Dec 14, 2012

Human Emancipation – Speech delivered in Socio Fest – Liberate’12, Loyola College on 14.12.12


IMG_2695
Women’s liberation and Justice for laborers is Human Emancipation to me. To understand how and why this is important one needs liberation of mind. Liberating ourselves from all ideologies that has been injected in our minds over all these years is the primary need.
How do we liberate our minds and work towards Human Liberation? Our mind is nothing but a medium that has been tuned for ‘others’ – by others here I mean identity. Identity for what? ‘power’, ‘fame’ and ‘money’. Inorder to gain these and to retain the gained ‘benefits’ our “fore fore ‘fathers’ ” believed in certain social system consisting of hierarchy – an order of caste, class and gender.
This hierarchy was ‘theoritized’  and made as law by putting ‘Man’ as the head of the family / society because they believed that would only aid them to hold on to power and wealth. It is said that the ancient society has been a commune living headed by women in which there was equal distribution of wealth and natural resources. There was no ‘lord’ and ‘slave’. Considering the external factors, men and women arrived at a division of labor for the safety of ‘women’ as she is the primary factor in ‘reproduction’ and her life was so important. But later an unequal distribution of wealth arose. This happened because of change in means of production. After invention of certain ‘tools and technology’ for ‘mass production’ a particular group of society gained power by acquiring / grabbing lands and means of production. They became land lords, owners, capitalists etc etc. They took control of manmade (rather women made) means of production and also natural resources and primarily the reproductive force of mankind – ‘THE WOMEN”.
To ensure mass production and high profits by effective use of the means of production they created a new social division of labor and that is the ‘labor class’ – women were pushed to the secondary level and were defined new social role of ‘House work’ – by which their one and only duty is to reproduce children for tomorrow’s labor need; to effective feed and maintain them to become the most effective labor. In India it was further intensified by the caste order and gender roles defined by ‘Religious scriptures’. That is how women became house wives and men became economic slaves of the great ‘competitive economy’.
Men have to run to make money to build houses, buy car, buy jewels for wives, put children in ‘best of the schools’ and nowadays men have to run for ‘six packs’ as well. Is money not important? Yes it is! But how much is the question? What is the labor hour required to make that desired money? You and me work 8 hours a day and can make 20,000 to 1 L doing a desk job, but at the same time a rickshaw man can hardly make Rs. 150 a day, wy? If brain is superior so is physical labor! But why are they looked upon as slaves and secondary creatures? And if a man runs for money ignoring a family, is a women able to understand that, accept that and if women wants to earn and be a professional is a man able to accept that? But still all of us want to make ‘money’.
Unless we understand this fundamental social division of labor and unequal distribution of wealth, we will not even realize that each one of here is slaves and we got to question this social order.
Ok when we come back to women, many of you might not even know that women did not even have rights to vote, right to education etc., later they revolted, thousands of women labors went on struggle, they did not even have a ‘toilet’ in work place. Women like Alexandra kollantai, Clara Zetkin were key people among the leaders who lead the revolt of working women and we celebrate their victory as working women’s day. Today Women’s day has become a shopping festival and it is reiterated that ‘you are girly, you are feminine, you are women – so shop, shop, shop’. Our girls here should understand that women’s liberation is just about wearing what we like and doing what we want to…. It is about question what is this thing called ‘girly, feminity’ etc., who is defining them, who is benefitting out of it?
Later when women also won their rights and attained some economic growth, Men were influenced to think that women are their enemies, grabbing their opportunities etc., they think that they have sacrificed / broad mindedly let women work. This is ridiculous. Every person born on this earth has right to live and right to earn his / her own livelihood.
What we need is equal opportunities for all and that too without hierarchy.
What we do not need is gender bias, class bias, caste bias, religious bias, creed bias.
“Say No to Unequal distribution of wealth and natural resources”.
IMG_2696

Dec 11, 2012

ஒலிக்காத இளவேனில் – கவிதை நூல் அறிமுகம்.




இதயம் ஒரு துப்பாக்கிக் குண்டுக்காக ஏங்குகிறது
தொண்டையோ ஒரு கத்திக்காக ஏங்குகிறது
ஆன்மாவோ பனிச்சுவர்களிடையே நடுங்குகிறது
அது ஒருபோதும் பனியிலிருந்து தப்ப முடியாது.

