Apr 19, 2010

கூர்மையற்ற சொற்களும், கூர்மையுற்ற புரிதலின்மையும்.

உலகில் உள்ள ஒவ்வொன்றும் இடைவிடாது மாறிக் கொண்டிருக்கிறது; ஒவ்வொன்றிலும் உள்ள முரண்பாடே, எதிர்மறைகளின் போராட்டமே வளர்ச்சியின் உந்து சக்தி

-ஹெகல்

அன்று நடந்த கூட்டத்தில் ம க இ க இயக்கத் தோழர்களும், புரட்சி இயக்க சகோதரிகளும் ஒழுக்கம் பற்றியும், கலாசார சீர்கேடு பற்றியும் பேச எத்தனித்து தனி நபரின் சுதந்திர சிந்தனையும், வாழ்க்கையையும் அநாகரீகமாக பேசி சமுதாயத்திற்கான நல்லது எது என்று கையில் எடுத்துக்கொண்டு பேசினார்கள் புரிதலற்ற காரணத்தால்.

நண்பர்களே ஒழுக்கம், கலாச்சாரம் என்பது மனிதன் தோற்றுவித்த ஒரு கோட்பாடுதானே. கூட்டு நலன் கருதி என்ற போர்வையில் ஒரு கும்பல் அதிகாரச் சிந்தனையுடன் தோற்றுவித்ததே கலாசாரக் கூறுகளும் அதை ஒட்டிய ஒழுக்கக் கூறுகளும். அவற்றை ஏற்றுக்கொள்ளும் உரிமை அனுமதிக்கப்படும் பொழுது ஏன் சந்தேகப்படவும், நிராகரிக்கவும் , விமர்சிக்கவும் மறுக்கப்படுகிறது? இப்படிப்பட்ட சார்புடைய சிந்தனைகளையும், தனிநபர் கொச்சை விமர்சனங்களையும் நானறிந்த மார்க்சியம் வழிமொழியாது என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ( எந்த மேடையிலும் ஒரு விமர்சகரை தேவடியா என்று CPI, CIIM அழைத்ததில்லை.) மனிதம் சார்ந்த பண்புகளையே நான் ஒழுக்கமாக கருதுகிறேன். அதைவிட்டு பார்ப்பனியம் கற்றுகொடுக்கும் "உறுப்பு சார்ந்த ஒழுக்கம்" என்பது பெண்களுக்கெதிரானது மட்டுமல்ல தனிமனித சுதந்திரத்துக்கெதிரானது.

அன்று குரல் கொடுத்த அத்தனை நண்பர்களும் எங்கல்சின் "குடும்பம், அரசு, தனிசொத்து ஆகியவற்றின் தோற்றம்" எனும் புத்தகத்தை வாசித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். கடவுளின் பெயராலும், கலாசாரத்தின் பெயராலும் பார்ப்பனிய பக்தி இயக்கம் செய்த சதிகளை பெரியார் ஐயா அவர்கள் பக்கங்களாக எழுதிதள்ளியும், பெண்கள் இன்னும் கலாசார அடிமைகளாய் இருக்க கடவர்கள் என்று ஆண்களுக்குத் துணையாகவும், சில சுயநல அரசியல் விளம்பரதாரர்களுக்கு துணையாகவும் குரல் கொடுப்பதும், ஒரு பெண்ணை பலபேர் முன்னிலையிலும், ஊடகங்களிலும் கொச்சையாக எழுதுவதும் போதிய வாசிப்பனுபவம் இல்லாததையே காட்டுகிறது. கற்றறிய நினைக்கும் பெண்களை முடக்கி வைப்பதும் அத்தகைய கலாசார கட்டமைப்புகளே என்பதை மனதில் கொள்ளவேண்டும். கலாச்சாரம், ஒழுக்கம், ஆடை நாகரிகம் பற்றி பேசுவோர் ஏன் ஆதிகால வாழ்க்கை முறையை பரிந்துரைக்காமல், இடையில் தோன்றிய அரசியல், மதம் சார்ந்த கலாசாரத்தையே பற்றிகொண்டலைகிறார்கள். (பாவம் அறியாதவர்கள்...!!!)...ஆதியில் கூட்டு குழு வாழ்க்கை-பாலுறவு (பாலிகமி) போன்ற பழக்கம் வைத்திருந்தார்களே? இன்றும் சில பழங்குடி சமூகத்தில் இம்முறை நடைமுறையில் உள்ளதே...அவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா. அல்லது அப்பெண்களுக்கு உறுப்பு இல்லையா?

