Sep 25, 2013

பச்சைக் கண் பூதம்

இப்போதிருக்கும் ‘சில’ ‘புரட்சிகர’ அமைப்புகள் மற்றும் கட்சிகளை ‘Green-Eyed Monster’ எனும் ஒரு கொடிய பூதம் பிடித்தாட்டுகிறது. தம்முடைய இருப்பு பற்றிய கேள்வி எழும்போது, இந்த பூதம் மற்றவருடைய அடையாளத்தை ‘அறுவடை’ செய்யக் கிளம்புகின்றது. அடையாள அரசியல் எதிர்ப்பு என்கிற பெயரில் இவ்வமைப்புகள் கையெடுக்கும் அவதூறு அரசியலின் பின்னணியில் செயல்படுவது இவர்கள் அமைப்புபற்றிய ஒரு நம்பிக்கையின்மையே. இதுவும் ஒருவகையில் அடையாளப் பிரச்சனையே. இதனோடு பிறர் நலன் கண்டு பொறாமை எனும் பிரச்சனையும் கைகோர்த்துக் கொள்கிறது. அதாவது மற்றவரால் தமது இருப்பு காலியாகிவிடுமோ என்ற அச்சத்தின் விளைவாக தம் அமைப்புக்கு மட்டுமே ஒரு தனிச்சிறப்புடைய விசுவாசத்தைக் கோரும் ஒரு அற்பவாத எண்ணத்தோடு அடுத்தவரின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபடத் தொடங்குகின்றனர் – இதுபோன்ற Green-Eyed Monster களிடம் நாம் எச்சரிக்கையோடிருப்போம்….அதேவேளை இவர்களுக்கு நாம் நமது பரிதாபத்தையும் உரித்தாக்குவோம்…..

அடையாள அரசியலை வெறுக்கும் ’சில’ ’புரட்சிகர’ அமைப்புகள், (தனிநபர்கள்) அதேவேளை சொந்த ஆர்வத்தின் பேரில் மார்க்சியத்தைக் கற்று சமூக மாற்றத்திற்கு தன்னால் இயன்ற பங்களிப்பு செய்ய நினைக்கும் தனிநபரின் அடையாளத்தை தம் அமைப்பின் பிரபல்யத்திற்காக அறுவடை செய்ய தன்முனைப்போடு செயல்படுகிறது. அதுமுடியாத போது (அதாவது அவர்களை வென்றெடுக்க முடியாதபோது) அவர்கள் மீதான வன்மத்தை வளர்த்துக் கொண்டு தம்முன் இருக்கும் செயலூக்கமான பணிகளைக் கூட மறந்து அவதூறு அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கிறது. இந்த அவதூறு அரசியல் அவர்களுக்கு தற்காலிக மகிழ்வையும், பெறுமையையும் தரலாம்….ஆனால் தோழர்களே அவர்கள் அம்பலப்பட்டுப்போகும் காலத்தில், அதுவரை அவர்கள் அமைப்பு ஆற்றிய பணியும்கூட தன் மதிப்பை இழந்து போகும்…. இந்தப் போக்கின் விளைவாக அடிப்படையில் வீணாவது அவ்வமைப்புகளில் உள்ள அடிமட்டத் தொண்டர்களின் கடும் உழைப்பும், பொதுமக்கள் மத்தியில் மார்க்சியத்தின் மீதான நம்பிக்கை இழப்பும் என்பதே நமது கவலையாக இருக்கிறது.


இறுதியாக தோழர்களே,

ஒரு புரட்சிகர அமைப்பு தன்னுடைய விரைப்புவாத போக்கின் மூலம், ஒருவேளை பிரபலமாகலாம், ‘வீரத்தின்’ அடையாளச் சின்னமாகலாம், கவர்ச்சிகரமான சொற்கள் சிலவற்றை உருவேற்றலாம், தன்னைச் சுற்றி கண்மூடித்தனமான ஆதரவு தரும் சில அடிமைகளைப் பெறலாம், ஆனால் தம்முடைய சுருக்கவாத அனுகுமுறையால் ஒருபோதும் அது புரட்சியின் தீர்மானகரமான சக்தியான மக்களிடம் சென்றடையாது. மேலும் பலவித அவசியமற்ற கவனச்சிதறல்கள் காரணமாக இவ்வமைப்புகள் பொதுவுடைமை சமுதாயத்தையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் நிறுவுவதற்கான வேலை திட்டத்தில் ஈடுபடுவதற்குப் பதில், மெல்ல மெல்ல மையப் பிரச்சனையிலிருந்து விலகிச் சென்று, தம் அராஜகவாத போக்கினால் நாளைடைவில் அவ்வமைப்பு ஒரு பாசிச அமைப்பாக மாறும் ஆபத்தும் இருக்கிறது.

- அவர்களின் ஆதாரமற்ற அவதூறுகளை நீக்குவதன் மூலமும், அவர்களின் அவதூறுகளுக்கு மௌனம் காப்பதன் மூலமும் நம்மால் செய்ய முடிவதெல்லாம் மானுட விடுதலைக்கும், சமத்துவ உறவுகளை நிலைநாட்டுவதற்கும் விஞ்ஞான பூர்வ வழிமுறைகளை படைத்தருளியிருக்கிற ஒரு சித்தாந்தத்திற்கு ”மேலும் அவமானத்தை தேடித் தராமல் இருப்பதே” - நன்றி, கொற்றவை.



Sep 16, 2013

காதல், திருமணம், பெண்ணுரிமை



தமிழ் சமூகத்தின் வரலாற்று பெருமை இந்த உலகறிந்ததே. குறிப்பாக தமிழ் இலக்கியங்கள் வழி நாம் தமிழ் சமூகத்தை அனுகும்பொழுது, வீரமும் காதலும் அதன் நாடித்துடிப்பாக இருந்துள்ளது என்பதை எவரும் ஒப்புக்கொள்வர். வீரமும் காதலும் தமிழ் சமூகம் மட்டுமல்லாது உலகெங்குமுள்ள அனைத்து சமூகங்களிலும் ஒரு வாழ்வுமுறையாகவே இருந்திருக்கிறது.