-      ம்யாக்கோவ்ஸ்கி


பனியை இங்கு கொலைக்களமாக ம்யாக்கோவ்ஸ்கி ஏன் விரித்தான். தற்சாவும் விருப்பதிற்கிணங்காத முறையில் நிகழும்போது கவிக்கு சொல்ல இறுதியாக என்ன வார்த்தைகள் மிஞ்சும், கவியின் இறுதியுணர்ச்சி எதைச் சொல்லும். கையகல இருப்புகளுக்காகவா இத்தனை அழித்தொழிப்பு. இங்கு உண்மையில் கவிதைகளுக்கு என்ன இடம் இருக்கப் போகிறது. கவிதை மானுடமனத்தை இயற்கையாக ஆண்டுகொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியாக கவிதை மட்டுமே இருக்கிறது ஆனால் போர்க்களத்தில் கவிதை பாடிக்கொண்டிருக்க முடியாது எனச் சொன்ன லூ சூனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளுவதில் பேராவலோடு இருக்கும் காலகட்டத்தில்தான் நாம் பிறந்திருக்கிறோம். வெற்றிபெற்றவர்களின் ஆங்காரக் கூச்சலிடையே தோல்வியுற்றவர்களின் கசந்த அழுகைகள் மறந்துவிடுகின்றன. அவைகள் முணுமுணுப்பது கவிதைகளின் வாயிலாகத்தான். அக்கவிதைகளை வரிகளை வைத்து எடைபோடமுடியாது என காலம் தன் இருப்பை வைத்துச் சொல்லுகிறது. அக்காலமோ அகால உணர்ச்சியை முன் வைக்கிறது. அகாலத்தின் துயர்களைச் சொல்லியபடி எனக்குத் தெரிந்து வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுதிகள் என மரணத்துள் வாழ்வோம், பெயரிடாத நட்சத்திரங்கள், இப்பொழுது ஒலிக்காத இளவேனில். இம்மூன்று தொகுதிகளின் தலைப்பே வீழ்ந்து கொண்டிருக்கும் ஆன்மாவின் குரலாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது.

கண்ணுக்கெதிரே பறிபோகும் நிலமும் உடலும், உடல் சார் உளமும் கருகும்போது சொல்லமுடியாதவர்களின் குரலாய் ஒலிக்கிறது இக்கவிதைகள். உள்ளபடியே கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டுமானால் கவிதைகள் கூறும் இலக்கண அல்லது இலக்கிய விதிகளை சற்றுப் புறந்தள்ளிவிட்டுத்தான் இத்தொகுதியை வாசிக்க முடியும். வாசிக்க வேண்டும் இது வேண்டுகோளே. அஞ்சிச் சாகும் மக்கள் இறக்கும்போது எழுதவோ சொல்லவோ ஒரு வார்த்தை எப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது. சில மரணங்கள் சில மனிதர்களுக்கு வாழ்வின் ஆசுவாசத்தை ஏன் தருகிறது என்ற மானுட உளவியலையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தீராத்துயர். மனிதர்களை மனித இருப்புக்களுக்காய் கொலை செய்வதை எந்த மன அமைப்பு விரும்புகிறது.

கவிதை என்பதை மனநிலை என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா. மனம் திறந்து நமது உணர்வுகளை வாய்மொழியாக பேசுவதற்கும் அதை அச்சில் ஏற்றுவதற்குமான எந்த இடைவெளியில் உணர்வுகள் கவிதையாகின்றன. ஓசையும் ஓசையின்மையும் அதை சாத்தியப்படுத்துகிறதா? வடிவமா அல்லது கவிதை எழுதுதல் என்பது ஒரு அறிவார்த்த வெளிப்பாடு, ரசனை, படைப்பு கலை என்கிற பூடகங்கள் ஒருவரை கவிதை எழுதத் தூண்டுகிறதா.

மானுட வரலாற்றில் தோன்றிய முதல் கவிதை எதுவாக இருக்கும். காலம் காலமாக அது குழந்தை என்ற பதிலையே கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு சிறந்த ஓவியத்தை, கண்களை ஈர்க்கும் தோற்றம், சிறந்த கட்டிடக் கலையை வெளிப்படுத்தும் கட்டிடம், இவ்வளவு ஏன் ஒரு சிறந்த கதை, உரைநடை கூட மனம் கவரும் விதத்தில் இருந்தால் கவிதை போல் இருக்கிறது என்கிறோம்.