'சுயமரியாதை உள்ள எந்தப் பெண்ணும் குழந்தை பெற்றுக்கொள்ளமாட்டாள். கருப்பையை அறுத்தெறிந்துவிடுவாள் போன்ற சிந்தனைகளைக் ஒரு ஆண் கூற சுதந்திரம் அளித்த இச்சமூகம், தன் உடலுக்கு நேரும் வன்கொடுமைகளை எழுதுவதை ஆபாசம் என்று கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது. அந்த உறுப்புகள் உடம்பில் இருப்பதை இவர்கள் ஆபாசம் என்று கருதுகிறார்கள் போலும். சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்று வரை பெண்ணின் அங்கங்களை வருணித்துப் பாடும் ஆண்கவிஞர்களை புலவர்கள் என்று போற்றி பரிசில் தரும் மண்ணிது. பெண்களே நான் ஆண்களை குறை கூறவே மாட்டேன் ஏனென்றால் ஆண் சிந்தனையை கண்மூடித்தனமாக உங்கள் சிந்தனையாக நீங்கள் ஏற்றிவைத்திருக்கிறீர்கள். அதுவே அவர்களின் வெற்றி.



ஆண் நண்பர்கள் லீனாவின் கவிதைகளை தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள் அல்லது அவர்களுக்கு கோபம் ஏற்படும் விதத்தில் தூண்டிவிட்டு பயன்படுத்துகிறார்கள் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் அன்று அக்கழக தோழர்கள் எழுப்பிய சில கேள்விகள்

பெண்ணியம் பேசும் ஆதரவாளர்கள் ஏன் குஜராத் வன்முறைக்கும், தஸ்லீமா நஸ்ருதீனுக்காக போராடவில்லை என்று கேட்டார்கள். கலாச்சாரத்திற்கும் ஆபாசத்திற்கும் எதிராக தடை விதிக்க கோரும் இவர்கள் ஏன் சினிமா அரங்கில் நின்று போராடுவதில்லை. இரட்டை அர்த்த பாடல்களும், தொப்புள் நடனங்களும், பிதுங்கிய மார்பும் காட்டி வியாபாரம் செய்யும் முதலாளிகளுக்கெதிராக கலாசார சீர்கேட்டை பேசலாமே? மேலும் ஆண் எழுத்தாளர்கள் எழுதியுள்ள பாலியல் புத்தகங்களுக்கு தடை விதிக்க போராடலாமே என்று எதிர்கேள்விகள் கேட்பது ஒருவரை ஒருவர் மடக்கும் சாமர்த்தியத்தை மட்டுமே காட்டும் .. இவர்களுக்கு தேவை விளக்கமா அல்லது வாக்குமூலமா.

என் இலக்கிய அறிவுக்கெட்டியவரை லீனா எத்தலைவர்களையும், இயக்கச் சிந்தனைகளையும் நிந்தனை செய்ததாக படவில்லை...அவர் கூறுவது உலகறிந்த உண்மை...அதாவது...ஒரு பெண்ணை அடைய ஆண் எவ்வித உத்திகளையும் கைகொள்கிறான் (இது பெண்களுக்கும் பொருந்தும் சுயநலம் மனிதனுக்கு பொதுவானது தானே) அதிலும் அறம் பேசும் மார்க்சியத்தையும், தொழிலாளர்களுக்கு உயிர் மூச்சான கம்யூனிசத்தையும் , மற்றும் புகழ் பெற்ற புரட்சியாளர்களையும் பேசி தன் மேதமையை காட்டுகிறான். இங்கு இவற்றை எதிர்கொள்ளும் ஒரு பெண் இலக்கிய அறிவுள்ளவள், மார்க்சியத்தில் ஈடுபாடுள்ளவள் என்ற காரணத்தால் இவற்றை பேசி மயக்கும் ஒருவரைப் பற்றி எழுதுகிறார். - இதற்கு நம் சகோதரர்கள் "நீ சந்தித்த (அதாவது அப்படி உறவு வைத்துக்கொண்ட என்று பொருள்) அப்பேற்பட்ட நபர்களின் பட்டியலை கொடு" என்று மிகவும் கொச்சையாக பேசியது கண்டிக்கத்தக்கது. முதலில் ஒரு கவிஞர் உண்மையைத்தான் எழுதவேண்டும், அதுவும் தான் எதிர்கொண்டிருந்தால்தான் எழுதவேண்டும் என்பதெல்லாம் முதிர்ச்சியற்ற போக்கு. அப்படிஎன்றால் ஒரு ஆண் கற்பகாலம் பற்றியும், பிரசவ வேதனை பற்றியும் எழுதவேக் கூடாது (என் தோழன் வசுமித்ர கூறுவது).

