாக, இன்றைக்கு ஆதிக்க சாதி மக்களே பெரும்பாலும் அரசு அதிகாரத்தில் உள்ளனர். சுதந்திர அறிவுஜீவித் தொழில்களும், சாதியும் அவர்களின் ஒற்றுமைக்கும்,  தங்களின் வர்க்க நலனைக் காக்கவும் பிணைப்பாக செயல்படுகின்றன.  அதற்கு எதிர்ச்செயலாக, அவர்களின் கீழ்நிலையில் இருக்கும், தலித் சாதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த அலுவலர், எழுத்தாயர் மற்றும் சுதந்திர அறிவுஜீவிகள் சாதியடிப்படையிலானக் குழுக்களாக தம்மை ஒருங்குபடுத்திக் கொள்கின்றனர்.

கிராமப்புறங்களில், ஆதிக்க சாதி முதலாளித்துவ நில உடைமையாளர்கள் மற்றும் இடைநிலை சாதி குலாக்-விவசாயிகள் தலித்துகளையும், ஏழை விவசாயிகளையும் ஒடுக்க சாதியடிப்படையிலான அணிதிரட்டலை மேற்கொள்கின்றனர். அப்போது மேல் சாதியைச் சேர்ந்த ஏழைகள் கூட, எழுச்சியுடனோ அல்லது அடக்கத்துடனோ தங்கள் சாதியைச் சேர்ந்த சுரண்டலாளர்களின் பக்கம் நிற்கின்றனர் என்பதே இந்த சாதி அடிப்படையிலான அணிதிரட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியாகும். அதேபோல், தலித்துகளும், தங்களின் அடையாளத்தையும், சுயமரியாதையையும் காக்கும் வண்ணம் தற்காப்பு ஒற்றுமை வேண்டி அம்பேத்கரின் பாரம்பரியத்தைத் தூக்கிப் பிடிக்கும் கட்சியின் தலைவர் பின்னால் அணிதிரள்கின்றனர்.