வீரம் என்று ஒன்றும் கூட மனிதப் பேராசைகளின் விளைவாக தங்களுக்குத் தாங்களே வகுத்துக்கொண்ட ஒன்றாக இருக்கையில் காதல் மட்டுமே இயல்பூக்கம் சார்ந்ததாக இருக்கிறது. உயிரை வேட்டையாடுதலை மனிதச் சமூகம் வீரம் என்று பறை சாற்றுகிறது. உணவுக்காக வேட்டையாடும் விலங்குகள் கூட தன் உணவுத் தேவைக்கு வேட்டையாடிவிட்டு ஓய்ந்துவிடுகிறது , ஆனால் மனிதச் சமூகமோ எல்லை விஸ்தரிப்புகளையும், ஆக்கிரமிப்புகளையும், யுத்தங்களையும், போர்களையும் வீரம் என்று கொண்டாடி மகிழ்கிறது. வீரம் குறித்த கட்டுடைப்புகளை வேறொரு சமயத்தில் பார்ப்போம்.

மனிதச் சமூகம் விருத்தியடைய ஆன், பெண் என்ற எதிரிடைகள் அவசியமாகின்றனர். எதிர்பாலினச் சேர்ப்பு என்பது இயற்கையின் விதி. குறிப்பிட்ட காலத்திற்குப் பின் ஆன் பெண் சேர்ப்பு விசயத்தில் மனிதனானவன் பல்வேறு விதிகளைப் புகுத்தினான். அவ்விதிகளுக்கான வரலாற்று காரணிகளை ஆய்ந்து பார்ப்போமானால் அங்கு பொருளாதாரம் என்பது முக்கியப் பங்கு வகிப்பதை நாம் காண முடிகிறது. திருமணம் என்று மட்டுமல்லாது சமூக அமைப்பில் நிலவும் அனைத்து விதிகளிலும் பொருளாதாரக் காரணிகள் மற்றும் அதன் உள்ளார்ந்த வடிவமான உழைப்புப் பிரிவினை என்பது வகிக்கும் பங்கை எவரும் மறுத்துவிட முடியாது. ஒவ்வொரு சமூகத்திலும் உழைப்புப் பிரிவினையானது ஒவ்வொரு வடிவமெடுத்துள்ளது, இந்திய சமூகத்தில் அது சாதிய வடிவமெடுத்துள்ளது என்பதை பல்வேறு அறிஞர்கள் ஆய்ந்து விளக்கியுள்ளனர். பின்வரும் காலங்களில் சாதியமைப்பு கெட்டித் தட்டிப்போய் இணை சேர்ப்பு விசயங்களில் அது பிரதான பங்கு வகிக்கத் தொடங்கியது.

பெரும்பாலும், சாதியடுக்கில் கீழ் நிலையில் உள்ளோர் பொருளாதார ரீதியிலும் கீழ்நிலையில் இருக்கின்றனர் என்பதை நாம் கண்டு வந்திருக்கிறோம். அரிதாக, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சில குடும்பங்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்திருக்கின்றனர். அப்பொழுதும் கூட சாதிய அடுக்கில் மேல் உள்ள சாதியினர், கீழ் சாதியினரை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். ஆனால் இந்த எதிர்ப்பு மனோபாவத்தின் பின்னால் இருக்கும் காரணத்தை ஆய்வு செய்வோமானால், கீழ்வரும்  காரணங்களை நாம் அவதானிக்கலாம்:

1.  பொருளாதாரப் படிநிலை, சாதிப் படிநிலை இவற்றில் ஏதேனும் ஒரு தரப்பு கீழ் நிலையில் இருப்பது.

2.  இரு தரப்பினரும் சமமான பொருளாதார படிநிலையில் இருந்து, ஆண் தாழ்த்தப்பட்ட சாதியினராய் இருப்பது.

3.  இரு தரப்பினரும் சமமானப் படிநிலையில் இருந்தாலும், பெண் என்பவள் காதல்வயப்படுவது குடும்ப கௌரவத்திற்குக் கேடானது.

மேற்சொன்ன காரணங்களில் அடிப்படையாகத் தொக்கிக் கொண்டிருப்பது பொருளாதாரம், சாதி மற்றும் ஆணாதிக்கம். ஆனால் இந்த மூன்று காரணங்களும் தனித்தனியானவையோ அல்லது இவற்றில் ஒன்று மட்டுமே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ கருதுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகக்கூடும். ஒரு சமூகத்தின் கட்டமைப்பை நாம் பொருளாதார தளத்திலிருந்தே, அதாவது பொருள் உற்பத்தி முறையில் எவ்வகையான உறவுகள் நிலவுகிறது, அவ்வுறவுகள் என்ன வகையான விதிகளின் கீழ் செயல்படுகிறது என்பதைக் கணக்கில் கொண்டு நாம் புரிந்து கொள்ள வேண்டும். சமூக இயங்குமுறையில் அவ்விதிகளில், அல்லது வடிவங்களில் ஏதேனும் ஒன்று மற்றொன்றை விட ஆதிக்கம் செலுத்துவதாக மாறி இதுவே இந்த சமூகத்தின் இயல்பு, பண்பாடு, கட்டமைப்பு என்று மக்கள் மனதில் பதிந்து விடும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய சமூக விதிகளுக்கு இதுதான் ஒற்றைக் காரணம் என்று நாம் துல்லியமாகச் சொல்லிவிட முடியாது என்றாலும், நடைமுறை அமைப்பில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள், அதில் வெளிப்படும் பிரதான வேறுபாடு, அதனோடு உலகெங்கிலும் உள்ள ஏற்றத் தாழ்வுகளில் வெளிப்படும் பிரதான வேறுபாடு, சமூக உறவு முறைகள் இவற்றை நாம் கணக்கில் கொண்டு காண்போமானால் அங்கு பொருளாதாரம் பிரதான பங்கு வகிப்பதையும், அதன் உள்ளார்ந்த ஏற்றத் தாழ்வு வடிவமான எஜமானர்-அடிமை உறவு முறையை (முதலாளி-தொழிலாளி, ஆண்-பெண்) நாம் காணலாம். இந்த உறவுகளில் பொருளாதார பலம் கொண்டோர் எஜமானராக இருப்பது நிதர்சனம். பெண்ணடிமைத்தனம் என்பது இயல்பிலேயே இருந்தது என்று சொல்வது எத்தனை அபத்தமோ, அதேபோல் சாதியமைப்பும் இந்த மண்ணில் இயல்பிலேயே இருந்தது என்று சொல்வது அபத்தம். இரண்டிற்கும் வரலாற்று காரணிகள் உண்டு, நாளடைவில் அந்தக் காரணிகள் இயல்பானது, இறைவன் விதித்தது, முன் ஜென்ம வினையின் விளைவு என்று ஏற்றுக்கொள்ளும் நிலை உருவானது.