பெண்கள் தங்களின் அந்தரங்க உறுப்புகளை வசைச்சொல்லாக பயன்படுத்தும் ஆண்களுக்கு அதை மந்திரச்சொல்லாக உபயோகிக்க வலியுறுத்தும் ஒரு போக்காகவே நான் அதைக் கருதுகிறேன். அல்லது பெண்களின் அங்கங்களின் மேல் ஆண்கள் ஏற்றிவைத்திருக்கும் பாலியல் சார்ந்த அத்தனை சிந்தனைகளுக்கும் எதிராக அச்சொல்லை, அந்த உறுப்பை பொருளற்றதாக மாற்றிவிடும் போராட்டம். அப்படி பொருளற்றதாய் மாற்றி விட்டால் பாலியல் வன்முறையிலிருந்து தப்பிவிடலாம் என்ற மூடநம்பிக்கையின் காரணமாகக்கூட கருதலாம்....

நண்பர்களே எல்லோருக்கும் அந்தரங்கம் என்றொன்று இருக்கிறது...பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளதாலேயே அந்த அந்தரங்கங்கள் எல்லோருக்கும் சொந்தமென்றாகிவிடாது. இதில் கவனிக்கவேண்டியது அந்தரங்கம் என்பது ஒருவருடைய பாலியல் உறவு சார்ந்தே (காமம் சார்ந்தே) இருக்கிறது. ஆகவேதான் அதை அறிந்துக் கொள்ளும் ஆர்வமும் மேலோங்குகிறது. அதுவும் கலாசாரத்தைப் போற்ற, என்பதைவிட, ஒருவர் காமத்தை எவ்வாறெல்லாம் கைகொள்கிறார். அதிலிருந்து நமக்கும் ஏதாவது உக்தி கிடைக்குமா என்ற சிந்தனை, அல்லது, நம்மை போன்று நால்வர் காம இச்சைகள் கொண்டுள்ளனர் என்று அச்செயலை அறிவதன் மூலம் நமக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பிக்க உதவுகிறது. உறுப்பு சார்ந்த ஒழுக்க மீறலால் ஏற்படும் சீர்கேட்டைவிட அறமற்ற, மனிதாபிமானமற்ற, பணத்தாசையினால் விளையும் சீர்கேடுகள் தான் களையப்படவேண்டியவை...ஆனால் அவைகளுக்கெதிராக நாம் ஏதும் செய்ய முடிவதில்லை. ஏனென்றால் அங்கே நாம் எதிர்க்கவேண்டியது முதலாளிகள், அரசியல்வாதிகள். கலாசாரம் என்ற பெயரில் நாம் எதிர்ப்பது ஒரு தனிமனிதனை. அப்பாவிக் குடிமகனை(அல்லது மகளை) அதுவும் உயிர்பயம்காட்டி.

ஒருவரை எதிர்கொள்ள/ விமர்சிக்க/ வீழ்த்த ஒருபோதும் ஒழுக்கமான/ அறம் சார்ந்த முறைகளை யாரும் கையாள்வதில்லை. ஒன்று அவமானம் எனும் ஆயுதம் ஏந்துகிறார்கள் (மானம் என்பது ஒரு கற்பிதமே என்று விவாதிக்கலாம்) அல்லது பௌதிகமான ஆயுதம் ஏந்தி உயிர் பயம் காட்டுகிறார்கள். இது அடக்குமுறை. உயிருக்கு பயந்து ஒடுவோர் ஒடுங்குவது, அல்லது ஒடுக்கப்படுவது ஜனநாயகமன்று. அப்படி ஒருவரை முடக்குவதால் கிடைக்கும் வெற்றி அவர்கள் ஏந்தும் சொற்களுக்கும், ஆயுதங்களுக்கும் கிடைப்பதே அன்றி அறிவு சார்ந்த வெற்றியல்ல. போர்க்களத்தில் ஆயுதமின்றி நிற்கும் எதிராளியை எதிர்ப்பது கோழைத்தனமென்றால், இது போன்று உயிர் பயம் காட்டி வன்முறையை ஏவுவதும் கோழைத்தனமான செயலே..