ஆக கவிதை என்பதற்கான விளக்கமாய் அது கொடுக்கும் அனுபவமே பிரதானமாய் இருக்கிறது வடிவமல்ல என்பது தெளிவு. அந்த அனுபவத்தை சொற்செறிவுடன், சொற்சிக்கனத்துடன் சொல்வதற்கேற்ற வடிவமாக உரைநடையல்லாத வடிவம் அமைகிறது. தற்போதைய காலகட்டத்தில் உரைநடைக் கவிதைகளும் வந்துள்ளன. கவிதை என்பது ரசனை சார்ந்த ஒன்றாக கருதப்பட்டாலும் ஒரு கவிதை உடனடியாக நம்மைக் கவர்வதும், மற்றொன்று பிடிக்காமல் போவதற்கும் அது தரும் அனுபவமே காரணமாக இருக்கிறது.

எதிலிருந்து கவிதை, அனுபவத்தைத் தருகிறது. நமது தேர்வு, விருப்பங்கள், இலட்சியத் தேடல்கள் அதன் உட்கூறுகளாக இருக்கின்றன. உ.ம் படைப்பை தூய இலக்கியம் என்று கருதுபவர்களின் பிரதானத் தேர்வாக காதல், காமம், உடலியல் இன்பம், மொழிப் பயன்பாடு ஆகியவை இருக்கிறது.  கூடுதலாக சமூகம் பற்றிய இவர்களது அக்கறை இரக்க பாவனை கொண்டதாக இருப்பதால் அத்தகைய வியாக்கியானங்களை, இரக்க பாவனைகளை சமூகக் கவிதையாகக் கருதும் போக்கு நிலவுகிறது. இந்த தேர்வானது அவநம்பிக்கை, அயர்ச்சி, இயலாமை, வெறுமை என்பதாக நீள்கிறது.

கலை மக்களைப் பேசவேண்டும் என்று கருதுவோரின் தேர்வாக அரசியல், சமூக மாற்றம் இவற்றை முன் வைக்கும் புரட்சிகர கவிதைகள், விடுதலை முழக்கங்கள், அழித்தொழிப்பிற்கெதிரான கலகக் குரல்கள் ஆகியவை பிரதானத் தேர்வாக இருக்கின்றது.  அதிகாரத்திற்கெதிரான விமர்சனங்கள், மாற்றம் குறித்த நம்பிக்கைகள், அணி சேர்தல் என்பதை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் கவிதகள் இப்பிரிவினரை ஈர்க்கிறது. இங்கு ’நான்’ என்பது
‘நாம்’ என்பதாகவே அமைகிறது.

இந்த இரண்டு வகையினரின் கூட்டுக்கலவையாக இருக்கிறது பெண் கவிதைகள். பெண் உடல் என்பது சமூக உடலேயாகும். சமூகம் நிர்ணயித்திருக்கும் உடலையே அவள் சுமந்துகொண்டிருக்கிறாள். அவளது உடலே அவளுக்கு அந்நியமான ஒன்றாக கட்டமைக்கப்பட்ட சூழலில் அவள் முதலில் பிரதிகளில் இருந்து தன் உடலை மீட்பது பிரதானமாகிப் போனது. பெண் உடலை ரசிப்பதற்கான ரசனை அளவீடுகள் பெண் பற்றிய கவிதை எழுத்தலுக்கு ஒரு கோனார் உரையை கொடுத்திருக்கிறது. பெண்களுக்கு ஆண்கள் பற்றிய அத்தகைய உரைகள் வழங்கப்படவில்லை, அப்படி அவள் வர்ணிக்கும் உரிமையும் அவளுக்கு கிடையாது. அதையும் மீறி அவள் எழுதினால் அவள் ‘காம வெறி’ பிடித்தவள். சமூகம், அரசியல் வெளிகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புகளும் அடைக்கப்பட்டிருக்க அவள் தனது பாடல்களாக, கவிதைகளாக தனது வெளியாக உடலைத் தேர்வு செய்யும் நிலையை வரலாறு ஏற்படுத்தியது. அதனோடு அவள் அன்றாட வாழ்வில் குடும்ப அமைப்பிற்குள் எதிர்கொள்ளும் வன்முறைகள், பொதுவெளியில் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள், தொடர் ஒடுக்குமுறைகள், போரினால் உடல் சிதைக்கப்படும் சூழல் ஆகியவை பெண் எழுதுவதற்கான தேவையை உருவாக்கியது.

