May 20, 2025

பூப்புனித நீராட்டு விழாவை தடை செய்யவும்!

 

ஞாயிறு அன்று ஒரு பயணத்தின் போது ஒரு சிறுமியின் புகைப்படத்துடன் பூப்புனித நீராட்டு விழா FLEX BANNER ஒன்றை பார்த்தேன்! ஒரு பெண் குழந்தையை (even if she attained puberty) அப்படி காட்சிப் படுத்துவதைக் கண்டு வேதனையுற்றேன்! நிச்சயமாக என்னால் என் மகளை அப்படி ஒரு பின்னணியில் காட்சிப்படுத்த இயலாது. உலகில் உள்ள மகள்கள் அனைவரும் என் மகள்களே என்னும் அன்பை போதிக்கும் மார்க்சியவாதியாக அந்த மகளையும் என் மகளாகவே கண்டேன்.

மிகுந்த வேதனையுடனும், கொந்தளிப்புடனும் உடனே ஒரு Tweet செய்தேன், “Pls ban Puberty Function, புனித நீராட்டு விழாவை தடை செய்யவும்” முதல்வர் அவர்களை Tag செய்தேன்!

அடுத்த நொடி, பார்ப்பனிய ஆணாதிக்க இணையவெளி கும்பல் தாக்குதல் தொடங்கியது! பெரும்பாலும் சங்கிகள், திராவிட அரசியல் வெறுப்பு கொண்ட கும்பல் மற்றும் பெண் வெறுப்பு கொண்ட கும்பல் அவை! இதுகள் இதைத்தான் செய்யும் என்பதையும் நாம் அறிவோம் தானே! மேலும், இதுகளின் எந்த கேவலப் பேச்சுகளும் என்னை எந்த விதத்திலும் நிறுத்தப் போவதுமில்லை. ஆனால் எனக்கு மலைப்பாக ஒரு விசயம் இருக்கிறது – இவர்கள் எல்லாம் யார்? Troll செய்ய எப்படி இவர்களுக்கு இவ்வளவு நேரம் கிடைக்கிறது? ஏன் கேட்கிறேன் என்றால் மனிதர்களாக இருந்தால் இவ்வளவு அநாகரீகமாக பேச வாய்ப்பில்லை! கலாச்சார காவலர்களாக தம்மைத் தாமே நியமித்துக்கொண்டு இவர்கள் என்ன செய்கிறார்கள்? பெண் வெறுப்பிலும், சாதி வெறியிலும் செயல்படுகிறார்கள்! இவர்களை எப்படி மனிதர்கள் என்று நம்புவது?

மேலும், பெண்கள் தொடர்பான ஒரு பிற்போக்குத்தனத்தைக் குறித்து கவனப்படுத்தும்போது, இந்த மீசைகள் ஏன் முறுக்கிக்கொண்டு வருகின்றன? ஓ! புரிகிறது! அவர்கள் ஆண்கள்! ஆண்களாக இருப்பதை விட மனிதர்களாக இருப்பதன் மகத்துவத்தை அறியாதவர்களை நான் எப்படி மனிதர்கள் என்று ஏற்றுக்கொள்வது!

பூப்புனித நீராட்டு விழாவை கலாச்சாரத் தேவை, அது தெய்வீகச் சடங்கு என்று பல காரணங்களைக் கூறுகின்றனர். தொன்மம், சடங்கு எல்லாம் ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறையோடு தொடர்புடையது. இது விளங்க மார்க்சியம் கற்கவும்! அதுமட்டுமின்றி, அறிவு, அறிவியல் வளர்ச்சியோடும் தொடர்புடையது! மனிதர்கள் அறிவியவல் வளர்ச்சிக்கு ஏற்ப தமக்கு வசதியான விசயங்களை மாற்றிக்கொள்கின்றனர், ஆனால் “பெண்கள் மற்றும் சடங்கு” விசயங்கள் என்று வரும்போது மதவாத மூளைச் சலவையினால் கொந்தளிக்கின்றனர். அறியாமையாலும்!

பூப்புனித நீராட்டு விழாவின் தொன்மத்திற்குள் நான் வரவிரும்பவில்லை. நான் பேசப் போவது பெண்களின் சுயமரியாதை சார்ந்தும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதியும், மேலும் இத்தகைய சடங்கோடு தொடர்புடைய ‘பொருளாதார” அமைப்பு பற்றியும் தான்.

பெண் பருவம் எய்துவது ஓர் இயற்கை சுழற்சி. உயிரியல் இயக்கம். ஆனால் மத ரீதியாக அதன் மீது பலவிதமான கருத்தியல்களும், புனிதங்களும், தீட்டுக் கருத்தியலும், தீட்டு கழிப்புகளும் ஏற்றப்பட்டிருக்கிறது.  மாதவிடாய் குறித்து நிறைய புத்தகங்களும் உள்ளன! தேவை எனில் வாங்கிப் படிக்கவும்!