இனம், மதம், மொழி, அந்தஸ்து, சாதி, நிறம், தோற்றம் ஆகியவை ஒரு படிநிலை வடிவத்தை எடுத்துள்ள அமைப்பில் காதல் என்று வரும்பொழுது இவையெல்லாம் தீர்மானிக்கும் சக்திகளாகின்றன.  இவையெல்லாம் பொருளாதாரம் எனும் பந்திற்குள் சுருங்குவதையும், அந்தக் குறிப்பிட்ட பொருளாதார அமைப்பு கண்டெடுத்த ஒரு சமூக அமைப்பு ஆண் தலைமையிலான ஒரு குடும்ப அமைப்பை உருவாக்கியதையும், அந்தச் சமூக அமைப்பில், குடும்ப அமைப்பில் ஆண் அல்லது ஆணின் நலன்களை உள்ளடக்கிய மதிப்பீடுகள் தீர்மானிக்கும் சக்தியானதையும் நாம் ஆணாதிக்கம் என்று குறிப்பிடுகிறோம். இந்த ஆணாதிக்க மதிப்பீடுகள் ஆண் பெண் இருவரின் மூளைகளையும் சலவை செய்துள்ளது, அதிலும் குறிப்பாக பெண்களின் மனதை, ஏனென்றால் ஆண், குடும்பம், சமூகம் இவற்றை ‘ஒழுக்கத்துடன்’ காப்பது பெண்ணின் கடமை என்று வகுக்கப்பட்டுள்ளது. அதற்கு பெண்ணும் தானறியாமல் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டாள்.

இந்தப் பின்னணிகளிலிருந்தே காதல் விவகாரங்களில் தந்தைமார்கள் காதலை எதிர்ப்பதையும், தாய்மார்கள் தம் பெண்களை ‘சம்ஹாரம்’ செய்யும் நாயகிகளாக மாறுவதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் சில காதல் விவகாரங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திவ்யா இளவரசன் மற்றும் தாமினி சந்த்ரு இவர்களின் காதல் உறவுகள் நமக்கு பல்வேறு கோர முகங்களை அடையாளம் காட்டியுள்ளது. திவ்யா இளவரசன் விசயத்தில் சாதிதான் பிரச்சனை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் தாமினி சந்த்ரு விசயத்தில், எது பிரச்சனை என்பதை விளங்கிக் கொள்வதற்குள் பல குழப்பங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.

திவ்யா இளவரசன் விசயத்தில் மட்டுமல்லாது கன்னகி முருகேசன், கோகிலா கார்த்திகேயன், இன்னும் பல காதல் ஜோடிகளில் சம்பந்தப்பட்ட ஆண் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவனாக இருக்கிறான். அவர்களில் ஒன்று அந்த ஆண் அல்லது பெண் அல்லது இருவரும் கொல்லப்படுகின்றனர். சில தருணங்களில் அம்மரணம் தற்கொலை என்றும் சொல்லப்படுகிறது. எதுவாகினும் இவற்றை நாம் கௌரவக் கொலை, சமூகப் படுகொலை என்றே கூற முடியும். இதுபோன்ற கௌரவக் கொலைகள் இந்தியா முழுமையிலும் நடைபெறுகிறது. கௌரவக் கொலைகளுக்கென தனிச்சட்டம் கொண்டுவரும் எண்ணம் மத்திய அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

சாதி மறுப்பு காதலில் ஈடுபட்ட ஜோடிகளில் பெரும்பாலும் சம்பந்தப்பட பெண்களே அதிக கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். பெண் வீட்டார் அதைப் பெறும் கௌரவப் பிரச்சனையாகக் எடுத்துக் கொண்டு பெண்ணை வீட்டுக் காவல் வைப்பதும், அவளது கல்வியை பாதியில் நிறுத்துவதும், அவசர அவசரமாக தம் அந்தஸ்திற்கு ஏற்ற வேறொரு ஆணிற்கு திருமணம் பேசுவதையும் செய்கின்றனர். தன் காதலில் மற்றும் தன் உரிமையை அடைவதில்  உறுதியோடு இருக்கும் பெண்கள் அந்தக் கொடுமைகளைத் துணிந்து எதிர்க்கையில் அப்பெண்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனர் அல்லது விசம் கொடுத்துக் கொல்லப்படுகின்றனர். கோகிலா கார்த்திகேயன் விசயத்தில், கோகிலா பறையர் சமூகப் பெண், கார்த்திகேயன் அருந்ததியர் சமூகத்தவர். அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரின் உதவியோடு இவர்களது காதலை ஏற்றுக்கொள்வது போல் நாடகமாடி, கோகிலாவை அடித்துக் கொன்றிருக்கின்றனர் என்பதே எமது உண்மை அறியும் குழுவினரின் அவதானிப்பாக உள்ளது. இந்த சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்யும் வகையில் அவளது உடலை பிரதேப்பரிசோதனைக்கும் கொடுக்க மறுத்து அந்த சமூகத்தவர் உடனடியாக பெட்ரோல் ஊற்றி எரித்தும் விட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவி ஒருவரை அவருடைய தந்தை பல்கலைக்கழக வளாகத்திலேயே கத்தியால் குத்திய செய்தியும் இங்கு நினைவுகூரத்தக்கது.

அதேபோல் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கலியூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது திருச்செல்வி, தலித் சமூகத்தைச் சார்ந்த டேனியல் ராஜ் என்ற இளைஞரை காதலித்தார். இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருப்பூரில் ஒரு தொழிற் சாலையில் வேலை செய்தனர். ஆதிக்கசாதியைச் சார்ந்த பெண்ணின் தாய் மற்றும் அவரது மாமியார், திருமணத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறி நாடகமாடியதை நம்பி, அம்மை நோயுடன் பெண் வீடு திரும்பியபோது, தாயும், மாமியாரும் பூச்சி மருந்தை பெண்ணின் வாயில் திணித்து, குடிக்குமாறு கட்டாயப்படுத்தினர். அந்தப் பெண் மறுக்கவே, கையையும் காலையும் பிடித்துக் கொண்டு, பூச்சி மருந்தை வாயில் ஊற்றி, பிறகு கழுத்தை நெறித்து கொலை செய்து வீட்டுக்குள்ளே புதைத்து விட்டனர். ‘எவிடென்ஸ்’’ உண்மை அறியும் குழு தந்த புகாரின் அடிப்படையில், காவல்துறை விசாரணை நடத்தி கொலை தான் என்று உறுதி செய்து, வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளது.

