Showing posts with label உயிர்மை. Show all posts
Showing posts with label உயிர்மை. Show all posts

Dec 2, 2010

சாரு நிவேதிதாவின் விமர்சனத்தில் வழியும் புன்னகை.


உயிர்மையில் நந்தலாலா திரைப்படம் பற்றிய விமர்சனத்தில் சாரு நிவேதிதா கதைநாயகர்கள் இருவரும் தாயால் புறக்கணிக்கப்பட்டவர்கள்’ என்று இரண்டு இடத்தில் குறிப்பிடுகிறார். தந்தைப் பற்றிய பேச்சேயில்லை.  ஒருவேளை தந்தையில்லாமல் மாய சக்தியால் பிறந்தவர்கள் போலும் இருவரும்.  அதனால் தான் அவர்களின் தாய் மட்டும் புறக்கணித்திருக்கிறாள்.  இந்தக் கதையில் தாய்மை எங்கிருக்கிறது என்று அற்புதமான ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்? தாயைத் தேடி தானே இருவரும் பயணிக்கின்றனர்.  அகியின் தாயைத்தானே (தாயை மட்டும்) கதாநாயகன் அறைகிறான், கோபத்தில் பழிக்கிறான். சிறுவன் தாயின் புகைப்படத்தை மட்டும்தானே கோபமாகத் தூக்கி எறிகிறான்.  தாய் வேறு தாய்மை வேறு என்று புதிதாக ஏதோ தத்துவம் வைத்திருக்கிறார் போலும். அப்படியே ஆகட்டும். (அதே போல் தொழிலின் அடிப்படையில் வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு சமூகத்தினர் மலம் அள்ளும் தொழில் மேற்கொள்கின்றனர். இதில் ஜாதி எங்கே இருக்கிறது, அடிமைத்தனம் எங்கிருக்கிறது என்றும் கேட்பார் போலும்).

சாரு நீங்கள் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க உங்களுக்கு சில வார்த்தைகள்: ’தந்தையால் புறக்கணிக்கப்பட்டு, தாயால் காப்பாற்றப்பட்டு வந்த இருவரும் சூழ்நிலைக் காரணமாக ஒருவர் (பாஸ்கர் மணி) மன நலக்காப்பகத்திலும், சிறுவன் பாட்டியாலும் வளர்க்கப்படுகிறார்கள்’.

வார்தைக் கட்டமைப்பிலேயே தெரியவில்லையா உங்கள் ஆணாதிக்க சிந்தனை. உலக இலக்கியம், உலக சினிமா பேசும் நீங்களும் உங்கள் குழுவும் வார்த்தைகளின் அரசியல் (‘words of politics’)  என்ற ஒன்றை அறிந்துவைத்திருப்பீர்கள்தானே. 

“பாஸ்கர் மணியின்  பெயரே கூட படம் முடியும் தறுவாயில் அவன் தன்னுடைய வீட்டுக்கு வரும்போது அவனுடைய அண்ணன் டேய் பாஸ்கர் மணி என்று அழைக்கும்போதுதான் நமக்குத் தெரிகிறது, ஆக தனக்கென்று ஒரு பெயர் கூட இல்லாமல் படம் முழுவதும் வருகிறான் அவன்” அருமையான பார்வை, ஆம் படத்தில் ஸ்னிக்தா பாத்திரத்துக்கு கடைசி வரை பெயரே இல்லை. இதைக் கவனிக்காமல் விட்டு விட்டீர்களே...அவள் விபச்சாரி - பெயரற்றவள்; கேட்டால்  அது சமூகக் குறியீடு பெயரற்ற அவஸ்தை பெண்ணின் தனிமை என்பீர்கள். வரவேற்கிறேன்.  நீங்கள் ஒரு தொகுப்பில் பெரியாரை உங்கள் ஆசான் என்று கூறியிருக்கிறீர்கள் மகிழ்ச்சி.