இது வெறும் ரசனை வெளிப்பாடாகவோ, அறிவார்த்த பறைசாற்றலாகவோ, அந்நியப்பட்டுப்போகும் தூய இலக்கியமாகவோ இல்லாமல் சமூகப் பண்பாட்டுப் பிரதிபலிப்பாக இருப்பதற்கு அவளது அனுபவமே காரணம். இங்கு தேர்வு என்பது சாத்தியமில்லாமல், அனுபவமே பெண் எழுத்தை தீர்மானிக்கிறது. ஆக பெண்கள் இயல்பிலேயே புரட்சிகர எழுத்துக்களை, சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்ட எழுத்துக்களை படைக்கும் சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது. அடிப்படைத் தேவைகளுக்கும், தனது இருப்பிற்குமான போராட்டங்கள் நடத்தி சற்று முன்னேறிவிட்ட பிறகு மேட்டுக்குடி  பெண் உரிமை சிந்தனையானது உடலியல் இன்பங்களைப் பேசுதல், காமத் துயர்களைப் பேசுதல் விரகதாபம், பெண் சுய இன்பம் என்கிற அளவில் திசைதிருப்பப்பட்டுள்ளது. இதில் அவர்கள் காண மறுப்பதாக நான் காண்பது பெண் உடல் என்பது உடலியல் இன்பங்களில் மட்டுமல்லாது இன்னும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகிறது என்பதே அது. பெண் உடல் என்பதை பெண் விடுதலை அரசியலாக மாற்றும் வல்லமை எழுத்திற்கு உண்டு.

பாலியல் பேதமின்றி அனைவரும் வர்க்க அடிப்படையில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிறோம் என்பது உண்மை, ஆனால் இனவாத அடிப்படையில் ஒரு இனமானது தொடர்ந்து ஒடுக்குமுறைகளுக்கு இலக்காகிய கொடூரம் நாம் வாழும் காலத்தில் இலங்கையில் அரங்கேறியது. சிங்கள இராணுவத்தினரால் பெண்கள் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு சிதைக்கப்பட்டது அந்த இனவாதத்தின் உச்சபட்ச காட்டுமிராண்டித்தனம். அந்த மண்ணில் பிறந்து சித்திரவதைகளை அனுபவித்து மடிந்து போனவர்கள் ஆயிரக்கணக்கானோர், சிலர் வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர், சிலர் அகதி முகாம்களில் மேலும் சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றனர். அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, துரோகங்களை பலரும் தங்களின் படைப்புகள் வாயிலாக பதிவு செய்துள்ளனர். அநீதிகள், துரோகங்கள் மட்டுமல்லாது அவர்களின் வாழ்வுகளிலும் பல்வேறு உணர்ச்சிகள், அனுபங்கள், நிகழ்வுகள் இருக்கும் என்பதை கவிதை வடிவில் எடுத்துரைக்கும் மற்றோர் படைப்பு ஒலிக்காத இளவேனில்.

இலங்கைத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரு பெரும் கொடை அந்த மண் தனது மொழியை பெரும் வளத்துடன், அழித்தொழிப்புகளிடையே காத்து வந்திருக்கிறது என்பதுதான். மொழி அழிக்கப்பட்டால் இனமே அழிந்து போகும் என்பதை உலகறியும். மொழியின் அடிப்படையில் அழிக்கப்படும் தங்கள் உயிரையும், உடமையையும் காக்க நடந்துவரும் போராட்டங்கள் துயர் மிகுந்த பாடல். இந்த மொழிப்போரின் கோரப் பிடிகளிலிருந்து தப்பித்து புலம் பெயர்ந்து தங்கள் தாய் மண்ணை சுதந்திரமாகக் காவும் அந்த ஒரு கணத்திற்காக பரிதவிக்கும் உள்ளங்களின் வடிகாலாக விட்டுவைக்கப்பட்டிருப்பது எழுத்து மட்டுமே என்றால் அது மிகையல்ல.