இடஒதுக்கீடானது 10 சதவிகித தலித் மக்களுக்கே பயன்பட்டுள்ளது, வேலைப் படிநிலையில் ஒருவர் மேலே போகும்போது, அது ஒன்று அல்லது இரண்டு சதவிகிதமாகக் குறைந்து போகிறது.
காலனிய சமூக-பொருளாதார அமைப்பிலிருந்து பிறந்து, ஏகாதிபத்திய உலகில் இருப்பது போன்று வளர்க்கப்பட்ட இந்திய முதலாளித்துவமானது, ஒரு எல்லைக்கு மேல் ஏகாதிபத்திய நலன்களுக்கு இடையூறு செய்ய முடியவில்லை (புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் மிக தீவிர சக்திகள் கூட ஏகாதிபத்தியத்திடம் அடிப்படைக்கூறு சார்ந்து விரிசலை ஏற்படுத்த முடியவில்லை), பூர்ஷுவா நிலச் சீர்திருத்தங்களைக் கூட தீவிர முறையில் செயல்படுத்த முடியவில்லை. பிரிட்டிஷிடமிருந்து, நிர்வாக இயந்திரத்தையும், ஒன்றுபட்ட நாட்டின் சட்ட அமைப்பையும் உள்வாங்கிக் கொண்டது. பலவீனமான அரசமைப்பையும் உருவாக்கியது. தொடக்கத்தில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அதன் மீது அதிக செல்வாக்கு இருந்தது. ஆனால் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்களைப் பயன்படுத்திக்கொண்டு மெல்ல தனது பொருளாதார மாற்றுகளை அது விரிவுபடுத்தி, மேலான நிலைமைகளின் கீழ் மூலதனம் மற்றும் தொழில்நுட்பத்தை பெற முயற்சித்தது. அதனைத் தொடர்ந்து, அதே தொழில்நுட்பத்தை இந்தியமயப்படுத்தி, தனது சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியது.
இங்கிருந்த முதலாளித்துவ வர்க்கத்திடம் மூலதனப் பற்றக்குறை இருந்ததால், அந்நிய மூலதனத்தின் அழுத்தத்தைக் குறைத்து தனியார் துறை வளர்ச்சி துரிதப்படும் வகையில், அடிப்படை மற்றும் உள்கட்டைமைப்பு சார்ந்த தொழிற்சாலைகளைக் கட்டியெழுப்ப மக்கள் கடுமையாக உழைத்துச் சேர்த்தப் பணத்தைப் பயன்படுத்தியது. இறக்குமதிக்கு மாற்றான தொழில்மயமாக்கலின்பாதை இதுவே. முதலாளிகளுக்கு மேலும் மேலும் மூலதனத்தை கொடுக்கும் வகையில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. செல்வ வளமுள்ள நடுத்தர வர்க்க வளர்ச்சியோடு பங்குச் சந்தையின் மூலம் பெருமளவிலான மூலதனத் திரட்டலுக்கான பாதை வேயப்பட்டது. இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பலம் பாரிய அளவில் பெருகியபின்னர், அரசு நிறுவனங்களை அற்ப விலைக்கு விற்கும் நடைமுறை தொடங்கியது. இந்திய முதலாளித்துவத்தின் இந்த தனியார்மைய தாராளவாத யுகமானது, அதன் தேவையை, கட்டாயத்தை, அதிகரித்து வந்த அதன் நம்பிக்கையை உணர்த்துகிறது. இன்றைய நவ-தாராளவாத யுகத்தில், நெருக்கடிகள் ஆட்கொண்டுள்ள சர்வதேச மூலதனமும்கூட பாதுகாப்புக் கொள்கைகளை கைவிடச் சொல்லி அழுத்தம் கொடுக்கின்றன. பரந்த, தொடர்ந்து விரிவடைந்து வரும் இந்திய சந்தையில் தனது பங்கை எடுத்துக்கொள்ளும்விதமாக ஏகாதிபத்தியங்களுக்கு இந்திய முதலாளித்துவம் கதவைத் திறந்து விட்டது. மறுபுறம், உலகமயமாக்கப்பட்ட உலகச் சந்தையில், நாட்டிற்கு வெளியே மெல்ல முதலீடு செய்யத் தொடங்கியது. உலக முதலாளித்துவ அமைப்பில், இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் நிலையானது ஒரு இளைய பங்காளியைப் போன்றதாகும். உலகளவில் கைப்பற்றப்பட்ட உபரியிலிருந்து ஒரு சிறு பங்கைப் பெறுகிறது, ஆனால் உள்நாட்டளவில், இன்றைக்கும் அதுவே மிகப் பெரிய பங்குதாரராக உள்ளது. ஒப்பீட்டளவில், அதிக வளர்ச்சியுற்ற உற்பத்தி சக்திகளைக் கொண்டிருக்கும் பின்-காலனிய நாடுகளின் வரிசையில் உள்ளது.
வரலாற்று நிலைமைகளில், தீவிர நிலச் சீர்திருத்தங்கள் மூலம் சிறு மற்றும் பெரிய நில உடைமையாளர்களின் நலன்களைத் திட்டவட்டமாக முறியடிக்க முடியாத வகையில் இந்திய முதலாளித்துவ பண்பு பரிணமித்தது. அதனால் அது, ஜெர்மானிய ஜங்கர் பாணி மாற்றம் மற்றும் ரஷிய ஸ்டோலிபின் பாணி நிலச் சீர்திருத்தங்களின் கலவையான இந்தியப் பாணியை நடைமுறைப்படுத்தியது. பழைய சுரண்டலாளர்கள் தங்களது சுரண்டல் முறையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கியது. பழைய ராஜாக்கள், இளவரசர்களின் தோட்டங்களை எடுத்துக்கொண்டது, ஆனால் அவர்களது ஏராளமான செல்வம், கோட்டை மாளிகைகள் மற்றும் நில உடைமைகள் விட்டுவைக்கப்பட்டன. மேலும், இரண்டு தசாப்தங்களுக்கு இரகசிய பண முடிப்புகளும் வழங்கப்பட்டன. இந்த அடிப்படையில்தான் ராஜாக்கள், பெரிய முதலாளிகளின் வரிசையில், அவர்களது ஹோட்டல்கள், தொழிற்சாலைகளில் செயல்படா பங்காளிகளானார்கள் அல்லது முதலாளித்துவ நிலக்கிழார்களானார்கள். ஜமீன்தாரி ஒழிப்பு மெதுவான வேகத்தில் முன்னெடுக்கப்பட்டது, நிலக்கிழார்கள் குத்தகையை சார்ந்திருப்பதைக் காட்டிலும், சந்தைக்காக உற்பத்தி செய்யும் பூர்ஷுவா நிலப் பிரபுக்களாக மாறவும், நில உச்ச வரம்பிலிருந்து தங்களது நிலங்களைக் காத்துக் கொள்ளவும், நகர்புற மேல் மத்திய வர்க்கங்களின் வரிசையில் இணைவதற்குமான வாய்ப்புகளை வழங்கியது.
நிலவுடைமையாளரான பின்னர் முந்தையகால பணக்கார மற்றும் நடுத்தரக் குத்தகைதாரர்களின் பெரும் பிரிவினர்கூட முதலாளித்துவ விவசாய குலாக்குகள் ஆனார்கள். பெரும்பாலானவர்கள் ரெட்டி, கம்மா, தேவார், மராத்தா, ஜாட், குர்மி, குஷாவா, சைந்த்வார் போன்ற இடைநிலை சாதியினர் ஆவர். (இங்கு தேவர், கவுண்டர் போன்ற சாதிகள் மொர்.) பூர்ஷுவா கட்சிகளில், குலாக்குகள்-விவசாயிகள் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவர்களது கட்சிகள் வட்டார அளவில் தோன்றலாயின. அத்தகைய கட்சிகளில் மக்களை அணிதிரட்டுவதில் சாதி ஒரு முக்கிய பங்காற்றியது. தலித்துகளை ஒடுக்குவதில், இந்த இடைநிலை சாதிகளின் விவசாயிகள் (சூத்திர சாதிகள் என்று சொல்லப்படுவோர்) பழைய நிலக்கிழார்களின் வாரிசுகளான மேல்சாதியைச் சேர்ந்த பூர்ஷுவா நிலப்பிரபுக்களையும் மிஞ்சியவர்களாக இருந்தனர்.
பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி என்றெல்லாம் சொல்லப்பட்ட புரட்சிகள், கிராமப்புறங்களிலும், வேளாண் தொழிலிலும் மூலதன வரவுக்கு வழிகோலும் விதமாக செழிப்பானக் களத்தை தயார் செய்தன. மறுபுறம், மூலதனத்தின் பலத்திற்கு ஏற்றவாறு, உபரியைக் கைப்பற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை முதலாளித்துவ நிலப்பிரபு-குலாக்குகளுக்கு வாரி வழங்கின. வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகள் நாடு முழுவதிலும் வளர்ச்சியடைந்தது. நகர்புற செல்வந்தர்கள் கூட தங்களது மூலதனத் திரட்டிலிருந்து விவசாயத்தில் முதலீடு செய்தனர். மூலதனத் தீவிரமுடைய நவீன விவசாயப் போக்கு முன் நகர்ந்தது. விவசாயக் குடிகளுக்கிடையிலான பாகுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இயற்கைப் பொருளாதாரம் மற்றும் வட்டாரச் சந்தை ஆகியவற்றின் எச்சம் துடைத்தழிக்கப்பட்டது, தொலைதூரப் பகுதிகள்கூட தேசிய மற்றும் சர்வதேசியச் சந்தையோடு இணைக்கப்பட்டது. பழைய நில வாடகை முறை இன்னும் சில இடங்களில் நிலவியது, ஆனால் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு அது தடையாக இருக்கவில்லை (மார்க்ஸும் எங்கெல்ஸும் இதனை தெளிவுபடுத்தியுள்ளனர்).
வாடகையின் பண்பு முற்றிலும் முதலாளித்துவமாகி விட்டது. விவசாயத்தில் உள்ள முதலாளித்துவமானது ஒன்று, முன் முதலாளித்துவ அமைப்புகளை உடைத்துவிட்டது அல்லது இணைத்துக் கொண்டது. முன் முதலாளித்துவ எச்சங்களின் இருப்பு வட்டம் சுருங்கிக் கொண்டே வருகிறது. இந்தப் போக்கானது கிராமப்புறங்களிலிருந்து பெருமளவிலான உழைப்பாளர் இடப்பெயர்வுக்கு வழிவகுத்தது. தொழிற்துறை முதலாளித்துவத்திற்கு உழைப்பு சக்தியை குறைந்த விலைக்கு வாங்குவது எளிதாகி விட்டது. பெருநகர தொழில் நகரங்களின் நரகம் போன்ற தொழிலாளர் காலனிகள், தற்காலிக, முறைசாரா, தினக்கூலி, ஒப்பந்த மற்றும் எண்ணிக்கை விலைத் தொழிலாளர்கள் மற்றும் மாபெரும் அளவில் அரைப் பாட்டாளி வர்க்க கூட்டங்களால் நிரம்பியது.