எல்லாவற்றிலும் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பூசி பார்பவர்கள் அனுபவங்களையும், அவலங்களையும் வெளிப்படுத்தும் அல்லது பகிர்ந்துகொள்கிற ஊடகமாக இலக்கியத்தை பார்க்கத்தவறி வருகிறார்களோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. இங்கே எழுத்தோ, கருத்தோ பிரச்சனை இல்லை. எழுதியவர்தான் பிரச்சனை. அதிலும் அவருடைய இனம் (பாலியல் பிரிவினை) கூடுதல் பிரச்சனை. இங்கே சுதந்திரம் என்பதற்கு கூட பாலியல் சாயம் பூசி அது ஆணின் சுதந்திரமாகவே இருக்கவேண்டும் என்று செயல்படுகிறார்கள். இவர்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாகவோ. அல்லது கலாச்சாரம் என்ற பெயரிலே ஆண்கள் பெண்கள் மேல் ஏற்றி வைத்திருக்கும் அடிமைப்பாட்டை அறியாத பெண்களும் சேர்ந்துக்கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

பல்லாயிரம் வருடங்களாக பெண்களை கவர்ச்சிப் பொருளாகவும், புணர்ச்சித் துணையாகவும், வீட்டு வேலைக்காரியாகவும் இன்ன பிற அடிமையாகவும் நடத்துவதற்கு ஏதுவாக இலக்கியங்கள், புராணக்கதைகள், ஒழுக்ககூறுகள், பெண்கடவுள் தன்மை என்று வரைந்து, பல பல வழிகளில் அவள் பிறப்பின் உண்மை அறியா வண்ணம் ஓர் மாயைக்குள் புதைக்கப்பட்டிருப்பதை அவளே அறியா வண்ணம் மிகவும் சாமர்த்தியமாக புனைந்திருக்கிறார்கள். இந்த மாயையின் பரிதாப கட்டம் என்னவென்றால், இப்புனைவுகளை கண்டுகொண்டுவிட்டதாக ஒருத்தி அறிவிக்கும்போது பெண்களே அதை எதிர்க்கவும், பேசும் பெண்ணின் மீது கல் எறிந்து கொல்லவும் கூட இந்த ஆணாதிக்க சமுதாயம் அவள் மூளையை, அவளே அறியாமல் சலவை செய்து வைத்திருப்பதுதான்.

வலைப்பதிவில் எழுத வந்த இந்த குறுகிய காலத்திலேயே என் வலைப்பதிவில் நிறைய விமர்சனங்கள் எழுந்தன. என் எழுத்துக்கள் வசை மிகுந்ததாகவும், பாலியல் சார்ந்தே இருப்பதாகவும், இப்படி நான் ஆண்களுக்கெதிராய் எழுதுவது, என் கணவருக்குத் தெரியுமா, பெண்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று ஆண் கூட்டம் கூச்சலிட்டது. ஒருவேளை பெண்கள் ஏமாற்றுபவராய் இருந்தாலும் சதவிகிதம் சொற்பமாகவே இருக்கும். மேலும் அவள் உறுப்புகளை சிதைக்கும் செயல்களையும். குழு கற்பழிப்புகளையும் செய்வதில்லை. இப்படி பொறுக்க முடியாத, ஆனால், ஆண்டாண்டு காலமாய் பெண்களை வெறும் மாமிசமாய் பார்க்கும் ஆண்களைப் பற்றியும் அச்செயல்களைப் பற்றியும் எழுதும் பொழுது கலைநயமிக்க உவமைகளையா தேர்ந்தெடுத்து எழுத முடியும். எங்கள் மார்பை போகிற போக்கில் எவரோ பிசைந்து விட்டு போவார், நாங்கள் அதை மார்பு என்றும், முலைகள் என்றும் உண்மை பெயர் சொல்லி எழுதக் கூடாதென்பது நகைச்சுவையாக உள்ளது.
சுருங்கச் சொல்லின் மார்க்ஸ் கூறியது போல் நாம இவர்களுக்காகவும் சேர்ந்து தான் போராடுகிறோம் (நாங்கள் எழுதுகிறோம்). நாளை எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நண்பர்களின் தனி மனித சுதந்திரம் தடை செய்யப்படும் போதும் நாங்கள் இதுபோல் குரல் கொடுப்போம். நாங்கள் நம்பும் மார்க்சியம் எங்களுக்கு வழிகாட்டும்.