தலித் உடலும், பெண் உடலும் ஒன்று என்பார்கள். ஆனால் போர்களினால் அலைகழிக்கப்படும் உடல்கள் மீது நிகழும் ஒடுக்குமுறை மற்ற எல்லாவற்றையும் விட முற்றிலும் மாறுபட்டது.  குறிப்பாக பெண் உடல்கள். சிறுவர்களின் உடல்கள். எல்லாப் போர்களிலும் முதலில் சிதைவுறுவது பெண் உடல்களே. ஏகாதிபத்திய பீரங்கிகள் நிலங்களைக் குறிவைத்து தொடுக்கும் குண்டுகளையும் விட மிகவும் கொடூரமான குண்டுகள் இராணுவத்தினரின் குறிகள். அவைகள் ப்ளாஸ்டிக் குறிகள். அந்தக் குறிகள் துளைப்பது யோனிகளை அல்ல, ஒரு தேசத்தின், ஒரு இனத்தின் தன்மானத்தை. ஒவ்வொரு போரும் இதையே உணர்த்துகிறது.

ஒலிக்காத இளவேனில் 17 புலம்பெயர் இலங்கைத் தமிழ் பெண்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு. தான்யா, பிரதீபா கனகா, தில்லைநாதன் ஆகியோர் கவிதைகளை தொகுத்துள்ளனர். வடலி பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

எந்த ஒரு படைப்பும் ஆதரமாய் ஒரு தேவையைக் கொண்டிருக்கிறது. ஒலிக்காத இளவேனிலுக்கு தம்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துன்பியலையும், தம் மண்ணில் நசுக்கப்படும் குரல்வளைகளுக்கு பதில் குரலாகவும் இருப்பதே அத்தேவை.

ஒலிக்காத இளவேனில் என தலைப்பு தொடங்கி உள்ளே கவிகள் எழுதியிருக்கும் கவிதைகளின் பெரும்பாலான தலைப்புகள் அனைத்தும் நிச்சயமற்ற வாழ்வின் அலைச்சல்களைக் கதறியபடியே சொல்கிறது,

 நிச்சயமற்ற வாழ்விற்கு பழக்கப்பட்டவர்கள்
எதற்காகவும் காத்திருப்பதை விரும்புவதில்லை
என்று ரேவதி பேசுகையில்
எவருக்காகவும் காத்திருப்பதில்லை- காலம்
விரைந்துகொண்டேயிருக்கிறது

என தன் வரிகளை கனத்த இயலாமையுடன் முன் வைக்கிறார் நிவேதா

கனவுகள் மாத்திரம்
காற்றில் அலைகின்றன
என் கவிதைகளைப் போல என தன்னையே முன் வைத்து நகர்ந்து
ஏதோ ஒரு
காய்கறிக் கடையில்
எங்கேனும் ஒரு
வீதி மருங்கில்
எப்போதாவது தொலைபேசியில்
முடிவற்ற
துர்வாடையாய்
நம் தலைக்கு மேல்
நிரம்பி வழியும்
நரகங்கள்
பற்றிப் பேசலாம்


இத்தகைய எளிய வரிகள் விதிக்கப்படாத சாவைத் தலைக்குமேல் சுமந்து கொண்டு அன்றாட நரகத்தைப் பேச அழைக்கின்றன. சாவைப் போலொரு பேச்சென இக்கவிதையைச் சொல்லலாம்.

திணிக்கப்பட்ட காலை
திணிக்கப்பட்ட எழுத்து
திணிக்கப்பட்ட ரசனை
திணிக்கப்பட்ட குறி

என உலகியங்கும் கொடூரத்தை முன்வைத்து நகர்ந்திருக்கிறார். ஆழியாளின் கவிதை தொடர்ந்து பிணங்களின் தோற்றவுருக்களை விவரித்து அவைகள் பலிதீர்க்கப்பட்டதற்கான கருத்தியல்களை எழுதிச் செல்லுகிறார். முக்கியமாய்

மரணவெளியில் மறைக்கப்பட்டு
வாழ்விக்கப்படும் பெண்கள் நாங்கள்
எனும் இரு வரிகள் தரும் துயரம் மீளமுடியாத உணர்ச்சியைத் தருகிறது.

இத்தொகுதியில் எழுதியிருக்கும் தமிழினி, சரண்யா,வசந்தி கவிதைகள் இத்தொகுதிக்குள் ஒலிக்கும் துர்மரணத்தை முன் வைத்தே பேசுகின்றன. புலம்பல்கள் கவிதையா எனக் கேட்டால் அதுவும் என்னைப் பொறுத்த வரையில் காலத்தையே சுட்டிக்காட்டுப் பேசுகிறது என்பேன். சரண்யா எழுதியபடி..