இவ்வாறாக, இடைப்பட்டதரமான, சிதைந்த-நெளிந்த முதலாளித்துவமானது இந்தியாவில் கூடுதல் வலி மிகுந்த பாதையில் வளர்ந்தது, மெல்ல மெல்ல முன் முதலாளித்துவ அமைப்புகளை ஒன்று உடைத்தது அல்லது, இணைத்துக் கொண்டது அல்லது அடக்கியது. அத்தகைய முதலாளித்துவமானது ஆரோக்கியமான ஜனநாயக மதிப்பீடுகளையும், நம்பிக்கைகளையும் உருவாக்க தகுதியற்றது. அதன் ஜனநாயகமானது மிகவும் வரையறுக்கப்பட்டது, சிதைந்து-நெளிந்தது. அதனால்தான் அது முன்-முதலாளித்துவ மதிப்பீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது கை வைக்கவில்லை. கப் பஞ்சாயத்துகள் மற்றும் சாதிப் பஞ்சாயத்துகள் தொடர்ந்தன, வைதீகத் தளைகளின் இருப்பு தொடர்ந்தது. அவை ஓரளவுக்கு பலவீனப்பட்டதென்றால், அது அரசின் முயற்சியாலோ அல்லது, அரசமைப்பு விதிகளினாலோ அல்ல மாறாக, முதலாளித்துவ வளர்ச்சியின் சுதந்திர புறவய இயக்கத்திற்கு அதில் பங்கிருக்கிறது. மதங்களின் தலையீடு முடிவுக்கு வரவில்லை, சற்று தளர்ந்திருக்கிறது. ஆனால், மறுபுறம் புதிய நவீனப் பிரிவுகள் தோன்றியுள்ளன, அவை மூட நம்பிக்கையை பரப்புவதற்கான, முன்பிருந்த நிலையை அப்படியே தக்கவைத்துக் கொள்வதற்கான செயலூக்கக் கருவிகளாக இருப்பதோடு, மூலதனத் திரட்டல் மற்றும் முதலீட்டிற்கான ஒரு சாதனமாகவும் இருக்கிறது. முதலாளித்துவ அமைப்பில், மதத்தின் புறவய அடிப்படையே, சரக்கு உற்பத்தியின் கண்ணுக்குத் தெரியாத சக்தி, மேலும், மதம் என்பது இன்றைக்கு ஆளும் வர்க்க மேலாதிக்கத்திற்குப் பயன்படும் செயலூக்கமுடைய மேற்கட்டுமானக் கருவியாகும். ஆனால், சாதியமைப்பு என்பது மேற்கட்டுமானத்தோடு மட்டும் பிணைந்திருப்பதல்ல. அது, முதலாளித்துவ உற்பத்தி உறவுகளிலும் ஆழமாகச் சிக்குண்டு, இணைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.
நிலப்பிரபுத்துவ எச்சம் அல்லது நிலப்பிரபுத்துவ மேற்கட்டுமானத்தின் ஆற்றல்மிக்க தொடர்ச்சி என்பதோடு தொடர்புடைய பிரச்சினையல்ல இது. சாதியடிப்படையிலான மதிப்பீடுகள்-நம்பிக்கைகள் மற்றும் பாகுபாடுகள் மூலம் பொல்லாங்குகள் கொண்ட ஒரு புதிய பொருளாதார அடித்தளமொன்று உருவாக்கப்பட்டு விட்டது. பல்வேறு மக்கள் பிரிவின் சாதியக் கொள்கைகளை உடைக்காமல் முதலாளித்துவ உற்பத்தியும், விநியோக அமைப்பும் அதன் மேலாதிக்கத்தை நிறுவியுள்ளது. உதாரணமாக, இன்றைக்கு ஆதிக்க சாதி மக்களே பெரும்பாலும் அரசு அதிகாரத்தில் உள்ளனர். சுதந்திர அறிவுஜீவித் தொழில்களும், சாதியும் அவர்களின் ஒற்றுமைக்கும், தங்களின் வர்க்க நலனைக் காக்கவும் பிணைப்பாக செயல்படுகின்றன. அதற்கு எதிர்ச்செயலாக, அவர்களின் கீழ்நிலையில் இருக்கும், தலித் சாதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த அலுவலர், எழுத்தாயர் மற்றும் சுதந்திர அறிவுஜீவிகள் சாதியடிப்படையிலானக் குழுக்களாக தம்மை ஒருங்குபடுத்திக் கொள்கின்றனர்.
கிராமப்புறங்களில், ஆதிக்க சாதி முதலாளித்துவ நில உடைமையாளர்கள் மற்றும் இடைநிலை சாதி குலாக்-விவசாயிகள் தலித்துகளையும், ஏழை விவசாயிகளையும் ஒடுக்க சாதியடிப்படையிலான அணிதிரட்டலை மேற்கொள்கின்றனர். அப்போது மேல் சாதியைச் சேர்ந்த ஏழைகள் கூட, எழுச்சியுடனோ அல்லது அடக்கத்துடனோ தங்கள் சாதியைச் சேர்ந்த சுரண்டலாளர்களின் பக்கம் நிற்கின்றனர் என்பதே இந்த சாதி அடிப்படையிலான அணிதிரட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியாகும். அதேபோல், தலித்துகளும், தங்களின் அடையாளத்தையும், சுயமரியாதையையும் காக்கும் வண்ணம் தற்காப்பு ஒற்றுமை வேண்டி அம்பேத்கரின் பாரம்பரியத்தைத் தூக்கிப் பிடிக்கும் கட்சியின் தலைவர் பின்னால் அணிதிரள்கின்றனர்.
நகரங்களின் நிலைமை சற்று மாறுபட்டது. ஆனால் அங்கும், அதன் பொருளாயத அடிப்படையிலும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் நிலவத்தான் செய்கின்றன. முறைசார் தொழிலாளி வர்க்க மக்களில் மேலான வாழ்க்கை நிலை கொண்ட தலித்துகளின் விகிதம் என்பது மிகக் குறைவு. முறைசாராத் தொழிலாளர்களில் அவர்களுடைய விகிதம் குறிப்பிடத்தக்கது, அங்கும் அசுத்தம் எனக் கருதப்படும் பணிகளிலேயே அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், கடுமையான, குறைந்த ஊதியம் மட்டுமே கிடைக்கக் கூடிய தொழில்களையும் அவர்களே செய்ய வேண்டும். அரசாங்கப் பணிகளிலும், துப்புரவுத் தொழிலாளர்கள் தலித்துகளே. இடஒதுக்கீடானது 10 சதவிகித தலித் மக்களுக்கே பயன்பட்டுள்ளது, வேலைப் படிநிலையில் ஒருவர் மேலே போகும்போது, அது ஒன்று அல்லது இரண்டு சதவிகிதமாகக் குறைந்து போகிறது. நிர்வாகம், இராணுவம், காவல்துறை, நீதித்துறை மற்றும் சுதந்திர அறிவுஜீவிப் பணிகள் எல்லா இடத்திலும் இதே நிலைதான். இதற்கு சமமான நிலையில் இருக்கும் சமூகம் ஒன்று உண்டென்றால் அது முஸ்லிம் சமுதாயமாகும், பெரும்பாலானவர்கள் ஏழைகளாக இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலர் சுதந்திர கைவிவினைத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
தொழிற்சாலை தொழிலாளர்களிடையே, வேரோடு இன்னும் தூக்கி எறியப்படாத மேல் மற்றும் இடைநிலைச் சாதிகளை சார்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இருக்கும் கொஞ்ச நஞ்ச நிலத்தில் நஷ்டத்தையும் சமாளித்துக்கொண்டு தங்கள் கூலிகள் மூலம் காலம் தள்ளுகின்றனர். அத்தகைய தொழிலாளர்களின் பாட்டாளி வர்க்கப் பண்பில் விவசாயத்தின் சாயல்களை நாம் காண முடியும், மேலும் அது வர்க்க உணர்வை மழுங்கடித்து, சாதிய முற்சாய்வை தக்கவைத்துக் கொள்கிறது. சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் தாழ்த்தப்படுதலானது சாதியடைப்படையில் ஒன்றுபடும் உணர்வையே அவர்களிடத்தில் ஏற்படுத்துகிறது. நகரங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் தலித் சாதிகள் விலக்கி வைக்கப்படுவது நிகழ்கிறது. கிராமங்களைப் போல் அது வெளிப்படையாகத் தெரிவதில்லை. இப்போக்கை தொழிலாளர் வர்க்கத்தில் மட்டுமல்ல இடைநிலைச் சாதிகளிலும் காணலாம். குடியிருப்பு கூட்டுறவு சமுதயாங்களில், தலித்துகளோ முஸ்லீம்களோ உறுப்பினராவதென்பது இயலாத காரியம். பெரு நகரங்களில்கூட வீடு வாடகைக்குப் பிடிப்பது கடினமாக இருப்பதற்கும் சாதி (அல்லது மதம்) ஒரு காரணம்.
இந்தியாவில் உள்ள பூர்ஷுவா பாராளுமன்ற அரசியலானது சமூக பொருளாதார திட்டங்களின் அடிப்படையில் வேலை செய்வதில்லை. மாறாக, மூலத்தனத்தின் திறந்த விளையாட்டின் உதவியுடனும், சில ஜனரஞ்சக வாக்குறுதிகள் மூலமாகவும் அல்லது நிலவும் மனநிலைக்கு ஏற்பவும் செயல்படுகிறது. ஆனால், சாதி அடிப்படையிலான பிரிவினை என்பதே இன்று அதன் முக்கியத் தூண். பூர்ஷுவா கட்சிகளின் கொள்கைகள் மூலம் சாதிக்கு எந்த சேவையும் செய்யவில்லை, மாறாக ஆளும் வர்க்கத்திற்கே சேவை செய்கிறது. அது, சிறு, பெரு முதலாளிகள், குலாக்குகளின் குழுக்கள் மற்றும் நிலக்கிழார்கள், குலாக்குகள் மற்றும் வட்டார முதலாளிகளை உள்ளடக்கியிருக்கிறது. பிராந்திய முதலாளிகள் தங்களுக்கென்று கட்சிகளை வைத்துக்கொள்கிறார்கள், அவர்களுடைய வர்க்க நலன்களும் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. ஆனால், பொதுவான பூர்ஷுவாப் பொருளாதார கொள்கைகள் மற்றும் பாராளுமன்ற அமைப்பின் மீது அவர்களுக்குள் ஒற்றுமை நிலவுகிறது.
அதேபோல், பல்வேறு சாதியினரின் ஆதரவு வேண்டி ஒவ்வொரு பெரிய பூர்ஷுவாக் கட்சிகளிலும் பல்வேறு சாதித் தலைவர்கள் உள்ளனர். சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது கூட குறிப்பிட்ட தொகுதியின் சாதி விகிதம் பொருத்தே அமைகிறது. பிராந்திய முதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளைப் பொறுத்தவரை, நடுத்தர வர்க்கமே அவர்களது முக்கிய ஓட்டு வங்கி. தலித்துகளின் பிரதிநிதிகளாகச் சொல்லிக் கொள்ளும் அனைத்து பாராளுமன்ற கட்சிகளும், கொள்கை அளவில் மிகுந்த சந்தர்ப்பவாதக் கட்சிகள், வளம் மிக்க தலித் நடுத்தர வர்க்கம் அதில் தலைமைப் பதவி பெற்றுவிடுகின்றன. தலித் அரசு அதிகாரிகளும், அறிவுஜீவிகளும் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். நூற்றாண்டுகாலமாக ஒடுக்கப்பட்டுவந்த தலித் மக்களை சாதிய அடிப்படையிலான ஓட்டு வங்கியாக மாற்றுகின்றனர். அடிப்படை ஆதார மாற்றம் என்று கூறி புதிய நம்பிக்கைகளை இக்கட்சிகள் ஊட்டுகின்றன. அதேவேளை, காங்கிரஸ், பிஜேபி அல்லது எந்தக் கட்சியுடனாவது சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் அமைத்துக் கொள்ளத் தயங்குவதுமில்லை. கூட்டணி எனும் பூர்ஷுவா அரசியலில் இக்கட்சிகள் எடைத் தராசின் எடைக் கற்களாகின்றனர். அதிகாரத்தில் பங்குபெற்று சமூக ஒடுக்குமுறை மற்றும் இழிவுபடுத்துதலை வெல்ல நினைக்கும் தர்க்கமானது கடந்த எழுபது ஆண்டுகளில் இந்தளவில்தான் இருக்கிறது; அடையாள அரசியலின் விற்பனையாளர்கள் ஒரு அரங்கத்திற்குள் இதை எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டாடிக் கொள்ளட்டும், ஆனால் சாதாரண உழைக்கும் தலித் மக்கள் இதனால் எந்தப் பயனையும் அடையப்போவதில்லை. இதுவரையிலும் எதையும் சாதிக்கவில்லை, எதிர்காலத்திலும் எதையும் சாதிக்கப் போவதுமில்லை.
(சாதியப் பிரச்சினையும் அதற்கான தீர்மானங்களும்: ஒரு மார்க்சியக் கண்ணோட்டம் - அர்விந்த் மார்க்சியக் கல்வியகம், சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம்... பக். 84)