தற்போது தாமினி சந்துரு காதல் விவகாரத்தில் சாதியா, பொருளாதாரமா, குணநலனா எது பிரச்சனை என்பது தெளிவாகத் தெரியாவிட்டாலும். மறைமுகமாக அங்கு பொருளாதாரம் மற்றும் சாதி ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. சேரன் தரப்பு சந்துருவின் குணநலனையும், அவரது குடும்பத்தார், குறிப்பாக அவரது சகோதரியின் தனிப்பட்ட வாழ்வு பற்றிய செய்திகளை வெளியிட்டு இக்காரணங்களாலேயே தாங்கள் இக்காதலை மறுப்பதாகவும் கூறுகின்றனர்.

பெண்ணை உடைமையாகக் கருதும் ஒரு ஆணாதிக்க மனோபாவத்தை எஜமானர்-அடிமை உறவுமுறையை அடித்தளமாகக் கொண்ட சமூக அமைப்பு விதித்திருக்கிறது. பொதுவாக எஜமானர் ‘நிலையில்’ இருக்கும் நபர்கள் அதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இன்னும் கூடுதலாக இந்த அதிகாரப் படிநிலையை வைத்து பிழைப்பு நடத்த நினைக்கும் அரசியல் கட்சிகள் (சாதிக் கட்சிகள்) தற்போது இந்த காதல் எதிர்ப்பை (சாதி எதிர்ப்பை) ஓர் அரசியல் போராட்ட உத்தியாகக் கையில் எடுத்திருக்கிறது.

சட்டம் ஒரு பெண்ணிற்கு (மனிதருக்கு) அளித்திருக்கும் அடிப்படை உரிமையை இவர்கள் கிஞ்சித்தும் மதிப்பதில்லை. சொல்லப்போனால், வெளிப்படையாகவே வெட்டுவோம், குத்துவோம் என்று அச்சுறுத்தலும் விடுகின்றனர். 18 வயதை அடைந்த எந்தவொரு பெண்ணும் தனக்கான துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. அதில் குணநலன், அந்தஸ்து இவற்றின் அடிப்படையில் விலக்குகள் ஏதும் அளிக்கப்படவில்லை.   

இது இவ்வாறு இருக்க, வழக்கமாக காதலுக்கு எதிர்ப்பாக இருக்கும் மதிப்பீடுகளல்லாமல் தாமினி சந்த்ரு விசயத்தில் ‘அப்பா’, ‘பொறுப்பு’, ‘பாசம்’, ’குண நலன்’ ஆகிய உணர்வுபூர்வமான விசயங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதனால் சில முற்போக்காளர்கள் மத்தியிலும் சில தயங்கங்கள் எழுந்துள்ளன. ‘மகளின் வாழ்க்கை நலனை கணக்கில் கொள்ளும் உரிமை தந்தைக்கு இல்லையா?’ என்பன போன்ற உருக்கமான கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.

பெண் உரிமை எதிர் மணமகன் குணநலன் விவகாரம் என்பதால் இதை சற்று விரிவாகப்  பேச வேண்டியுள்ளது. திருமண வயதை எட்டிய நபர் தனக்கு விருப்பமான நபரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை சட்டம் வழங்குகிறது. Conduct Certificate பெற்றுவிட்டுத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றோ, இன்ன இன்ன குணநலன்கள் ‘கெட்டவை’ என்றோ சட்டம் வகுக்கவில்லை. குடி, புகைப் பழக்கம் இவற்றை கெட்ட பழக்கம் என்று சொல்வோர் அதை விற்பனை செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தை என்னவென்று சொல்வர்? அரசே மதுபானக் கடைகளை நடத்துகிறது! 

அடுத்ததாக சம்பந்தப்பட்ட ஆணின் - பெண் தொடர்பு. பல காதல் புரிந்தவர், ஏமாற்றியவர், பெண் பித்தர் என்று சொல்லப்படும் விசயங்களில் அது உண்மையாக இருப்பின், அந்த ஆணை ஏற்பதும், மறுப்பதும் சம்பந்தப்பட்ட பெண்ணின் முடிவு. அவளுக்கு மட்டுமே தனது கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறது. எப்படிப்பட்ட ‘கேடு கெட்டவனையும்’ திருத்தும் வல்லமை ‘ஒரு பெண்ணின் காதலுக்கு உண்டு’ என்று சொல்லும் திரைப்படங்களை எடுப்போர் அவற்றை நடைமுறையில் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்?

கதாநாயகனாக நடிக்கும் ஆண் (சமூகத்தின் பார்வையில் கெட்டவர் என்று சொல்லப்படுகிற பழக்கங்களை உடையவர்) புகைப்பிடித்தாலும், கஞ்சா இழுத்தாலும், மதுப் பழக்கம் உள்ளவராய் இருந்தாலும், மது அருந்திய பின் வல்லாங்கு செய்பவராய் இருந்தாலும், ரவுடியாய் இருந்தாலும், ஜாலியாக பல பெண்களோடு குத்தாட்டம் போடுபவராய் இருந்தாலும், ஏழையாய் இருந்தாலும், தாத்தா வயதுடையவராய் இருந்தாலும், அவரை காதலிப்பதே உண்மையான காதல் என்றும், அதுவே தூய்மையான காதல் என்றும், ‘பொறுக்கிகளை, ஏழைகளை, ரவுடிகளை’ மறுத்தலிக்கும் பெண் திமிர் பிடித்தவள், பணப் பித்து பிடித்தவள், கேடு கெட்டவள், இத்யாதி, இத்யாதி என்று சொல்லும் இயக்குனர்கள் தங்கள் குடும்பப் பெண்கள் ‘அத்தகைய’ ஆண்களை காதலிப்பதை எதிர்ப்பது ஏன்?

சேரனோடு கட்டப்பஞ்சாயத்து செய்யும் இயக்குனர்கள் கூட்டத்தினர் ‘படைத்தருளிய’ கதாநாயகர்களுக்கு எந்தக் ‘கெட்டப் பழக்கமும்’ இருக்கவில்லையா? அவர்களின் திரைப்படங்களில் கதாநாயகன் வேண்டாம் வேண்டாம் என்று ஒதுங்கிச் சென்றாலும், கதாநாயகிகள் வலிய வந்து இந்த ‘பொறுக்கிகளை’க் காதல் செய்வார்களே! ஏன் இந்த அய்யாமார்களின் செயல்பாடுகளில் இத்தனை முரண்?