நிலவுடைமை சமூகப் பண்பாடு தான் இந்த பூப்புனித நீராட்டு விழா! அப்போது இப்படி FLEX பேனர் எல்லாம் அடித்து காட்சிப்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. தற்போது சிறுமிகளை இப்படி காட்சிப்படுத்துவது அவசியமா? பருவம் எய்திய செய்தியை உலகிற்கே தெரிவிக்க வேண்டிய தேவையுள்ளதா? எங்கள் விட்டில் பருவம் எய்திய பெண் இருக்கிறாள். திருமணத்திற்கு தயாராக இருக்கிறாள் என்று தெரிவிப்பதற்கு அந்த காலத்தில் தேவை இருந்திருக்கலாம், இப்போது உள்ளதா? சாதிய-அகமணமுறையின் அங்கம் தானே இது!

அந்த பெண்கள் தான் ஆசைப்படுகிறார்கள் என்று ஒரு வாதம்! அந்த பெண் பிள்ளைகளுக்கு அப்படி ஒரு நிகழ்வை அறிமுகப்படுத்தியது யார்? இதுவும் பிறந்தநாள் பார்ட்டி போன்றதுதானே? பணக்கார வீட்டுப் பிள்ளைகள் தங்கள் அந்தஸ்தைப் பறை சாற்றிக்கொள்ள எதையோ செய்வதைப் பார்த்து நம் வீட்டுப் பிள்ளைகள் ஆசைப்படுவது போல் தான் இதுவும். ”அவளுக்கு அப்படி செஞ்சாங்க, எனக்கும் செய்ங்க” என்று பெண் பிள்ளைகள் கேட்கும் நிலைக்கு நாம் தானே அவர்களை தள்ளுகிறோம். மேலும், இது நிலவுடைமை சமூகத்தின் “கௌரவத்தோடு” தொடர்புடையது. சீர் செய்வதை பகட்டாக காட்டிக்கொள்ளும் பணக்காரத் திமிரோடும் தொடர்புடையது என்பதை மறுக்க முடியுமா? இப்படி பணக்கார குடும்பங்கள் செய்கையில், அது ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் அழுத்தத்தைத் தருகிறது என்பதை மறுக்க இயலுமா?

தீட்டுக் கருத்தியலும், தீட்டுக் கழிப்பிலும் பெண்களை உடன்படுத்துவது அநீதி இல்லையா?

பார்ப்பனிய மூளைச் சலவை தானே இது?  

ஹோமம், யாகமெல்லாம் தமிழர்களின் சடங்கா? (எனை வந்தேறி என்னும் மூடர்களே!)

என் உடம்பு தீட்டு என்று சொல்ல நீ யாரடா என்று கேட்க ஒரு பெண்ணுக்கு உரிமை இல்லையா?

பெண்களை இந்த பிற்போக்குத்தனங்களில் இருந்து விடுவிக்கச் சொல்லி ஒரு முதலமைச்சரிடம் மன்றாட ஒரு பெண்ணாக எனக்கு உரிமை இல்லையா?

மனிதர்களாக இருந்தால் இதையெல்லாம் யோசிக்க மனம் வரும்! இணைய ரௌடிகளுக்கு அறிவும் இல்லை, மனிதாபிமானமும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள்.

பெண் என்பதால் அவள் உடலை மாறுபட்ட வகையில் காண்பதும், அதன் அடிப்படையில் சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதும், அதில் தீட்டு பார்ப்பதும், கழிப்பதும், ஒதுக்குதலும் – கேவலமாக இல்லையா? கேட்டால் இது Taboo Breaking, Celebrating Feritily என்று எடுத்துக்கொள்ளக் கூடாதா என்றொரு மடக்கும் கேள்வி!

Taboo Breaking என்றால் முதலில் பெண்களை கற்பக்கிரகத்திற்குள் அனுமதிக்கச் சொல்லுங்கள், மாதவிடாயின் போது கோவிலுக்கு வரக்கூடாது என்பதை நீக்குங்கள், ஐயப்பன் கோவிலுக்கு செல்ல ஏன் தடை? இன்னும் இப்படி நிறைய உள்ளன உடைக்க!

பிற்போக்கு ஆணாதிக்க கும்பல் தமக்கு வசதியாக வாதங்களை வளைத்துக்கொள்ளும்!

இதுபோன்ற விழாக்களால் ஒலியமைப்பு உள்ளிட்ட பல சிறு தொழில்கள் பிழைக்கின்றன என்பதில் மாற்று கருத்தில்லை! ஆனால் இது ஒரு பெண்ணின் சுயமரியாதையோடும், Privacyயோடும் தொடர்புடையது என்பதை மதிக்கக் கூடாதா? அதிலும் சிறுமிகள் என்னும் போது உங்கள் நெஞ்சம் பதபதைக்கவில்லையா?

நீங்கள் மனிதர்கள் இல்லாததால் உங்களுக்கு பதறாது, எனக்கு (என்னைப் போன்றோருக்கும்) ஒரு பெண்ணாக, மனுஷியாக சிறுமிகளை அவ்வளவு பெரிய Bannerஇல் பூப்பெய்துவிட்டாள் என்று பறை சாற்றுவதைப் பார்ப்பது பதறுகிறது! அவள் உடல் மீது ஆதிக்கம் செலுத்தும் கட்டம் தொடங்கி விட்டதே என்று கவலை வருகிறது! வேட்டையாடக் காத்திருக்கும் சிங்கத்திற்கு இறையாக்க ஒரு கிடாவை தயார்படுத்துவது போல் நடந்துகொள்கிறார்களே என்று தவிப்பாக உள்ளது!