Jan 31, 2018

நமது உடனடி நடவடிக்கைகள்




- ஆய்வுக் குழு, அரவிந்த் மார்க்சியக் கல்வியகம்

சோஷலிச சகாப்தத்தில் சாதி எப்படி ஒழிக்கப்படும் என்பதை இதுவரை விவாதித்தோம், ஆனால் அதற்காக முதலில் சோஷலிசத்திற்காகப் போராடுவோம், பின்னர் சாதியமைப்பு தானாக மறைந்துவிடும் என்பதல்ல எங்களது வாதம். சோஷலிசத்திற்கான போராட்ட நடைமுறையின் தொடக்கத்திலிருந்தே சாதியப் பிரச்சினை நமது செயல்திட்டத்திலோ அல்லது அதற்கான உடனடி நடவடிக்கைகளோ இல்லாது போனால், புரட்சியை வழிநடத்தும் வர்க்கமானது, சாதியப் பாகுபாடு மற்றும் பூர்ஷுவா சாதிய தேர்தல்முறை மற்றும் சீர்திருத்தவாத தலைவர்கள், ஆதரவாளர்களின் பரப்புரைக்கு பலியாவது தொடரும்.  தலித் மக்களின் பெருவாரியான மக்கள் கூட்டமானது அரைத் தூக்கத்திலிருப்பது தொடரும், ஏதோவொரு சாதித் தலைவரை குறிக்கோளின்றி பின்தொடர்வது தொடரும். பாட்டாளிகளின் துணை வர்க்கங்களிலும் இதே நிலைத் தொடரும். இவ்வாறாக, சோஷலிச சகாப்தத்தில் இறுதியான சாதி ஒழிப்பு நிகழும் என்றாலும், வர்க்கப் போராட்டத்திற்கான தயாரிப்பின்போதும், அதன் வளர்ச்சியின் போதும் சாதியின் செல்வாக்கைக் குறைக்கும் நனவுபூர்வ முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் (அப்போது வர்க்கப் போராட்ட எழுச்சிக்கு அதன் சொந்த புறநிலை அழுத்தங்கள் கூடும், வர்க்க அணிதிரட்டலானது, சாதிய அணிதிரட்டலை பின்னுக்குத் தள்ளும்).

முதல் நடவடிக்கை, சோஷலிசத்தின் மூலம் சாதியமைப்பிற்கான தீர்வை, சாதி ஒழிப்பிற்கான சோஷலிச வேலைத் திட்டத்தை தொடர்ந்து, தீவிரமாகப், பரவலானப் பரப்புரைகள் மூலம் பல்வேறு வழிகளில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது. கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பலவீனத்தாலும், திருத்தல்வாத தவறுகளாலும் (குறிப்பிட்ட அளவு தெளிவின்மையும் அதற்குக் காரணம்) உழைக்கும் மக்கள் கூட்டம், குறிப்பாக தலித் மக்களுக்கு சாதி ஒழிப்பிற்காக கம்யூனிஸ்டுகள் பரிந்துரைக்கும் பாதையென்ன என்பது சுத்தமாக தெரியாது. இந்தப் பணிக்காக,  பாட்டாளிவர்க்கக் கட்சிக்கு, கூர்மையான, செயலூக்கமுடைய கம்யூனிஸ்ட் பிரச்சாரகர்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் தேவைப்படுவார்கள், துண்டறிக்கைகள்-கையேடுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், சிறிய கல்விக் குழுக்கள் ஆகியவைத் தேவைப்படும். ஆனால், இப்போதைக்கு இந்தியளவிலான ஒரு கட்சியைக் கட்டி எழுப்புவதேக் கூட தொலைதூரக் கனவாகத் தெரிகிறது. முடிவற்ற முயற்சிகள் மூலம் அதனை முதலில் அருகில் கொண்டு வரவேண்டும். ஆனால், ஒருவேளை கம்யூனிஸ்டுகள் ஒரு குழுவாகவோ அல்லது அமைப்பாகவோ தனித்தனியாகத் திரண்டிருந்தாலும், இந்தப் பணியை முதலில் கையிலெடுக்க வேண்டும்.  சில நடவடிக்கைகளை இன்றே கூட எடுக்க முடியும். இன்றைய நிலையிலேயே பிரச்சார அளவிலும், ஆர்ப்பாட்டம் மற்றும் இயக்க அளவிலும் வைக்கக்கூடிய சில கோரிக்கைகளும் உள்ளன.