ஒரு பேச்சிற்காக இந்தக் கேள்வியைக் கேட்போம்: சேரன் மீது ஒரு வன்புணர்வு வழக்கு பதியப்பட்டுள்ளது. அதனால் அவரது மனைவி அவரை விட்டு நீங்கிச் சென்று விட்டாரா? இல்லையே! அப்படியென்றால் அப்பெண்ணின் தந்தையாருக்கு தன் பெண்ணின் ‘வாழ்க்கை’ மீது அக்கறை இல்லையா? தன் கணவர் எப்படிப்பட்டவராய் இருந்தாலும் பரவாயில்லை என்று வாழ்வும் உரிமை சேரனின் மனைவிக்கு இருக்கும்பொழுது தாமினிக்கு அது இல்லையா? ஒருவேளை தாமினிக்கு திருமணம் நடந்த பின்னர் சந்த்ரு திடீரென்று ‘பாதை மாறி’ இப்படிச் சென்றிருந்தால் சேரனின் மனைவி போல் தாமினியும் பொறுத்துக் கொண்டு வாழ சேரன் மற்றும் அவரது நட்பு வட்டம் உடன்படுமா?  இதுவரை திருமணம் செய்து வந்திருக்கிற திரைத்துறையினர் அனைவரும் ‘ஒழுக்கமானவர்களே’ என்று அவர்களைத் திருமணம் செய்து கொண்ட பெண்கள் எங்கேனும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனரா? அவர்கள் பற்றி எத்தனை ‘கிசு கிசுக்கள்’ வந்தாலும், எதன் அடிப்படையில் அவர்களைப் பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர்?  அல்லது திருமணத்திற்குப் பின் எத்தனை செய்திகள் வெளிவந்தாலும், எதன் காரணமாக அப்பெண்கள் சேர்ந்து வாழ்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.

இந்த வழக்கில் கூடுதலாக சந்த்ருவின் அக்காள் கவுரி பற்றி, அவர் தாய் பற்றியெல்லாம் வெளிவந்துள்ள செய்திகளில், அவர்கள் ‘துணை நடிகர்கள், நடனக்காரி, நடனக்குடும்பம்’ அதனால் அவர்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக இருக்கலாம் என்று பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனும் வகையிலான தொணியும், கவுரியின் விவாகரத்து, மதமாற்றம், சொத்தில் பங்கு கேட்டது என்ற வகையிலான செய்திகளும் வெளிவந்துள்ளன. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆண் பெண் உறவில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அந்த உறவின் ஏற்பாடுகள் என்னவென்பது தெரியும், அதைத் தீர்மானிப்பது அவர்கள் உரிமை. சேர்ந்து வாழ்ந்து பின் விவாகரத்துப் பெறும் போது சொத்தில் பங்கு கேட்கும் உரிமையை சட்டம்தானே வழங்குகிறது. அவர் எத்தனை முறை திருமணம் செய்திருக்கிறார், எத்தனை முறை விவாகரத்து செய்திருக்கிறார் என்பதை சட்டம் கேட்பதில்லை.

மேலும், தாமினிக்கு சந்த்ரு பற்றியும், அவர் குடும்பத்தாரின் பின்னணி பற்றியும் ஏதும் தெரியாதா? அப்படித் தெரிந்திருந்தும் அவர் ஏன் தந்தைக்கு எதிராக புகார் அளித்திருக்கிறார். பெண்ணுக்கு மனநலன் சரியில்லை என்கிறது சேரன் தரப்பு, தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கியதாக சொல்கிறார் தாமினி. எத்தனை முரண்பாடுகள். இந்த வழக்கைப் பொறுத்தவரை தாமினி மட்டுமே தனது வாழ்க்கையை முடிவு செய்யும் உரிமை கொண்டவர். ஒருவேளை அவர் எவரின் மிரட்டலுக்கோ (இரு தரப்பில் எவராய் இருந்தாலும்) பயந்து செய்வதறியாது தத்தளிக்கிறார் என்றால், அதிலிருந்து விடுபட சட்டபூர்வமாக நிறைய வழிகள் உள்ளது என்பதை அவர் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. தனது வழக்குறைஞரின் உதவியோடோ அல்லது தாமாகவோ அவர் தனது பிரச்சனைகளை நிச்சயம் நீதிபதியிடம் விளக்க முடியும். இத்தனை ஊடகங்கள் அவரைச் சுற்றி இருக்கையில் அவர் அதுபற்றி பேசாமல் இருக்க வேண்டிய அவசியம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அதையெல்லாம் தாண்டி பலர் சொல்வது போல் சந்த்ரு ஏதோ பதிவு செய்துவைத்து மிரட்டுகிறார், அதனால் தாமினி பயப்படுகிறார் என்றாலும், அதையும் அவரே பகிரங்கமாகப் பேசுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் உள்ளன. தாமினி என்ன செய்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். (இந்தக் கட்டுரை வெளிவருவதற்குள் வழக்கு முடிந்து, தாமினி தன் தந்தையாருடன் சென்றுவிட்டார்!!!)

இறுதியாக,

1.  தமிழ் பற்று, தமிழ் தேசியம், காதல், சமூகப் பற்று, மாற்று சினிமா என்று அறைகூவல் விடும் திரைத்துறையினரின் உண்மை முகம் வேறாக இருக்கிறது. குறிப்பாக காதலுக்கு இலக்கணம் வகுத்து, ‘கேடு கெட்டவனாய் இருந்தாலும்’ அவனை காதலித்தே ஆகவேண்டும் என்று பெண்ணுக்கு கட்டளை இடும் இயக்குனர்கள் தம் நிஜ வாழ்வில் அதை கைகழுவி விடுகின்றனர். திரைத்துறை வாய்ப்பிற்காக அதுபோன்ற இயக்குனர்களின் ஆணாதிக்க மனோபாவங்களையும், இரட்டை முகங்களையும் கண்டும் காணாமல் இருப்பதோடு, இவர்களைப் போல் மனிதருண்டா, படைப்பாளி உண்டா என்று இலவச விளம்பரம் செய்கின்றனர் ’சில’ ’படைப்பாளிகள்’ . இனியாவது இந்தச் சமூகம் இதுபோன்ற இயக்குனர்களையும், படைப்பாளிகளையும் எச்சரிக்கையுடன் அனுக வேண்டும். ‘போராளி’ பட்டங்களையும், ‘வீர வணக்கங்களையும்’ வழங்கும் முன்னர் அவர்களின் படைப்பு, செயல்பாடு இவற்றில் உள்ள முரண்களை குறைந்தபட்ச நேர்மையோடு விமர்சிக்க வேண்டும் என்பதே முதல் பாடமாக இருக்கிறது.