அரசாங்கம் கண்டிப்பாக இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் சொல்வதுதான் – பாலின சமத்துவம் மற்றும் கூருணர்வு ஏற்படுத்தும் கல்வியை வழங்க வேண்டும். மூடநம்பிக்கை ஒழிப்பில், முதன்மையானது பெண்கள் உடலை மையப்படுத்தி நடக்கும் சடங்குகளை மக்களே கைவிடும் வகையில் சுயமரியாதை இயக்கத்தை அரசு நடத்த வேண்டும்.

பண்பாடு, சடங்கு, விழாக்கள் எல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் அதை சுற்றி இயங்கும் ‘தொழில்-பொருளாதார’த்தால் கட்டிக்காக்கப்படுகின்றன. அந்த பொருளாயத அதிகார அமைப்புதான் பிற்போக்குத்தனங்களை ஒழிக்க விடாமல் செய்கின்றன. மத நிறுவனங்களும், அந்த பொருளாதார அமைப்பின் அங்கம்தான் என்கிற புரிதலோடு இதை அணுக வேண்டும்.

-       கொற்றவை

20.5.2025

*இந்த பதிவுக்கு ஏற்ற புகைப்படத்தை தேடும் போது ஒரு நூலின் அட்டைப்படத்தைக் கண்டேன். அதை மேலே பகிர்ந்திருக்கிறேன். இன்னும் நான் வாசிக்கவில்லை. ஆனால் அது பகுத்தறிவு சார்ந்த நூல் என்பதை அறிய முடிகிறது.     

That Tweet

Mar 28, 2025

நான் பெண்!




நான் பெண்! பெண்மையுடையவள் அல்ல
பெண்மை உடைத்தவள்!
நான் அழகாய் இருப்பதால் சமூகம் பயம் கொள்கிறது!
ஆம் இச்சமூகத்தின் பொய்மைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிரான எனது குரல் அழகாய் இருப்பதால் பயம் கொள்கிறது!

நான் நெருப்பு தான்!
உங்கள் புனிதங்களை என் கருப்பையால் காக்கும் நெருப்பல்ல!
சோம்பேறிக் கூட்டத்தின் அதிகாரத்தை எரியூட்டிச் சாம்பலாக்கும் நெருப்பு!

எனதருமை ஆண்-மாக்களே!
என் கண்கள் அழைப்பு விடுக்கின்றனவா!
வாருங்கள் நூலகம் செல்வோம்!

எனது உதடுகள் சிவந்திருப்பது பிடித்திருக்கிறதா!
நானே சிவப்பு தான்! அதுவும் பிடிக்குமா!
எனது மார்புக் கோடுகள் எடுப்பாக உள்ளதா?
அவைதான் நீங்கள் தீட்டி வைத்துள்ள தாண்டக் கூடாத படிகளை அழிக்கும் கோடுகள்!

என் இடுப்பின் வளைவுகள்
கடவுளர்களை கட்டவிழ்க்கும்!

எனது தொப்புள் தமிழ்நாட்டில் உரம் ஊட்டப்பட்டது!
அதனுள் இனவெறியோடலையும்
பூஞ்சைகளை
எட்டி உதைக்கும் வலு கொண்டன எனது கால்கள்!

ம்ம் இடையில் உள்ள யோனி
எரிமலையே அங்கே தான் ஒளிந்திருக்கிறது!

உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள் ❤️

- கொற்றவை

written on March 8,2025
 


Dec 19, 2024

தாளங்களின் ராஜாவுக்கு இதயாஞ்சலி

 





15.12.2024 அன்று உலகம் மௌனத்தில் உறைந்தது. தாளங்களின் ராஜா உஸ்தாத் ஜாகிர் உசேனின் விரல்கள் நிரந்தரமாக ஓய்வை தழுவின. கடவுள் மறுப்பு கொண்டிருந்தாலும் இளையராஜா, உஸ்தாத் ஜாகிர் உசேன் போன்றோர் இசைக் கடவுளாக, தாள கடவுளாகவே தெரிகின்றனர். மெய் சிலிர்க்கும் இசையால் வாழ்வின் துயர்களை மறக்கச் செய்பவர்கள் அவர்கள். கடவுளின் தேவையும் அதுதானே, வலி நிவாரணி!

உலகமே கொண்டாடும் ஓர் இசை மேதை எங்களுக்களித்த இடமும், பொழிந்த அன்பும் அலாதியானது. அவரின் மறைவு உலகிற்கு பேரிழப்பு என்பதோடு தனிப்பட்ட முறையில் எங்களுக்கு துயர் மிகுந்தது.

வருணாவின் (என் மகள்) அப்பா ஓர் ஓவியர். ஓவியர்களுக்கு இந்த சமூகத்தில் எத்தகைய வாழ்வாதாரம் உள்ளது என்பதை நான் விளக்கத் தேவையில்லை. ஓவியம் வரைய வர்ணங்கள் வாங்கக் கூட வழி இல்லாத நிலையில் எண்ணற்ற ஓவியர்கள் உள்ளனர். அப்படித் தன் வாழ்வைத் தொடங்கிய ஒருவரை நான் கரம் பிடித்திருந்தேன்.

