Aug 12, 2021

பெண் விடுதலை சிந்தனைகள்


பெண் தொழிலாளியின் நிலைமை என்பது நாடெங்கிலும் மிகவும் மோசமாகவே உள்ளது. ஆணைப் போலவே அவளும் துன்பப்படுகிறாள். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வர்க்கத்தை சார்ந்தவளாக ஆணைப் போலவே அவளும் ஓய்வின்றி உழைக்கிறாள், ஏழ்மையில் வாடுகிறாள். உழைக்கும் மகளிரும் பாட்டாளி வர்க்க அங்கமே, ஆகவே அவளுடைய நலனும் அந்த வர்க்க நலன்களோடு தொடர்புடையது.

பாட்டாளி வர்க்கம் மேலான நிலையைப் பெறும்போது உழைக்கும் மகளிரின் நிலைமைகளும் மாறும். பாட்டாளி வர்க்கம் அறியாமையிலேயே உழலும், உரிமைகளின்றி வாழும் எனில், உழைக்கும் மகளிர்க்கும் இன்றைய அதே துன்பகரமான வாழ்வே நீடிக்கும். ஆகவே பாட்டாளி வர்க்கம் மேலான வாழ்வை வென்று பெறுகிறதா இல்லையா என்பதைப் பற்றி உழைக்கும் மகளிர் கவலைகொள்ளாதிருக்கவோ பாரா முகமாக இருக்கவோ முடியாது. பாட்டாளி வர்க்க நலன் என்பது அவளுடைய சொந்த நலனும், அவசியமான நலனும் ஆகும். ஒரு ஆண் தொழிலாளியைப் போலவே பெண் தொழிலாளிக்கும் இது மிகவும் முக்கியமானது. “பாட்டாளி வர்க்க நலன்” என்றால் என்ன?

தொழிலாளர்களின் உழைப்புதான் அனைத்து செல்வங்களையும் தோற்றுவிக்கிறது, இருப்பினும் அந்த உழைப்பிற்கு ஈடாக அவர்கள் வாழ்வதற்கும் உழைப்பதற்கும் கூட தேவையான உணவு கிடைப்பதில்லை. இதைக் காணும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை நிலைமைகள் குறித்து அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். உழைப்பாளர்கள் தங்களுக்காக உழைக்கவில்லை, மாறாக பூர்ஷுவாக்கள் என்றழைக்கப்படும் ஆலை முதலாளிகளுக்காக, நிலவுடைமையாளர்களுக்காக, சுரங்கம், கடைகள் ஆகியவற்றை வைத்திருக்கும் எஜமானர்களுக்காக உழைக்கிறார்கள்.

அனைத்து சட்டங்களும் சொத்துடைமை வர்க்கத்திற்குச் சேவை செய்யவே வகுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாடும் பூர்ஷுவாக்களின் நலனுக்காகவே இயங்குகிறது. நாட்டின் சட்டதிட்டங்களை வகுப்பதிலோ, நிர்வாகத்திலோ தொழிலாளர்களுக்கு எந்தப் பங்குமில்லை. உழைப்பது ஒன்றே அவர்களின் வேலை. வரிகள் கட்ட அவர்கள் ஓயாது உழைக்க வேண்டும். தங்கள் சுயமரியாதை மடிவதைக் கண்டும் கடும் குளிர், பசி, பட்டினி போன்ற கொடுமைகளையும் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்.

இந்த நிலைமையைத் தொழிலாளர்கள் மாற்ற நினைக்கின்றனர். இனியும் அவர்களுக்கு வர்க்கங்கள் வேண்டாம், ஏழை பணக்காரன் வேற்றுமை இருக்கக் கூடாது. ஆலைகள், நிலங்கள், தொழிற்சாலைகள், பட்டறைகள் சுரங்கங்கள் போன்றைவை தனியாரின் உடைமைகளாக இன்றி ஒட்டுமொத்த சமூகத்தின் பொது உடைமையாக, அவர்களால் நிர்வகிக்கப்படுவதாக இருக்க வேண்டும். எஜமானர்கள் எப்போதும் தங்களை வளப்படுத்திக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். தங்களுக்காக உழைக்கும் தொழிலாளர்களின் உடல் நிலை, வாழ்க்கை வசதி, நலம் – வளம், குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. உழைக்கும் மனிதனின் வாழ்க்கையை அவர்கள் எண்ணுவதில்லை, மாறாக இலாபம் ஒன்றே அவர்களின் குறிக்கோள்.