புரட்சிகர அமைப்புகளின் செல்வாக்கின் கீழ் இயக்கும் புரட்சிகர சங்கங்கள், மாணவர்-இளைஞர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், கிராமப்புற தொழிலாளர் அமைப்புகள் மற்றும் அனைத்து வெகுஜன அமைப்புகள் அனைத்தும் தங்களின் வேலைத் திட்டத்தில் சாதியப் பிரச்சினையைச் சேர்க்க வேண்டும், சடங்கு முறையாக இன்றி, இந்தப் பிரச்சினையை முன் வைத்து தொடர்ந்து பரப்புரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜாட்-பாண்ட் டோடக் போஜ் (சாதியை உடைப்பதற்கான உணவுத் திருவிழாக்கள்) நடத்த வேண்டும்,  தொழிலாளர் இயக்கங்களில், தலித் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், தலித் தொழிலாளர்கள் இயக்கத்தில் (துப்புரவு தொழிலாளர் இயக்கம் போன்று) உற்சாகத்துடன் பங்கெடுக்க வேண்டும், அவர்களுக்கு ஆதரவாக மற்ற தொழிலாளர்களைக் கொண்டுவர விடா முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கிராமப்புறத் தொழிலாளர்களை ஒருங்கமைக்கும்போது, அவர்களுக்கிடையிலான சாதி அடிப்பிடையிலானப் பிரிவினைகளை உடைப்பதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கலாச்சார அமைப்புகள், தங்களுடைய பரப்புரை நடவடிக்கைகளில் சாதி ஒழிப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  ஜனநாயக உரிமை இயக்கமானது, சாதிய ஒடுக்குமுறை மற்று கப் பஞ்சாயத்துகளுக்கு எதிரான சட்டபூர்வ போராட்டங்களுகு அப்பால் உன்மை கண்டறியும் குழு, கையெழுத்து இயக்க, எதிர்ப்பு கடிதங்கள் எழுதுவது என்னும் சடங்குபூர்வ அறிவார்ந்த வட்டத்திற்குள் இருந்து வெளியே வந்து, பரந்த அளவில் இயக்கங்கள் மூலம் இடையீடு செய்யத்தக்க வகையில் தன்னை ஒருங்மைத்துக் கொள்ள வேண்டும். 

உலகளாவிய, சமச்சீரான, இலவசக் கல்வி மற்றும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்பது நீண்ட காலத்திற்கான கோரிக்கை. ஆனால், இந்த முழக்கத்தின் அடிப்படையில் மாணவர்கள், அனைத்து சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் உடனடியாக ஒருங்கமைக்கப்பட வேண்டும், தலித் இளைஞர்களை இணைக்க சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில், சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் பிரச்சினைக்குரியதாக்கி எதிர்க்க வேண்டும். இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, கடந்த 60 ஆண்டுகளின் உண்மையை, புள்ளிவிவரங்களை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன் வைத்து நமது நிலைப்பாட்டைப் பேச வேண்டும். கடந்தகாலத்தில் பெறப்பட்ட இந்த ஜனநாயக உரிமையை நாங்கள் எதிர்க்கவில்லை, அதை நீக்க வேண்டும் என்றும் கோரவில்லை, அதன் நடைமுறையில் நடக்கும் ஊழலை எதிர்க்கிறோம். அதேபோல், இந்த கோரிக்கையானது பூர்ஷுவா ஜனநாயக மாயை உருவாக்கவே பயன்படுகிறது, பரந்த ஏழை தலித் மக்களுக்கு இது எந்த விதத்திலும் பொருளுள்ளதாக இல்லை; மேலும், பொது மக்கள் மட்டுமின்றி, தலித் சாதிகளிடையேகூட மோதலும், பிரிவினையும் ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்த வேண்டும். அனைத்து சாயல்களிலும் வரக்கூடிய பூர்ஷுவா தலித் அரசியல் மற்றும் பூர்ஷுவா தலித் அறிவுஜீவிகளின் வாதங்களுக்கு தர்க்கப்பூர்வமாகவும், பொறுமையாகவும் பதிலளித்து நமது பரப்புரைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

நாளிதழ்களில் சாதியடிப்படையிலான வரன் தேடும் விளம்பரங்கள் பிரசுரிப்பதற்குத் தடை கோர வேண்டும். கலப்பு மணம் மற்றும் காதல் திருமணத்திற்கு வெளிப்படையான ஆதரவு வழங்க வேண்டும்; குடும்பத்தின் பாதிச் சொத்தை பெண்களுக்கு வழங்குவதற்கு சட்டபூர்வமான கோரிக்கை  வைக்க வேண்டும்.

சாதி அமைப்புகள், சாதிக் கூட்டங்கள், கப் மற்றும் சாதி பஞ்சாயத்து மற்றும் அவர்களின் தீர்ப்புகள் இவற்றின் மீது சட்டபூர்வமான தடை கோரி இயக்கங்களை ஒருங்கமைக்க வேண்டும்.

பொது சமகம்களுக்கு (மதக் கூட்டங்கள்) தடை கோர வேண்டும், ஆசிரமங்கள், கோவில்களின் பாரம்பரிய கண்காட்சிகளுக்கு, திருவிழாக்களுக்கு சிறப்பு வரி விதிக்கக் கோர வேண்டும், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் மதச் சடங்குகளை நடத்த தடை கோர வேண்டும்.

தலித் சாதிகளுக்கென தனியான அமைப்பை உருவாக்குவதை நாங்கள் முறையற்றதாகவே கருதுகிறோம், ஆனால் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களுக்கு போதிய பலம் இருப்பின், சாதி ஒழிப்பு மன்றங்களை அமைத்து, தலித்துகள் மட்டுமின்றி, ஜனநாயக உணர்வுள்ள மற்ற சாதி மக்களையும் அதில் இணைக்க வேண்டும். இந்த மன்றமானது, சாதி மறுப்பு பரப்புரைக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டும், புத்தகங்கள், கையேடுகள் போடுவது, கலப்பு மணம் மற்றும் பிரச்சார நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். தலித்துகள் மீதான அட்டூழியங்களை தீவிரமாக எதிர்க்க வேண்டும்.

இறுதியாக, ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. சமூகத்திலிருந்து தனித்து விடப்படுவோம் என்று சொல்லி, தங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் மதச் சடங்குகளில் (திருமணங்கள், பிறப்பு, இறப்பு, யக்ஞோபவீதம், உபநயனம் போன்ற) கலந்துகொள்ளும் பல கம்யூனிஸ்டுகள் இருக்கின்றனர். இந்தச் சடங்குகள் சாதியின் வரம்பிற்குள்ளேயே வருகிறது, வெவ்வேறு சாதிக்கு வெவ்வேறு சடங்குகள். மேற்சொன்ன சாக்குகளைச் சொல்லியே, பல கம்யூனிஸ்டுகள் மத சின்னங்களை அணிவது, தங்களின் உரைகளில் கடந்தகால மதத் தலைவர்களோடு தங்களைத் தொடர்புபடுத்திப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இது ஒரு சமூக கோழைத்தனம் மற்றும் கொள்கையற்ற ஜனரஞ்சகவாதமும் ஆகும். முரணாக, பொதுமக்கள் மனதில் கம்யூனிஸ்டுகள் பாசாங்குவாதிகள் எனும் எண்ணத்தை வேறு அது ஏற்படுத்துகிறது. மதச் சடங்குகளிலிருந்து பணிவுடன் ஒதுங்கியிருப்பது, திருமணங்களை எந்த சடங்குகளுமின்றி நடத்துவது, மரணத்தின்போது கூட மதச் சடங்குகள் ஏதும் செய்யக்கூடாது என்று உயில் எழுதி வைப்பது போன்ற கம்யூனிஸ்ட் நடத்தைகளால் எந்தவகையிலும் நாம் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவதில்லை. மாறாக, கம்யூனிஸ்டுகள் மதிப்பு கூடவே செய்கிறது.