பெரும்பான்மையாக இந்திய திரைப்பட இயக்குனர்கள் பெண்ணின் முலைகளையும், பிருஷ்டத்தையும் மட்டுமே நம்பி படமெடுக்கிறார்கள் (”உன் கூட வரதுக்கு வேற மாதிரி பொம்பளைய பாரு” என்று பெண்ணிய நோக்கோடு வீர வசனம் எழுதிய சுஹாசினி, மணிரத்தினம், ஷங்கர், கம்ல் உட்பட) ஆனால் நீங்கள் வக்காலத்து வாங்கும் ஆட்டியர் இயக்குனர் சற்று வித்தியாசமானவர் பெண்களை மதிப்பவர் அதனால் தான் குத்துப் பாடல்கள் மட்டும் வைப்பார்.  பெலினி, ஹிட்ச்காக், கிம் கி டுக், குரஸாவா போன்றோர் தயாரிப்பாளரைக் கவரவும், வசூலை அள்ளிக் குவிக்கவும் ரசிகர்களுக்கு இவ்வளவு தரக்குறைவான ரசனையை வளர்த்துவிடுவார்களா சொல்லுங்கள்.

இருள்மை, தனிமை, குறியீடு, Cultural Cacaphony இப்படி பல சொல்லாடல்கள் மூலம் மிஷ்கினை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள்.  இராவணன் படம் நெடுக ஐஸ்வர்யா ராயின் மார்புக்கோடுகளை தவறாமல் காட்டிய மணிரத்தினமும், பாய்ஸ் போன்ற படங்களைக் கொடுத்த ஷங்கரும் கூட அவற்றில் ஏதாவது குறியீடுகள் வைத்திருக்கக்கூடும். வரும் காலத்தில் எளிய ரசிகர்களாகிய நாங்கள் உங்கள் விமர்சனத்தைப் படித்து ரசனைகளை வளர்த்துக்கொள்கிறோம். எங்கள் ரசனைகளை வளர்த்துவிடும் முயற்சியைக் கைவிடாதீர்கள்.

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று தவறாக சொல்லியதை நியாயப்படுத்த மிகவும் போராடியிருக்கிறீர்கள். அதற்கு துணையாக உலக மேதைகளையெல்லாம் அழைத்திருக்கிறீர்கள். அவர்களை விட இவர் இன்னமும் பெரிதாக சாதித்திருப்பதாகவெல்லாம் வக்காலத்து வாங்குகிறீர்கள். நன்று.  நேர்மையைக் கைவிட்டாலும், ஆதாயம் தரும் உறவுகளைக் கைவிடமுடியாது என்பதை புரிந்துக்கொண்டேன். உங்கள் விமர்சனத்தை படித்தவரையில் எனக்கு ஒன்று புரிந்தது. நீங்கள் நந்தலாலா படத்தை பார்க்கவேயில்லையென்று. படத்தை பாருங்கள்.

பெண்ணியத்திற்கு அப்பாற்பட்டு - இளையராஜாவை மிகவும் தரக்குறைவாக விமர்சித்திருந்தீர்கள். (மிஷ்கின் மேலே போகிறார், இளையராஜா அவரை கீழே இழுக்கிறார்..நல்ல கவியரங்கச் சொல்லாடல்). அவருடைய இசை இந்தப் படத்தில் குறைவாகத்தான் இருக்கிறது அது குறைவாகத் தெரியக் காரணம் அவர் 30 வருடமாக இசையமைத்து மக்களின் இசை ரசனையை மாற்றியமைத்தவர், அதனால்தான் அவரிடம் நாங்கள் அதிகம் எதிர்பார்க்கிறோம். அதற்காக உங்கள் இயக்குனர் கிக்குஜிரோவைக் கையாண்டதுபோலவே அப்படத்தின் இசையைக் கேட்கவேண்டும், கையாடவேண்டும் என்று அவருக்கும் கற்றுத்தருகிறீர்களே. இயக்குனரின் கதை தாய்மையைப் பேசாதபோது, இளையராஜாவின் இசை மட்டும் தாய் செண்டிமெண்ட் பேசுவது எங்களுக்கு புரிகிறது சாரு அவர்களே.