2.  ஒரு நபர் (ஆணோ / பெண்ணோ) நல்லவரோ, கெட்டவரோ அவருடன் வாழும் அல்லது விலகும் முடிவை சம்பந்தப்பட்ட நபரே எடுக்க வேண்டும். பிடித்த ஒருவரை மறுக்கும் உரிமையும், பிடிக்காத ஒருவரை திணிக்கும் உரிமையும் எவருக்கும் கிடையாது. காதலை ஏற்க மறுத்தால் அதை திணிப்பதும், மிரட்டுவதும், ஆசிட் ஊற்றுவதும் எவ்வளவு தவறோ, அதேபோல் விரும்பும் நபர்களை பிரிக்க முயல்வதும் தவறு. உறவுகள், நண்பர்கள் அறிவுறை கூறலாம், ஆனால் முடிவை சம்பந்தப்பட்ட நபரே எடுக்க வேண்டும். அதைவிடுத்து மிரட்டல் விடுவது, கட்டப் பஞ்சாயத்து செய்வது முற்றிலும் குற்றமே.

3. திருமணத்திற்குப் பின் ஒரு ஆணோ பெண்ணோ திசை மாறிப் போவதை எப்படி ஒருவர் கணிக்க முடியாதோ, அதேபோல் ஒரு ‘பொறுக்கி’ திருமணத்திற்குப் பின் திருந்தமாட்டார் என்பதையும் எவரும் கணிக்க முடியாது.  குணநலன், பெற்றோரின் அக்கறை, கடமை ஆகியவற்றைக்  காரணம் காட்டி சேரன் தரப்பிற்கு நாம் ஆதரவு தருவோமெனில், ஆசிட் ஊற்றுபவன், கள்ளக் காதல் என்று சொல்லி கொலை செய்பவன், கலாச்சாரக் காவல் செய்யும் அடிப்படைவாத அமைப்புகள், தம் சாதிப் பெண்களின் நலன் கருதி என்று சொல்லி அழித்தொழிப்பு செய்யும் சாதி-அரசியல் கட்சிகள் இவர்கள் எல்லோருக்கும் நாம் ஆதரவு தெரிவிக்கும் நிலை ஏற்படும்.

இதுதான் உண்மைக் காதல், இதுதான் தூயக் காதல், ஒரு பெண் ஒருவனை ஒருமுறை மனதில் நினைத்துவிட்டால் சாகும் வரை அவனே அவளுக்குக் கணவன், அந்தஸ்து, குணநலன், சாதி பார்த்து வருவதில்லை காதல் என்றெல்லாம் காதல் வகுப்பெடுத்த திரைப்படங்களின் பாதிப்பினால் கூட தாமினி தாக்கம் பெற்றிருக்கலாம்!!! சொல்வதற்கில்லை!! இனியாவது இயக்குனர்கள் திருந்துவார்களாக!

எதுவாகினும், சம்பந்தப்பட்ட பெண் (அல்லது ஆண்) தான் வாழ விரும்பிய அல்லது வாழ்ந்து கொண்டிருக்கிற நபரிடமிருந்து விலக மனப்பூர்வமாக ஒப்புதல் அளித்தால் ஒழிய ஒரு உறவை விலக்கும் அல்லது திணிக்கும் உரிமை எவருக்கும் இல்லை. 

யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைதேன் உன்னாலே

உந்தன் உறவே போதும் எனக்கு அன்பே
உந்தன் அணைப்பால் மூச்சை நிறுத்து அன்பே
கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் தயக்கம்
ரெண்டும் காதல் தந்த பரிசு தான்
கொஞ்சம் நெருக்கம் கொஞ்சம் இருக்கம்
ரெண்டும் பெண்மை கேட்கம் பரிசு தான்


-       (ஆதி பகவன் படப்பாடல் வரிகள்!) 

 (நன்றி: புதிய கோடங்கி



(

Sep 11, 2013

நிர்பயா வல்லுறவு வழக்கு தொடர்பான விவாதம்

புதுதில்லி - நிர்பயா என்ற மாணவி மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வல்லுறவு கொடுமை, அதைத் தொடர்ந்த அவரது மரணம், அவரது நண்பர் எதிர்கொண்ட துன்பங்கள் நாடறிந்ததே.

சம்பந்தபட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்பு வெளியாகி, நேற்று அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்படும் என்றொரு சூழல் இருந்தது. இதனையொட்டி தந்தி தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின் கானொளி கீழே.






சிறு குறிப்பு:

இரானுவத்தினர் செய்யும் குற்றங்களை விசாரிக்க மூன்று வகையான தனி நீதிமன்றங்கள் செயல்படுகின்றன, எனினும் கொலை, வல்லுறவு ஆகியவை குடிமக்கள் நீதிமன்றங்களின் கீழே வரும். 


நிகழ்ச்சியின் போது உச்சநீதி மன்றம் கூட தலையிடமுடியாது என்பது சட்டத்தை முன் வைத்து சொல்லப்பட்டதல்ல.....வழக்கு விசாரனையில் காலதாமதமாகும் நிலையையும், பெரும்பாலும் இரானுவத்தினருக்கு (அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், காவல்துறையினர்....அதிகாரத்துவத்தில் இருப்போர்)  உரிய தண்டனை வழங்கப்படுவதில்லை எனும் ஆதங்கத்திலும் சொல்லப்பட்டதாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்....

Related Links:

http://www.thehindu.com/news/international/childhood-abuse-of-men-associated-with-rape-perpetration-says-un-survey/article5111439.ece

Sep 6, 2013

ஆடைக் கட்டுப்பாடு தேவை எனும் பரிந்துரை மீதான விவாதம்



5 செப்டம்பர், 2013 – ஆசிரியர் தினமன்று புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை மாணவ மாணவியருக்கு #ஆடைக் கட்டுப்பாடு கொண்டுவர முடிவு செய்திருப்பதாக வந்த ஒரு செய்தி குறித்த விவாதம் நடந்தது. அந்த விவாதத்தின் காட்சிப் பதிவும், அதை ஒட்டிய எனது பார்வையும்:

நம் சமூகத்தில், ஏன் உலகெங்கிலும் கூட குற்றங்கள் நிகழும்போது பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் வழங்குவதற் பதில் அவரையே குற்றவாளியாக்கி, அவர்கள் மீது ‘கட்டுப்பாடுகள்’ கொண்டுவருவது என்பது வழக்கமாக நடந்துவருகிறது. குறிப்பாக பெண்களுக்கெதிரான குற்றங்களில் எப்போதும் அவளது நடை, உடை, பாவனை, நடத்தை இவையே குற்றத்திற்கு தூண்டுகோலாக அமைகிறது என்றொரு ‘ஆணாதிக்க’ கூச்சல் ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. பெண்ணை ஒடுக்கினால், கொச்சையாகச் சொல்லப்போனால், ”பொம்பளையக் கையக் கால ஒடிச்சு வீட்டுக்குள்ள உக்காரவச்சா எல்லாம் சரியாப் போகும்பா” என்பதே பொதுபுத்தியின் வரையரை.