உற்பத்திக் கட்டுப்பாடுகள் தனியார் முதலாளிகளிடமிருந்து சமூகத்தின் கைகளுக்கு மாறும்போது எல்லாம் மாறிவிடும். சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் நல் வாழ்க்கை வாழ, ஒவ்வொருவரின் தேவையும் நிறைவு பெற, மகிழவும், கொண்டாடவும் தேவையான ஓய்வு நேரம் கிடைக்க, மனிதர்கள் அனுபவிக்க வேண்டிய அனைத்து விதமான இன்பங்களும் கிடைத்திட அச்சமூகம் வழிவகுக்கும். தங்களுக்குத் தேவையான சரக்கு இருக்காதோ என்று தொழிலாளர்கள் அப்போது அச்சம் கொள்ள வேண்டியிருக்காது.

இயந்திரங்களின் வரவால் மனித உழைப்புத் திறன் அதிகரித்துள்ளது. அதன் விளைவாக புதிய விவசாய முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு, மண் வளம் அதிகரித்துள்ளது. ஆகவே அதுகுறித்து யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. எல்லோருக்கும் போதுமான அளவு சரக்குகள் இருக்கும். இன்றைய நிலையில் மக்கள் ஏழ்மையில் வாட, போதிய உணவு தானியங்கள் இல்லை, உடை இல்லை என்பதல்ல காரணம். அத்தனை தானியங்களும் வாங்குபவரை எதிர்நோக்கி ரயில் நிலையங்களில், கிடங்குகளில் அழுகிக் கிடக்கின்றன. மறுபுறம் தொழிலாளர்கள் பட்டினியில் வாடி இறக்கின்றனர். ஒரு தொழிற்சாலை முதலாளியின் சேமிப்புக் கிடங்கு விற்பனையாகாத சரக்குகளின் குவியலால் வெடித்துவிடும் போல் உள்ளது. ஆனால் அவனது தொழிற்சாலை வாசலில், சாக்குத் துணி அணிந்தபடி தொழிலாளர்கள் வேலை கேட்டு காத்துக்கிடக்கின்றனர்.

உற்பத்தியானது சமூகத்தால் நிர்வகிக்கப்படும் போது, அனைவரும் உழைத்தே வாழ வேண்டும். ஆனால் இன்றுள்ளது போல் உழைப்பது அவ்வளவு கடினமானதாக இருக்காது. உழைக்கும் இடத்தில் நிலவும் வெறுக்கத்தக்க சூழல் இலகுவாக்கப்படும். காற்றோட்டமில்லாமல், நாறும், நோய்த் தொற்றுங்கள் ஏற்படும் தொழிற்சாலைகள் போலின்றி, நன்கு ஒளியூட்டப்பட்ட, தாராளமான இடம் நிரம்பிய, உலர்ந்த, காற்றோட்டமுள்ள கட்டிடங்களாக அது மாற்றப்படும். இன்றைக்குப் போல் நீடித்த பணி நேரமிருக்காது. ஏனென்றால், இன்றைக்குப் போல் கர்ப்பிணிகள், குழந்தைகள், உழைப்பாளிகள் மட்டும் கடுமையாக உழைக்க மற்றொரு பிரிவினர் வேலை வாய்ப்பின்றி சும்மா இருக்க நிர்ப்பந்திக்கப்படும் நிலை இருக்காது. அனைவரும் உழைத்து வாழ வேண்டும். அதேவேளை அது தற்போது உழைக்கும் வர்க்கம் அனுபவித்துவரும் நிர்ப்பந்திக்கப்பட்ட உழைப்பாகவோ, அயர்ச்சியூட்டுவதாகவோ, இழிவான நிலையிலோ இருக்காது.

முதியவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், பலவீனமானவர்கள் ஆகியோரைப் பராமரிக்கும் பொறுப்பை சமூகமே ஏற்றுக்கொள்ளும். ஏதோ ஒரு புழக்கடையில் மரணித்துக் கிடப்போமோ, யாரையோ சார்ந்து பிச்சையெடுத்து வாழ்ந்து அனாதையாக மரணித்துவிடுவோமோ என்ற கவலைகள் இருக்காது. தாங்கள் படுத்த படுக்கையாகி விட்டால் குடும்பம் அனாதையாகி விடுமோ என்று யாரும் அச்சம் கொள்ள வேண்டியிருக்காது. ஏனென்றால் குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாக, அறிவாளிகளாக, நல்ல குடிமகன்களாக உருவாகத் தேவையான பயனுள்ள அறிவைக் கொடுத்து சமூகத்தால் நல்ல முறையில் வளர்த்தெடுக்கப்படுவார்கள்.

அத்தகைய நிலைமையை வேண்டுவோரும், அதற்காகப் போராடுபவர்களுமே சோஷலிஸ்டுகள் ஆவர்.

ந.கா. க்ரூப்ஸ்கயா,

உழைக்கும் மகளிர்


No comments:

Post a Comment