’குடும்பம்’ உருவானது. ஓவியங்களைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு கதவாக தட்டிக் கொண்டிருந்த சமயம். மழை காலத்தில் வீட்டிற்குள் வந்தழித்த ஓவியங்கள் போக மீதமிருப்பவற்றை எடுத்துக்கொண்டு நானும் அவரோடு ஓடுவேன். 18 வருடங்களுக்கு முன்னர், அப்படித்தான் ஒரு நாள் ஓடினோம். உஸ்தாத் ஜாகிர் உசேன் அவர்கள் Music Academy இல் இசை நிகழ்ச்சிக்காக வருகிறார் என்ற செய்தியை படித்த உடன், எப்படியாவது அவரைக் காண வேண்டும் என்று சென்றோம். வருணா அப்போது ‘குழந்தை’.

அவர் அரங்கத்திற்குள் செல்லும் பாதையில் மிகுந்த பதட்டத்தோடு காத்திருந்தோம். சீருந்தில் வந்திறங்கினார். கூட்டம் சூழ, எங்களை அவர் காணும் வாய்ப்பில்லை. அதையும் மீறி சத்தமாக ஒலி எழுப்பி அவரை நோக்கி ஓடினோம். ஓவியர் என்றதும் சிரித்த முகத்துடன் வாருங்கள் என்று அழைத்தார். குழந்தை முகம் மட்டுமல்ல, குழந்தை உள்ளத்துடன், ‘நல்’ ஆத்மா என்னும் பொலிவும், கனிவும் கண்களில் தெரியும் ஓர் உருவம் அல்லவா அவர். உஸ்தாத் அழைத்ததும், அவரது தாளங்கள் பின்னணியில் இசைக்கும் துள்ளலுடன் ஓடினோம். ஓவியத்தைக் கண்டு வியந்து பாராட்டினார். அவருக்கு அந்த ஓவியத்தை பரிசளித்தோம். தனது email id ஐ பகிர்ந்து “stay in touch” என்று வாஞ்சையோடு சொல்லி, இசை நிகழ்ச்சியை காண உள்ளே அழைத்தும் சென்றார்.

இப்படி தொடங்கிய எங்கள் அன்புறவு, அப்படியே தொடர்ந்தது. அவரோடு மின்னஞ்சல் மூலமாக தொடர்பில் இருந்தோம். எப்போதெல்லாம் சென்னை வருகிறாரோ தெரிவிப்பார் (அவரது மனைவி தான் அவருடைய தொடர்பாடலை கவனிப்பார்). தாஜ் ஹோட்டல், இன்னும் இதர அரங்கங்கள் என்று எங்கெல்லாம் அவர் செல்கிறாரோ அங்கெல்லாம் அவருடன் செல்லும் ‘பாக்கியம்’ எங்களுக்கு கிடைத்தது. அதிலும் எங்கள் மகள் வருணா மீது அவர் காட்டிய பாசம் ‘பொக்கிஷம்’. அவள் அந்த பிஞ்ச் விரல்களால் வரைந்த ஓவியங்களை மனதார ரசிப்பார், ஊக்குவிப்பார். அவள் வாங்கிய சர்வதேச விருதுகளைக் கண்டு மகிழ்வார். என்னிடம் அதைப் பற்றி பேசி சிரிப்பார்.

ஒருமுறை கூட அவர் முகம் சுளித்தோ, அல்லது தான் உலகம் போற்றும் இசை மேதை என்ற அகந்தையுடனோ பழகியது கிடையாது! எப்போதும் அன்பும், பணிவும் மட்டுமே கண்டுள்ளேன். அப்படி ஒரு பாந்தமும், காந்தமும் அவரிடம் உள்ளது. அவரது இசைக் கச்சேரிகளை, அவர் தன் இசை வாத்தியத்தை TUNE செய்யும் கணத்திலிருந்தே காணும் ‘அதிர்ஷ்டம்’ எங்களுக்கு கிடைத்தது. சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். சக கலைஞர்கள் அவரை போற்றுவதையும் கண்டுள்ளோம். அதற்கு காரணம் இன்னார் என்றில்லை, அனைவரிடமும் அவர் கனிவுடனே நடந்துகொள்வார். தபேலாவை இசைத்தபடி அவர் பாடுகையில், இறக்கையுடன் அந்த அரங்கில் நான் பறந்து கொண்டிருப்பேன்.

வருணாவின் அப்பா அவருக்கென ஓர் ஓவியக் கண்காட்சியை அர்பணித்தார். அனைத்தும் உஸ்தாதின் ஓவியங்கள். பெருந்தன்மையுடன் கலிஃபோர்னியாவிலிருந்து வந்து அதை திறந்து வைத்தார். ஓர் ஓரத்தில் என் மகளும் அவரை கோட்டோவியமாக வரைந்து வைத்திருந்த ஓவியங்களை விரிந்த கண்களுடன் கண்டு மகிழ்ந்து பாராட்டினார். எல்லா நேரமும் புன்னகையும், அன்பும் மட்டுமே மிளிரும் ஓர் முகத்தைக் காண்பது உண்மையில் வரமே. அவரது விசாலமான இதயத்தில் எங்களுக்கும் ஓர் இடமிருந்தது.