ஆண்களால் கொல்லப்பட்ட உடம்பு
பொய்களால் கொல்லப்பட்ட மனசு

இவ்வரிகள் அதற்கு சாட்சியாக்குகின்றன.

மொனிக்கா, துர்க்கா, மைதிலி இவர்களும் தங்களது இயலாமைகளை கவிதைகளென முன்வைத்திருக்கிறார்கள்.


நீங்கள் எச்சரித்தது போலவும் இல்லாமலும்
ஆனாலும் வாழ்வேன்!
என் எல்லாக்
காயங்களிலிருந்தும்
உடைவுகளிலிருந்தும்
நோவுகளிலிருந்தும்
ஆத்திரங்களிலிருந்தும்
ஏமாற்றங்களிலிருந்தும்…

என வரும் வரிகள் நேரடியாக ஆள்வோரின் ஆணைகளுக்கு தங்கள் பதில்களைத் தந்துவிடுகின்றன. இந்திரா, தர்சினி, தான்யா, பிரதீபா,கற்பகம் யசோதரா,ரெஜி,ஆகியோரின் கவிதைகளும் சாவின் விரும்பவியலா மணத்தைக் கடத்துகின்றன.

கவிதை புரியாமல் போய்விடுமோ என்கிற ஒரு அகப் போராட்டத்தை கவிஞர்கள் நிகழ்த்திய வண்ணம் இருக்கிறார்கள். அதனால் கவிதை முடிந்த பின்பு சில பின் வரிகளை உடைத்து போட்டு அதை விளக்கு முயற்சி நடைபெறும். அதற்கு ஒரு உதாரணம்:

அகமெங்கும் பொழியும் முன்பனிக்கால மந்தாரங்கள் நிவேதிதாவின் கவிதை

.............
.................

இனியெதற்கு என் தயவு
முலைகளே பேசட்டும்..........
கழுத்தை நெரிக்கும்
“ஆம்பிளை’த்தனங்களைப் பற்றி
கால்களைப் பிணைக்கும்
யுத்தச் சங்கிலியைப் பற்றி...
இன்னமும்,அந்தரத்தில் அலைவு7ண்டிருக்கும்
என் எப்போதைக்குமான
கனவுகளைப் பற்றி....

இனியெதற்கு என் தயவு
முலைகளே பேசட்டும்..........

நிவேதாவின் இந்த வரிகளைலேயே கவிதை முடிந்து விடுவதாக நான் கருதுகிறேன். முலைகள் என்ன பேச வேண்டுமோ அதை வாசகர் மனம் உணரும், பின்வரும் விளக்கங்கள் கவிதை அனுபவத்தை சற்று தொந்தரவு செய்கிறது. வாசகர் அடையக்கூடிய இதுபோன்ற சிறு அனுபவக் குறிப்புகளுக்கப்பால் ஆணாதிக்கத்தை கூறு போட்டு எடுத்துரைப்பதில் இத்தொகுதியின்  அனைத்து கவிஞர்களின் கவிதை மொழியும், படிமங்களும் குறிப்பிடத்தக்கவை.

தொகுதி முழுக்க இறைஞ்சும் வார்த்தைகள், தசைகளை இறுக்கும் வார்த்தைகள் என எங்கும் நிறைந்திருக்கின்றன. தொகுதியிலுள்ள பெயர்களை எடுத்துவிட்டால் அனைத்தும் ஒரே கவிஞருடையதோ எனத் தோன்றும் அளவிற்கு அது நம்மைக் கொண்டுவிடுகிறது. போரின் வாதையைச் சொல்ல வந்த கவிதைகளில் இலக்கிய நயம் தேடிப் பயணிப்பதில் எனக்கு எப்பொழுதும் உவப்பில்லை. எல்லோருக்கும் இழப்பில் சொல்ல இருக்கும் ஒரு சொல்லை கவிஞர்கள் மட்டும்தான் எழுதவேண்டுமென்பதில்லை. எழுதப்படிக்கத் தெரியாத ஒரு ஆன்மாவுக்கு கல்வியால் ஆகப்போவது ஏதுமில்லை. ஏனெனில் அனைத்தும் பட்டித்தவர்களே ஆயுதத்தைத் தூக்குவதோடு அதற்குப் போதுமான கருத்தியலையும் எழுதுகிறார்கள். ஈவிரக்கமற்ற முதலாளிக்கு கவிதைகளால் ஒரு பயனும் இல்லை. பணத்தையும் பேரத்தையும் தவிர ஆள்வோர்களுக்கு கவிதையால் என்ன பயன். அவர்கள் நம்மை எழுத வைக்கிறார்கள். எழுத்து மாற்றத்தைக் கொண்டுவரும். அதற்கு கவிதைகள் சாட்சி. அல்லற்றபட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ..............