இதை அப்படியே முன்மொழியுமாறு இருக்கிறது உயர்கல்வித் துறை இயக்குனர் செந்தமிழ் செல்வியின் பரிந்துரை.  கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இந்தத் தடை வரவிருக்கிறது, சில பொறியியல் கல்லூரியில் இது ஏற்கணவே நடைமுறையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் மருத்துவக் கல்லூரி, மற்ற கல்வி நிறுவனங்களுக்கு அது தேவை இல்லையா?

கவனச் சிதறல் ஏற்படாமல் இருக்கவும், பாலியல் அத்துமீறலிலிருந்து பெண்களைக் காக்கவும், சில ஒழுங்குகளை போதிக்கவுமே இதைப் பரிந்துரைப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு பெண்ணின் உடையைப் பார்த்து ஒரு ஆணுக்கு கவனச் சிதறல் ஏற்படும் என்றால், ஒரு ஆணுக்கு ஆணின் உடையையப் பார்த்தும் கவனச் சிதறல் ஏற்படும். அந்த ஆடையின் ’ரகத்தைப்’ பொறுத்து அந்த ஆடை குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயல்பானது. இதற்கு பாலியல் பேதமில்லை.  அதேபோல் அந்த வாதத்தில் மனுஷ்யபுத்திரன் சொன்னதுபோல், தம் சக மானவரின் உடலமைப்பு, ‘அழகு’ இவற்றாலும் ஒருவருக்கு ‘கவனச் சிதறல்’ ஏற்படும். இவ்வளவு ஏன் ஆசிரியர்கள் அணிந்துவரும் உடைகளைக் கண்டு, ஆசியர்கள் பாடம் நடத்தும் விதத்திலிருந்து, ஆசிரியர்களின் கையாளும் திறன், அவர்களது மனப்பான்மை, இத்யாதி இத்யாதி காரணங்களாலும் கவனச் சிதறல் ஏற்படும். வீட்டில் ஏற்பட்ட ஒரு சண்டை காரணமாக, ஏன் அன்று நடந்த ஏதோ ஒரு சமூகப் பிரச்சனையின் காரணமாகக் கூட ஒரு மாணவருக்கு கவனச் சிதறல் ஏற்படலாம். கவனச் சிதறல் ஏற்பட்டால் உன்னை கல்லூரியிலிருந்து வெளியேற்றிவிடுவோம் என்றொரு சட்டம் கொண்டுவந்தாலும் வியப்பில்லை. ஆற்றலோடு இயங்கும் ஒரு மூளை ஒரே நேரத்தில் பல்வேறு விசயங்களை சிந்திப்பது என்பது வெகு இயல்பானது, மூளை பயணிக்கும் வேகத்தில் ஒலி கூட பயணிக்க முடியாது. இந்தச் செயல்பாட்டை எவரும் தடுக்கவும் முடியாது, ‘மூடிய’ ஆடைகளை அணிந்து வந்தாலும், சரி, ‘ஃபார்மல்ஸ்’ அணிந்துவந்தாலும் சரி, ஒருவர் தனக்கான உலகில் மூழ்குவதை எவரும் தடுக்கவியலாது. ஆசிரியரின் பாடம் நடத்தும் தன்மையும், அந்தக் கல்லூரி தரும் அனுபவம் மட்டுமே இதற்கு ஓரளவுக்கு தீர்வாக அமையும்.

இரண்டாவது வாதம், பாலியல் ஒழுங்கு பற்றியது. உலகமயமாக்கல் சூழலிலும், முதலாளித்துவத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் ‘சுதந்திரம்’ குறித்து நான் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன். கடுமையான சில கேள்விகளையும் வாதங்களையும்கூட முன்வைத்திருக்கிறேன். ஆனால் அது எல்லாமே எமது இனத்தோடும், எம் சக மனிதர்களோடும் நான் உரையாடலுக்காக முன் வைக்கும் எனது அவதானிப்புகள், கேள்விகள். உடை என்பது ஒருவித அடையாள மொழியாகிவிட்டச் சூழலில், அது அறிவு, அந்தஸ்து, முற்போக்கு, ஆளுமை என்று புறச் சூழல், ஊடகங்கள், சந்தைகள் கட்டமைத்துவருவதையும், அது தொடர்ந்து பெண்களைப் பாலியல் பண்டம் என்றே வரையறுத்து வருவதையும் எவரும் மறுத்துவிட முடியாது. பெண்களுக்கு அழகொன்றே அடையாளம் என்பதை வலியுறுத்தும் அரசியலே ஆடைகளின் வழி ஏற்றிவைக்கப்படுகிறது. நுகர்வுக் கலாச்சார அடிமைகளாகிப் போவதின் ஆபத்துகளை நாம் பேசுவது அவசியம். அதை உரையாடலுக்கு உட்படுத்தி, அறிவூட்டும் செயலையும், சுய-மரியாதை மீட்பையும் மேற்கொள்ள வேண்டுமே ஒழிய இதைக் கட்டுப்பாடுகள் மூலம் செய்வதை நான் சர்வாதிகாரம் என்றே சொல்வேன். மேலும் இந்தப் பரிந்துரையை மேற்கொள்வோர் யாருமே இதை ‘சந்தைப் பொருளாதாரச்’ சிக்கலாகப் பார்ப்பதில்லை. ஆகவே இது முழுக்க முழுக்க ஒரு ஆணாதிக்க மனோபாவத்திலிருந்து வெளிப்படும் ஒரு கூற்றே.

கல்லூரிகளில் ஒரு 5 மணி நேரம் ஆடைக் கட்டுபாடு கொண்டுவருவதால் மாணவர்களின் மனநிலை மாறிவிடுமா? அது பாலியல் குற்றங்களைத் தடுக்க எந்த வகையில் உதவப்போகிறது? கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது, ஆடை ஒரு பிரச்சனையா? கல்லூரிக்கு வெளியே மாணவியர் என்ன உடை அணிந்தாலும் பரவாயில்லையா? எனும் கேள்விகள் பரவலாக வைக்கப்படுகின்றன. இது நியாயமான கேள்விகள். என் இடத்திற்கு வரும்போது நீ இப்படித்தான் இருக்க வேண்டும், வெளியே போய் நீ எக்கேடு கெட்டால் என்ன என்பது என்ன வகையான சமூக அக்கறை? இங்கு வந்தால், அங்கும் ஒழுக்கம் வந்துவிடும் என்றொரு அபத்த வாதத்தை ரேவதி வைத்தார். ஒரு பேராசிரியருக்கு ஆணாதிக்க சமூக கட்டமைப்பு பற்றிய சிறு புரிதலுமில்லை என்பது வேதனை தரும் ஒரு விசயம். கல்விக் கூடங்களின் தரம் இதுதான். பெண்ணியத்தின் உச்சம் என்றொரு சொல்லைப் பயன்படுத்தினார். சிரிப்பு வருகிறது. பெண்ணியம் என்றால் என்ன? பெண்ணாக இருப்பது, பெண்மையோடு இருப்பதா? பெண்மை என்றால் என்ன என்பது பற்றி எத்தனை விவாதங்களைப் பெண்ணியவாதிகள் எடுத்துரைத்துள்ளனர். இதையெல்லாம் இவரைப் போன்ற பேராசிரியர்கள் படிப்பதே இல்லை போலும். 