அந்த திருமண முறிவுக்குப் பின்னர் என் வாழ்க்கைப் பாதை மாறியது, நான் அவரோடு தொடர்பில் இருக்கவில்லை. (என் துரதிஷ்டம்).

இசை மேதை மட்டுமல்லாது, ஆகச் சிறந்த மனிதரை இந்த உலகம் இழந்திருக்கிறது. கண்ணீரால் கோர்க்கப்படும் அஞ்சலி இது.

அன்பாலும், அவரது இசையாலும் உஸ்தாத் ஜாகிர் உசேன் அவர்கள் என்றென்றும், என்றென்றும் எங்கள் இதயத்தில் வாழ்வார். அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கும், உலகெங்கிலுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

 

Aug 18, 2024

தங்கலான் திரை விமர்சனம்

 தங்கலான் தமிழ் சினிமாவின் ஜொலிக்கும் தங்கமே!

விடுதலை அரசியலை கலை நயத்துடன் படைப்பாக்கியதில் மின்னும் தங்கலான்!

தங்கலான் ஒரு திரைப்படமாக, கலையாக, கட்டிப் போடும் ஊடக அனுபவமாக சமூக பொருளாதார அரசியலாக என்று பல பரிமாணங்களில் எனைக் கவர்ந்தது.

திரைப்படம் காணும் முன் நான் விமர்சனங்களைப் படிப்பதை தவிர்ப்பேன். இருப்பினும் தங்கலான் குறித்து எதிர்மறை விமர்சனங்களையே TIMELINEஇல் அதிகம் காண முடிந்தது. இன்னும் கூடுதலாக வரலாற்று தரவுகளை முன் வைத்து நடந்த dissection பதிவுகளையும் காண முடிந்தது. படம் பார்த்து முடித்தவுடன் “படம் நல்லாதான இருக்கு, எதுக்கு வேற மாதிரி பேசிக்கிறாங்க” என்று தான் தோன்றியது.

வரலாற்றில் உழைக்கும் மக்களுக்கு* என்ன நடந்திருக்கிறது என்பதை வரலாறும் புனைவுமாக ஒரு புதிய வகை genre ஆக தனித்துவமானதொரு படைப்பு.

அடிமைப்பட்ட வரலாற்றையும், விடுதலைப் போராட்டத்தையும் சொல்லிவிட்டு, தங்கம் தேடிச் செல்லும் Expedition என்னும் சாகசப் பயணமாக முதல் பாதியிலும், வாழ்வா சாவா போராட்டமாகிப் போகும் இரண்டாம் பாதியாகவும், இறுதியில் எது விடுதலை, எது உண்மையான செல்வம், எது மகிழ்ச்சி என்று அகம்-புறம் போராட்டமாகவும் இழைக்கப்பட்டு ஒரு பேரனுபவமாக அமைகிறது தங்கலான்.

இப்படியாக உழைக்கும் கூட்டம் அடிமையாக்கப்படுவதில் இந்திய சமூகத்திற்கே உரிய சாதிய ரீதியான உழைப்புப் பிரிவினை எப்படி வலு சேர்க்கிறது என்பதை நுணுக்கமான திரைக்கதை வழி பதிவு செய்கிறார்கள். அந்த காலகட்டத்தில் இருந்த மத எதிர்ப்பு கலக சீர்திருத்த போக்குகள் குறித்த பதிவுகளும் ஈர்க்கின்றன. இதையெல்லாம் ஒன்றாகக் கோர்த்து ‘ஜனரஞ்சகமாக’ கொடுப்பதுதான் கலை என்னும் போது, பா.இரஞ்சித் தங்கலான் மூலமாக பாராட்டுக்குறிய கலைஞனாகவும் மிளிர்கிறார்.

அடிமைப்பட்டுக் கிடக்கும் கூட்டம் விடுதலைக்கான வழியை எப்படி வேண்டுமானாலும் தேடும். தங்கலான் குறிப்பிட்ட வழியில் தன் இனத்திற்கு விடுதலை வாங்கித்தர நினைக்கிறான். அதற்காக அவன் வெள்ளைக்கார துரையோடு ஒரு சாகசப் பயணம் மேற்கொள்கிறான். அந்த சாகசப் பயணத்தில் அவன் எடுத்துக்கொள்ளும் TASK என்ன? அதில் அவன் எதிர்கொள்பவை என்ன, இறுதியில் விடுதலை கிடைத்ததா? எதிலிருந்து விடுதலை தேவைப்படுகிறது அல்லது விடுதலை எப்படி சாத்தியப்படும் என்று எடுத்துரைப்பதற்கு மிகவும் கடினமானதொரு தத்துவத்தை கலவையான genreகளில் திரைப்படமாக்கி இருப்பது புதியதொரு அனுபவத்தைத் தருகிறது.