(இம்மாத உயிர் எழுத்து இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரை)

Dec 2, 2012

பெண்களுக்கெதிரான சாதிய ஒடுக்குமுறை – கொற்றவை, மாசெஸ்


நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமங்களில் நடந்திருக்கும் ஆதிக்க வெறியாட்டத்தில் சாதிப் பிரச்சனை இருக்கிற்தா – இருக்கிறது; வர்க்கப் பிரச்சனை இருக்கிறதா – இருக்கிரது; இவைகளோடு மற்றுமொரு முக்கியப் பிரச்சனை ஒன்றிருக்கிறது – அதுதான் பெண் உரிமை பிரச்சனை. (The question of women’s rights). நிலப்பிரபுத்துவ அமைப்பானது உழைப்பைச் சுரண்ட அடிமைக் கட்டமைப்புகளை உருவாக்கியது, சத்ரிய பார்ப்பனியக் கூட்டு அதை மனுதர்மச் சட்டமாக்கியது. அந்த சட்டங்களைப் பெண்ணின் கருப்பையில் திணித்தது. சாதிய பற்றாளர்கள், சாதியக் கட்சிகள் இந்த ஆணாதிக்க பார்ப்பனிய இந்துத்துவ சாதியச் சட்டங்களை தங்கள் பொருளாதார, சமூக, அரசியல் அதிகார ஆதாயக் காரணிகளுக்காக அப்படியே பிடித்துக் கொள்கின்றனர். நடைமுறைப்படுத்துகின்றனர்.
பெரியார் இருந்திருந்தால் இந்த சாதிச் சங்கங்கள், அரசியல் கட்சிகள் இவ்வளவு தைரியமாக சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக பேசியிருக்க முடியுமா?
ஹிந்து கோட்பில் மூலம் அம்பேத்கர் முன் மொழிந்த உரிமைகளுல் ஓர் முக்கியமான உரிமை பெண்கள் தாங்கள் விரும்பிய துணையை தேர்ந்தெடுக்கலாம் என்பதுதான், அவ்வரைவுக்கு ஆதரவு கிடைக்காமல் பதவியையே துறந்தார் அம்பேத்கர். சாதி மறுப்பு திருமணத்தை எதிர்ப்பதென்பது அரசியல் சாசனம் அளித்திருக்கும் உரிமைக்கெதிராகப் பேசுவதென்பதாகும்.
பண்டைய தாய்வழிச் சமூகம் சிதைந்து தந்தைவழி ஆணாதிக்க சமூகம் மோலோங்கியபோது நிலப்பிரபுத்துவ அமைப்புக்கேற்றவாறு உருவாக்கப்பட்ட சட்டங்கள் பெரும்பாலும் பெண்ணை அடக்குவதன் மூலம் ஒரு சாதியை, சமூகத்தை, இனக்குழுவை, இனத்தை அடக்கி ஆள திட்டமிட்டது. தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காக இன்றும் அது பல சாதிக் கட்சிகளால் பின்பற்றப்படுகிறது.
ஊழல் செய்வதில்கூட பல நவீனங்களை உள்வாங்கிக்கொண்ட ஆதிக்க சாதி அரசியல் கட்சிகள் சாதி விசயத்தில் மட்டும் இன்னும் ஆண்டானைப்போல நடந்து கொள்வது பிற்போக்குத்தனமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
டிவிட்டர், முக நூல் போன்ற இணையதளங்களில் வைக்கபடும் கருத்திற்கு பாய்ந்து வந்து கைது செய்யும் வல்லமை படைத்த அரசுகள் வெளிப்படையாக இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கெதிராக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யத்தக்க கருத்துக்களைப் பேசிவரும் காடு வெட்டி குரு, பா.ம.க நிறுவனர் இராமதாஸ், கொங்கு வேளாளர் பேரவை மணிகண்டன், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பழ. கருப்பையா போன்ற சாதியக் கட்சிகள், சாதிய பற்றாளர்களை ஏன் இந்த அரசு இன்னும் கைது செய்யவில்லை.
சாதி வெறியில் வீடுகளை எரிப்பது, சூரையாடுவது போன்ற வன்கொடுமைகளை திரைப்படங்களில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். சமூக உணர்வு ஏற்பட்ட பின்னர் தான் இத்தகைய கொடூரங்களுக்குப் பின் இருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள் விளங்கியது.