நாம் நமது கருத்தியல்களை எவர் மீதும் திணிக்க வேண்டியதில்லை; ஆனால் நம் சொந்த வாழ்வில் அதைக் கடைபிடிக்கலாம். பூர்ஷுவா ஜனநாயகமும், இந்நாட்டின் அரசமைப்பும்கூட அதைத்தான் சொல்கிறது.  நாங்கள் ஏன் இதைச் சொல்கிறோம் என்றால், மத நடத்தை என்பது சாதியோடு தொடர்புடையது. கம்யூனிஸ்டுகளின் தனிப்பட்ட வாழ்க்கை முறையும் மதமற்றதாக இருப்பின், இந்த மனிதர் மனதார சாதியில் நம்பிக்கையற்றவர் எனும் நம்பிக்கை தலித்துகளுக்கு வரும்.

சாதியப் பிரச்சினை என்பது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதற்கு உடனடியான ஒற்றை மருந்து கிடையாது. நீண்டகால, கடினமான நடைமுறை தேவை. முதலாளித்துவ அழிவோடு இந்தப் பிரச்சினை தொடர்புடையது.  இன்றைய நிலையில், சாதி ஒழிப்பிற்கு எதிரான எந்தத் திட்டமும் துணிவுமிக்கதே. ஆனால், ஒவ்வொரு கடினமானப் பணியும் துணிவைக் கோருவதே. சாதி ஒழிப்பு இன்றைக்கு வேண்டுமானால் கனவாக இருக்கலாம், ஆனால் ஒரு கனவுக்கு அறிவியல் அடிப்படை இருக்குமெனில், அதை மெய்யாக்க முடியும். அத்தகையதொரு கனவை ஒவ்வொரு உண்மையான புரட்சியாளரும் கொண்டிருக்க வேண்டும்.

‘சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும்’ என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட அரவிந்த் மெமோரியலின் நான்காம் கருத்தரங்கில் (12-16 மார்ச் 2013, சந்திகர்) சமர்ப்பிக்கப்பட்ட தலைமையுரை.  

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூலிலிருந்து.


சாதி ஒழிப்பிற்கான சோஷலிஸ்ட் வேலைத் திட்டம்



- ஆய்வுக் குழு, அரவிந்த் மார்க்சியக் கல்வியகம்.


பாட்டாளி வர்க்க அரசானது அனைத்துவிதமான பூர்ஷுவா அரசாங்கப் பண்ணைகள், பழைய ஜாகிர்களின் மாபெருமளவிலான விவசாய நிலங்கள், நகர்புற தொழிலதிபர்கள்-வணிகர்கள்-அதிகாரத்துவத்தினரின் நிலச்சொத்துகள், பெரு விவசாயிகளின் பண்ணைகள் மற்றும் தோட்ட-பண்ணைகள் அனைத்தையும் (எந்தவித நஷ்டஈடுமின்றி) தேசியமயப்படுத்தும்; மக்கள் அங்கு அரசு தொழிற்சாலையில் பணிபுரிவது போல் பணிபுரிவார்கள், கட்சியின் தலைமையில் பணிபுரியும் அனைவரும் சேர்ந்து தேர்தெடுக்கும் கமிட்டிகள் நிர்வாகப் பொறுப்பைக் கொண்டிருக்கும். குலாக்குகள்-நிலக்கிழார்கள்-விவசாயிகளின் நிலச்சொத்துகள் எவ்வித நஷ்ட ஈடுமின்றி எடுத்துக்கொள்ளப்பட்டு, கூட்டுப் பண்ணைகளாக மாற்றப்படும். அரசு மற்றும் கூட்டுப்ப பண்ணைகளில், நிலமற்ற மக்கள் அனைவரும் பணிபுரிவர், சம அந்தஸ்துடன் கூட்டு நிர்வாக நடவடிக்கையிலும் ஈடுபடுவர்.  கூட்டுறவு வேளாணில் இணைந்துகொள்ளத் தயாராக இருக்காத சிறு உடைமை விவசாயிகள் கூட்டுறவுமயமாக்கலுக்காக ஊக்குவிக்கப்படுவர். சில இடங்களில், கூட்டுறவு வேளாணுக்குத் தயாராக இல்லாத நபர்கள், தங்களுடைய தனியார் பண்ணைகளில் உழைப்பாளரை கூலிக்கமர்த்த தடை விதிக்கப்படும். உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவது தடுக்கப்படும். அதேபோல், தனியார் வேளாணில் ஈடுபடுபவர்களுக்கு, கூட்டுறவுப் பண்ணைக்கு அளிக்கப்படும் விதைகள், தண்ணீர், மின்சாரம், உரம் போன்ற சலுகைகள் கொடுக்கப்பட மாட்டாது. மெல்ல மெல்ல, பொருளாதார பாதுகாப்புக்கான உத்திரவாதத்தைக் கண்டு, அரசு மற்றும் கூட்டுப் பண்ணைத் தொழிலாளர்களின் வளர்ச்சியைக் கண்டு ஏற்படக்கூடிய சோஷலிசத்தின் மீதான நம்பிக்கையினால், தனியார் மற்றும் கூட்டுறவு வேளாணில் ஈடுபடுபவர்கள் கூட கூட்டுப் பண்ணை முறையினால் ஈர்க்கப்படுவர். இந்நடைமுறையின் இறுதி கட்டம் என்பது ஒட்டுமொத்த விவசாயத்தையும் தேசியமயமாக்குவதாகும். இவ்வாறாக, தனியார் நிலவுடைமை மற்றும் ஆண்டாண்டு காலமாக நிலமற்றவர்களாக இருக்கும் தலித்துகளின் பிரச்சினைக்கும் முடிவு கட்டப்படும், சாதியமைப்பின் முக்கிய கிராமப்புறத் தூணை சோஷலிசம் தகர்த்தெறியும்.

பூர்ஷுவா அரசை அழித்த உடன், பாட்டாளி வர்க்க அரசானது சிறு மற்றும் பெரிய, தேசிய மற்றும் அந்நிய நிறுவனங்களின் தொழிற்சாலைகளைக் கைப்பற்றி தேசியமயமாக்கும், கட்சியின் தலைமையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டி நிர்வாகப் பொறுப்பை வகிக்கும். தொழிற்சாலைகளில், பன்முகத் திறமைக்கான பயிற்சிகள் மூலம், உழைப்புப் பிரிவினை என்பது நெகிழ்வுத் தன்மையுடனும், நகரும் தன்மையுடனும் இருக்கும். இதில் எல்லோரும் அனைத்து விதமான வேலைகளையும் (தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் பணிகள் தவிர) செய்ய வேண்டும். இவ்வாறாக, “உயர்வான” மற்றும் “தாழ்வான” வேலைகள் என்னும் வேறுபாடுகள் மற்றும் “சுத்தமான” மற்றும் “அசுத்தமான” பணிகள் என்னும் வேறுபாடுகள் மெல்ல மெல்ல மறையும்.  கழிவுநீர்-வடிகால் சுத்திகரிப்புக்கான ஆலைகளில், இயந்திரமயமாக்கலும், திட்டமிட்ட அரசாங்க ஏற்பாடுகளும் கொண்டுவருவதன் மூலம், “அசுத்தமான” பணிகளின் வகைப்பாடு மாற்றப்படும். அதன்பிறகு, சோஷலிச உணர்வுநிலை அதிகரிகரித்து வரும்போது, மக்களிடையே இருக்கக்கூடிய பண்பாட்டு வேறுபாடுகளுக்கு முடிவு கட்டும், நெகிழ்வான உழைப்புப் பிரிவினையில்கூட பலவந்தத்தைப் பிரயோகிக்க வேண்டிய அவசியத்தை அது குறைக்கும். ஒருவேளை சிலர் மீது பலவந்தம் தேவைப்பட்டால் அது நியாயத்தின் பொருட்டு பிரயோகிக்கப்படும்.