குறிப்பிட்ட சிலரிடம் செல்வம் எப்படி குவிகிறது என்பதை மார்க்சியம் ஆதி மூலதனத் திரட்டல் என்று விளக்குகிறது. அதே போல் தங்கலானிலும் மிராசுதார் வரும்போது விக்ரம் பேசும் வசனங்கள், அவர்களின் நிலங்கள் எரிக்கப்பட்டு உழைக்கும் அடிமைகளாக்கப்படுதல் போன்ற பதிவுகளின் மூலம், அந்த பாடமே படமாக்கப்பட்டதாக நான் காண்கிறேன். பா. இரஞ்சித்-தமிழ்ப் பிரபா கூட்டனி அதை அப்படித்தான் எழுதினார்களா எனக்கு தெரியாது. ஆனால் எப்படிப்பட்ட ஆண்டான் அடிமை (அபகரிப்பு) வரலாற்றை பேசினாலும், சமூக அமைப்பின் பரிணாம வளர்ச்சியை மார்க்சியம் விளக்கியுள்ளதோடு என்னால் தொடர்புபடுத்தாமல் இருக்க இயலாது. ஒருவகையில் கருத்து முதல்வாதமாக அடிமை வரலாற்றை பேசிக்கொண்டிராமல் பொருளாயத அடிப்படையில் தான் எல்லாமே நடந்தது என்று வாக்குமூலம் கொடுப்பது போன்றதொரு உணர்வு. மகிழ்ச்சி 😊

பெண் தன் ரத்தத்தைக் கொடுத்தேனும் நிலத்தைக் காக்கும் தேவதை, ஆனால் அவளை சூனியக்காரி என்று முத்திரை குத்திய வரலாறு என பல் வேறு விசயங்கள் குறியீடாக படம் நெடுக இழையோடுகிறது. வழக்கமாக கதாநாயகன் பரிசுத்தவானாக இருப்பான், ஆனால் இதில் நாயகன் தங்கத்திற்கு ஆசைப்படுகிறான், அதற்காக எந்த எல்லைக்கும் செல்கிறான். இனத்தின் விடுதலைக்காகவே என்றாலும், இறுதியில் அவன் எதற்காகப் பணிக்கப்பட்டான் எப்படி மாறிப்போனான் என்கிற தொன்மத்தின் தொடர்ச்சியான சுயம் உணர்தல் நிகழ்கிறது. பொருளாயத நிலைமைகளே மனிதர்களின் உணர்வுநிலைகளைத் தீர்மானிக்கிறது என்கிற மார்க்சிய அரிச்சுவடிக்கு இதுவும் ஒரு உதாரணம். இப்படி தங்கலானில் படமாகவும், பாடமாகவும் ரசிக்கத்தக்க அம்சங்கள் நிறையவே உள்ளன.

AVATAR - பூர்வகுடி மக்களின் நிலங்களை, வளங்களைக் கையகப்படுத்த நடக்கும் அட்டூழியங்களை (காலனியாக்கம், ஏகாதிபத்தியம்) நவீனமும் தொன்மமும் கலந்து பேசியது. சமூக அரசியல் நாடகமாக, நாட்டுப்புற கதைகளின் வழி மூதாதையர் மண் காக்க நடத்திய போராட்டங்களை மாய யதார்த்த கதையாடலாக ஒரு பரவச அனுபவத்தை, கொடுத்தது. அதே நேரம் ‘அந்நியர்கள்’ உழைக்கும் மக்கள், பூர்வகுடிகள் மேல் தொடுக்கும் போராட்டங்கள், இயற்கையோடு ஒன்றி வாழ்தலே உண்மையான மகிழ்ச்சி என்கிற பாடத்தையும் எடுத்தது. தங்கலான் எனக்கு அதற்கு நிகரானதொரு தமிழ் படைப்பாகவே தெரிகிறது.

தங்கலான் படைப்பாளிகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், உசுரையேக் கொடுத்து நடித்திருக்கும் நடிகர்களுக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும், படைப்பிற்கு உயிர்ப்பூட்டும் இசையமைத்துள்ள GV Prakash அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

#Thangalaan #ThangalaanReview 

Mar 10, 2024

கொஞ்சம் மார்க்சியத் தத்துவம் படிங்க பாஸ்

 

முத்தையா படத்தில் நடித்தால் சாதி வெறி, சாதியக் கூட்டணி!

புதிய புரட்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

படத்துல நடிச்ச அத்தனை பேரோட சாதியையும்

தோண்டி எடுத்தீங்களாப்பு!

திமிரு புடிச்ச அப்பனை எதிர்க்குற அப்பன் படம்

சாதியப் பெருமை பேசுச்சாப்பு!

சரி! முத்தையா சாதியைத் தோண்டிட்டீங்க

இதுக்கு முன்னாடி சசிக்குமார வச்சி நோண்டிட்டு இருந்தீங்க

அவரோ நந்தன்னு ஒரு படத்துல நடிக்கிறாரு

அவரு எடுத்த அசுரவதம் படம் பீடோஃபீல் பத்தினது

அதுல வசு பீடோஃபிலா நடிச்சிருந்தாரு.. அதுவும் சாதி வெறியா

இல்லை அம்பேத்கரை, அயோத்திதாசரை எல்லாம் விமர்சனம் செய்றதால

நிஜத்துலையும் அவரு அப்படின்னு சொல்லுவீங்களா?

 

விருமன் படத்துல நாயகன் கார்த்தி

அப்ப அவரும் முத்தையாவோட சாதி வெறி கூட்டணியாப்பு!