மீசையை முறுக்கி, தோளை விடைத்துக் கொண்டு சாதிக் கொடுமைக்கெதிராக பொங்கு எழுந்த அந்த ‘ஆண் கதாநாயக வீரர்கள்’ எவரேனும் இந்த ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கெஹ்டிராக ஒரு கண்டன அறிக்கையையாவது வெளியிட்டிருக்கிறார்களா? ‘தாய் குலம், தங்கைக் குலம்’ இப்படி ஒடுக்கப்படுவதை வேடிக்கப் பார்க்கும் இவர்களில் சிலர் தமிழ், தமிழ் தேசியம் என்றால் மட்டும் களத்தில் இறங்குகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை ‘தமிழர்’ என்றால் வெறும் ஆண்கள் மட்டும்தான் போலும்.
சின்மயி விவகாரத்தில் ஒரு பேட்டியில், உரையாடலின் ஒரு தொடர்ச்சியாக அவரது தாயிடம் அப்படியே உங்கள் மகளைப் ஆபாசப் பாடல் பாடுவதையும் நிறுத்தச் சொல்லுங்கள் என்றேன். அதைப் பிடித்துக் கொண்டு குஷ்புவிடம் சின்மயி முறையிட, இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான பெண்களும் இந்த காலத்தில் இருக்கிறார்களா? அவருக்கு ஒரு கேக்கைப் பரிசளித்து தூக்கத்திலிருந்து தட்டியெழுப்ப வேண்டும் என்றார். இந்த பெண் உரிமை பாதுகாவலர்கள் சாதி மறுப்பு திருமண எதிர்ப்பு என்பதில் அடிப்படையில் ஒடுக்கப்படுவது பெண்ணின் உரிமை என்பதை அறியவில்லையா? கூடுதலாக அதைக் காரணமாக வைத்து சாதிய ஆதிக்கப் போக்கில் தலித் கிராமங்களில் நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதி வெறியாட்டம் குறித்து இவர்கள் ஏதாவது கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்களா?
இந்த சினிமாக்காரர்கள் சிலரின் கபட நாடகங்களையும், ஆணாதிக்க மனப்பான்மையும் தெரியாமல் உழைக்கும் வர்க்கமானது மீண்டும் மீண்டும் இவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துகிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் பெண் விடுதலை பற்றியும் கவலைப்படுவதில்லை, சமூக விடுதலைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.
ஆக தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் இந்த ஆதிக்க சாதி, இடைநிலை சாதிக் கட்சிகளில் பெண் உரிமை, பெண் விடுதலைச் சிந்தனை இவைகளைச் சரியாகப் புரிந்து கொண்ட தலைமைகள் இருக்கின்றனவா என்பதே இப்போது இந்த நிகழ்வு நம் முன் வைக்கும் மிகப் பெரிய கேள்வி.
பொதுவாக அரசியல், சாதி, இன உணர்வு, மொழி உணர்வு என்று எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தம் நலன் ஆண் நலனே. இங்கு கூடியிருக்கும் தோழர்கள், தலித் அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள் இந்த ஆணாதிக்க அரசியலை விடுத்து பெண் உரிமையை நிலைநாட்டுவதின் மூலம் சாதி ஒழிப்பை மேற்கொள்வதின் அவசியத்தை உணர்ந்தவர்கள் என்று நம்புகிறேன்.
பெண் விடுதலையும், சாதி ஒழிப்பும் பின்னிப் பிணைந்தவை – உழைக்கும் மக்களை ஒன்றிணைப்போம், பெண் உரிமைகளைக் காக்கும் அறிவூட்டுவோம்..
சாதி-வர்க்க-பாலின வேறுபாடுகளைக் களைய ஒன்றுபட்டு போராடுவோம்.
30.11.2012 அன்று சென்னை மெரியல் ஹால் அருகில் தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான திட்டமிட்ட காட்டு மிராண்டித் தாக்குதலுக்கு எதிராக சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஆற்றிய உரை (சறிய திருத்தங்களுடன்).
http://saektamilnadu.wordpress.com/