பங்குச் சந்தைகள் உடனடியாக மூடப்படும். வணிகத் துறையும் தேசியமயப்படுத்தப்படும் என்பதால், பரிவத்தனையில் மக்களின் கட்டுப்பாடு நிறுவப்படும். அதன் மூலம் பதுக்கல்-லாபமீட்டும்-இடைத்தரகுக்கு (ஹோர்டிங்-புராஃபிட்டீரிங்-புரோக்கிங்) முடிவு கட்டப்படும். மேலும், இறுக்கமான பாரம்பரியக் குடும்பத் தொழில் அமைப்பும் உடைக்கப்படுவதானது, சாதிய அமைப்பில் தாக்கம் செலுத்தும். தனியார் கந்துவட்டி தடை செய்யப்பட்டு, கடுமையான சிறைத் தண்டனைக்குரியதாக்கப்படும். ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், சம்பந்தப்பட்டவருக்கு அரசின் நிர்வாகக் கமிட்டி மற்றும் கூட்டு நிறுவனங்களின் உதவி வழங்கப்படும்.

பொருளாதாரப் பாகுபாடு தவிர்த்து, கல்வி நிறுவனங்கள் சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் முக்கிய மையங்களாக இருக்கின்றன. சோஷலிச அரசு எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை என்னவெனில், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் தேசியமயப்படுத்துதல், பயிற்சி நிறுவனங்களுக்குத் தடை செய்வது. மேலும், இலவச, சமச்சீர் கல்வியை அறிவிப்பது சோஷலிச அரசின் முக்கியப் பொறுப்பாகும். விஞ்ஞானபூர்வ கல்வி அமைப்பில், நாட்டம் மற்றும் இயற்கைத் திறன் அடிப்படையில் வெவ்வேறு துறைக் கல்வி அளிக்கப்படும், பல திறன்கள் உண்டாக்கப்படும், நெகிழ்வான உழைப்புப் பிரிவினையானது, பல வேலைகளை, வெவ்வேறு தொழில்களில்  மாறி மாறி செய்ய வகை செய்யும். படிப்படியான  சமச்சீரான சம்பளம், சமச்சீரான வாழ்க்கை முறை மற்றும் உடல் உழைப்பு, மூளை உழைப்புக்கு இடையிலான வேறுபாடு குறைவது ஆகியவற்றின் மூலம், சமூக அந்தஸ்துடன் தொழிலை இணைந்துப் பார்க்கும் போலி கவுரவும் முடிவுக்கு வரும். சோஷலிசக் கல்வியானது உழைப்புப் பண்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுபோல், அனைத்து இளைஞர்களின் பண்பாட்டு மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும். பொருளாதார மட்டத்தில் ஏற்றத்தாழ்வைக் குறைக்கையில், கல்வியில், பண்பாட்டு நிலையில் வேறுபாடுகள் மறைந்து போகும், இப்போது சாதியப் பாகுபாட்டை தகர்ப்பது மேலும் சுலபமாகி விடும்.

அடுத்து, மருத்துவம். தனியாக பயிற்சி செய்வது, தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் கண்டிப்புடன் தடை செய்யப்படும். ஒட்டுமொத்த மருத்துவ சேவையும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். சோஷலிசமானது ஏகாதிபத்தியக் காப்புரிமைகளில் நம்பிக்கைக் கொண்டிருக்காது. அனைத்து மருந்துகளையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும். அனைத்து மக்களுக்கும் மருத்துவம் இலவசமாக்கப்படும். சோஷலிச மருத்துவக் கொள்கையை ஒருவர் தெரிந்துகொள்ள விரும்பினால், சோவியத் ஒன்றியம், சோஷலிச சீனா மற்றும் கியூபாவில் இத்துறையில் மேற்கொண்டுள்ள அற்புதமானப் பணியைப் பற்றி படித்தறியலாம்.  இலவச மருத்துவக் கல்வி மற்றும் இலவச, சமச்சீர் மருத்துவ அமைப்பு மூலம் தலித்துகளின் சமூக அந்தஸ்தில் ஏற்றம் ஏற்படும். 

சோஷலிச வீட்டுவசதி கொள்கையானது சாதி பாகுபாட்டை ஒழிப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். வீடு கட்டும் பணிகள் அனைத்தையும் சோஷலிச அரசே கையில் எடுத்துக்கொள்ளும். கட்டுமானக் காண்டிராக்டர்கள் சாதாரண தொழிலாளர்களாவார்கள். வீடற்ற மக்கள் அனைவருக்கும், சேரியில் வசிப்பவர்களுக்கும் வீட்டு வசதியை செய்துகொடுப்பதே பாட்டாளி வர்க்க அரசின் முதல் பணி. பழைய அரண்மணைகள், பல வீடுகள் வைத்திருக்கும் உடைமையாளர்களின் கூடுதல் வீடுகள் ஆகியவற்றைக் கைப்பற்றி, ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் மற்றும் இதர பகட்டான மாளிகைகளை, பெரிய பங்களாக்களைக் கைப்பற்றி குடியிருப்புப் பகுதிகளாக மாற்றப்படும். அதேவேளை குடியிருப்புக் காலனிகள் பெரியளவில் உருவாக்கப்படும்.

தொடக்கத்தில், சோஷலிசக் கல்வியைப் பெற்ற முதல் தலைமுறை விஞ்ஞானிகள், பொறியாளர்கள், நிபுணர்கள் உருவாகும் வரை, இந்தத் துறை வல்லுனர்களுக்கு சம்பளத்தில் மட்டுமல்லாது, வீட்டு வசதியிலும் சில சலுகைகள் அளிக்கப்பட வேண்டும், அப்போதுதான் உற்பத்தி அமைப்பை சுமூகமாக இயக்க முடியும். பிந்தையக் கட்டத்தில் அது தேவைப்படாது. இந்தத் தொடக்கக் கட்டங்களைக் கடந்தபின்னர், சோஷலிச அரசானது எல்லா வீடுகளையும் அரசுடைமையாக்கும், அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டை ஒவ்வொரு குடிமகனுக்கும்  உத்திரவாதமளிக்கும். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியோடு, வீடுகளை சமச்சீரான முறையில் வசதியுள்ளதாகக் கட்டிட, பழைய குடியிருப்புகளை மறுவடிவமைக்கவும், உழைப்பு சக்தியை அணிதிரட்டி புதிய காலனிகளை உருவாக்கவும் பெரியளவிலான கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏடாகூடமான முறையில்  அமைந்திருக்கும் கிராமப்புறங்கள் அனைத்து வசதிகளும் உடைய நவீன காலனிகளாக மாற்றப்படும். கூடுதல் நிலம் மற்றப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும். அரசிற்கு சொந்தமான சமச்சீரான  வீடுகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுவிட்டால் (தனிக்குடும்பத்தின் அடிப்படையில்),  சமூகப் பாகுபாட்டின் முக்கியக் காரணமாக இருக்கும் தலித்துகள்  (மற்றும் இதரப் பணியாளர்கள்) ஒதுக்கப்படுவது தீர்ந்துவிடும்.  தேசியமயமான விவசாயம், தொழிற்சாலை மற்றும் கிராமப்புறங்கள், நகரங்கள் இரண்டிலும் சமச்சீரான வசதி கொண்ட வீடு (மற்றும் போக்குவரத்து, பொழுதுபோக்கு வசதிகள்) ஆகியவற்றால் தொழிற்சாலை மற்றும் விவசாயத்திற்கு இடையிலான வேறுபாடு மற்றும் நகரங்கள் கிராமங்களுக்கு இடையிலான வேறுபாடு மறையத் தொடங்கும். அதே நடைமுறையில், உடல் உழைப்பு மற்றும் மூளை உழைப்புக்கு இடையிலான இடைவெளியும் குறையத் தொடங்கும். ஒரு சோஷலிச சமூகத்தில்,  இந்த மூன்று ஏற்றத்தாழ்வுகளும் தனிமனிதருக்கிடையிலான உறவில் பூர்ஷுவா சிறப்புரிமையின்  பொருளாயத அடிப்படையாக திகழும். இம்முன்று ஏற்றத்தாழ்வும் மறைகையில் பூர்ஷுவா சிறப்புரிமைகளும் மறையும்.  அதனைத் தொடர்ந்து பூர்ஷுவா சாதியமைப்பும் முழுஅழிவை நோக்கி நகரும்.