சரி அவரைக் கூட விடுங்க

மோடிஜிய போட்டு வாங்குற பிரகாஷ் ராஜ் தானப்போய் அப்பனா நடிச்சிருக்காரு

அப்ப அவரும் சாதி வெறியனாப்பு!

 

 உங்க வன்மத்துக்கு ஒரு அளவு வேணாமாப்பு

அம்பேத்கரைப் புகழ்ந்தா சாதிய தோண்ட மாட்டீங்க

விமரசனம் பண்ணா  ஆணாதிக்க சிந்தனை எப்படி வளர்க்கப்படுதுன்னு

பேசுற பதிவுல கூட வன்மத்துல வந்து  லந்து பண்ணுவீங்க!

 

 எல்லாம் போக ஒரு கூலி உழைப்பாளியா இருக்குற

ஒருத்தர்க்கு என்ன அதிகாரம் இருக்கும்

உச்சத்தில் இருக்கும் கதாநாயகனா இருக்குற

ஒருத்தருக்கு என்ன அதிகாரம் இருக்கும்

சமூகத்திற்கு தவறான கருத்தை சொல்லும் கதாப்பாத்திரங்களை,

கருத்துகளை சொல்லக் கூடாது என்று மறுக்கும் அதிகாரம்

யாருக்கு இருக்கும்னெல்லாம் ஒரு படிநிலை புரிதல் எல்லாம் வேணும்

அதுக்கு மார்க்சியம் படிச்சிருக்கோணும்

வாய் இருக்குன்னு பொலிட்டிகல் கரெக்ட்னெஸ் பேசாம

ஓரமாப் போய் மார்க்சியத்தைப் படிங்க!

 

சவீதா அம்பேத்கரின் சாதியை வைத்து அவர் தான்

அம்பேத்கரை கொன்றார் என்று பேசியவர்களுக்கும்

உங்களைப் போன்றவர்களுக்கும் ஒரு வேறுபாடுமில்ல..

அதையும் வசு ஒரு பதிவாப் போட்டாரே படிக்கலையா!

 

எல்லாத்தையும் படிச்சுப்போட்டு,

அம்பேத்கர் மீது வைத்த விம்ரசனத்துக்கு

கருத்துரீதியா அறிவார்ந்த உரையாடலை முன்வைங்க

சின்னப்புள்ளத்தனமா உருட்டாதீங்க!

 

என்னோட ப்ளாக்ல இந்த அரதப் பழசான எல்லா கேள்விகளுக்கும்

பதில் சொல்லி இருக்கேன். அதையாச்சும் தேடிப் படிங்கப்பு!


#வசுமித்ர எழுதிய புத்தகங்கள் :) panuval.com/vasumithra மொத ரெண்டு புத்தகங்கள் தான் ஒரு குரூப்போட வன்மத்துக்குக் காரணம் 😂 அவர் முகநூல் பக்கமா போனீங்கன்னா இன்னும் நிறைய இருக்கு! அங்க வசை பாடிட்டு நேர்ல தோழர் உங்களை, வசுவல்லாம் மறுக்க முடியுமான்னு வந்து பேசுனவங்கல்லாம் உண்டு


விருமன் படத்துல மோடிஜிய போட்டு வாங்குற பிரகாஷ் ராஜ் தானப்போய் அப்பனா நடிச்சிருக்காரு அப்ப அவரும் சாதி வெறியனாப்பு! விடுதலை நாயகன் சூரி நடிச்சிருக்காரு! தயாரிப்பு சூர்யா! அப்ப சூர்யாக்கும் சாதி வெறியாப்பு! உங்க வன்ம கக்கலை நிறுத்தித் தொலைங்க! பதில் சொல்லி அலுத்துப் போச்சு

 

 

Mar 8, 2024

விஜய் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்

 வணக்கம் விஜய்,

நலமா? உங்கள் அரசியல் வருகை செய்திகளையும், உங்கள் கட்சிக் கொள்கைகளையும் படித்தேன். வாழ்த்துகள்.

சமூக நீதி, சமத்துவம், கல்வி வழங்குதல், தொழிற்சங்கம் என்று இயக்கப் பணிகள் நடைபெறுவதைக் காண முடிகிறது. குறிப்பாக பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் களைவதில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள் என நம்புகிறேன். புதுச்சேரியில் சிறுமிக்கு எதிராக நடந்த கொடுமையைக் கண்டு கொந்தளித்துப் போய் இருப்பீர்கள். உங்கள் பதிவுகளைக் காண முடிகிறது!