பானு கோம்ஸ் அவர்கள் ஒரு பெண்ணின் உடற்கூறின் காரணமாக ஆண் தூண்டப்படுவான், அதனால் ‘புரொவோக்’ செய்யும் விதமாக உடை அணியக் கூடாது என்றார். பெண் உடல் மீது ஆணாதிக்க முதலாளித்துவம் செலுத்தும் ஆதிக்கத்தை சுட்டிக்காட்டிப் பேசியிருந்தால் அறிவுள்ளதாய் இருந்திருக்கும், அதைவிடுத்து தூண்டப்படும் உணர்ச்சி ‘அறிவியல்பூர்வமாக’  மெய்ப்பிக்கப்பட்டது என்றொரு வாதத்தை வைத்தார். ‘உயிரியல்’ உணர்வுகளுக்கு அறிவியல் பூர்வ உண்மை என்பதற்கும் வேறுபாடு தெரியாதிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மேலும், பெண்களுக்கும் அத்தகைய தூண்டுதல் உணர்வுகள் ஏற்படும், சமூக ஒடுக்குமுறை காரனமாகவே பெண்கள் ஆண்டாண்டு காலமாக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வந்துள்ளனர். அது அவர்களின் மரபு வழி பயணித்துவருகிறது என்பதே உண்மை. தாய் குனிந்து உணவு பரிமாறும்போது ஒரு ஆணுக்கு உணர்ச்சி எழாதா என்ற சுசீந்திராவின் கேள்விக்கு கலாச்சார அதிர்ச்சியடைந்தவராக என்ன இவ்வளவு ஆபாசமாகப் பேசுகிறீர்கள் என்ற இவரது கேள்வி ஒன்றே போதும் இவருடைய மனப்பான்மையை விளக்குவதற்கு. பெண்களுக்கும் ‘உச்ச உணர்வு’ (orgasm) ஏற்படும் தெரியுமா என்று கேட்டிருந்தால், என்ன இப்படி காம வெறி பிடித்துப் பேசுகிறீர்கள் என்று கேட்டிருந்தாலும் வியப்பதற்கில்லை.

மனுஷ்யபுத்திரன் சீருடை சம்பந்தமாக ஒரு மாற்றுக் கருத்து வைத்தார். சாதி, பொருளாதாரம் போன்ற ஏற்றத்தாழ்வு மிக்க நமது சமூகத்தில் அதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் அந்தப் பார்வைகளை நாம் கணக்கில் கொண்டு விவாதம் மேற்கொள்வதும் அவசியமே. உடைகள் மூலம் தமது அந்தஸ்த்தை பறை சாற்றிக் கொள்ளும் ஒரு வேட்கையில் அனைவரும் மூளைச் சலவைக்குள்ளாகிவிட்ட சூழலில், சீருடை தேவையில்லை என்று அவ்வளவு எளிதில் புறம் தள்ளிவிட முடியாதென்றே நான் நினைக்கிறேன்.  

ஒழுக்கம் என்பது மனதில் இருக்கிறது என்று ஒரு சாராறும், இல்லை இல்லை உடல் கெட்டால் எல்லாம் போச்சு என்று மறு சாராறும் பேசுகின்றனர். மனது, உடல் எல்லாம் ஒன்றுதான். இரண்டிற்கும் மூளை தான் அடிப்படை. மூளை தேக்கி வைக்கும் பதிவுகளே நமக்கு காட்சியாகவும், நினைவாகவும் வருகிறது. அதையே நாம் மனம் என்கிறோம்.  அந்த மூளையில் என்ன ஏற்றிவைக்கப்படுகிறதோ அதனை மாற்றி வைப்பது அத்தனை எளிதானதல்ல. ஆண்மை, பெண்மை, ஒழுக்கம், சமூகம், பொறுப்பு, பார்வை, என எல்லாப் புரிதல்களும் சமூகமயமாக்கலின் விளைவே. இந்த விவாதம் முடித்து வெளியே வரும்பொழுது வசுமித்ர தொலைபேசியில் அழைத்து ஒரு கேள்வி கேட்டான்: “கல்விக் கூடங்களில் கவனச் சிதறல் ஏற்படக் கூடாது என்பதற்காக ஆடைக் கட்டுப்பாடு என்கிறார்களே.. ஆனால் கல்லூரி பேராசிரியர்களும், முதல்வர்களும் தம்மிடம் படிக்கும் மாணவிகளை வன்புணர்வு செய்து, கொன்று அவள் அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டால் என்று நாடகமாடி முடிக்கிறார்களே. அத்தகைய பேராசிரியர்கள், முதல்வர்கள் ‘மூடிக் கொண்டு’ வரும் மாணவிகளை வன்புணர்வு செய்ய மாட்டார்கள், பாலியல் அத்துமீறலில் ஈடுபட மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளிக்க முடியுமா என்று உனக்கு கேட்கத் தோன்றவில்லையா” என்றார். உண்மைதான் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் ஒருவேளை பேராசியரும், சமூக ஆர்வலரும் வாயடைத்துப் போயிருக்கலாம். வாய்ப்புகள் குறைவு, அதற்கும் அவர்கள் மாணவியின் உடையையும், ‘attitude’ ஐயுமே குறை சொல்லியிருப்பார்களோ என்னவோ..

திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டு மரணமடைந்தார் என்று சொல்லப்பட்ட அருந்ததியர் சமூக மாணவி காயத்ரியின் நினைவாக……நிச்சயமாக அவர் ‘கவர்ச்சியாக’ உடை அணிந்திருக்க வாயிப்பில்லை……


நேர்பட பேசு , புதிய தலைமுறை தொலைக்காட்சியில் - ஆடைக் கட்டுப்பாடு பரிந்துரை குறித்த விவாதம் -