பூர்ஷுவா சமூகத்தில் மதமும் பூர்ஷுவா சமூகத்திற்கு ஏற்ற வகையில் தகவமைக்கப்பட்டு, பூர்ஷுவா சாதியமைப்பின் ஒரு தூணாகி விட்டது. சோஷலிச சமூகத்தில், கம்யூனிஸ்ட் கட்சியானது, மத எதிர்ப்பு மற்றும் அறிவியல்சார் பகுத்தறிவு பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொள்ளும், அதேவேளை சிவில் உரிமையின் அடிப்படையில், சோஷலிச அரசானது, ஒவ்வொரு குடிமகரின் நம்பிக்கை மற்றும் வழிபாட்டுக்கான உரிமையையும் மதிக்கும். ஆனால் சமூக-அரசியல் வாழ்வில் மதத்தின் தலையீடு தடைசெய்யப்பட்டிருக்கும். தொடக்க விழாக்களில் மதச் சடங்குகளை நடத்துவது, பள்ளிகளில் பிரார்த்தனை செய்வது, ஒலிபெருக்கிகள் வைத்து கீர்த்தனைகள் பாடுவது, திருமணம் மற்றும் மதப் பேரணிகள் நடத்தி பொதுமக்கள் வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்துவது, மதப் பள்ளிகள்,  பொது இடங்களை வாடகைக்கு எடுத்து சமகம் (சீக்கிய ஆன்மீகக் கூட்டங்கள் – மொ.ர்) போன்ற நிகழ்ச்சிகளில் சமூக செல்வத்தை வீணடிப்பது ஆகியவை தடை செய்யப்படும். மக்களின் மத உணர்வுகளைக் கணக்கில்கொண்டு, பழைய மதத் தலங்கள் விட்டு வைக்கப்படும், ஆனால் அதன் தர்மகர்த்தாக்கள் மற்றும் மடாதிபதிகளிடமிருந்து அரசே நிர்வாகத்தை எடுத்துக்கொள்ளும்.  ஆசிரமங்கள்-கோயில்கள்-வக்ஃபுகள்-குருத்வாராக்கள்-சர்ச்சுகள்  போன்ற மத நிறுவனங்களிடம் உள்ள நிலம் மற்றும் பணம் அனைத்தையும், அரசு கையகப்படுத்தும் (இந்த அளவற்ற சொல்வதத்திலிருந்தும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்தும்,  சோதனைக்குப் பின்பு செல்வந்தர்கள் வீட்டில் கண்டுபிடிக்கப்படும் தங்கம் மற்றும் கறுப்பு பணம் கையகப்படுத்தப்படும். சோஷலிச புராதன மூலதனத் திரட்டிலிருந்து  ஒரு பகுதி இப்படி வசூலிக்கப்படும்). 

மத நிறுவனங்களை அமைத்தல், அல்லது மதத்தின் அடிப்படையில் எந்தவிதமான சமூக-அரசியல் அணிதிரட்டலில் ஈடுபடுவதும் தண்டனைக்குரிய குற்றமாக்கப்படும். மதச் சடங்குகள் நடத்தி திருமணம் செய்துகொள்ள ஒருவருக்கு சுதந்திரம் இருக்கும், ஆனால் பதிவுக்குப் பின்பே அத்திருமணம் அங்கீகரிக்கப்படும்.  பெண்ணின் ஒப்புதல் இன்றி ஒரு திருமணம் அங்கீகரிக்கப்படாது. விவாகரத்துக்கான சட்ட நடைமுறை எளிமையானதாக இருக்கும். வரதட்சனை என்பது  கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படும். இவ்வாறாக, சமூக வாழ்வில், மதத்தின் தலையீட்டைக் குறைப்பதின் மூலம் சாதி ஒழிப்பு நடைமுறைத் துரிதப்படுத்தப்படும்.

பூர்ஷுவா குடும்ப அமைப்பு மற்றும் அகமண முறை ஆகியவை பெண் ஒடுக்குமுறைக்கு  அடித்தளமாக இருக்கின்றன. உலகளாவிய மற்றும் கட்டாய சமச்சீர் இலவசக் கல்வியோடு, அனைவருக்கும் வேலைவாய்ப்பு உத்திரவாதம் ஆகியவற்றோடு, குழந்தைகள் காப்பகம், மழலையர் பள்ளி, பெரியளவிலான கூட்டு சமையல்கூடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு பெண்கள் கொடுமையான வீட்டு உழைப்பு என்னும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவர். இதன் விளைவாக, சமூக வாழ்வில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும். தந்தையை (மற்றும் கணவர்) சார்ந்திருக்கும் நிலை இருக்காது, எந்த அழுத்தங்களும் இன்றி தங்களது வாழ்க்கை பற்றிய முடிவுகளை அவர்களே சொந்தமாக எடுக்க முடியும். இந்த நிலை மாற்றங்கள் மூலம், காதல் திருமணங்கள் மற்றும் கலப்புத் திருமணங்கள் பெருகும், சாதியின் சுவர், சரிந்து விழத் தொடங்கும்.

சோசலிச அரசானது, அனைத்து சாதி பஞ்சாயத்துகள், கப் பஞ்சாயத்துகள், சாதி சங்கங்கள், சாதிக் கூட்டங்கள் ஆகியவற்றை சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவிக்கும், அத்தகைய முயற்சிகள் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படும். கல்வி அமைப்புக்கு அப்பால், அனைத்து பண்பாட்டு ஊடகங்கள் மற்றும் இதர ஊடகங்களை, சோஷலிச மதிப்பீடுகளைப் பிரச்சாரம் செய்யப் பயன்படுத்துவதோடு, சாதியமைப்புக்கு எதிரான பிரச்சாரங்களுக்காகவும் சோஷலிச அரசு பயன்படுத்தும். இதன் மூலம் புதிய சமூகத்தின் புதிய குடிமகர்களின் மனங்களில் இதுபோன்ற கொடுமையான பழக்கவழக்கங்களுக்கு இடமில்லாமல் போகும்.

இவ்வாறாக, சோஷலிசமானது, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியுடன் உற்பத்தி உறவுகளில் தொடர் மாற்றங்கள் மூலமாகவும், அதேவேளை மேற்கட்டுமானத்திலும்,  முழுவீச்சுடன் கூடிய முடிவற்ற வகையிலான கலாச்சார புரட்சியின் மூலமாகவும் சாதியமைப்பை அடிக்கட்டுமானம் மற்றும் மேற்கட்டுமானத்திலிருந்து ஒழிக்கும். சோஷலிசத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறுவதற்கானப் பயணம் மிக நீளமானதே, ஆனால் சாதி ஒழிப்பு என்பது சிலப் பத்தாண்டுகள் மட்டுமே பிடிப்பதாக  இருக்கும்.

‘சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும்’ என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட அரவிந்த் மெமோரியலின் நான்காம் கருத்தரங்கில் (12-16 மார்ச் 2013, சந்திகர்) சமர்ப்பிக்கப்பட்ட தலைமையுரை.  

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூலிலிருந்து.