நான் சமத்துவத்தை வலியுறுத்தியும், குறிப்பாக பெண் விடுதலை, பெண்களை ஒடுக்குவதற்குக் காரணமாக இருக்கும் ஆணாதிக்க சமூக அமைப்பு குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன். பொதுவாகவே ஆணாதிக்கம் என்கிற சொல்லைக் கண்டால் இங்கே ‘ஆண்’ என்னும் எண்ணம் (கர்வம்) கொண்ட ஆண்களால் அதை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை! ஆணாதிக்கம் என்று பேசுகையில் அது ஆண் வெறுப்போ அல்லது ஒட்டுமொத்த ஆண்களை குறை சொல்வதோ ஆகாது என்று பல நூற்றாண்டுகளாக இங்கே விளக்கிய போதும் இது குறித்த கல்வி நம் சமூகத்தில் இல்லை! மேலும் இங்கு எல்லாமே தனி மனிதர் நடத்தை சார்ந்த பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்படுவதால் சமூகமயமாக்கல் விளைவாக நமக்கு உண்டாகும் அறிவு, எண்ணம், புரிதல் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகளுக்கான ஆணி வேர் என்ன என்பது குறித்த பிரக்ஞையும் இல்லை! எனவே ஆம்பிளைங்களை ஏன் குத்தம் சொல்ற, செஞ்சவன் சைக்கோ என்கிற ரீதியில் முழுக்க முழுக்க அறியாமையில் மூழ்கிப் போய் மீசையை முறுக்கிக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

இன்றைக்கு பெண்கள் தினம். ஆர்த்தி மட்டுமின்றி தினம் தினம் எங்கள் உடல்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை, வன்முறை, நிலவும் கருத்தியல், ஆண்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் குறித்து நான் பதிவு எழுதினேன்.

அதை படித்தே ஆக வேண்டும் என்று உங்கள் ஆதரவாளர்களை நான் கையைப் பிடித்து இழுக்கவில்லை. ஆம்பிளை என்கிற சொற்களைக் கண்டதும் சிலரது ஆண்மை முறுக்கு ஏறிவிடுகிறது, மரியாதை குறைவாகப் பேசுவது, ஆபாசமாக பேசுவதுஏளனம் செய்வது என்று வந்துவிட்டார்கள்.. நான் முதலில் அதை புறம் தள்ளவே எண்ணினேன். ஆனால் தொடர்ந்து கமெண்டுகள் வரவே உள்ளே சென்று பார்த்தபோதுதான் அவர்கள் TVK ஆதரவாளர்களாக இருப்பது தெரிந்தது.

இணையத்தில் உங்கள் இயக்க ஐடியையும், உங்கள் ஐடியையும் டேக் செய்யத் தொடங்கினேன்.. இன்னும் கூடுதலாகியது. இதற்குப் பெயர் Cyber Bullying, Mob attacking. இன்றய இணையவெளியில் இது மிகவும் ஆபத்தான போக்கு, இதிலும் ஓர் ஆணாதிக்கம் நிலவுகிறது என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

சமத்துவம் என்னும் போது, பெண்களைப் போற்றுவது (அதுவும் ஆண்களின் விருப்பத்திற்கு உட்பட்டு பெண்மை வளையத்திற்குள் இருக்கும் பெண்களைப் போற்றும் நிலையே) தேவை இல்லை நண்பா, இங்கு தேவைப்படுவது மரியாதை,யும், சமத்துவமும், சுதந்திரமும்.  பெண்கள் நிலை என்ன, அவர்கள் ஏன் ஒடுக்கப்படுவதாக ”பெண்ணியவாதிகள்” எழுதுகிறார்கள், ஆணாதிக்கம் என்றால் என்ன, அதை எப்படி மாற்றுவது என்றெல்லாம் படிப்பது அதற்கு முன் நிபந்தனை. நான் படித்ததால் எழுதுகிறேன். பெண்களுக்காக மட்டுமில்லை நண்பா, கடுமையாக உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் பொருளாதார அடிமைகளாக மாறிப் போன ஆண்களுக்காகவும் சேர்த்தே இயங்குகிறேன்.

என் பதிவுகளைப் படித்தால் தெரியும்.

உங்கள் அரசியல் பிரச்சாரத்திலும், அமைப்பு ஒழுங்கு விதிகளிலும் உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் பெண்களிடம் எப்படிப் பேசலாம், பேசக் கூடாது என்றும், இணைய வம்பிழுத்தலில் யாரோடும் ஈடுபடக் கூடாது என்றும், சமூக மாற்றத்திற்கான பணியை மட்டும் மேற்கொள்ளதே கடமை என்றும் எடுத்துரைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பாதிக்கப்பட்ட பெண்ணாக, சமூகத்தில் எழுத்தின் மூலம் மாற்றத்தை எழுத விளைபவளாக, உங்களோடு லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்த தோழி என்கிற உரிமையிலும் இந்த கடிதத்தை எழுதுகிறேன்!

நன்றி

அன்புடன்

கொற்றவை

பி.கு: இதை விளம்பரம் என்று மலினப்படுத்தவும் ஒரு கூட்டம் உள்ளது! ஆம் விளம்பரம் தேடுகிறேன் நண்பா! பெண் நிலை மேம்பாட்டிற்கான தேவை குறித்தும், பெண்களுக்கெதிரான சகலவிதமான வன்முறையை ஒழிப்பது குறித்தும் விளம்பரம் தேடுகிறேன்.

 அதேபோல் உங்களை மட்டும் குறிப்பிட்டு டேக் செய்யவில்லை. நீங்கள் அரசியல் களத்திற்கு வந்துவிட்டீர்கள், ஓர் அமைப்பாக உங்கள் ஆதரவாளர்கள் சிலர் இப்படி செய்வதால் முறையிடுகிறேன். எந்த அமைப்பாக இருந்தாலும் அவர்களை டேக் செய்து முறையிடுவேன்.